Friday, November 18, 2011

குருவாயூருக்கு வாருங்கள்




ஆண்டுக்கு ஒரு முறையாவது குருவாயூருக்கு சென்று உண்ணிக் கண்ணனை தரிசிக்கா விட்டால் என் சக்தி எல்லாம் வடிந்து விட்டாற்போல் தோன்றும். அந்த அளவுக்கு அவன் என் இஷ்ட தெய்வம். என் கைபேசியில் தினமும் காலை மூன்று மணிக்கு நாராயணாய நமோ என்று பி.லீலாவின் பாடல் அலாரமாய் ஒலிக்கும். சரியான பிரம்மமுஹுர்த்த்ம். என் மனம் குருவாயயூரப்பன் சந்நிதிக்கு முன் நின்று நிர்மால்ய தரிசனம் செய்யும். தொடர்ந்து வாகச்சார்த்து சங்காபிஷேகம் என்று ஒவ்வொன்றாய்க் காணும். இப்போதெல்லாம் கயிலாயத்திற்கும் தினமும் ஒரு முறை சென்று வருகிறேன்.


என்னதான் இருந்தாலும் நேரில் தரிசிக்கப் புறப்படும் போது ஏற்படும் சந்தோஷம் இருக்கிறதே. சொல்லி மாளாது. நவம்பர் பதினான்கு ஒவ்வொரு வருடமும் பாலக்காட்டில் ரதோல்சவம் (தேர் திருவிழா) நடக்கும். அதற்கும் செல்கிறார் போல புறப்படுவது வழக்கம். வழக்கமாய் குருவாயூரில் இரண்டு நாட்கள், பாலக்காட்டில் மூன்று நாட்கள் இருப்போம். இம்முறை விடுப்பு பிரச்சனை. எனவே மொத்தமே மூன்று நாட்கள்தான். பனிரெண்டாம் தேதி திருவனந்தபுரம் மெயிலில் கிளம்பினேன் என் நாத்தனாருடன். என் சின்னப் பெண் கவிதா பெங்களுரிலிருந்து வருவதாக ஏற்பாடு.


எங்கள் பெட்டியில் எல்லோரும் பெண்களே. நடுவில் பளிச்சென்று ஒரு பையன். பதினாறு வயதிருக்கும். நல்ல நிறம். நல்ல உயரம. டீக்காக பேன்ட் ஷர்ட் அணிந்து நவீன கைக் கடிகாரம் கட்டிக் கொண்டு ஐடி மாணவன் போல தோற்றம். அந்த பையனுக்கு எஸ் ஒன்பதில் இருக்கை. அவனது அம்மாவிற்கு எங்கள் பெட்டியில் இருக்கை. சற்று உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது. பையன் மன நலம் குன்றிய்வ்ன் என்பது. கடவுளின் மீது கோபமாக வந்தது.


அந்தப் பையனுக்கு இடம் கொடுப்பதற்காக ஒருவர் எஸ் ஒன்பது பெட்டிக்கு செல்ல சம்மதித்தார். நானும் என் நாத்தநாரும் எங்களது லோவர் பர்த்தை அவர்கள் இருவருக்கும் அளித்து விட்டு மிடில் பர்த்தில் படுத்துக் கொண்டோம் ஆளாளுக்கு காட்டிய அன்பில் நெகிழ்ந்து விட்டார் அந்தத் தாய்..


மிடில் பர்த்தில் இருந்த வலைப் பையில் என் மூக்கு கண்ணாடியை கழட்டிப் போட்டு விட்டு படுத்தேன் நான். மறுநாள் காலை மூன்று மணிக்கு என் கை பேசி நாராயணா எனப் பாடி எழுப்பியது. மூன்று நாற்பதுக்கு பாலக்காடு ஸ்டேஷனில் வண்டி நின்றது. என்னமோ எல்லாம் சற்று மங்கலாகவே தெரிய ஒரு வேளை கண்ணாடி மாற்ற வேண்டுமோ என நினைத்தபடி ஆட்டோ ஏறி வீட்டுக்கு வந்தோம். உறவுகளோடு பேசியபடி கண்ணாடியைத் துடைப்பதர்காகக் கழற்றிய போதுதான் தெரிந்தது, இரண்டு பக்க லென்சுமே அதில் இல்லை என்பது. நான் புரண்டு படுத்த போது இடித்து அந்த வலைப் பையிலேயே அவை விழுந்திருக்கிறது, வெறும் பிரேமை மட்டும் மாட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.


என் முதல் கவலை கண்ணாடி இல்லாமல் குருவாயூரப்பனை எப்படி தரிசிக்கப் போகிறோம் என்பதுதான். அதற்குள் என் சித்தி தனது உபரி கண்ணாடி ஒன்றைக் கொடுத்து சரியாகுமா எனப் பார்க்கச் சொன்னார். என் நல்ல நேரம், ஓரளவுக்கு சமாளித்து விடலாம் போலிருந்தது.


நாங்கள் குளித்து விட்டு குருவாயூருக்குப் புறப்படத் தாயாரானோம். ஏன் பெண் வரவேண்டிய பெங்களூர் வண்டி ஒரு மணி நேரம் தாமதம் என்றாள் தொலைபேசியில். ஒரு வழியாய் அவள் வந்து சேர்ந்த பிறகு கிளம்புவதற்குள் தாமதமாகிவிட்டது. உச்சிக்கால பூஜை முடிந்து நடை சார்த்துவதற்குள் தரிசிக்க முடியாவிட்டால் நான்கு மணிக்கு மேல் தரிசித்து விட்டு பாலக்காடு திரும்ப இரவு வெகு நேரமாகி விடும். “ஹல்லோ நான் வந்து கொண்டிருக்கிறேன். ஏமாற்றி விடாமல் தரிசனம் கொடுத்து விட வேண்டும் சரியா? உள்ளுக்குள் கொஞ்சலும் கெஞ்சலுமாய் சம்பாஷணைகள். பயணம் முழுவதும் குருவாயூரப்பன் நினைவுதான்.


பீ.லீலாவின் ஒரு பாடல் உண்டு. அந்த பாடலின் ஒலி நாடா இணைத்திருக்கிறேன். அதில் ஒரு வரி. நிர்மால்ய தரிசனத்திற்கு நடை திறப்பதற்கு முன்பே மேல்சாந்தி எனப்படும் தலைமை பூசாரி குளத்தில் குளித்து வந்தாயிற்று என்றிருக்கும். பிறகு பகவானின் எண்ணைக் காப்பு, வாகப் பொடி சார்த்து,, நவகாபிஷேகம், சங்காபிஷேகம், அலங்காரம் என்று ஒவ்வொன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கும். அந்த மேல்சாந்தி குளித்து வருவதை யாரும் பார்க்க முடியாது. சிறப்பு நிர்மால்ய தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தாலலொழிய. அப்படி ஒரு நிர்மால்ய தரிசனம் நீ என்று எனக்கு அளிக்கப் போகிறாய்? அந்தப் பாடலில் வரும் அத்தனை விஷயங்களையும் நான் பார்க்க வேண்டாமா? அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் இந்தக் கேள்வி எழும். கூடவே பாடலின் அர்த்தத்தில் கண்கள் கலங்கிக் கொட்டும்.


Vagacharthu1 by vidyasubramaniam


இரண்டு வருடம் முன்பு என் சினேகிதி மைதிலி மற்றும் லலிதா என்பவர்களுடன் குருவாயுருக்குப் போனபோது மைதிலி, “உஷா ஸ்பெஷல் நிர்மால்யம் பார்க்கப் போகிறோம் என்றாள். அவளது உறவினர் ஒருவர் மூலம் அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. இரவெல்லாம் தூங்கவில்லை. உடலும் மனமும் பரபரத்தது. விடியற்காலை ஒரு மணிக்கு எழுந்து குளித்து விட்டு மேற்கு கலவரா வாதிலுக்கு (கதவு) அருகில் வந்தோம். இரண்டேகால் மணிக்கு அந்தக் கதவு வழியாக உள்ளே அனுமதிக்கப் பட்டோம். எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கோவிலுக்குள் நாங்கள் ஒரு பத்து பேர் மட்டுமே கொடிமரத்திர்க்கருகில் நின்றிருந்த போது எனக்கு அது கனவா நனவா என்றே புரியவில்லை. நாங்கள் நின்றிருக்க்கையில் இன்னும் இருவர் வந்தனர். அதில் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டாரில் ஒருவரான சுரேஷ் கோபி.


