Tuesday, September 27, 2016

உயர்வு

எனக்கென்று  சில  கொள்கைகள்  இருக்கிறது.  அதை  எந்த சுய லாபத்திற்காகவும்  விட்டுக்  கொடுக்க  மாட்டேன்.  புகை,  புகையிலை இவற்றிற்கு  எதிரானவள்  நான்.   புகைக்கு  எதிராக  பல  விழிப்புணர்வு பதிவுகள்  கட்டுரைகள்  எழுதியிருக்கிறேன். இது  என்னுடைய  மற்றொரு அனுபவம்.

2009  ஆம்  ஆண்டு    என்  அலுவலகம் எனக்கு  கண்காணிப்பாளராக  பதவி  உயர்வு  அளித்தது.  சந்தோஷமான  விஷயம்தான்.  சில  பல நிர்வாக  குளறுபடிக;ளால்  இந்த  பதவி  உயர்வு   எனக்கு  கால  தாமதமாகவே  வழங்கப்  பட்டது.  என்னைவிட  ஜூனியர்களுக்கு  எனக்கு  முன்பே  வழங்கப்  பட்டிருந்தது.  நான்  பலமுறை  சுட்டிக்  காட்டியும்  ஏதேதோ  காரணம்  சொல்லி  தட்டிக்  கழித்தார்கள்.    2007  ல்   வர  வேண்டிய  பதவி  உயர்வு   ஒரு  வழியாக  2009  ல்  வந்தும்  சந்தோஷப்  பட முடியவில்லை.  கிருஷ்ணகிரிக்கு  அருகே  சூளகிரி  என்ற  ஊரில்  எனக்கு  போஸ்டிங்  போட்டு  இருந்தார்கள்.  கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த  கவிதாவை  தன்னந்தனியே  சென்னையில்  விட்டு  விட்டு  என்னால்  செல்ல  முடியாத  சூழல்.  அதைக்  குறிப்பிட்டு  சென்னையிலேயே  பணியிடம்  வழங்கக்  கேட்டேன்.  மறுத்து  விட்டார்கள்.


பலரும்  என்னிடம்,  எந்தக்  காரணம்  கொண்டும்  பதவி  உயர்வை  துறக்காதே. இப்போது  விட்டால்  மீண்டும்  மூன்றாண்டுகள்  கழித்து  அதுவும்  வேகன்ஸி இருந்தால்தான்  மீண்டும்  பதவி  உயர்வு  தருவார்கள்.  அது  மேலும் இரண்டாண்டு   தள்ளிப்  போனால்  அதற்குள்  நீ  ரிடையர்  ஆகி  விடக்  கூடும்.   கிட்டத்தட்ட  இந்த  பதவி  உயர்வால்  உனக்கு  நல்ல  பெனிஃபிட்  கிடைக்கும், அதை  முட்டாள்தனமாக     இழந்து  விடாதே  என்றார்கள்.   சிலர்  சூலகிரியிலேயே  சென்று  பணியில்  சேர்ந்து விட்டு  பின்னர்  விடுப்பில் வா.  வந்து  பார்க்க  வேண்டியவர்களைப்   பார்த்து  சம்திங்  கொடுத்து  எப்படியாவது  சென்னைக்கு  மாறுதல்  பெற்று விடலாம்.  இதனால்  உன்  ரிடயர்மென்ட்  பெனிஃபிட் சில  லட்சங்கள்  அதிகரிக்கும்.  வாய்ப்பை  விட்டு  விடாதே  என்றார்கள்.  யாருக்கும்  லஞ்சம்  கொடுத்து  காரியம்  சாதிக்க  மாட்டேன்  என்று   உறுதியாகக்  கூறி    விட்டேன்.


