Friday, March 13, 2015

7.83 ஹெர்ட்ஸ் (புத்தக விமர்சனம் )

ஒரு வாரம் முன்னாடி படிப்பதற்காக இதை எடுத்தேன்.  என்னமோ தெரியவில்லை. கவனச் சிதறல்கள்.  40 பக்கம் தாண்ட நாலு நாளாயிற்று. இப்டி படிச்சா வெளங்கிடும்  (இது சுதாகரின் மைண்ட் வாய்ஸ் )  நேற்று மீண்டும் எடுத்ததும் எனக்கே ஒரு ரோஷம் ஏற்பட்டது.  எப்படியாவது இன்று இதை முடித்து விட்டுத்தான் மறுவேலை என்று முடிவு செய்து கொண்டேன்.

காலையில் பாலை அடுப்பில் வைத்து விட்டு புத்தகத்தைப் பிரித்தேன்.  குக்கர் பாட்டுக்கு விசிலடித்துக் கொண்டிருந்தது நம்புங்கள் என் காதில் உறைக்கவேயில்லை.   வாசல் பெருக்க வந்த வேலைக்காரி  கதவைத்தட்டி அக்கா ரொம்ப நாழியா விசில் சத்தம் வருதே என்று குரல் கொடுக்க ஓடிச்சென்று அடுப்பை அணைத்தேன்.  காப்பியைக் கலந்து கையில் வைத்துக் கொண்டு மீண்டும் வாசிப்பு.  எனக்கு காப்பி ஞாபகம் வரும்போது அது ஆடைபடிந்து ஆறிப்போய்....

அதை  மீண்டும் ஓவனில் சுடவைத்து குடித்த  கையோடு  அரிசியைக்  களைந்து குக்கரில்  வைத்து விட்டு கோவைக்காயை நறுக்கி கறிக்கு தாளித்து விட்டு  வந்து  மறுபடியும் புத்தகத்தை எடுத்தேன்.   கோவைக்காய் அடி பிடித்து கரிந்து போக, அதை மேலோட்டமாக எடுத்து  வைத்து விட்டு மீண்டும் வாசிப்பு.  சாம்பார், ரசம்  எதுவும் கிடையாது. பருப்புப் பொடியும் கோவைக்காய் கறியும் போதும் என்பது முடிவு.  ஒரு வழியாய்  விடிய விடிய விழித்திருந்து  வாசித்து முடித்த  போது மணி அதிகாலை  2.26.

உன் கதை போதும் நீ கதைக்கு வா என்று யாரோ கத்துவது புரிகிறது.  தோ வந்துட்டேன்.   கோயம்பேடிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸில் போயிருக்கிறீர்களா?   பஸ்  கிளம்பி,  தாம்பரம் வரும் வரை  ஒரே சத்தமும், கசகசப்புமாய்  லோக்கல் டிராபிக்கில்  நின்று நின்று  பயணத்தில் செட்டில் ஆக கொஞ்சம் டைம் எடுக்குமே  அது மாதிரி ஆரம்பத் தடுமாற்றம்  எனக்குக் கொஞ்சம்  ஏற்பட்டது.   ஆனால்  அதற்குப் பிறகு தாம்பரம், வண்டலூர் தாண்டி தங்க நாற்கர சாலையில் பேய்க்காற்று முகத்தில் அறைய  ஒரு வேகம் எடுக்கும் பாருங்கள்.  அதை விட நாலு மடங்கு வேகம் இதில் எடுக்கிறது  கதை.

அடேயப்பா...   எங்கேயோ ஆரம்பித்து, உலகம் முழுக்க ஒரு சுற்று சுற்றி வந்து, எத்தனை தகவல்கள்!   பிரம்மிப்பாய் இருக்கிறது.   இது வெறும் அறிவியல் புனைவுக்  கதை   மட்டுமல்ல.   சரித்திரம்,  பூகோளம், விலங்கியல், கணக்கு, மனோதத்துவம்,  காதல்,  பாசம்,  தத்துவம், உணர்வுகள்   என்று எல்லாமே  சரி விகிதத்தில் கலந்த அழகான கலவை இது. 

எத்தனை  எத்தனை புதிர்கள்!....  அவை ஒவ்வொன்றும் தெளிவாக விடுவிக்கப்படும் போது ஆசிரியரின் அறிவுத்திறமை வியக்க வைக்கிறது. அதுவும் அந்த போர்ஜ் துப்பாக்கியின் புதிர் விடுவிக்கப் படும்  போது சபாஷ் சொல்ல வைக்கிறது.  இதற்கென நீண்ட ஆராய்ச்சி செய்திருந்தாலொழிய, இது மாதிரி கதைகளை எல்லோராலும் எழுதி விட முடியாது.  சாண்டில்யன் படிக்கும்  போது  அவர் எழுதும் அரசியல் தந்திரம், போர் வியூகம் இதெல்லாம் நம்மை விழி விரிக்க வைக்குமே..   அப்படி ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.   இந்த மனுஷனா ஒண்ணுமே தெரியாதது போல் என் எதிரில் அன்றொரு நாள்  உட்கார்ந்து படு சாதுவாய் பேசிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது.

