Tuesday, September 27, 2016

பிரசவம்

பிரசவம்:
(சற்றே பெரிய பதிவுதான். மன்னிக்க. வேறுவழியில்லை)
(இப்பதிவு ஆண்களுக்கும்தான். உங்களுக்கும் மனைவி, பெண்கள், சகோதரிகள் இருப்பார்கள். எனவே தெரிந்து கொள்வது தவறல்ல)

சந்தேகமே இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது, அது நார்மல் டெலிவரியோ, சீசெக்ஷனோ மறுபிறப்புதான். ஒரு காலத்தில் தொண்ணூறு சதவிகிதம் நார்மல் டெலிவரிதான் நிகழும். அபூர்வமாகத்தான் சிசேரியன் நடக்கும். எங்கள் குடும்பம் பெரியது. அத்தை மகள்கள், மாமா மகள்கள் அக்காக்கள் மன்னிகள் என்று நிறைய பேர். அத்தனை பேருக்குமே நார்மல் டெலிவரி மூலம்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் மருத்துவ மனைகள் எப்போது கார்பொரேட் மயமாகியதோ அப்போதிலிருந்து நார்மலாகப் பிறக்கவேண்டிய குழந்தைகள் எல்லாம் சிசேரியனில் பிறக்கத் தொடங்கின. மருத்துவமனைகளின் லாபத்திற்காக வயிறுகள் கிழிக்கப் பட்டன. இப்போதும் அரசு மருத்துவ மனைகளில் நார்மல் டெலிவரிதான் அதிகம். ஏனெனில் அது லாபத்திற்காக இயங்குவதில்லை. ஆனால் சுத்தம், சுகாதாரக் குறைவு, ஊழியர்களின் அலட்சியம், சிடுமூஞ்சித்தனம், இவைதான் அங்கு செல்ல விடாது தடுக்கிறது.

சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்ததற்கு மருத்துவமனைகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இந்தக்காலப் பெண்களுக்கும் பிரசவ வலியை எதிர் கொள்ளும் துணிச்சலோ பொறுமையோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலபேர் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களிடம் தனக்கு சிசேரியனே பண்ணி விடுங்கள் என்று சொல்வதாக அறிந்த போது ஒரு பக்கம் வியப்பும் கூடவே பரிதாபமும்தான் ஏற்பட்டது. பிரசவ வலி என்ற உன்னதமான அனுபவத்தை அவர்கள் இழக்கிறார்களே என்ற பரிதாபம்தான். எனக்கு தெரிந்த சில பெண்கள் கூட, தாங்களாகவே ஒரு பயத்தில் தங்களுக்கு சிசேரியன் செய்து விடுங்கள் என்று கேட்டு அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றுக் கொண்டிருப்பது தெரியும்.

கவிதா கன்சீவ் ஆனதுமே அவளை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டலாம் என்று நிறைய விசாரித்து, இணையத்திலும் நிறைய தேடினோம். நாங்கள் அறிந்த வரையில் சீதாபதி கிளினிக்கில் அதிகம் நார்மல் டெலிவரியில் குழந்தைகள் பிறந்திருந்தன. பலரும் நல்ல அபிப்பிராயங்களைக் கூறினார்கள். எனவே சீதாபதிக்குதான் அவளை அழைத்துச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தோம்.

சீதாபதி மருத்துவமனைக்குள் முதன் முதலில் நுழைந்த போது அங்கிருந்த ஹோம்லி அட்மாஸ்பியர் என்னைக் கவர்ந்தது. யார் முகத்திலும் பதட்டமில்லை. மருத்துவர்கள் கனிவாகப் பேசினார்கள். ஒவ்வொரு கர்ப்பிணியையும் அக்கறையாக பரிசோதித்தார்கள். அவர்களுடைய தலையாய நோக்கமே நார்மல் டெலிவரியை ஊக்குவிப்பதே என்பது நன்கு புரிந்தது. கர்ப்பிணிகளை மனதளவில் நார்மல் டெலிவரிக்குத் தயார் செய்கிறார்கள். அங்கேயும் சிசேரியன் நடக்காமல் இல்லை. ஆனால் அது குறைவு. சிக்கல் ஏதேனும் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை.

