Showing posts with label சாலை விதிகள். வித்யாசுப்ரமனியாம். Show all posts
Showing posts with label சாலை விதிகள். வித்யாசுப்ரமனியாம். Show all posts

Friday, November 26, 2010

சென்ற வாரம் காந்தி சிலையருகில்

சென்ற வாரம் கடற்கரை சாலையில் நடந்தது இது. காந்தி சிலையருகே
பாரீஸ் முனையிலிருந்து திருவான்மியூர் வழியே செல்லும் மாநகரப் பேருந்து ஒன்று சிக்னலுக்காக மெதுவே வந்து நிற்பதற்கு முன் அதிலிருந்து ஒருவர் சிக்னலில் அவசரமாக அப்படியே கீழே குதிக்கிறார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது.

அவர் கீழே குதித்த அதே நேரத்தில் பேருந்தை ஓட்டி வந்து கொண்டிருந்த ஒரு பைக் ஓட்டுனர் மீது அவர் மோத, அந்த பைக் ஓட்டுனர் மட்டும் எகிறிச் சென்று நடைபாதையில் நிலைகுலைந்து விழ, அவரது பைக்
ஆளில்லாமல் அதுபாட்டுக்கு சற்று தூரம் ஓடி பேருந்து ஒன்றில் இடித்து கீழே விழுந்தது. ஆபத்து எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள். அந்த பைக் ஓட்டி எந்த சாலை விதியையும் மீறவில்லை. ஆயினும் சாலை விதியை மீறி ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் சடாரென கீழே குதித்ததால் ஒரு தவறும் செய்யாத அந்த பைக் ஒட்டிக்கு சரியான அடி.

இதை விதி என்று சொல்ல நான் தயாரில்லை. இந்தியாவில் யாரும் சட்டங்களையும் சரி சாலை விதிகளையும் சரி மதிப்பதில்லை. சிறிய தவறுகளோ பெரிய தவறுகளோ தண்டனை என்று ஒன்று இருந்தால்தான், தனி மனித ஒழுக்கம் மேம்படும். அமெரிக்காவில் அதிபரின் மகனோ மகளோ சாலை விதியை மீறினாலும் தண்டனை உண்டு. இங்கோ சாதாரண அடியாளுக்கு கூட ராஜ மரியாதை.

டிராபிக் போலீசுக்கு பணம் கொடுத்து விட்டால் குற்றவாளி கூட நிரபராதி. அந்த பைக் ஒட்டிக்கு நேற்று நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? எல்லா பேருந்துகளிலும் அவசியம் தானியங்கி கதவுகள் இருக்க வேண்டும். அவைகள் பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே திறக்க வேண்டும். பேருந்து புறப்பட்டதும் ஓடி வந்து யாரும் ஏறவும் முடியாது. ஓடும் பேருந்திலிருந்து இறங்கவும் முடியாது. இனி ஒரு விதியை இனியாவது செய்யுமா நம் அரசு? ஸ்பெக்ட்ரம் எழுப்பும் சப்தத்தில் நம் கூப்பாடு யாருக்கு கேட்கப் போகிறது? இருப்பினும் ஊதும் சங்கை ஊதுவது நம் கடமை. ஊதியாயிற்று.