 என்  முன்னால்   மூன்று  வழிகள்   இருந்தன.  ஒன்று  சூலகிரி   போய்  பணியில்  சேர  வேண்டும்.  இரண்டாவது  சென்னையிலேயே   வேறு  ஏதேனும்   துறையில்  டெபுடேஷன்  கிடைக்க  முயற்சிக்கலாம். மூன்றாவது    மூன்றாண்டுகளுக்கு  பதவி   உயர்வை  தற்காலிகமாகத்  துறந்து  (relinquish)    விடலாம்.   முதலாவது  நிச்சயம்  முடியாது.  மூன்றாவதை  சுலபமாக  ஒரு  வெள்ளை  தாள்  எடுத்து  எழுதினால்   இரண்டே  நிமிடத்தில் முடிந்து  விடும்.   ஆனால்  அப்படி  செய்வதற்கு  முன்  ஏன்  இரண்டாவதை  முயற்சித்து  பார்க்கக்  கூடாது  என்று  தோன்றியது.  முயற்சித்து  செய்து  பார்ப்போம்.   வெற்றி  கிடைக்கவில்லை  எனில்  மூன்றாவதைச்  செய்யலாம்  என்று  முடிவெடுத்தேன்.


 பல  துறைகளுக்கு   நானே  நேரிலும்,  நண்பர்கள்  மூலமாகவும்  முயற்சித்தேன்.  எங்கும்  கண்காணிப்பாளர்  பதவி  காலியில்லை  என்றே  கூறப்  பட்டது.   இதனிடையில்  எனக்குத்  தெரிந்த  ஒரு  ஐ.ஏ.எஸ்  ஆபிசரை  நேரில்  பார்த்து  அவரால்  எனக்கு  ஏதாவது  விதத்தில் உதவ  முடியுமா  எனக்  கேட்கலாம்  என  நினைத்து  அவரைத்  தேடி  தலைமைச்  செயலகம்  சென்றேன்.  எந்த  பந்தாவுமில்லாது  என்னிடம்  பேசினார்.  அவரிடம்  விஷயத்தைக்  கூறினேன்.  அவர்  அதற்கு,  மற்ற  துறைகள்  பற்றி  தனக்கு  ஏதும்  தெரியாது என்றும்,   தன்  கட்டுப்  பாட்டில்  இருக்கும்  டாஸ்மாக்  நிறுவனத்தில்  வேண்டுமானால்  டெபுடேஷன்  வாங்கித்  தரமுடியும்  அது  கூட  நிர்வாக (Head office)  அலுவலகத்தில்  இல்லை,  விற்பனை  அலுவலகம்  (Branch office ) ஒன்றில்தான்  தற்போது  காலியாக  உள்ளது  உங்களுக்கு  விருப்பம்  என்றால்  சொல்லுங்கள்  உடனே  ஏற்பாடு  செய்கிறேன் என்றார்.

நான்  ஒரு   நிமிடம்  கூடத்  தயங்கவில்லை.  இல்லை  சார்  என்னால்  அது முடியாது  என்றேன்.  ஏன்  இதிலென்ன  கஷ்டம்  என்றார்.   இல்லை  சார்  நான் புகை, மதுவுக்கு  எதிரானவள்.  ஒருபோதும்  அதை  ஆதரிக்க  மாட்டேன்.  என் லாபத்திற்காக  என்  கொள்கையை   ஒருபோதும்  விட   மாட்டேன். மன்னித்து விடுங்கள்   சார்.  உங்களை  தொந்தரவு  செய்து  விட்டேன்  நான்  வருகிறேன். என்றேன்.

உங்களைப்  பாராட்டுகிறேன்  என்று  அனுப்பி  வைத்தார்  என்னை.

அடுத்த  நாள்  எனது  பதவி  உயர்வை  மூன்றாண்டுகளுக்கு  துறப்பதாக  கடிதம்  எழுதிக்   கொடுத்து  விட்டேன்.