மனசுக்குள் நாம ஜெபத்துடன் நின்றிருக்கையில் அந்தக் காட்சி....! குளித்து ஈர முண்டுடன் சற்றே உடல் உதர வேகமாக வந்து கொண்டிருந்தார் கோவிலின் மேல்சாந்தி. (மேல்சாந்தி ஸ்நானம் கழிஞ்சு வன்னு) பாடல்வரி என் மனசுக்குள் ஓடிற்று. அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் நாங்களும் உள்ளே அழைக்கப்பட, மூடிய சந்நிதிக் கதவுகளுக்கு வெளியே நாங்கள். நின்றோம். உடம்பு நடுங்கியது எனக்கு. எதிர்பாராமல் கிடைக்கும் சிறப்பு நிர்மால்ய தரிசனமல்லவா? கோவிலுக்கு வெளியில் இதைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கையில் நாங்கள் சன்னிதி முன் அதை முதலில் காண நின்றிருக்கிறோம் என்பது எத்தகைய பேறு.


சடாரென நடை திறக்கப் பட்டது. முந்தைய இரவு அலங்காரங்களோடு நிர்மால்ய தரிசனம் தந்தான் அவன். அவசரமாய் விழி நீரை துடைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தேன். அதேநேரம் கோவில் வெளிக் கதவு திறக்கப்பட பக்தர்கள் கூட்டமும் முண்டியடித்து வந்தது. நான் சட்டென சுரேஷ் கோபியின் அருகில் ஒதுங்கி நிற்க அவரது பிராபல்யத்தால் எங்களுக்கும் அங்கே நிற்க சற்று நேரம் அனுமதி கிடைத்தது. அலங்கராம் கலைக்கப் பட்டு முழு விக்கிரகமும் பளிச்சென எண்ணைக் காப்பில் மின்னியது. அடுத்து வாகப் பொடி சார்த்து.


(கேசவனுண்ணி கண்ணன்டே மேனி கேஸாதி பாதம் எண்ண தேச்சு. வாசன வாகப் பொடிசார்த்தி, வாசுதேவன் மேனி நீராட்டி) உள்ளே பாடல் ஒலித்தது. போதும்டாப்பா போதும். இந்த ஜென்மம் நற்பயனடைந்தது.

தொடர்ந்து சங்காபிஷேகமும் பார்த்து விட்டு கண்ணீரோடு வெளியில் வந்து விட்டேன். இப்போதும் என் மனசுக்குள் அந்தக் காட்சிகள் பத்திரமாக இருக்கிறது. தினமும் விடியல் மூன்று மணிக்கு அதைத்தான் பார்க்கிறேன்.


குருவாயூரில் பஸ் நின்றது. பின் வாசல் வழியே உள்ளே நுழைந்தோம். நல்ல காலம் நேரமிருந்தது. பெண்கள் வரிசையில் நின்று கொண்டோம். உச்சிக்கால அலங்காரத்திற்கு நடை சார்த்தப் பட கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்தோம். குருவாயூர் கோவிலில் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் சலிப்பு ஏற்படவே படாது. பொழுது போய்விடும்.


ஒரு வழியாய் வரிசை நகர்ந்து. என் கண்களிடம் கெஞ்சினேன். கலங்கி விடாதீர்கள். எனக்கு காட்சி மறைந்து விடும். கலங்காமல் ஒத்துழையுங்கள் ப்ளீஸ். சன்னதிக்கு முன் இருந்த சிறிய மண்டபம வரைதான் அனுமதி. அங்கேயே அனைவரும் தரிசனம் முடிந்து அனுப்பப் பட்டோம். ஒரு சில வினாடிகள்தான். கருடன் மீது அமர்ந்த கோலம்.! நீ பறந்து வந்தற்கு நானும் பறந்தபடி காட்சி தருகிறேன் என்கிறார் போலிருந்தது. ஒரு சில வினாடிகளே என்றாலும் மனசு திருப்தியடைந்தது. என் பெண்ணுக்கு துலாபாரப் பிரார்த்தனையும் நிறைவேற்றிய பிறகுதான் வயிற்றுப் பசி தெரிந்தது.


கேரளா டூரிசம் ஹோட்டல் ஒன்றிருந்தது. சாப்பாடு வெறும் நாற்பத்தி ஐந்து ரூபாய்தான். வாசனையான புழுங்கலரிசி சோறுடன் படு சுவையாக இருந்து. பால் பாயசத்தோடு. ஒரு வழியாய் இந்தவருட குருவாயூர் தரிசனம் முடிந்து உடம்பு நிறைய புது சக்தியோடு பாலக்காட்டிற்குத் திரும்பினோம். அடுத்த நாள் காலை எங்கள் அடிமைக் காவு எனப்படும் குலதெய்வக் கோவிலான காவசேரியில் இருக்கும் பறக்காட்டு பகவதி கோவிலுக்கு ஆட்டோ ஒன்றில் போய் விட்டு திரும்பிய பொது கல்பாத்தி சிவன் கோவில் தேர் முழு அலங்காரத்தோடு சிவா பெருமான் ரத ஆரோகணம் செய்வதற்குக் காத்திருந்தது.


இந்தபதிவில் பீ.லீலாவின் பாடலை அப்லோட் செய்வதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே, கற்றலும் கேட்டலும் ராஜிக்குதான் வெளிச்சம். மொபைலின் ராஜி சொல்ல சொல்ல நானும் ஏதேதோ செய்து ஒருவழியாய் அப்லோட் ஆயிற்று. குருதட்சினையாக ராஜிக்கே இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.



Tuesday, October 18, 2011

கருணைக் கரம் நீட்டுங்கள்

அலுவலகம், அது விட்டால், பேரக குழந்தைகள் என்று எனது ஒவ்வவொரு நாளும் ஓடுவதால், பதிவுப் பக்கமே வர முடியவில்லை. பின்னூட்டமிடுவது கூடக் குறைந்து விட்டது. நணபர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒரு நல்ல காரியதிற்குதான் இந்தப் பதிவு எழுதுகிறேன்.


கோட்டூர்புரத்தில் கணேஷ் என்கிற ஆறு வயது சிறுவன். மாநகராட்சியின் அலட்சியத்தால் திறந்து கிடந்த வடிகால் தொட்டியில் விழுந்து மருத்துவர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்தான். உயிர் ம்ட்டும்த்ன். ஓடி ஆடி விளையாடி சிரித்துக் கொண்டிருந்த குழந்தை கடந்த எட்டு மாதமாக வெறும் ஜடமாய் எவ்வித இயக்கமுமின்றி இருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் எனது மருமகன் (Sanjay Pinto) தானே நேரில் சென்று அந்தக் குழந்தையைப் பற்றி ஒரு சிறப்பு கவரேஜ் செய்தி தயாரித்து NDTV HINDU வில் அது தொடர்ந்து ஒளிபரப் பாயிற்று. அந்தச் சிறுவனின் ஒருநாள் மருத்துவச் செலவே சில ஆயிரங்கள். அவனுக்கு பசி என்று கூட சொல்லத்தெரியாது. ஏழை பெற்றோர்கள் செய்வ்தறியாது கலங்கிப் போயிருக்கிறார்கள்.


NDTV HINDU அந்தச் சிறுவனின் மறுவாழ்வுக்காக முயன்று வருகிறது. இதுவரை பலர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். கீழ்க் கண்ட சுட்டியில் அந்த சிறுவனின் பரிதாப நிலையைக் காணலாம். (ஆரம்பத்திலிருந்து பார்க்கவும்.) எனது பதிவுலக நண்பர்களும் அந்தச் சிறு வனுக்காக தங்களால் இயன்ற அளவில் உதவிட முன்வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. கருணைக் கரம நீட்டுங்கள்.
நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு துளியும் அங்கே பெரு வெள்ளமாகி உதவும். NDTV HINDU வுடன் கை கோர்த்தும் இதைச் செய்யலாம். அல்லது நேரடியாகவும் உதவலாம். விலாசம் மற்றும் தொடர்பு நம்பர் கீழே.



உங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பின் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். நம் கவனக் குறைவு கூட குழந்தைகள் ஆபத்து நோக்கி செல்வதற்குக் காரணமாகி விடுகிறது.





Thursday, September 1, 2011

பாலின்றி அமையாது உலகு.

பாலுடனான நமது உறவு, தாய்ப் பாலிலிருந்தே துவங்கி விடுகிறது. தாய்ப் பாலுக்குப் பிறகு மனிதன் இறுதி வரை நாடுவது மாட்டுப் பாலைத்தான். மயிலையில் நாங்கள் இருப்பது பால் வியாபாரிகள் இருக்கும் ஒரு தெருதான்.


