Showing posts with label tibet. Show all posts
Showing posts with label tibet. Show all posts

Wednesday, July 14, 2010

கயிலாய பரிக்கிரமா (கிரிவலம்)

Sowth west face
West face

Yamadhwar


North face



North west face




We have started kailash parikkirama





kailash close view with siva s face






kailash peak from tarchen (Base Camp)







மானசரோவரை நடந்து வலம் வருபவர்களும் உண்டு. நாங்கள் ஜீப்பில்தான் வலம் வந்தோம். அதன் ஒவ்வொரு இடத்திலிருந்தும் கயிலை மலை ஒவ்வொரு விதமாக தரிசனம் தருகிறது. கடல் மட்டத்திலிருந்து பதினாலாயிரம் அடி உயரத்தில் கடல் மாதிரி ஒரு ஏரி. தேவர்கள் தினமும் நீராடிசெல்வதாக நம்பப்படுகிறது. மனிதனால் குழைக்கமுடியாத அந்த நீலமும் பச்சையும் இன்ன பிற வர்ணங்களும் அந்த இடத்தை தேவலோகம் போல்தான் நினைக்க வைத்தன.
சிற்றலைகள் மெல்ல வந்து கரையை முத்தமிட்டு செல்லும் அழகை நாள் முழுவதும் பார்த்தபடி அமர்ந்திருக்கலாம். உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமான நீரைக் கொண்டது. பல மீட்டர் ஆழத்திலிருக்கும் கூழாங்கற்கள் கூடத் தெரியும் அளவுக்கு கண்ணாடி மாதிரி தெளிந்த நீர். கர்னாலி சிந்து, சட்லெட்ஜ் , பிரம்மபுத்ரா, என்று நான்கு ஜீவ நதிகளின் பிறப்பிடம். சூர்யோதய காலத்தில் இதன் அழகு பலமடங்கு கூடுகிறது. சூர்ய நீரில் பட்டு மொத்த ஏரியிலும் வைரங்கள் நீராடுவது போல் ஜொலிக்கிறது.
அங்கிருந்து அடுத்து செல்வது டார்ச்சேன். கயிலாயத்தின் பேஸ் கேம்ப். மலைகளுக்கு மேலே கயிலையின் சிகரம் நம்மை எட்டிப் பார்க்கிறது. முகத்தோடு ஒரு மலை உலகத்தில் உள்ளதா? கயிலை மலையில் மட்டும்தான் நாம் இந்த அதிசயத்தைக் காண முடியும். (பார்க்க புகைப்படம்) சில நேரம் சிவனின் முகம் மூன்றாகவும் சில நேரம் ஐந்தாகவும் தெரியும். சிகரத்தின் தென்முகத்தில் சரி பாதியில் ஒரு பிளவும் , சிவனின் முகத்திற்கு இடப்புறமாக பக்க வாட்டுத் தோற்றத்தில் தெரிவது பார்வதியின் முகம்.
எங்கள் வழிகாட்டி மொத்தமே பத்தொன்பது குதிரைகள் மட்டுமே இருப்பதாகக் கூறினார். மொத்தம் ஐம்பத்தி இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். கிரிவலம் முடிய மூன்று நாள் ஆகும். சில பேர் நடப்பது முடியாத காரியம் என்று பின் வாங்கி விட்டனர். ஆனால் எங்களில் ஒரு நாற்பது பேர் உருண்டு புரண்டாவது கயிலாய பரிக்கிரமாவை முடித்தே தீருவது என்ற வைராக்கியத்தோடு புறப்பட்டு விட்டோம். எங்களை பரிபூரணமாக ஈசனிடம் ஒப்படைத்து விட்டு அவன் நாமத்தை மனதுக்குள் உச்சரித்தபடி முதல் அடியை எடுத்து வைத்தோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திபெத்திய உதவியாளர் உடன் வருவார். தேவைப்படும் சமயத்தில் யாத்ரியை தன் முதுகில் சுமக்கக் கூடத் தயங்க மாட்டார்கள். பொதுவாகவே உலகத்தின் கூரை எனப்படும் திபெத்தில் பிறந்து வளர்வதால் திபெத்தியர்களுக்கு நம்மை விட சுவாசப்பை அளவில் பெரிதாக இருக்கும் எனக் கூறினார்கள். நமக்குதான் அந்த உயரத்தில் மூச்சு முட்டுகிறது. நடை நடை, நடை, நடையைத்தவிர வேறு ஒரு வேலையும் நமக்கு இல்லை.
முதல் நாள் முழுக்க கயிலாயம் நமக்கு வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறது. சிதம்பரம் தங்க கோபுர வடிவில் ஒரு தோற்றம்.(தென் கிழக்கு முகம்) யாளியைப்ப் போல் மேற்கு முகம். மனிதன் அங்கு எதையும் செதுக்கவில்லை. அனால் இயற்கை அற்புதமான சிற்பங்களை அங்கே செதுக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்தால் ஒவ்வொரு வடிவம். மெல்ல மெல்ல நாங்கள் வடக்கு முகத்தை நெருங்கினோம்.
அதுவரை எங்கோ ஒரு உயரத்தில் நமக்குத் தெரியும் கயிலை மலை தன் வடக்கு முகத்தை நமக்கு வெகு அருகில் பெரியதாக காட்டி நம்ம வரவேற்கிறது. அதன் பிரும்மாண்டத்தில் கண் விரிந்து பேச்சற்று நின்று விடுவோம். லிங்க வடிவில் தலைக்கு மேல் படம் எடுக்கும் நாகத்தோடு கயிலாயம் சிவனே என்று சொல்லாமல் சொல்கிறது. மீண்டும் வந்து அழைத்துச் செல்வேன் , காத்திருங்கள்.