இங்கு பிரசவ வலியை எதிர்கொள்வது பற்றி வகுப்புகள் எடுக்கிறார்கள். அந்த வகுப்புகளுக்கு கணவரும் உடன் வரவேண்டும். கணவர் வெளியூரில் இருந்தால் அம்மா செல்லலாம். கவிதாவோடு நான்தான் சென்றேன். லேபர் பற்றி, தாய்ப்பால் கொடுப்பது பற்றி என்று அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு வகுப்புகளும் அற்புதம். டாக்டர் ரேகா சுதர்சன் வெகு சுவாரசியமாக பல அறிய தகவல்களைக் கூறுகிறார். லேபரை எதிர்கொள்ளும் ஆர்வத்தை எழுப்புகிறார். இந்த வகுப்புகளில் தாங்கள் கையாண்ட வித விதமான பிரசவங்களைப் பற்றி அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரசவ பயத்தைப் போக்குவதற்காக எடுக்கப் படும் இந்த வகுப்புகள் நிஜமாகவே பயத்தைக் களைய வைக்கிறது எனலாம்.

பிரசவ வலி...! தாளமுடியாததுதான். ஆனால் தாய் படும் சிரமத்தை விட அதிகமாய் உள்ளே இருக்கும் சேய் படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். லேபர் பெய்ன் பற்றிய வகுப்பில் டாக்டர் கூறும் அறிவுரையில் மிக முக்கியமானது தயவுசெய்து யாரும் கத்தி கூப்பாடு போடாதீர்கள் என்பதுதான் கத்திக் கூப்பாடு போடும்போது அதிலேயே முக்கால்வாசி எனர்ஜி செலவழிந்து விடுவதால் குழந்தையை வெளித் தள்ளுவதற்கு சக்தியில்லாது போய் விடுகிறது. இதனால் ஒரு மணி நேரத்தில் முடியவேண்டிய பிரசவ நேரம் மூன்று நான்கு மணிநேரம் நீண்டு போகிறது. இதனால் உள்ளிருக்கும் சிசுவின் சிரமமும் கூடுகிறது.


பல வெளிநாடுகளில் பிரசவ நேரத்தில் கத்தக் கூடாது, மீறி கத்தினால் அபராதம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பலர் என்ன கொடுமை இது கூறலாம். ஆனால் அதற்கு உண்மையான காரணம், கத்தி கத்தி எனர்ஜி வீணாகி பிரசவ நேரம் அதிகரித்துவிடும், உள்ளிருக்கும் சிசுவை புஷ் பண்ணும் சக்தியை அவர்கள் இழந்து விடக் கூடும் என்பதால் அந்தக் கட்டுப்பாடு என்பது டாக்டர் ரேகா சுதர்சனின் அறிவுரைக்குப் பின்னர்தான் புரிந்தது.

அந்தக் காலங்களில் உடலுழைப்பு அதிகமிருந்தது. சுகப் பிரசவத்திற்கு அது ஒரு பெரிய காரணமாக இருந்தது. இப்போது எல்லாமே இயந்திர மயம் என்ற நிலையில் உடலுழைப்பிற்கு அதிக வாய்ப்பில்லை. ஆனால் அதற்கு பதில் Prenatal excercise என்று யோகா உட்பட பல பயிற்சிகளை சொல்லித் தருகிறார்கள் அதில் ஒன்று காற்றடிக்கப்பட்ட பெரிய பந்து ஒன்றின் மீது செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியைத் தவறாது செய்து வரும் போது அற்புதமான பலனை அது தருகிறது என்றும் அறிந்தேன். தவிர குறைந்த எடையுள்ள டம்பிள்ஸ் பயிற்சியும் செய்வதும் சிறந்தது.