அந்தக் காலத்தில் பசு மாட்டை, வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து கட்டி காலிப் பாத்திரத்தை நம்மிடம் காட்டி விட்டு கண்ணெதிரில் பால் கறந்து அளந்து கொடுத்து விட்டுச் செல்வார்கள். ஆரம்பத்தில் ஆவின் பால் புட்டியில்தான் வரும். அலுமினிய தாளை எடுத்தால் மேலாக கெட்டியாக கொஞ்சம் வெண்ணை. அதன் சுவை அலாதியாக இருக்கும். பிறகுதான் பாக்கெட்டில் வர ஆரம்பித்தது.


நாற்பது வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டை அடுத்துள்ள பஜார் வீதியில் சண்முகம் பால் கடை என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளிச் சொட்டு போல என்பார்களே அப்படி இருக்கும். காலை வேளையில் ஒரு பெரிய கியூவே காத்திருக்கும். சண்முகம் கடை பாலில் காப்பி குடிப்பதே தனி அனுபவம் என்பார்கள். என் துரதிருஷ்டம் திருமணத்திற்குப் பிறகுதான் நான் காப்பிச் சுவையே அறிந்தேன். எத்தனை பெரிய வரிசை இருந்தாலும் என் அம்மா போனால் சண்முகம் முதலில் பாலை அளந்து அம்மாவுக்கு கொடுத்து விடுவார். அவ்வளவு மரியாதை. என்னைத் தவிர வீட்டில் அவ்வளவு பெரும் காப்பிப் பிரியர்கள் என்பதால் காப்பிக் கடை காலையில் வீட்டில் களைகட்டும். எல்லோரும் அடுக்களையில் ஒன்றாய் அமர்ந்து சகல கதைகளையும் பேசிக் கொள்வோம். . காப்பி வாசனை ஊரைக் கூட்டும். துளித்துளியாய் சுவைத்துக் குடிப்பார்கள். பொன்னிற நுரையோடு அந்தக் காபியை சுவைக்காதது இன்று வரை வருத்தமாயிருக்கிறது.

என்னடா இப்படி பாலிஷ்டாக எதைப் பற்றி சொல்ல வருகிறேன் என்று தோன்றுகிறதா? நான் பால் காய்ச்சும் லட்சணத்தைப் பற்றி சொல்லத்தான் இத்தனை பீடிகை.


என்னை நம்பி அரசாங்க கஜானாவைக் கூட ஒப்படைக்கலாம். அரை லிட்டர் பாலை மட்டும் காய்ச்சுவதற்கு கொடுக்கக் கூடாது என்பது என்னைத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். பால் காய்ச்சும் விஷயத்தில் நான் படு ஜாக்கிரதைதான். பாலை அடுப்பில் வைத்து விட்டு அருகிலேயே நின்று விடுவேன் இன்றைக்கு எப்படி நீ பொங்குகிறாய் என்று பார்க்கிறேன் என்கிற வைராக்கியத்தோடு. ஆனால் பாருங்கள் அது பொங்குகிற நேரத்திற்கு கரெக்டாக என் கவனம் மாறிவிடும். ஒரு நொடிதான் ஓடி வருவதற்குள் அடுப்புக்கு பாலாபிஷேகம் ஆகியிருக்கும்.

பால் பொங்கி விட்டால் மட்டும் எனக்கு படு டென்ஷனாகி விடும். பின்னே என்னவாம்.? அடுப்பின் அடி வழியே வழிந்து மேடை முழுக்க ஆறாக ஓடி மேடை மீதிருக்கும் பொருட்களையெல்லாம் நனைத்து தரையெல்லாம் வழிந்து .........யப்பா அமர்க்களம்தான். சுத்தப் படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விடும்.


பாலை அடுப்பில் வைத்த பிறகுதான் என் கற்பனையும் பொங்கோ பொங்ககென்று பொங்கும் . அடுப்பின் எதிரில் பாலைப் பார்த்தபடி நான் நின்றிருக்க பால் பாட்டுக்குப் பொங்கிக்கொண்டிருக்கும். அதென்னடி பாலைப் பொங்க விட்டுண்டு பா(லா)ழாப் போன யோசனை? என்று அம்மாவின் கத்தல் கேட்டபிறகுதான் கற்பனை கலையும். பழி வாங்கி விட்டாயே என்று பாலை முறைத்துப் பார்ப்பேன். பாதி நாள் இந்தக் கதைதான்.

பக்கத்தில் நின்றிருந்தால் நம் பொறுமையை சோதிக்கும் பால், வேறு வேலை செய்யப்போனால் மட்டும் வினாடியில் காய்ந்து பொங்கும். ஒருமுறை பாலை அடுப்பில் வைத்து விட்டு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். அடுப்பை சிம்மில்தான் வைத்திருந்தேன். சற்றுப் பொறுத்து என் பெரிய பெண் அம்மா யாராத்துலயோ வெண்ணை காச்சற வாசனை வரத்து என்றாள். ஆமாம் என்றேன். சற்றுப் பொறுத்து என் சின்ன பெண், குலாப்ஜாமுன் பண்ற வாசனை வரதும்மா என்றாள். இல்லம்மா வேர்க்கடல வேக வைக்கற வாசன மாதிரி இருக்கு என்றாள் என் பெரிய பெண். நானும் அந்த வாசனை என்ன வென்று மூக்கை உறிஞ்சி ஆராய்ந்தேன். தீஞ்சு போன வாசனை மாதிரி தோன்ற, சுரீரென்று உறைக்க எழுந்து அடுக்களை நோக்கி ஓடிப் போனால், கரிக்கட்டையாய் பாத்திரம் மட்டுமே மிஞ்சியிருந்தது. ஏண்டி பெண்களா வித விதமா வாசனை வரதுன்னு சொன்னதுக்கு, பால் பொங்கற வாசனைன்னு தோணவேல்லையா என்று எரிந்து விழுந்தேன். நீ பால் வெச்ச விஷயத்தை எங்க கிட்ட சொன்னயா? பெண்கள் திருப்பிக் கேட்க அசடு வழிந்தேன்.


ஒரு முறை பாலை அடுப்பில் வைத்து விட்டு என் சின்ன பெண்ணிடம் அடுப்புல பால் வெச்சிருக்கேன் பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு காய்கறி வாங்கப் போனேன். நான் வரும்போது பால் பொங்கி வழிந்திருக்க அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி இது என்றால், நீதானம்மா பார்த்துக்கோன்னு சொன்ன அதான் பார்த்துண்டிருந்தேன் என்றாளே பார்க்கலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று முதல் காரியமாய் ஒரு பால் குக்கர் வாங்கி வந்தார் என் கணவர். ஒரு வாரம் ஒழுங்காயப் போயிற்று. ஒரு நாள் குக்கரில் நீர் விடாமல் வைத்து விட்டேன் போலிருக்கிறது. சத்தமே வரவில்லை. விசில் கெட்டுப் போய், குக்கர் தீய்ந்து பாலிலும் தீய்ந்த வாசனை. இது மாதிரி பலமுறை. பால் குக்கரும் சரிப்படாது என்றானது. பால் பொங்கி வழியாமலிருக்க பேசாமல் பெரிய பாத்திரத்தில் வைத்தால் என்ன என்று தோன்றியது. மிகப் பெரிய பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி வைத்தேன். பொங்கினாலும் வழியாதல்லவா. ரெண்டு நாள் வொர்க் அவுட் ஆயிற்று. மூன்றாம் நாள் பால் வற்றி அடியில் ஒட்டிக கொண்டிருந்தது.

