Wednesday, July 27, 2011

மக்கள் தொலைக் காட்சியில் நான்


ஜூலை 18 ஆம் தேதி மக்கள் தொலைகாட்சி காலை வணக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான எனது பேட்டியின்
இணைப்பை கீழே அளித்துள்ளேன். உங்கள் பொன்னான நேரத்தில் சிறிதை இதற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். தொலைகாட்சி பேட்டிகள் குறித்த எனது அனுபவங்களை பதிவாக பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.



Sunday, June 19, 2011

முன்னுரை, முகவுரை

எந்த ஒரு புத்தகம் வாங்கினாலும் நான் முதலில் வாசிப்பது அந்த புத்தகத்தின் ஆசிரியர் எழுதிய முன்னுரை, மற்றொரு இலக்கியவாதி அதற்கு எழுதியிருக்கும் முகவுரை இவைகளைத்தான். எந்த ஒரு முன்னுரையோ முகவுரையோ அழுத்தமாக எழுதப் பட்டிருக்கிறதோ, வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறதோ, அதுவே அந்த புத்தகத்திற்கு பெருமை சேர்த்து விடும்.

முன்னுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதை விட கடினமானது முகவுரை எழுதுவதுதான் என்பேன். , தெளிவு, தீர்க்கம், சுவாரசியம், இவற்றோடு சற்றே நகைச்சுவையும் சேர்ந்து விட்டால் முன்னுரையையே பலமுறை படிக்கலாம்.

லா.ச..ரா. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றிற்காக (அலைகள் ஓய்வதில்லை) இப்படி எழுதியிருப்பார்.

“எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித்தானே உங்களுடன் நேரிடைப் பாவனையில் உரையாட முடியும்? எழுத்தின் வீச்சுக்கு காலவரையில்லை என்று தெரிகிறது. “ராசாத்தி கிணறு கரு நாற்பது வருடங்களுக்கு முன் தோன்றி விட்டது. ஆனால் இப்போதுதான் திடீரென பற்றிக்கொண்டு எழுதி முடித்தேன். ஒரு வித்து உள்ளே விழுந்து விட்டால் தேள் கொட்டிக் கொண்டேயிருக்கும், ஒரு எழுத்தின் விதைக்கும், அதன் வளர்ச்சிக்கும் விதமோ வரையோ வகுக்க முடியவில்லை. எழுத்து இரக்கமற்ற எசமானி.

நல்ல புத்தகங்கள் என்பது சும்மா செல்லும் பொழுதுகளைக் கூட பயனுரச் செய்து விடும். எனலாம். இந்தப் பதிவில் என்னைக் கவர்ந்த முன்னுரைகள், முகவுரைகள், பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தனது “கிருஷ்ணன் வைத்த வீடு தொகுப்பிற்காக வண்ண தாசன் எழுதிய முன்னுரை என்னை நிறைய யோசிக்க வைத்தது.

“இந்த பலூன் விற்கிற முருகேசனை விட நான் என்ன வாழ்ந்து விட்டேன்? முருகேசனுக்கு தான் பார்த்துக் கொண்டிருந்த கொத்தனார் வேலையை விட்டு விட்டு பலூன் விற்க முடிகிறது. மயிலாப்பூர், பெசன்ட் நகர கோவில் திருவிழாக்களில் ராப்பூரா கண் விழிக்க முடிகிறது. தம்பிக்கு முதலில் கல்யாணம் நடக்க அனுமதிக்க முடிகிறது, மும்பையில் விற்கப்பட இருந்த அச்மாபீயை சரோஜா எனப் பெயரிட்டு திருமணம் செய்து கொண்டு வாழ முடிகிறது. குழந்தை பிறந்ததும் அவள் காணாமல் போய் எட்டு மாதம் கழித்து அது இறந்தபிறகு வரும்போது ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவள் மறுபடியும் காணாமல் போய் திரும்பி வந்தால் கூட ஏற்றுக் கொள்ள முடிகிறது. பழைய சம்பவங்களை அடியோடு மறந்து நிம்மதியாக இருக்க முடிகிறது. அலுப்பில்லாமல் குழந்தைகளை தினம் தினம் பார்த்து பலூன் விற்பதில் சந்தோஷத்தை உணர முடிகிறது. உணர்ந்ததைச் சொல்ல முடிகிறது. என்னால் எழுத மட்டுமே முடிகிறது. பலூன் விற்க முடியவில்லை. நான் முருகேசனாக இல்லாமல் போனேன்.