என் காலத்தில் இப்படி எல்லாம் வகுப்புகள் கிடையாது. இப்போதும் எத்தனை மருத்துவமனைகளில் இது போல் வகுப்புகள் எடுக்கப் படுகின்றன என்று தெரியாது. என் இரண்டு பெண்களும் நார்மல் டெலிவரியில்தான் பிறந்தார்கள் என்றாலும் நான் வலி தாளாது கத்தியிருக்கிறேன். குழந்தையை வெளித் தள்ளத் தெரியாது திணறி இருக்கிறேன். நல்ல மருத்துவர்கள் வரம். கனிவாக பேசும் நர்சுகள் கூடுதல் பலம்.
பிரசவலி என்பது தொடர்ச்சியாக வருவது அல்ல. விட்டு விட்டு வருவது. ஒரு வலிக்கும் அடுத்த வலிக்கும் இடையே முதலில் அதிக நேரம் இருக்கும். வலி தோன்றியதும் அதை உற்று கவனிக்க வேண்டுமே தவிர பதட்டப்படத் தேவையில்லை. வலியின் ஃப்ரீக்வென்ஸி குறைய ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு கிளம்பலாம். தாய்க்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் தேவையான பொருட்களை பத்து நாள் முன்பே ஒரு பையில் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

கவிதா வெகு சின்சியராக அத்தனை பயிற்சியையும் செய்தாள். மாடிப் படிகளை பல முறை ஏறி இறங்கினாள். அவளுக்கு லேபர் ஆரம்பித்தவுடன் அவள் என்னிடம் உடனே சொல்லவில்லை. தானே அதை உற்று கவனித்து விட்டு டாக்டர் சொன்னபடி அடுத்தடுத்த வலியின் இடைவெளி குறைந்து ஒரு துளி ரெட் ஸ்பாட் தெரிந்ததும்தான் என்னிடம் கூறினாள். அப்போது விடியற்காலம் மணி இரண்டே முக்கால். நான் உடனே அவளது மாமனாருக்கு போன் செய்தேன். அவர் உடனே காரை எடுத்துக் கொண்டு வந்து எங்கள் தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவில் வாசலருகில் காத்திருந்தார். (எங்கள் தெருவில் கார் நுழையாது இருசக்கர வாகனங்கள் கன்னாபின்னாவென்று நிறுத்தப் பட்டிருக்கும்) எனவே தெருமுனைவரை எவ்வித பதட்டமும் இன்றி நடந்தே வந்து காரில் எறிக் கொண்டாள் அவள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம். டியூட்டி டாக்டர் செக்கப் பண்ணும் பொது கூட எனக்கு லேசாக சந்தேகம்தான். ஏனெனில் குறித்த நாளிற்கு பத்து நாள் முன்பு இந்த வலி வந்திருந்ததால் அது பொய்யா நிஜவலியா என்ற சந்தேகம்தான். ஆனால் டாக்டர் வெளியில் வந்து இன்னும் இரண்டு மணி நேரத்தில் டெலிவரியாகி விடும் என்ற போது என்னால் கவிதாவை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பிரசவ நேரத்தில் அங்கு கணவரோ தாயோ உடனிருக்கலாம். பயந்து பதறுகிறவர்கள் உள்ளே செல்லாமல் இருப்பதே நல்லது. நான் முதல் அரைமணி நேரம் லேபர் அறையில் கவிதாவோடு இருந்தேன். டாக்டர் ரேகா சுதர்சனின் வகுப்புகளில் கூறியபடி நூறு சதவிகித ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கவிதா. பிராணன் போகும் வலியிலும் அவளிடமிருந்து சின்ன சப்தம் கூட வரவில்லை. குழந்தையை வெளித்தள்ளுவதற்கு சில வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனைப் பின்பற்றி முயன்றால் சிரமம் குறையும். கடைசி வரை கவிதா வலியில் கத்தவே இல்லை. அவளது வலி முழுவதும் கண்களில் கண்ணீராக வெளியேறியதே தவிர அம்மா என்கிற சின்ன முனகல் கூட அவள் வாயிலிருந்து எழவில்லை. அவள் மீது என் மரியாதை மேலும் கூடியது. ஒரு தாயாக என்னால்தான் அந்த வலி மிகுந்த சூழலில் தொடர்ந்து நிற்க முடியவில்லை. அவள் மாமியாரை அங்கு விட்டு விட்டு வெளியில் வந்தேன். அடுத்த அரைமணியில் அவளது மாமியார் வெளியில் வந்தார். பெண்குழந்தை என்றபடி என்னை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