ஒரு முறை என் ரசிகர் ஒருவர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார். அடுப்பில் பாலை வைத்து விட்டு அவரோடு பெசிக்கொண்டிருந்ததில் பாலை வைத்ததையே மறந்து விட்டேன். நான் கிளம்பறேன் மேடம் இன்னும் ஒரு மணி நேரத்துல பஸ்ஸை ப் பிடிக்கணும் என்றார். அடடா காப்பி தரேன் இருங்க என்றபடி பால் பொங்கி வற்றியிருக்குமே என்கிற கவலை யோடு உள்ளே வந்தால்.......... ஐயோடா என்ன சமத்து ! அடுப்பை பற்ற வைக்கவேயில்லை. நான் பால் காய்ச்சி காப்பி கலப்பதற்குள் பஸ் போய் விடும் என்று பயந்து விட்டார் வந்தவர். பரவால்ல மேடம், அடுத்த முறை (!) உங்க கையால் சாப்பாடே சாப்பிடறேன் என்றபடி கிளம்பி விட்டார் வந்தவர். சரி நாமாவது சாப்பிடுவோம் என்றபடி அடுப்பை பற்றவைத்து விட்டு கதை எழுத உட்கார்ந்தேன். சற்று நேரத்தில் தொலை பேசி அடித்தது. என் ரசிகர்தான். மேடம் நல்லபடியா பாண்டிச்சேரி வந்து சேர்ந்துட்டேன் என்றார். பக்கென்றது. பால்? வழக்கம்போல்தான். பொங்கின வேகத்தில் அடுப்பு அணைந்திருந்தது. கேஸ் வாசனை கிட்டே போன பிறகுதான் தெரிந்தது. உடனே அடுப்பை அணைத்தேன்.

இன்று பிள்ளையார் சதுர்த்தி. காலையில் குளித்து விட்டு பாலை அடுப்பில் வைத்தேன் டிவியில் அழகழகாய் விநாயகர் காட்சியில் மெய்மறக்க, உள்ளே பாலாறு தான். இந்த பால் படுத்தும்பாட்டை பதிவெழுதியே தீருவது என்று உட்கார்ந்து விட்டேன். பொங்காமல் பால் காய்ச்சுவது எப்படி என்று ஏதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்களேன். ஒரு நிமிஷம்...... அடராமா! அடுப்பில் பால்ல்ல்ல்ல்ல்ல்ல் ! போச்! போயே போச்!








Wednesday, July 27, 2011

மக்கள் தொலைக் காட்சியில் நான்


ஜூலை 18 ஆம் தேதி மக்கள் தொலைகாட்சி காலை வணக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான எனது பேட்டியின்
இணைப்பை கீழே அளித்துள்ளேன். உங்கள் பொன்னான நேரத்தில் சிறிதை இதற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். தொலைகாட்சி பேட்டிகள் குறித்த எனது அனுபவங்களை பதிவாக பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.



Sunday, June 19, 2011

முன்னுரை, முகவுரை

எந்த ஒரு புத்தகம் வாங்கினாலும் நான் முதலில் வாசிப்பது அந்த புத்தகத்தின் ஆசிரியர் எழுதிய முன்னுரை, மற்றொரு இலக்கியவாதி அதற்கு எழுதியிருக்கும் முகவுரை இவைகளைத்தான். எந்த ஒரு முன்னுரையோ முகவுரையோ அழுத்தமாக எழுதப் பட்டிருக்கிறதோ, வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறதோ, அதுவே அந்த புத்தகத்திற்கு பெருமை சேர்த்து விடும்.

முன்னுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதை விட கடினமானது முகவுரை எழுதுவதுதான் என்பேன். , தெளிவு, தீர்க்கம், சுவாரசியம், இவற்றோடு சற்றே நகைச்சுவையும் சேர்ந்து விட்டால் முன்னுரையையே பலமுறை படிக்கலாம்.

லா.ச..ரா. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றிற்காக (அலைகள் ஓய்வதில்லை) இப்படி எழுதியிருப்பார்.

“எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித்தானே உங்களுடன் நேரிடைப் பாவனையில் உரையாட முடியும்? எழுத்தின் வீச்சுக்கு காலவரையில்லை என்று தெரிகிறது. “ராசாத்தி கிணறு கரு நாற்பது வருடங்களுக்கு முன் தோன்றி விட்டது. ஆனால் இப்போதுதான் திடீரென பற்றிக்கொண்டு எழுதி முடித்தேன். ஒரு வித்து உள்ளே விழுந்து விட்டால் தேள் கொட்டிக் கொண்டேயிருக்கும், ஒரு எழுத்தின் விதைக்கும், அதன் வளர்ச்சிக்கும் விதமோ வரையோ வகுக்க முடியவில்லை. எழுத்து இரக்கமற்ற எசமானி.

நல்ல புத்தகங்கள் என்பது சும்மா செல்லும் பொழுதுகளைக் கூட பயனுரச் செய்து விடும். எனலாம். இந்தப் பதிவில் என்னைக் கவர்ந்த முன்னுரைகள், முகவுரைகள், பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தனது “கிருஷ்ணன் வைத்த வீடு தொகுப்பிற்காக வண்ண தாசன் எழுதிய முன்னுரை என்னை நிறைய யோசிக்க வைத்தது.

“இந்த பலூன் விற்கிற முருகேசனை விட நான் என்ன வாழ்ந்து விட்டேன்? முருகேசனுக்கு தான் பார்த்துக் கொண்டிருந்த கொத்தனார் வேலையை விட்டு விட்டு பலூன் விற்க முடிகிறது. மயிலாப்பூர், பெசன்ட் நகர கோவில் திருவிழாக்களில் ராப்பூரா கண் விழிக்க முடிகிறது. தம்பிக்கு முதலில் கல்யாணம் நடக்க அனுமதிக்க முடிகிறது, மும்பையில் விற்கப்பட இருந்த அச்மாபீயை சரோஜா எனப் பெயரிட்டு திருமணம் செய்து கொண்டு வாழ முடிகிறது. குழந்தை பிறந்ததும் அவள் காணாமல் போய் எட்டு மாதம் கழித்து அது இறந்தபிறகு வரும்போது ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவள் மறுபடியும் காணாமல் போய் திரும்பி வந்தால் கூட ஏற்றுக் கொள்ள முடிகிறது. பழைய சம்பவங்களை அடியோடு மறந்து நிம்மதியாக இருக்க முடிகிறது. அலுப்பில்லாமல் குழந்தைகளை தினம் தினம் பார்த்து பலூன் விற்பதில் சந்தோஷத்தை உணர முடிகிறது. உணர்ந்ததைச் சொல்ல முடிகிறது. என்னால் எழுத மட்டுமே முடிகிறது. பலூன் விற்க முடியவில்லை. நான் முருகேசனாக இல்லாமல் போனேன்.

இருந்த இடம் வாழ்ந்த இடமாகாது,. எல்லா இடத்திலும் வாழ விரும்பும் மனம் இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்கவும் விரும்புகிறது. பிடாரனின் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு கூடைக்கு திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில் பழக்கமற்ற தரையோரங்களில் சரசரத்து ஓடி புடை தேடுகிற நிஜம இது.

எழுத்து தொடர்ந்து பதிவுகளாகவே இருக்கிறது. பசுக்களின் குளம்படி பதிவுகளை சிமென்ட் தளங்களிலிருந்து அப்புறப் படுத்த முடியவில்லை. தூத்துக்குடி கடற்கரையில் எனக்கு முன்பு நடந்து போனவர் விட்டுச் சென்ற காலடிப் பதிவுகளை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
அப்புறப்படுத்த முடியாதவைக்கும் காப்பாற்ற முடியாதவைக்கும் மத்தியில் ஆயிரம் பாதங்கள். ஆயிரம் பதிவுகள். நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
என்ன ஒரு அற்புதமான முன்னுரை அல்லவா?

என் வாழ்க்கையில் நான் பிசாசு மாதிரி ஒரு புத்தகத்தை தேடி அலைந்திருக்கிறேன். யாரைப் பார்த்தாலும் அந்த புத்தகத்திற்கு சொல்லி வைப்பேன். ஒவ்வொரு புத்தக விழாவிலும் ஐந்திணை பதிப்பகத்தில் இந்த புத்தகம் எப்போது வரும் என்று விசாரிப்பேன். கிட்டத்தட்ட இருபதாண்டு தேடலுக்குப் பிறகு நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது,. காலச்சுவடு பதிப்பகம் அதை மறுபதிப்பு செய்திருக்கிறதென்று. அந்த புத்தகம் பயணக்கட்டுரை நூல்களில் ஒரு கிளாசிக் என்று சொல்லப் பட்ட தி.ஜானகிராமனின் “நடந்தாய் வாழி காவேரி

அந்த புத்தகத்தின் முன்னுரையில் தி.ஜா எழுதியிருப்பார்.
“காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் என்ற உண்மை தெளியத் தெளிய நாங்கள் மேற்கொண்ட பொறுப்பு சாதாரணமானதல்ல என்ற உணர்வு சிறிது தயக்கத்தையும் அளித்தது. காவேரிக்குப் பல உருவங்கள், பல நிலைகள் உண்டு. அதைக் காணும் நிலைகளும் பல. மொண்டு குடிப்பதிலிருந்து கரையிலமர்ந்து தவமியற்றி மனம் இழப்பது வரை இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும் ஒரொரு கணவீதம் அடைவதே ஒரு திளைப்புதான். .

