Tuesday, December 23, 2014

புல்லாங்குழல் பட்ட பாடு

"நிவேத்யம்"  என்ற மலையாளப் படம்  வந்திருந்த  சமயம் அது.   "கோலக்குழல் விளி கேட்டோ?" பாட்டுதான் எங்கும்.    ஒன்றிரண்டு வருஷம் அதுதான் என்னுடைய காலர் டியூன் ஆக இருந்தது.   கல்பாத்தி தேருக்காக  நானும் கவிதாவும்  பாலக்காடு சென்றிருந்த சமயம் அக்ரஹாரம் முழுவதும்  புல்லாங்குழல் விற்றுக் கொண்டிருந்த பையன்கள் எல்லாம் கோலக்குழல் பாட்டை வாசித்துதான் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.   அவர்கள் வாசித்த  கோலக்குழல்தான்  காற்று  முழுவதும்  நிறைந்திருந்தது.  

"ஏம்ப்பா எனக்கு இதுல கோலக்குழல் வாசிக்க வருமா?"

அவன் நிச்சயம் வரும் என்றான்.  வராது என்று எனக்குத் தெரியாதாக்கும்..

"அம்மா வாங்கும்மா நா இதே மாதிரி வாசிச்சுக் காட்றேன் உனக்கு"  இது கவிதாவின்  கெஞ்சல். 

பேரக் குழந்தைகளுக்கும் இருக்கட்டும் என்று ஒன்றுக்கு இரண்டாய் வாங்கினேன்.   அதை எடுத்துக் கொண்டு  வீட்டுக்கு வந்து ஊஞ்சலில் சௌகர்யமாய் உட்கார்ந்து  வாசித்தால் வெறும் காற்றுதான் வந்தது. கொஞ்சம் force  கொடுத்தால் வெறும் பிகில் சப்தம்தான்  கேட்டது.  மனசுக்குள் இருந்த   கோலக்குழல்,   இந்த குழலில் வருவேனா என்று அடம் பிடித்தது.     "அது........   இந்த ஊஞ்சல் ஆடிண்டே  இருக்கா....  அதான் வாசிப்பு தப்பறது "

"போதும் போதும்  ஊஞ்சலை குறை சொல்றயாக்கும் குடு அதை"  கவிதா பிடுங்கிக் கொண்டாள்.

நா வாசிக்கிறேன்   நா வாசிக்கிறேன் என்று  வாசலில் இருந்தவர்கள் எல்லாம் கூட தேரை அம்போ என்று விட்டு விட்டு வந்து  ஆளாளுக்கு குழலூத ஆரம்பிக்க,   வராதவர்களிடம் நாங்களே சென்று  கொடுத்து வாசிக்க சொன்னோம்.  எல்லோரும் ப்பிப்பீ என்று  பஸ்ஸில் கண்டக்டர்  விசிலடிப்பது போல் அடித்தார்கள்.  .

கவிதாவும் என் நாத்தனார் Mythili Ganesh ம்  குழலை வாயில் வைத்து  தலையைத் தலையை ஆட்டி  ஏதேதோ ஒலியெழுப்பி குழலால் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இவள் பாட்டுக்கு,  அவள்  எசப்பாட்டு வாசிக்கறாளாம் .  

எம். ஜெயச்சந்திரன்  மட்டும் பார்த்திருந்தால் இனி சினிமா பாட்டில் குழல் சப்தமே வைக்க மாட்டேன் என்று ஓடிப்போயிருப்பார்

" பேசாம அந்த புல்லாங்குழல் விக்கறவன் கிட்ட  போய்  அசிஸ்டெண்ட்டா  சேர்ந்தா ஒரு வேளை  வாசிக்க வந்துடுமோ? "  இது என் நப்பாசை.   ஆக  மொத்தம் அந்த புல்லாங்குழல்கள்  அன்று  எங்களிடம் படாத பாடு பட்டன.  வாயிருந்தும்  அவை  அழவில்லை.   அழுதா  அந்த அழுகை சப்தம்  கூட குழலோசையாதானே வரும்.!  உடனே  நாங்க யாராவது ஹை   நா வாசிச்சுட்டேன் என்று பீற்றிக்கொண்டால்?   பாவம் அது கம்மென்று இருந்தது.

இதெல்லாம்  பொய்யில்லைங்க.   தேர்  பற்றி   நாங்க ஒரு வீடியோ பண்ணி இருக்கோம்னு சொன்னேனே. அதுல இந்த கொட்டமெல்லாம் கூட இருக்கு.