லேபர் அறையில் டியூட்டியில் இருந்த அத்தனை பேரும் கவிதாவைப் புகழ்ந்தார்கள். இந்த அளவுக்கு எந்த பெண்ணும் இதுவரை இப்படி ஒத்துழைப்பு அளித்ததில்லை என்று வியந்தார்கள். கவிதாவை மறக்கவே முடியாது என்று ஒரு நர்ஸ் பாராட்டினார். ஆனால் கவிதா மனமார நன்றி சொன்னது டாக்டர் ரேகா சுதர்சனுக்கு. அவர் கொடுத்த தைரியம்தான் தன் ஒத்துழைப்புக்குக் காரணம் என்றாள். நல்ல மருத்துவரும், சரியான வழிகாட்டுதலும் இருப்பின் பிரசவம் என்பது நல்லபடி நிகழக்கூடிய ஒன்றுதான். இப்போது மருத்துவ உலகம் டெக்னிகலாக எவ்வளவோ முன்னேறி விட்டது.

பிரசவம் குறித்து மட்டுமல்ல. தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் இங்கு வகுப்பு எடுக்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகளை விரிவாக கூறுகிறார்கள். ஏற்கனவே நமக்கெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும் அவர்களது விவரிப்பு சுவாரசியமாக இருக்கிறது. பல அனுபவஸ்தர்களை அழைத்து சிறப்பு லெக்சர் கொடுக்கச் செய்கிறார்கள். ஏற்கனவே அங்கு நார்மல் டெலிவரியாகி நல்ல முறையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து வருபவர்களையும் அழைத்து தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறார்கள். அங்கு பணி புரியும் ஒரு டாக்டரே தன் குழந்தைக்கு தினமும் தேவையான தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்து வீட்டில் வைத்து விட்டு வருவதாகக் கூறினார். சில நேரம் தன் பணிக்கு இடையிலும் கூட குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்து அனுப்புகிறார் என அறிந்த போது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்து மயிலைக்கு அருகில் உள்ள பிரபல மருத்துவமனையின் லேபர் வார்டில் குத்துப் பாட்டுகளை அலறவிட்டு பிரசவ வலியில் பரிதவிக்கும் பெண்களுக்கு கூடுதலாக தலைவலியையும் கொடுத்திருப்பதை அறிவேன். சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் முறையிட்டும் எந்த பயனுமில்லை. பல டாக்டர்கள் (நான் எல்லோரையும் சொல்லவில்லை) மருத்துவமனைக்கும் தனக்கும் லாபம் வேண்டி, கடைசி நேரத்தில் ஏதோ சிக்கல் இருப்பதாக பொய் சொல்லி, நார்மலாக நிகழ வேண்டிய பிரசவத்தை சீசெக்ஷனாக்கி இருக்கிறார்கள். இதை எழுதுவதற்கு முன் எனக்குத் தெரிந்தவர்கள் பலரிடம் அவர்களது பிரசவம் பற்றி கேட்டேன். நான் பேசிய பத்து பேரில் எட்டு பேர் கசப்பான அனுபவங்களையே கூறினார்கள்.

