Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Wednesday, December 1, 2010

மதம் பிடித்தவர்கள்

காட்டிலிருந்து வழி தவறி நாட்டுப்புறம்,
நுழைந்து விட்டன ஜோடி யானை

கூக்குரலோடு பின்னால் ஓடினார்கள்
குழந்தைகள்

தம் வீரம் காட்ட அதன் மீதேற
முயற்ச்சித்தனர் இளைஞர்கள்

விநாயகா! கும்பிட்டனர்
ஒரு சிலர்

யானைகள் ஆடி அசைந்து
அமைதியாய் நின்றிருந்தன

"என்ன செய்யலாம்?" ஒருவர் கேட்டார்
"காவல் துறைக்கு சொல்வோம்"
என்றார் ஓருவர்

நமக்கே இருக்கட்டுமே, கோவிலில்
கட்டி வைப்போம்

"எந்தக் கோவிலில்?"

"இதென்ன கேள்வி? பெருமாள் கோவிலில்தான்"

"ஏன் சிவன் கோயிலில் கட்டினால் ஆகாதோ?"

"எதற்கு தர்க்கம்? இரண்டு யானைகள்
இருக்கையில்?"

"ஒன்று சிவனுக்கு, மற்றது பெருமாளுக்கு!"
தீர்ப்பு சொல்லிற்று ஒரு தலை

மனிதர்களின் மதம் யானைக்குப்
புரியவில்லை
அவை அமைதியாய் அவர்கள்
பின்னே சென்றன

திருநீற்றுப் பட்டையோடு
சிவன் கோயிலில் நின்றது ஒன்று

பெருமாள் கோயிலில் மீண்டும்
ஒரு தர்க்கம்

வடகலையா? தென்கலையா?
இன்னொரு யானை கிடைக்கும் வரை
தர்க்கம் தொடரும்

நாமம், பட்டை எதற்கும் அர்த்தம் புரியாத
யானைகள் ஒன்று மற்றதைத்
தேடிக் கொண்டிருக்கிறது

எந்தக் குறி சுமந்தாலும் யானை யானைதான்
என்பது எப்போது புரியும் மனிதருக்கு

நெற்றியில் குறி சுமக்கும் நாலாம் படியிலிருந்து
எப்போது முதல் படியை நோக்கி ஏறுவார்கள்
இந்த மனிதர்கள் என்பது போல் யானைகள்
அசைந்து கொண்டிருந்தன.