ஆதவனின் என் பெயர் ராமசேஷனில் லா.ச.ரா எழுதியிருப்பார்.
“என்னத்தையோ எழுதி, எழுதியதைப படித்து படித்ததை நினைத்து, படித்ததை வாழ்ந்து, வாழ்ந்ததைப் படித்து அனுபவத்தை நினைத்து, நினைத்ததையே நினைத்து, நினைவை அவ்வப்போது காயப் படுத்தி காயத்திலிருந்து சொரியும் ரத்தம் உணர்ந்து, அர்த்தங்கள் பிரயத்தனங்கள் கொள்கிறோம். நினைவின் ரணமே உயிரின் தைரியம். உயிரோவியத்தின் பல வர்ணங்கள்

தனது “துணையெழுத்து புத்தகத்தில், எஸ்,ரா. எழுதிய வரிகள் இவை.

“ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான். அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதுக்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்தபடிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில்,`மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது என்று ஒரு வரி இருக்கிறது. அதுதான் வாழ்வின் அரூபமான பயணம்.

எஸ்.ரா. தனது “உப பாண்டவத்தில் தான் மகாபாரதம் வாசிக்க விரும்பியதையும் அது மெல்ல மெல்ல தன்னில் ஊறிப்ப் போனதையும் சொல்லியிருப்பார்.
“ஜனவரி மாத குளிர் நாளொன்றில் டெல்லியில் அதிகாலையில் நடந்து கொண்டிருந்த போது பனி மூட்டத்தின் நடுவே தொலைவில் குதிரைகள் நடந்து வரும் சப்தம் கேட்டது. நெருங்கி வரும் குதிரைகளில் பாண்டவர்கள்தான் வருகிறார்கள் என ஒரு நிமிஷம் எழுந்த யோசனை விரிய ஆசையும் படபடப்பும் பெருகியது. மிலிட்டரி குதிரை வீரர்கள் கடந்து சென்றார்கள். கடந்த காலத்தின் ஓசை மட்டுமே கேட்க முடிகிறது எனத் தனியே பேசியபடி திரும்பிய நான் எதோ ஒரு முனையில் மகாபாரதத்தில் பிரவேசித்து எங்கோ விலகி விட்டேன்.

தமிழக அரசின் பரிசு பெற்ற எனது “வனத்தில் ஒரு மான் சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றதில் அதற்கு முகவுரை எழுதிய பாலகுமாரனின் எழுத்துக்களுக்கும் பங்கிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். பாலகுமாரனின் முகவுரை கடித வடிவிலேயே இருக்கும். அவர் எழுதியதில் கொஞ்சம் இங்கே.

“உங்கள் வாலிபம் என்பது சிறுகதை படித்தேன். இதுவரை பல எழுத்தாளர்களுக்குத் தீனியாக இருந்த மன்னன் யயாதியே உங்கள் கதைக்கும் கருவாக இருந்தான். மூப்பைக் கொடுத்து இளமையை வாங்கிக் கொள்ளும் பண்டமாற்றே உங்கள் கதையிலும் முக்கியமாக அலசப்பட்டது. அப்பாவின் இளமையை வாங்கிக் கொள்ள மறுக்கும் மூத்த மகனைக் கண்டிப்பதுதான் மூலக் கதையின் நோக்கம். கடைசி மகன் புரு வாங்கிக் கொண்டான் என்பதுதான் இதுவரை எல்லா எழுத்தாளர்களும் பாராட்டிய விஷயம்.ஆனால் எல்லோரும் பாராட்டிய புருவின் மீது நீங்கள் இலக்கு தப்பாமல் ஒரு அம்பு எய்திருக்கிறீர்கள். யயாதியின் கதையைப் புது விதமாக அணுகி இருக்கிறீர்கள். எதுசரி எது தவறு என்பதுதான் ஆதி நாள் முதல் மனிதருடைய கேள்வியாக இருக்கிறது. அதற்கு இறுதியான விடை காண முடியாமல் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சமாதானம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு எழுத்தாளனுடைய கதைகளும் இவ்விதமே. வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை நடந்தவை பற்றிய அலசலை அவன் கதைகள் உரக்கப் பேசி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும். எழுதத் தூண்டுவதே இந்த ஆராய்ச்சி மனப்பான்மைதான். எல்லோரும் சொன்ன ஒரு பழங்கதையைப் புது விதமாகப் பார்ப்பதுதான். ஆனால் இது எளிதல்ல. அனுபவமும் தெளிவுமுள்ளவர்கள்தான் ஆராய்ச்சியில் ஒரு நியாயமான முடிவைக் கொண்டு வர முடியும். இதை எழுத்தாக மாற்றுகிற செய்திறனும் முக்கியம். இந்தக் கதையின் மொழி நடை வசனமாக இருப்பது ஒரு சிறப்பு. வர்ணனைகளில்லாது மனிதருடைய கேள்வி பதில்கள் மோதிக் கொண்டு நிமிர்வது ஒரு அழகு.


பாலகுமாரனின் செப்புப் பட்டயம் நாவலுக்கு நான் எழுதிய முகவுரையின் ஒரு பகுதி கீழே.
“இந்தக் கதை வாசித்து முடித்தபிறகு நான் தேவதாசிப் பெண்களைப் பற்றி நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். இறைமையைப் பரப்புவதே தொழிலாகிப் போன நிலையில் சுகப்படுத்துவதும் சுகிப்பதும் கூட அவர்களுக்குப் பிடிக்காமல் போகிறது. எப்போதுமே தன்னை நிரூபிக்க பெண்தான் அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டியிருக்கிறது தேவரடியவள் என்ற நெற்றிப் பட்டத்தை எடுத்து, குலமகள் என்ற பட்டம் பெற்றுக் கொடுத்து விட்டுக் குளிர்ந்து போயிற்றா அந்த அக்னி? தேவதாசிகளின் பிரும்மாண்டத்தை ஒப்பிட உலகில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. கடல்! எல்லோருக்கும் சுகமளிப்பது கடல். பனையளவு உயரம எழும்பினாலும் சரி, சிற்றலைகளாய் வந்து பாதம் தொட்டு பின்னோக்கிச் சென்றாலும் சரி, கடல் என்பது சந்தோஷத்தின் ரூபம். சந்தோஷம் தேடி எத்தனைகோடி பேர் மணலில் கால் புதைத்து வந்தாலும் அது சந்தோஷப் படுத்தும். அந்தக் காலடிகள் யாருடையதென்று எவரும் ஆராய்வதுமில்லை. குழப்பிக் கொள்வதுமில்லை. எத்தனை பேர் பாதம் தொடுகிறாய் என்று கடலை நோக்கி முகம் சுளிப்பதுமில்லை. அன்றைய காலத்தில் அவர்கள் சமுத்திரமாகத்தான் அலையடித்தபடி இறைத்தொண்டு புரிந்திருக்கிறார்கள்.

திரு இறையன்பு அவர்கள் எனது நான்கு புத்தகங்களுக்கு முகவுரை எழுதியுள்ளார். அதில் இரண்டு புத்தகங்கள் பரிசு பெற்றுள்ளது.

ஸ்டேட் பேங்க் விருது பெற்ற “ஆகாயம் அருகில் வரும் என்ற புதினத்திற்கு அவர் எழுதிய முன்னுரை அழகானது. ஆழமானது.

“கதை என்று தனியாய் எதுவுமில்லை. வாழ்க்கை நம், விழிகளின் முன்பாக நம் அனுபவ ஆழத்திற்கேற்ப விரித்து வைத்திருக்கும் அசாதாரணமான நிகழ்வுகள் எல்லாமே கதைக்கான கருவை உள்ளே ஒளித்து வைத்திருக்கிறது. இதை எழுதலாமே என்பதைவிட இதை எழுதித்தான் தீரவேண்டும் என்கிற தீர்மானத்தோடு எழுதும்போது நாமே காகிதத்தில் கரைந்து போன ஒரு திருப்தி தென்படுகிறது. நமக்கு திருப்தி தராத படைப்பு யாரால் பாராட்டப் பட்டாலும் நமக்கு அது மகிழ்ச்சியை அளிக்காமலேயே ஒதுங்கி நின்று விடுகிறது.
வேலையில்லா திண்டாட்டம் என்பது பொதுப் பிரச்சனையல்ல தனிப்பட்ட பிரச்சனை என்பதை ஆழ்ந்து கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். இருக்கிற வேலைகளுக்கு ஏற்ப நம்மை நாம் செதுக்கிக் கொள்ளாத வரை இந்தப் புலம்பல் நம் செவிப்பறைகளை சேதப்படுத்தக் கூடும். தன்னை முழுவதுமாய் இழக்க சம்மதிக்கிற போதுதான் பனித்துளி பாற்கடலில் கலக்க முடியும்.