உங்கள் மகளோ, மருமகளோ, சகோதரியோ, மனைவியோ, கருவுற்றதும், முதலில் நல்ல மருத்துவர்களைக் கொண்ட நம்பகமான மருத்துவமனையைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவர் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறாரா அல்லது மருத்துவமனையின் லாபத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது நல்லது. எனக்குத் தெரிந்து ஒரு பெண்ணிடம் அவளது மருத்துவர் கடைசி நேரம் ஏதோ சிக்கல் என்று சிசேரியன் செய்ய வேண்டும் என்று கூற, அவளது அம்மா துளியும் பயப்படாமல் அதெல்லாம் தேவையில்லை என் பெண்ணுக்கு சுகப் பிரசவமாகும். அதுவரை காத்திருப்போம் என்று உறுதியாக கூற, உடனே மருத்துவர், "அப்பறம் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா எங்களைக் குறை சொல்லக் கூடாது" என்று பயமுறுத்த, அப்போதும் அந்த அம்மா உறுதியாக இருந்திருக்கிறாள். இறுதியில் அந்தப் பெண்ணுக்கு நார்மலாக டெலிவரியாகியிருக்கிறது. அதே இடத்தில் பிரசவத்திற்காக சென்றிருந்த என் உறவினரிடமும் டாக்டர் இப்படி கூற இவர்கள் பயந்து சிசேரியனுக்கு சம்மதித்திருக்கிறார்கள். பிற்பாடு என் உறவினர் நாமும் அந்த அம்மா மாதிரி பயப்படாம இருந்திருந்தா நார்மலாவே குழந்தை பிறந்திருக்குமோ என்று யோசித்து வருந்தினார்.

முன்பெல்லாம் சீதாபதி மருத்துவமனையில் கேண்டீன் கிடையாதாம். இப்போது இரண்டாவது மாடியில் தரமான கேண்டீனும் இயங்குகிறது. அனைத்து ஐட்டங்களும் தரமாக சுவையாக இருக்கிறது. விலையும் சகாயமாக இருக்கிறது. கொடுக்கிற காசுக்கு வயிறு நிறைகிறது. குறை என்று சொல்ல வேண்டுமானால் இந்த கேண்டீன் பணியிலும் தமிழ் தெரியாத வடகிழக்கு ஆட்கள் இருக்கிறார்கள். சில நேரம் சொதப்புகிறார்கள். தவிர அறைகளில் கொசுத் தொல்லையும் இருக்கிறது. வேண்டிலேட்டர்களில் கொசு வலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டு வந்தோம்.

இறுதியாக ஒரு விஷயம். நீங்கள் எந்த மருத்துவரிடம் சென்றாலும் கருவுற்ற காலத்தில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்களை, அதாவது உடற் பயிற்சிகள், யோகா, தினசரி நடை பயிற்சி, சரிவிகித சத்துணவு, சர்க்கரை அளவு, இரத்தக்கொதிப்பு இவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற விஷயங்களை மன உறுதியோடு சரியான முறையில் கடைபிடித்தால், நீங்கள் எந்த மருத்துவரிடம் சென்றாலும், நார்மல் டெலிவரி என்பது உங்கள் கையில்தான். லேபர் பெயின் பற்றி நிறைய விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது. வீண் பதட்டமும் தேவையில்லை.

நமக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை மற்றவருக்குச் சொல்வதில்லையா. அது போல்தான், யாம் பெற்ற நல் அனுபவங்கள் என இவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மறுபடியும் நார்மல் பிரசவங்கள் அதிகரிக்கவேண்டும் என்ற ஆசையும் கூடத்தான். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே.





2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரஸவம் பற்றிய பயமில்லாமல் அனைவரும் படிக்க மிகவும் பயனுள்ள பதிவு.

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி வைகோ சார்