இப்போ எதுக்கு  சும்மா கிடந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்கறேன்னு  யோசிக்கறது  புரியறது.    பாலக்காடுலேர்ந்து திரும்பி சென்னைக்கு வந்த ரெண்டாம் நாள்  டிவில  சானல் மாத்தும் போது எதேச்சையா பொதிகைல என்.எஸ். கிருஷ்ணன் புல்லாங்குழலும் கையுமா நிக்கறார். நாங்களும்  ஆஹா அவர் குழல் வாசிப்பதைப் பார்ப்போமேன்னு பொதிகைலயே  நின்னுட்டோம்.   பி...........ப்பீ       பி.........பீ  

"அம்மா இத விட நா சூப்பரா வாசிச்சேனா இல்லையா மனசைத் தொட்டு சொல்லு?

"கண்டிப்பாடி செல்லம்  உன் வாசிப்பு பெட்டர்தான் போ."

என்.எஸ்.கிருஷ்ணன் வாசித்த நாராசம் கேட்டு  டி.ஏ.மதுரம் கோபமாக வந்து குழலைப் பிடுங்கி அடுப்பில் போடுவார்.  இவர் சோகமாக வெளியில் செல்வார்.

மறுநாள்  மற்றொரு புல்லாங்குழலோடு வந்து வாசிக்க பல்லை நற  நறவென்று கடித்தபடி டி .ஏ.மதுரம் வர,  அதுவும் அடுப்பில் போய்  விழும். இப்படி ஒவ்வொரு குழலாக  அடுப்பில் விழுந்து கரியாக இவர் அடுத்து கொண்டு வரும்  புல்லாங்குழல்  தூக்கவே முடியாத அளவுக்கு மெகா  சைஸில்  இருக்கும்.  இத எப்பிடி அடுப்பில வைப்ப என்பது போல் பார்ப்பார்.  மதுரம் அதையும் உடைத்து அடுப்பில் எறிவார்.  நீ வேணா பாரு நா போய்  புல்லாங்குழல் வாசிக்க கத்துக் கிட்டு வந்து உன் முன்னால வாசிச்சு காட்டல.........என்று சவால் விட்டு செல்வார்.

கிருஷ்ணனை நினைத்து கடும் தவம் இருப்பார்.  பாவம் என்று கிருஷ்ணனும் காட்சி தர இவர்   குழல் வாசிக்கும்  வரம் அருளக் கேட்பார்.   கிருஷ்ணனும்  இதோ தந்தேன் என்பார். பிறகு குழலோடு வீட்டுக்கு  வந்து  வாசிக்க, அந்த வாசிப்பில் மதுரம் மயங்கிப் போவார்.  அதே பெருமையோடு இவர் வெளியில் வந்து வாசிப்பார்.   கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக குழலை வாயிலிருந்து எடுப்பார்.    ஆனால் வாசிப்பு சத்தம்  அவர் வாசிக்காமலே தொடர்ந்து அதிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கும்.  அந்த சப்தத்தை நிறுத்தமுடியாமல் தவிப்பார். ஒரு கட்டத்தில் என்ன கொடுமைடா இது என்பது போல் கிருஷ்ணனை  அழைப்பார்.   நிறுத்து ..நிறுத்து.. இதை..நிறுத்து  ..என்று அலறுவார்.  இனி குழலைத் தொடுவ? என்பது போல் கண்ணன் சிரிப்பான்.  

இந்த நகைச்சுவை கலாட்டாவைப் பார்த்து விட்டு  பாலக்காட்டில் நாங்கள் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு அடித்த  கொட்டத்தையும் நினைத்துக் கொண்டு நாங்கள்  இருவரும் வயிறு வலிக்க சிரித்தோம் அன்று.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "பாரிஜாதம்" என்ற திரைப்படத்தில்தான் இந்த காட்சி. இது போல் நகைச்சுவை காட்சிகள் எல்லாம்  இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  யாரையாவது அடிப்பதும் உதைப்பதும், சுத்தியலைத் தலை மீது விழ வைப்பதும்,  சுடும் தோசைக்கல்லில் உடகாரவைத்து  அவரை அலறிக்கொண்டு ஓட வைப்பதும்தான்  நகைச்சுவை என்று ஆகி விட்டது.

இந்த புல்லாங்குழல் நகைச் சுவை காட்சிகளை யூ டியூபில் தேடித் தேடித் பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை.  யாருக்காவது இது பற்றி தெரியுமா? இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

கீழே கோலக்குழல் பாடலின் இணைப்பு.

https://www.youtube.com/watch?v=XqEwWwgr6rU

  

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... தேடிக் கொண்டிருக்கிறேன்...

Larry V said...

Thankss for a great read