எனது “கான்க்ரீட் மனசுகள் தொகுப்பில் திரு இறையன்புவின் முகவுரையிலிருந்து சில பகுதிகள்.
"மானுடத்தின் அசிங்கமான பக்கங்களைக் காட்டி இப்படித்தான் நாம் இருக்கிறோம் என சுட்டிக் காட்டுவது ஒரு வகை வெளிப்பாடு. இல்லையில்லை ...நாம் மேன்மையானவர்கள்தான் என்று `வீடு என்பது கழிவறை மட்டுமல்ல கமகமக்கும் வரவேற்பறையும்தான்` என வெளிச்சம் போடுவது இன்னொரு வகை. நல்ல மனிதர்களைப் பற்றியும் மானுடம் பற்றியும் தொடர்ந்து படித்தால் நம்மையும் அறியாமல் “நாம் இன்னும் மேம்பட்டவர்களாக, கூடுதல் கருணையுடன் அதிக அன்புடன் இருப்போமே, நம்மிடம் இருக்கும் சிலவற்றைத் தொலைக்க முற்படுவோமே என்கிற எண்ணம ஆழ்மனத்தில் விழுந்து விடும். உயர்ந்தவற்றைச் சொல்வதற்குத்தான் இலக்கியம். உயர்ந்தவனை இன்னும் உயர்த்த வல்லவைதான் உண்மையான கதைகள். இதைத்தான் வித்யா சுப்ரமணியம் செய்ய முயன்றிருக்கிறார். இதில் அவர் பெறுகிற வெற்றியின் விஸ்தீரணம் நம்முடைய கைகளில். மனித மனங்களில் அமுங்கி எழுந்த அடையாளம் தத்துவக் கீற்றுகளாகத் தெறித்து விழுந்திருக்கின்றன. உயரப் பறக்க சொல்லித் தருகின்றன".

ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் என்ற தனது புத்தகத்தில் இரா.முருகன் எழுதிய முன்னுரை.
தமிஷ் இலக்கியம் பழைய சிவகங்கை - மதுரை ஜெயவிலாஸ் பஸ்ஸில் பக்கவாட்டு 
இருக்காய் மாதிரி - எத்தனை படைப்புகள் வந்தாலும் இன்னும் உட்கார இடம் 
இருக்கிறது. பீடியை வார்செருப்பால் தேய்த்து அனைத்து விட்டு பூவந்தி டீக்கடை
 வாசலில் கைகாட்டி நிறுத்தி ஐம்வ்பது பைசா ஷேக்ஸ்பியரும் ஏறி உள்ளே வருகிறார்.
இரா முருகன் தனது சிலிக்கன் வாசலில், காக்கையை யாரும் முஷுசாக பார்த்து 
முடிக்கவில்லை என்று கவிதை சொன்னார் ஞானக் கூத்தன். இந்த சிறுகதைக்
காக்கையை இன்னும் நான் முழுசாகப் பார்த்து முடிக்கவில்லை. யார் கண்டது? அது 
முடிந்தால் சிறுகதையே அப்புறம் இல்லாமல் போகுமோ என்னவோ........

எனது சமீபத்திய வரலாற்றுப் புதினம் “உப்புக் கணக்கு புத்தகத்திற்கு முகவுரை எழுதியது என் மூத்த பெண் வித்யாதான், அவள் தமிழ் வழியில் பயின்றவள் அல்ல. ஆயினும் அவள் எழுதிய முகவுரை ஒரு தமிழ் எழுத்தாளராக, ஒரு அன்னையாய் என்னை பெருமிதம் அடையச் செய்தது. அதிலிருந்து சில துளிகளை உங்களோடு பகிர விழைகிறேன்,


“இது ஒரு யாத்திரை. இதில் பயணிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் நெடும் பயணம் செய்த அசதியும் தானே வெற்றி பெற்று விட்டாற்போல் எண்ணமும் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு Virtual Travel Experience ஐ படிக்கும் அனைவரும் உணர்வீர்கள்.

இதன் வெற்றி, Blurred Boundaries என்று அதனைக் குறிப்பிடலாம். கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் நிஜ கதாபாத்திரங்களுக்குமிடையே தெரியாத வித்யாசம். “நீங்கள்ளாம் என்பது தொண்ணுறும் மார்க் வாங்கரதுக்காகவா சரித்திரங்கள் நடக்கின்றது? என்று கொள்ளு தாத்தா கேட்கும்போது பளாரென அறைகிராற்போல் இருக்கிறது. இவ்விடம் சட்ட விரோதக் கூட்டத்திற்கு மட்டும்தான் இளநீர் வெட்டிக் கொடுக்கப்படும் எனக் கூறும் பெயரற்ற ஒரு வியாபாரி, அஹிம்சையால் வெள்ளையர்களை சுதந்திரம் தர சம்மதிக்க வைத்த காந்தியால் ஜின்னாவை என்ன செய்ய முடிந்தது? என்று கேட்கும் கோபால், கல்கண்டு போல் சிரிக்கும் கலியுக சபரி, கண்கலங்கச் செய்யும் குழந்தை விதவை காமு என்று நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஏராளம். உப்புக்கு மனிதப் பாதுகாப்பு வளையம் கொடுத்து தடியடி வாங்கிய சத்யாக்கிரகிகளின் தேசப் பற்று, லாகூரை இரத்த நகரமாகிய மதக கலவரம் என்று இந்த தேசம் பட்ட கஷ்டத்தைத் தெரிந்து கொள்ள இந்த உப்புக்கணக்கைப் படித்தேயாக வேண்டும். நான் கற்றது உப்பளவு... கல்லாதது?

இது நீண்டு கொண்டே போகும் இறுதியில் மீண்டும் லா.ச.ரா விற்கே வருகிறேன். “கங்காவில் அவர் எழுதியிருப்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொருந்தும். வாசகனுக்கும் பொருந்தும்.

யாருக்காக எழுதுகிறேன்?
யாருக்காக கருவுற்றேன்?

இரண்டும் ஒரே கேள்விதான். ஒரே பதில்தான்.

“நானா இதை எழுதினேன்?, என்னிடமிருந்தா இது வெளிப்பட்டது? இந்த பூதம் என்னுள் எப்படி இத்தனை நாள் ஒளிந்து கொண்டிருந்தது? இது எழுத்தாளனின் வியப்பு.

வாசகனின் வியப்பு “ எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கிறது? எனக்கே தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின? இவை என் எண்ணங்கள், வேதனைகள் என் வேட்கைகள், என் ஆபாசங்கள் என்று அஞ்சி என் நெஞ்சுக்குள் மறைத்ததெல்லாம் இங்கு எழுத்தில் கண்ட பின் உண்மையில் அவை என் ஆத்மதாபம் என்று இப்போதுதான் விளங்குகிறது. எழுத்து ஊமைச் சிரிப்பு சிரிக்கின்றது. அதற்குத் தெரியும் இருவர் கதையும் ஒரு கதைதான். உலகக் குடும்பத்தின் ஒரே கதை என்று. அதற்குத் தெரியும் தான் சுண்டியது ஒரு தந்திதான். சொல்வதெல்லாம் ஒரு சொல்தான் என்று. உருவேற்றி ஏற்றி, திருவேறி, ஆகாசத்தையும் தன் சிமிழில் அடக்கிக் கொண்டு இன்னும் இடம் கிடைக்கும் சொல் அது.


முன்னுரைகள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால்
நானே எழுதுவதைவிட தொடர்பதிவாக நீங்களும் எழுதலாமே. இத்தொடர் பதிவுக்கு நான் முதலில் அழைப்பது நிறைய புத்தகங்கள் வாசிக்கும் திரு கோபி ராமமூர்த்தியையும், எழுத்தாளர் ரிஷபனையும் மனோசாமினாதனையும்.. யார் எழுதினாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். பொறுமையாய் வாசித்தமைக்கு என் நன்றி.

Thursday, April 14, 2011

அன்பென்ற மழையிலே (சிறுகதை)

நான் இருந்தது ஒரு இருட்டு அறை. என் பசிக்கு உணவு யார் தந்தார்கள், நான் சுவாசிக்க யார் உதவுகிறார்கள்? எதுவும் தெரியாது எனக்கு.