Sunday, July 11, 2010

இமயத்தின் விளிம்பில் இறைமையை நாடி

கயிலாயம் தென்முகம்


சீன எல்லைக்கு போகிற வழியில்

நியாலத்திற்குப் போகும் பாதை

சாகா செல்லும் வழியில் மணல் குன்றுகள்

சாகா செல்லும் வழியில் மணல் குன்றுகள்

மானசரோவர் ஏரி அதன் மேற்புறம் கயிலாயம் முதல் தோற்றம்

அடுத்த மூன்றும் மானசரோவரின் அழகிய தோற்றங்கள்







தெய்வம் எல்லா இடத்திலும் இருக்கிறதே எதற்கு இத்தனை அபாயமான யாத்திரை? என்று பல பேர் என்னிடம் கேட்டார்கள். ஆனாலும் என் ஹிமாலயக் காதல் எதற்கும் அஞ்சவில்லை. 2006 ல் முதன் முறையாக கயிலை தரிசனத்திற்காகக் கிளம்பி விட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ லட்சங்கள் சம்பாதிக்கிறோம், செலவழிக்கிறோம். அதில் ஒரு லட்சத்தை கயிலை தரிசனத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு செலவழிக்கலாம். அப்படி ஒரு புனித அதிர்வும், அமைதியும் அழகும் நிரம்பிய இடம் அது. நாங்கள் சென்றது நேபாளம் வழியாக. இந்திய வழி மிகவும் அபாயமான, மிகுந்த உடல் சக்தி தேவைப்படும் வழி. இந்திய அரசு மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே இந்திய வழியில் கயிலை யாத்திரை செல்லமுடியும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கொலஸ்ட்ரால் இதெல்லாம் இருந்தால் நீங்கள் அவ்வழியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். ஒவ்வொரு கேம்ப்பிலும் உடற் பரிசோதனை நடக்கும். நீங்கள் பாசாவதும் பெயில் ஆவதும் உங்கள் உடற் தகுதியை வைத்துதான். பாதி வழியில் கூட திருப்பி அனுப்பப் படலாம். எனக்கு இரத்த அழுத்தம் சர்க்கரை இரண்டும் உண்டு. எதற்கு வீண் ஆசை என்றுதான் நேபாளம் மூலம் செல்லத் தீர்மானித்தேன். ஆனாலும் இந்திய வழியில் செல்ல முடியாததில் உள்ளூர ஒரு வருத்தமும் இருந்தது. இந்திய வழியில் கயிலாயம் சென்று வந்தேன் என்று சொல்லும்போது கிடைக்கும் மரியாதையே தனி. அவ்வளவு கடினமான வழி அது. கிட்டத்தட்ட மலை விளிம்பில்தான் நமது குதிரைப் பயணம் நாட்கணக்கில் தொடரும். நேபாளம் வழியில் மிக சொகுசான பயணம்தான். இங்கிருந்து டெல்லி நேபாளம் விமானப் பயணம். கடவுளின் தேசமாகிய நேபாளம் அவ்வளவு பசுமையாயிருக்கிறது. கோவில்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக கட்டப்பட்டிருக்கிறது. பசுபதிநாதர் கோயில் மிகப் பெரியது. நந்தி நம் ஊர் நந்தி மாதிரி இருக்காது. ஒரு பெரிய காளையின் முகத்தோற்றத்தோடு தங்க நிறத்தில் மிகப்பெரியதாய் இருக்கிறது. பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில் நேபாளவாசிகளுக்கு காசி மாதிரிதான். நதிக்கரையில்தான் பிண தகனம் நடக்கிறது.