ஓநாய்களின் மீது மரியாதையே வந்து விடும் அளவுக்கு  எத்தனை தகவல்கள். அதுவும் வேதநாயகம் தன்  இயல்பான தின்னவேலி பாஷையில்  அவற்றைப் பற்றிய தகவல்களை  சுவாரசியமாக சொல்லும்  போது   எனக்கு அந்த காதாபாத்திரத்தில் சுதாகரின் முகம்தான்  தெரிந்தது.  எத்தனை சவத்தெளவு!
அதுவும் சர்வைவல் மற்றும் உணவுச் சங்கிலி பற்றிய விரங்கள்.....அசத்தல்

பழிவாங்க இப்படியெல்லாம் கூட அறிவியல் யுத்தம் செய்ய முடியுமா? பயமாக இருக்கிறது.   இப்போதே இப்படித்தான் பலர் கொலைவெறியோடு அலைகிறார்கள்.  அவர்களது எம்.ஏ.ஓ  அல்லீல்களை  ஆராய்ந்தால் நல்லதாக இருக்குமோ?

மீன்கள்,  மீன்வளர்ப்பு,  மீன் ஏற்றுமதி  தொடர்பான தகவல்கள்,   இந்த உலகம் எந்த அளவுக்கு வணிகத்தில் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.   எல்லாவற்றிலும் கலப்படம்.  உண்ணும் உணவு விஷமாகும் அவலம்,  நோய்களின் முற்றுகை   இவையெல்லாம் கூட ஒருவித   பயோ டெர்ரரிசம்தானோ?

இந்த அறிவியல் நாவலுக்குள்,   கண்ணீர்த் துளிர்க்க வைக்கும், நமது 7.83 ஹெர்ட்ஸ்  அலைவரிசையை எகிரவைக்கும் ஒரு குட்டிக் கதையும் இருக்கிறது. வித்யாவின் flashback.  கொஞ்ச நாளாய் பாலியல் பலாத்காரத்தைக் குறித்து பெண்களாகிய நாங்கள்  நெஞ்சக் கொதிப்போடு விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது என் ரத்தக் கொதிப்பை அதிகரித்தது. நான் ஓநாயாக மாறி  18 Hz  ஐக் கடந்து  அந்த ராட்சஸனைப் பாய்ந்து குதறி குடலை உருவினேன் என் மனசுக்குள். 

திரிகோண எண்களைப பற்றி  புரிந்து கொள்ளும்  அளவுக்கு நான் கணக்கில் புலியில்லை.  என் கணக்கு ஞானத்தைப் பற்றி கொஞ்ச நாள் முன்பு நான் ஒரு பதிவே போட்டிருந்தேன்.  ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கவே கால்குலேட்டரோடு கடைக்குப் போகும் அளவுக்கு என் கணக்கு மூளை மந்தம். இந்த லட்சணத்தில்.......இதெல்லாம் எங்கே புரிய?  ஒருவேளை அய்யோ  பாவம் என்று  சுதாகர் ஒரு பத்து நாள் திரிகோண எண்கள்  பற்றி தனி வகுப்பு  எடுத்தால்  கண்டிப்பாக அவரிடம் சான்றிதழ் வாங்கி விடுவேன் சவத்தெளவென்று.    மற்றபடி கணக்குப் புலிகள் நிச்சயம் என்ஜாய் பண்ணுவார்கள்.

வண்ணத்துப் பூச்சியை இப்படி ஒரு உதாரணமாக இதில்தான் படிக்கிறேன். இதுதான் உண்மை என்றும் தோன்றியது.   "நம்பிக்கைதான் வாழ்க்கை. என்னளவுல நான் உண்மையா வாழறேனா?  அதான் முக்கியம். ஊரைப்பத்தி கவலைப்படல" என்று சொல்லும்  எம்.ஜி.கே. மீது இறுதியில் மரியாதை ஏற்படுகிறது.

வாசிப்பு அனுபவம் என்பது பலவகைப்படும்.  கண்ணீர் சிந்த வைக்கும்,  பேய் பிசாசு என்று பய அனுபவம் தரும்.  மேஜிகல் ரியலிசம் என்று புது மாதிரி அனுபவத்தைத் தரும்,  வாழ்வின் யதார்த்தங்களை கண் முன் நிறுத்தி உணர வைக்கும்.  காதல் மட்டுமே வாழ்க்கை என்ற கற்பனை சுகத்தைத் தருபவையும் உண்டு.   7.83 Hz  நாம் எந்த அளவுக்கு அறிவு ஜீவி என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

முருகன் ஜி..  உங்கள் முன்னுரையின் இறுதியில் உங்கள் பெயருக்கு மட்டும் xyz  போட்டுக் கொண்டது  தன்னடக்கத்தினாலா?  கூச்சத்தினாலா ? அல்லது அந்த XYZ யார் என்று கதை வாசிக்கும்  போது தானே தெரிந்து கொள்ளட்டும் என்றா?