அந்த இருட்டறையில் அவ்வப்போது என்னோடு வந்து பேசிக் கொண்டிருந்தவன் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டான்.

அவன் மட்டுமே என் உற்ற தோழன். நற்றுணையும் அவனே. கடவுள் என்றால் என்ன உறவு? ஒருநாள் நான் அவனிடம் கேட்டேன்.

“அதை நீ உணரும் போது மீண்டும் என்னைக் காண்பாய் என்றான் அவன்

“அது வரை உன்னைக் காண முடியாதா? ஏன் இப்படிச் சொல்கிறாய்? இனி எனக்குத் துணை யார்?

“கவலை வேண்டாம். உனக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள். நானும் உன்னோடுதான் இருப்பேன். நீ மனது வைத்தால் என்னைக் காண முடியும்.

அவன் சொன்னது எதுவும் எனக்கு விளங்கவில்லை. என் உடல் நழுவுவது போலிருந்தது. உடம்பெல்லாம் வலி. நான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தேன். கண் கூசிற்று.

என் பத்து விரல்களிலும் பொம்மலாட்ட பொம்மையைப் போல ஏகப்பட்ட பாசக் கயிறுகள். ஒவ்வொன்றும் ஒரு உறவு. அம்மா, அப்பா, பாட்டி அக்காக்கள், மாமாக்கள், அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்கள் சகோதரர்கள், நான் பிறந்த பிறகும் கூட கயிறுகள் புதுசாய் சுற்றிக் கொண்டன. தம்பி, தங்கைகள் என்றார்கள். வளர வளர நட்புக் கயிறுகளும் என்னைச் சுற்றிக் கொள்ள, ஆஹா இந்த உலகம் எவ்வளவு அன்பாய் அழகாயிருக்கிறது என்று பூரித்துப் போனேன்.

எல்லா உறவுகளுக்கும் நான் செல்லம். என் கண்ணில் கண்ணீர் வந்ததில்லை. வேளைக்கொரு உடை போட்டு அழகு பார்த்தார்கள். என் பசிக்கு பல கரங்கள் சோறூட்டக் காத்திருந்தன. நான் கடவுளை மறந்தே போனேன்.

ஒருநாள் மொத்த உறவுகளும் என்னை எங்கோ அழைத்துச் சென்றது.

கோயில் என்றார்கள். அப்படி என்றால்? நான் கேட்டேன்.

“கடவுள் இருக்கும் இடம்.

நான் திகைத்தேன். எங்கே?

“உள்ளே கருவறையில்

நான் ஓடினேன். கருவறை இருட்டாயிருந்தது உற்றுப் பார்த்தேன்.

கருப்பாய் சிலையொன்று கண்டேன். இதுவா கடவுள்? நான் கண்ட கடவுள் வேறு. காணும் கடவுள் வேறு. அவன் எங்கே? எனக்கு குழப்பமாயிருந்தது.

நான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளேனா அல்லது வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு வந்துள்ளேனா? எனக்குப் புரியவில்லை

ஆயினும் இதுதான் கடவுள் என்று எல்லோரும் சொல்ல நானும் ஏற்றுக் கொண்டேன். இது ஏன் பேசவில்லை? ஏன் சிலையாய் அசையாது நின்றிருக்கிறது? கடவுள் பற்றி ஆளுக்கொன்று சொன்னார்கள். சிலர் பயமுறுத்தினார்கள். தப்பு செய்தால் கண்ணைக் குத்தும் என்றார்கள். சிலர் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றார்கள்.

யாருமே கடவுளை சரியாய் அறியவில்லை. தினப்படி பூ போட்டு, விளக்கேற்றி வழிபடுவது, பண்டிகைகள் கொண்டாடுதல் இவைதான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் செய்யும் காரியமாயிருந்தது. நானும் அந்த ஜோதியில் கலந்தேன். கடவுளைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒவ்வொரு பருவமாய் என்னை விட்டு வலியின்றி பிரிந்தது. நான் தினமும் புதிதாய்ப் பிறந்தேன். வளர்ந்தேன்.

என் கழுத்தில் புதிதாய் ஒரு பாசக் கயிறு சுற்றிக் கொண்டது. புருஷன் என்றார்கள். இனி எல்லாம் அவன்தான் உனக்கு என்றார்கள். புருஷன் மூலமும் புதுசு புதுசாய் உறவுகள்.

நான் பிறக்கும்போது என் அம்மாவும் இப்படித்தான் அலறினாளா? நேற்று வரை என் குழந்தைகளும் கடவுளோடு பேசியிருக்குமோ?. எனக்கே இன்னும் விளங்காத உண்மையை அவர்களுக்கு எப்படி விளங்க வைக்கப் போகிறேன்.

மகளாய் மட்டுமிருந்தபோது வராத கஷ்டங்கள் எல்லாம் தாயான பிறகு வரிசை கட்டி வந்து நின்று வாசற கதவை தட்டியபோது வாழ்க்கை என்பது துன்பமும் நிறைந்தவைதான் எனப் புரிந்தது. இப்படித்தான் என்னைப் பெற்றவர்களும் துன்பங்களை மறைத்து என்னை வளர்த்தார்களோ?

பணம் பொருள் இன்பம் என்று தேடுதல் வேட்டையில், காலம் முதலையைப் போல என்னைப் புரட்டிப் புரட்டிப் போட்டது. என் உறவுகளும் நட்புகளும் திசைக்கொன்றாய் கயிறை அறுத்துச் செல்ல, மிகச் சில கயிறுகளே என் விரல்களில் மிச்சமிருந்தன. ஒன்று அப்பா இன்னொன்று அம்மா, பின், தம்பி, தங்கை அக்கா இவ்வளவே உடனிருந்தன.

ஒரு மழைநாளில் அப்பாவின் கயிறும் இற்றுப் போய் அறுந்தது. இனி அப்பாவைக் காண முடியாது என்பது கொடுமையான உண்மை. கொஞ்சம் சக்தி என்னை விட்டு அகன்றாற்போல் தோன்றியது. அப்பாவை மரணம் பிரித்தது என்றால். மற்றதை கருத்து வேறுபாடுகள் அறுத்தெறிந்தன.

என் கையில் புருஷனும் பெண்களும் மட்டுமே ஒட்டியிருந்தார்கள். என் கையில் மட்டும் ஏன் கயிறுகள் இத்தனை சீக்கிரம் அறுந்து போகின்றன. ஏன் என் பாதையில் மட்டும் இத்தனை மேடு பள்ளங்கள்? அந்த இருட்டில் எத்தனை சந்தோஷமாயிருந்தேன்.! எங்கே போனான் கடவுள்? உன்னோடு இருப்பேன் என்றானே! இருக்கிறானா இல்லையா, அல்லது என் கண்ணுக்குத்தான் தெரியவில்லையா?

“இருக்கிறேன், காணும் முயற்சியை நீதான் எடுக்கவில்லை,

நான் திகைத்தேன். எங்கே இருந்து வந்தது இந்தக் குரல்.?

“உனக்குள்ளிருந்துதான்.

உள்ளேயா?

“ஆம் உன் பார்வையை உள்ளே திருப்பு.

நான் முயற்சித்தேன். நிறைய யோசித்தேன். வாசித்தேன்.

நிறைய பேர் கடவுளைக் கண்டிருக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள். அறியும் முயற்ச்சியில் இருக்கிறார்கள். மிக மெல்லிய திரைதான் அவனுக்கும் எனக்கும் நடுவில். அதை நீக்கி அவனைக் காண்பது என் கையில்தான் உள்ளது.. மும்மலமும் என்னிலிருந்து வெளியேறினால்தான் திரை நீங்கும. எப்படி நீக்குவது? அது அவ்வளவு சுலபமாயில்லை. நான் தவித்த நேரம் படீரென்று அறுந்தது மற்றொரு கயிறு. என் கழுத்து விடுபட்டது. என் உடலின் பாதி எரிந்து சாம்பலாயிற்று. மரணம் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஜீவன் உடலை விட்டு எங்கே செல்கிறது? இனி நான் என் காதலை எப்படி யாரிடம் காட்டுவேன்?

“ஏன் என்னிடம் காட்டேன்.

நான் உள்ளே பார்த்தேன். சற்றே வெளிச்சம் தெரிந்தது. இருட்டில் நான் கண்ட அதே கண்கள்!

வந்து விட்டாயா நீ?