நேபாளத்திலிருந்து சீன எல்லை வரை பேருந்து பயணம். எத்தனை நதிகள்! நூற்றுக்கணக்கில் அருவிகள். காணக் கண் கோடி வேண்டும். அதே நேரம் பாதை பல இடங்களில் களிமண் சகதியும் குண்டும் குழியுமாய் ஆபத்தாகவே இருக்கிறது. கவலை வேண்டாம் அந்த ஊர் ஓட்டுனர்கள் மிக மிக திறமையானவர்கள். மலைகளில் வாகனம் ஓட்டி பழக்கப்பட்டவர்கள். சீன எல்லையில் நண்பர்கள் பாலம் கடந்து சீனாவுக்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பிறகு ஆயிரம் கிலோமீட்டர்கள் பிரயாணமும் லேண்ட்க்ருயிசர்கள் எனப்படும் ஜீப்பில்தான். மலைகளில் இந்த வாகனம் சர்வ சாதாரணமாக ஏறும் இறங்கும். சீனாவின் சாங்மு நகரம் மலைகளில் தொங்கிக்கொடிருப்பது போல் அமைந்திருக்கிறது. இரவு நேரங்களில் இது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
சாங்க்மு வரைதான் பசுமை. பிறகு பழுப்பு மலைகள்தான். போகப்போக பனிச் சிகரங்கள். இறைவன் எப்பேற்பட்ட சிற்பியும் ஓவியனுமாக இருக்கிறான் என்பதை இங்கு அறியலாம். உலகத்தின் எல்லா வர்ணங்களும் இங்கு கலந்து குழைந்திருக்கிறது. நியாலம் என்பது அடுத்த தங்குமிடம். இங்கேயே சிலருக்கு இறைக்க ஆரம்பித்து விடும். குளிர் உடலைக் குத்தும். நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது ஊர் சுற்றக் கிளம்பி விட்டோம். இங்கு flask தரமாக கிடைக்கும்.
இங்கிருந்து கயிலாயம் வரை சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் என்பதால் திபெத்தியர்களின் வாழ்க்கை பரிதாபமாகவே உள்ளது. மூக்கு ஒழுகாத திபேத்தியக் குழந்தைகளைக் காண்பது அரிது. அடுத்தாற்போல் சாகா, பர்யாங் என்று இரண்டு தங்குமிடங்கள். அதன் பிறகு மானசரோவரில்தான் நமது ஜீப் நிற்கிறது. ஆஹா ஆஹா எப்படி வர்ணிக்க அந்த அழகை! நான் புகைப்படங்கள் தந்திருக்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நீலம், பச்சை, சாம்பல் என்று அந்த ஏரியில்தான் எத்தனை வர்ணங்கள்! காற்று காதைக்கிழிக்கிறது. மற்றபடி அந்த அமைதி மெல்ல மெல்ல நமக்குள்ளும் பரவுகிறது. கயிலையின் முதல் தரிசனத்தில் மனது சிலிர்த்துப் போகிறது. ஒரு ரிஷி கண்மூடி தவத்தில் அமர்ந்திருப்பதைப்போல வெண்ணிற கயிலை மலை!. எனக்கு கண்ணீர் பீறிட்டது. அவசர அவசரமாக அதைத்துடைத்துக் கொண்டேன். அது கயிலையை மறைக்கிறது என்பதால். அடுத்து வரும் பதிவில் கயிலாய பரிக்கிரமா அனுபவம் பற்றி எழுதுகிறேன் காத்திருங்கள்.