மூன்றாண்டுகள்  கழிந்து  விட்டது.  இதோ வந்து  விடும்  பதவி  உயர்வு  என்ற நிலையில் எங்கள் அலுவலகம்  ஜனவரி  2012 ல்   திடீரென  தீ  விபத்தில் எரிந்து முழுவதும்  சாம்பலாக, எங்கள்  பணிப்  பதிவேடுகள்  உட்பட  அத்தனை பொருட்களும்  சாம்பல். எதுவும்  மிஞ்சவில்லை.  வெறும் கையோடு   கூவம்  நதியோரம்,  சிந்தாதிரிபேட்டையில்  ஒரு  பள்ளியில்   லட்சக்  கணக்காய்  பறந்த  கொசுக்களுக்கு  ரத்ததானம்  செய்யும்  கூடுதல்  வேலையோடு  குடியேறினோம்.  கோப்புகளைப்  புதிதாக  தயாரிக்கும்  பணியில்  அத்தனை  பேரும்   பிசாசு  மாதிரி  உழைத்தோம்.  நான்  எனக்கு   பதவி  உயர்வு  கிடைக்கும்  என்ற  நம்பிக்கையை  இழந்து  விட்டேன்.  அதை  மறந்தும்  விட்டேன்.  ஆனால்  அப்போது  இருந்தது  துடிப்பான  ஒரு  பெண்  ஐ.ஏ.எஸ். அதிகாரி.  அவரது  வழிகாட்டுதலில்தான்  அலுவலகம்  மீண்டும்  தலையெடுத்தது  என்பேன்.  ஊழியர்களை  உற்சாகப்   படுத்தி  வேலை  செய்ய வைப்பார்.

அவரது  முயற்சியால்,  தலைமைச்   செயலகத்திலிருந்து  பெற்ற  சீனியாரிட்டி  பட்டியலை  வைத்து  ஆகஸ்ட் 2012 ல்  பலருக்கு  பதவி  உயர்வு  கிடைத்தது.  எனக்கு  சென்னையில், அதுவும்  head  office லேயே,  அதுவும்  நான் உதவியாளராகப்  பணியாற்றிக்  கொண்டிருந்த    மான்யப்  பிரிவிலேயே, எவ்வித  மேலிடத்து  சிபாரிசும்  இல்லாமல்  இயக்குனரின்  விருப்பப்படி   கண்காணிப்பாளராக  பதவி  உயர்வு  கிடைத்தது.     பதவி   உயர்வு  ஆணை வெளி வருவதற்கு  முன்பே  இயக்குனர்  போகிற  போக்கில்  என்னைப்  பார்த்து வாழ்த்துக்கள்  உஷா  என்று  சொல்லி விட்டு  போன பிறகுதான்   எனக்கே பதவு  உயர்வு  விஷயம்  தெரிய  வந்தது.   உஷாவை  மான்யப்   பிரிவிலேயே  போடுங்கள்.  excellent  worker  என்று  என்  பெயரை  மானிய  பிரிவுக்கு  டிக்  செய்திருக்கிறார்.

 அந்த  நிமிடத்தில்  கிடைத்த சந்தோஷத்தின்  முன்  என்  சில  லட்ச  நஷ்டங்கள்  அனைத்தும்   தூசியாகயிருந்தது.   என்  மதிப்பு   ஆபீசிலும்  வீட்டிலும்  அதிகரித்திருந்தது.   முகம்  கழுவுவது  போல்  என்  ஆனந்தக்  கண்ணீரை  யாரும்  பார்க்காமல் கழுவிக்  கொண்டேன்.  கண்டிப்பாக  என்  அப்பா  மகிழ்ந்திருப்பார்.  ஆசீர்வதித்திருப்பார்.

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்த சந்தோஷக்கதையினைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கிட்டத்தட்ட என் அலுவலக, என் ப்ரமோஷன் கதையை ஒட்டியும் இது அமைந்துள்ளது.

ஸத்யமே ஜெய்க்கும் !

பகிர்வுக்கு நன்றிகள்.

middleclassmadhavi said...

I can identify myself - in your predicaments! I went to some other place, travelling home every weekend! Had hell of a time!

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள் அம்மா...