“எப்போதும் இங்குதான் இருக்கிறேன். நீதான் கவனிக்கவில்லை.

ஆமாம் என்னைச் சுற்றி இருந்த உறவுகள் உன்னை மறைத்துக் கொண்டிருந்தன. அவர்கள்தாம் எல்லாம் என்ற அகந்தையில் நீ இருப்பதை கவனிக்கவில்லை. ஆனால் உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருந்தேன் நம்பு.

அந்தக் கயிறுகள் நிலையற்றவை. என்னைப் பற்றிக் கொள். உன்னை என்றும் விட மாட்டேன். உன் துன்பங்கள் எல்லாம் நீயாகத் தேடிக்கொண்டவை. பாசம் எப்போதும் வழுக்கும். அதில் உழலாதே.

அப்படியானால் உன்னிடமும் பாசம் வைக்கலாகாதா?

“ என் கேள்விக்கு பதில் சொல். உன்னை நீ நேசிக்கிறாயா? “

“ஆம்.

“அதே போல் என்னையும் நேசி. நீ வேறு நான் வேறு அல்ல. உண்மையான அன்பை மனிதர்கள் அறிய மாட்டார்கள். நான் அறிவேன். உன் பாசக் கயிறால் என்னை கட்டிப் போட்டுப் பார். அது என்றும் அறுந்து போகாது. நான் உனக்குள் கட்டுண்டு கிடப்பேன்.

எனக்கு அழுகை வந்தது. “ஏன் மனிதர்களுக்கு அன்பு உணர முடியவில்லை.?

“அதனால்தான் அவர்கள் மனிதர்களாகவும், நான் கடவுளாகவும் இருக்கிறேன்.

என் இருள் சற்றே அகல, நான் அவனைப் பற்றிக் கொள்ளத் தயாரானேன். மனதில் பயமில்லை. பொய்யில்லை. அன்பு மட்டுமே இருந்தது.

நான் அவனைத் தொட்ட வினாடி மொத்த உலகத்தின் மீதும் என் அன்பு பொங்கி வழியத் துவங்கியது


பின் குறிப்பு.:

இந்த கதை, சிறுகதை இலக்கணம் மீறியது. காலம் பல உள்ளடக்கியது, இதை இப்படித்தான் எழுத முடியும் என்பதால் இலக்கணம் மீறியிருக்கிறேன்.

Tuesday, April 12, 2011

பெண் எழுத்து (தொடர் பதிவு)

பெண் எழுத்து எனும் தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்த மனோ சாமிநாதனுக்கு நன்றி. தனது பதிவில் மனோ எழுதியதெல்லாம் ஒப்புக் கொள்ளக் கூடியவைதான், ஆண் எழுத்து பெண் எழுத்து என்றெல்லாம் கிடையாது என்றாலும் எல்லை மீறி காமமும் வர்ணனையும் எழுத பெண்ணால் முடியாது. பெண் எழுத்தின் அழகும் அதுதான். அப்படியே விதி மீறலாக ஒரு பெண் கவிஞர் சுய வர்ணனை செய்து எழுதிய கவிதையும் அந்த கவிதாயினியும் பட்ட பாடும், அவரும் மிகத் துணிச்சலாக அதை எதிர் கொண்டதும் அனைவரும் அறிந்ததுதான். விரசமில்லாமல் கண்ணியமாய் எழுதுகிற ஆண் எழுத்தாளர்களையும் நான் அறிவேன். பெண்ணை மட்டம் தட்ட சுஜாதாவின் கதாநாயகன் ஒருவன் கேட்பான். என்னால் முடிவதெல்லாம் உன்னால் முடியுமா என்று. அவளும் முடியும் என்பாள். எங்கே இதைச் செய் என்று சுவற்றில் சிறுநீர் கழிப்பான். பெண்ணை மட்டம் தட்ட இதுவா வழி? எனக்கு சுஜாதாவை மிகவும் பிடிக்கும் என்றாலும் இது படித்த போது கோபம் வந்து சற்றே மரியாதையும் குறைந்தது. இனவிருத்திக்காக கடவுள் ஆண் உடலுக்கு ஒரு அமைப்பையும் பெண் உடலுக்கு வேறொரு அமைப்பையும்அளித்தது ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொள்வதற்கு அல்ல. சங்க காலத்திலேயே பெண் எழுத்துக்கு பெருமை சேர்த்தவர் அவ்வையார். அவரது கவிகளில் சொல்லப் பட்ட விஷயத்தின் வீரியமும், கண்ணியமும் இன்றளவும் பிரம்மிக்க வைக்கும். ஆண் பெண் நட்பு என்பது அவர் காலத்திலேயே அற்புதமாக இருந்திருக்கிறது. அதியமானோடு அவர் கொண்டிருந்த உன்னதமான நட்பு பெண்ணுக்கு பெருமை சேர்த்தது எனலாம். சாண்டில்யனின் எழுத்துக்களில் காமம் சற்று தூக்கலாகவே இருப்பதற்கு காரணம் அவர் ஆண் என்பதுதான் என்றாலும், கல்கியின் கதைகளில் அவர் ஒரு ஆணாக இருந்தாலும் எல்லை மீறாமல் எழுதியதற்கு எது காரணம்? எழுதுவது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருத்தல் அவசியம். வாழ்வின் நிஜத்தை ஓட்டி கதை எழுவதையே நான் விரும்புகிறேன். தனக்கும் ஒரு ராஜகுமாரன் கிடைப்பான் என்று இளம் பெண்களை கற்பனை சுகத்தில் மிதக்க வைக்க என்னால் நிச்சயம் முடியாது. அன்பெனும் வேர், பலமாக ஊன்றி இருந்தால்தான் தன்னம்பிக்கை இலை நுனி வரை ஊடுருவிச் செல்லும் என்பதுதான் எனது எழுத்துக்களின் ஆதார நாதமாய் இருக்கும். அன்பெனும் அச்சாணியில்தான் இவ்வுலகம் சுழல்வதாக நான் நம்புகிறேன். அன்பின்றி செய்யப்படும் அனைத்துமே போலியானவை என நினைப்பவள் நான். என் வீட்டில் மிகச்சில பத்திரிகைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. கண்ணியமான எழுத்துக்களைப் படித்து வளர்ந்தவள் நான். அம்மா வந்தாள் நாவலில், ஒழுக்கம் கெடும் அம்மாவைக் கூட கம்பீரமாக கண்ணியமாக சித்தரித்துக் காட்டியிருப்பார் தி.ஜா. இரண்டு பேர் என்று ஒரு தொடர். இரண்டு பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதியது. கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. காரணம் அதில் வெளிப்பட்ட எல்லை மீறிய வர்ணனைகளும் ஒழுக்க மீறல் சொல்லப் பட்ட விதமும்தான். கண்ணியம் என்பது ஒருவர் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் எல்லை. ஆணோ பெண்ணோ கண்ணியம் காப்பதென்பது அவரவர் விருப்பம். ஆபாசமாக எழுத ஆணுக்குதான் உரிமை இருக்கிறதா என்று ஒருவர் கேட்டார். ஆண் செய்யும் தவறுகளைச் செய்வதுதான் பெண்ணுரிமையா? நம் இலையில் விருந்தேன்கிற பேரில் பல்வேறு பதார்த்தங்களும் இனிப்புகளும் வந்து விழும். நமக்கு தீங்கு செய்யாதவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுவது நமது பொறுப்பு. வாசகர்களுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. கண்ணியமானவற்றைத் தேடிப் பிடித்துப் படிப்பது. என்னை பாதித்த கண்ணியம் மிகு எழுத்துக்களுக்கு சொந்தமானவர்கள் இவர்கள். தி.ஜா, கல்கி, தேவன், நா.பா. உமா சந்திரன், லஷ்மி, அனுத்தமா, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், லஷ்மி ராஜரத்தினம், வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி, லா.ச.ரா. சுபா, அனுராதா ரமணன், எஸ்.ரா. தமிழருவி மணியன், இறையன்பு, சுஜாதா (சிறுகதைகள், கட்டுரைகளுக்கு மட்டும்) இந்த தொடர் பதிவுக்கு பல்வேறு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாசிக்கும் கோபி ராம மூர்த்தியையும், நான் அழைக்க விரும்புகிறேன். அவரது கருத்தையும் அறிய விரும்புகிறேன். படிச்சுட்டு சும்மா போகாம ஒட்டு போட்டுட்டு போங்களேன். ஓட்டுக்கு பணமெல்லாம் கிடையாது சொல்லிட்டேன்.