முடிப்பதற்கு முன்,  இந்த புதினம் வாசித்த பிறகு என் மனசுக்குள் ஏற்பட்ட சில ஆசைகளை வரிசைப்படுத்த வேண்டும் என விழைகிறேன்.   இந்த மாதிரி  மின் காந்த அலைகள்  மூலம்  கீழ்க்கண்டவற்றை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 

1. தனியே செல்லும் பெண்கள்  குழந்தைகளைக் காணும்  போது அவளைக்  கெட்ட  எண்ணத்தோடு நெருங்கும் ஆண்களின் மனநிலையை மாற்றி, அவனுக்கு கூச்ச உணர்வை அதிகரித்து,   அவள் காலைத் தொட்டு வணங்கி விட்டு, வாயில்  இடது கை சுட்டு விரலை  வைத்து ஓரக்கண்ணால் பார்த்தவாறு,  உடம்பை ஒரு வெட்டு வெட்டியபடி அந்தக் கால ஒல்லிப்பிச்சான் கே.ஆர் விஜயா  ஓடுவாங்களே அந்த மாதிரி ஓடிரணும். இதற்கான நேனோ ரிசீவர் பெண்களின் செருப்பில் இருக்கும்..  அவள் அதை அழுத்தினால் அவனது காம உணர்வு மாறி வெட்க உணர்வு மேலிட்டு  ஓடிடுவான்.

2.  தேர்தல்ல ஓட்டு  வாங்கி கெலிச்சு மந்திரி பதவி ஏத்துக்கும்போது அவங்க மனநிலை 7.83 க்கும் கீழ போய்,  இந்த லஞ்சம் ஊழல்ங்கற வார்த்தையெல்லாம் மறந்து போய்  குறுக்கு வழில வர பணம்னாலே அலர்ஜி ஆய்டணும்.  அரசு ஊழியர்களுக்கும் இதேதான்.

3. ஆசைகளை எல்லாம் துறந்துட்டேன்னு கப்ஸா  விட்டு  சாமியார்ங்கற  பேர்ல, ஊரை ஏமாத்தி கோடி கோடியா சுரண்டி வெள்ளை மாளிகை அளவுக்கு ஆசிரமம் கட்டற பேராசை பிடிச்ச ஆன்மீகவியாதிகளுக்கு ஸ்பெஷல் தண்டனை என்னன்னா,  அவங்களுக்கு முன்னால  உட்கார்ந்திருக்கற பக்த கோடிகளுக்கு ஏதாவது  அயனோஸ்பியரிலிருந்து  நாச அலைகளை புகுத்தி வெறியேற்றி, அவர்களைக் கொண்டே  அந்தாளை துவம்சம் பண்ணணும்.

4. தான் எந்த மதம், என்ன ஜாதின்னு  எல்லார்க்கும்  சுத்தமா மறந்து  போய்டணும்.  மனுஷன்ற  நினைப்பு மட்டும்தான் இருக்கணும்.
எல்லாரோட அதிர்வலையும் 7.83  Hz லயே   உறைஞ்சு நின்னுடணும்.


ஏதோ இந்த பூமிப் பந்து  நல்லபடியா இருக்க என்னாலான யோசனைகள். நமக்கு டெக்னிக்கலா எல்லாம் சொல்லத் தெரியாது. நேயர் விருப்பம் இது. மானே தேனே பொன் மானேல்லாம் சேர்த்து என்ன செய்யணுமோ  செய்து மேற்படி விருப்பங்களை நிறைவேத்தணும்.

கடைசியா ஒரு அல்ப ஆசை.  இந்த மாதிரி ஏதாவது  அலையை அனுப்பி  (நா சுனாமியச் சொல்லல)  என்னை கணக்குப் புலியா  மாத்த முடியுமா? ரொம்பல்லாம் இல்ல, ஒரு சகுந்தலா தேவி  அளவுக்கு போதும்.

மொத்தத்தில் Hats off  to  you   வேறென்ன சொல்ல?



  

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
புத்தகம் பற்றிய விமர்சனம் நன்று படிக்க தூண்டுகிறது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank you Ruban

thendralsaravanan said...

கதையின் கதை.... வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதம் அற்புதம்!புத்தக சந்தையில தேடனும் ‘7.83 ஹெர்ட்ஸ் ” ஐ!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனையான விமர்சனம்... படிக்கத் தூண்டும் விமர்சனம்...

vv9994013539@gmail.com said...

thalipa puthusa iruku. vaalthukal