இருந்த இடம் வாழ்ந்த இடமாகாது,. எல்லா இடத்திலும் வாழ விரும்பும் மனம் இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்கவும் விரும்புகிறது. பிடாரனின் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு கூடைக்கு திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில் பழக்கமற்ற தரையோரங்களில் சரசரத்து ஓடி புடை தேடுகிற நிஜம இது.

எழுத்து தொடர்ந்து பதிவுகளாகவே இருக்கிறது. பசுக்களின் குளம்படி பதிவுகளை சிமென்ட் தளங்களிலிருந்து அப்புறப் படுத்த முடியவில்லை. தூத்துக்குடி கடற்கரையில் எனக்கு முன்பு நடந்து போனவர் விட்டுச் சென்ற காலடிப் பதிவுகளை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
அப்புறப்படுத்த முடியாதவைக்கும் காப்பாற்ற முடியாதவைக்கும் மத்தியில் ஆயிரம் பாதங்கள். ஆயிரம் பதிவுகள். நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.
என்ன ஒரு அற்புதமான முன்னுரை அல்லவா?

என் வாழ்க்கையில் நான் பிசாசு மாதிரி ஒரு புத்தகத்தை தேடி அலைந்திருக்கிறேன். யாரைப் பார்த்தாலும் அந்த புத்தகத்திற்கு சொல்லி வைப்பேன். ஒவ்வொரு புத்தக விழாவிலும் ஐந்திணை பதிப்பகத்தில் இந்த புத்தகம் எப்போது வரும் என்று விசாரிப்பேன். கிட்டத்தட்ட இருபதாண்டு தேடலுக்குப் பிறகு நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது,. காலச்சுவடு பதிப்பகம் அதை மறுபதிப்பு செய்திருக்கிறதென்று. அந்த புத்தகம் பயணக்கட்டுரை நூல்களில் ஒரு கிளாசிக் என்று சொல்லப் பட்ட தி.ஜானகிராமனின் “நடந்தாய் வாழி காவேரி

அந்த புத்தகத்தின் முன்னுரையில் தி.ஜா எழுதியிருப்பார்.
“காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் என்ற உண்மை தெளியத் தெளிய நாங்கள் மேற்கொண்ட பொறுப்பு சாதாரணமானதல்ல என்ற உணர்வு சிறிது தயக்கத்தையும் அளித்தது. காவேரிக்குப் பல உருவங்கள், பல நிலைகள் உண்டு. அதைக் காணும் நிலைகளும் பல. மொண்டு குடிப்பதிலிருந்து கரையிலமர்ந்து தவமியற்றி மனம் இழப்பது வரை இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும் ஒரொரு கணவீதம் அடைவதே ஒரு திளைப்புதான். .

ஆதவனின் என் பெயர் ராமசேஷனில் லா.ச.ரா எழுதியிருப்பார்.
“என்னத்தையோ எழுதி, எழுதியதைப படித்து படித்ததை நினைத்து, படித்ததை வாழ்ந்து, வாழ்ந்ததைப் படித்து அனுபவத்தை நினைத்து, நினைத்ததையே நினைத்து, நினைவை அவ்வப்போது காயப் படுத்தி காயத்திலிருந்து சொரியும் ரத்தம் உணர்ந்து, அர்த்தங்கள் பிரயத்தனங்கள் கொள்கிறோம். நினைவின் ரணமே உயிரின் தைரியம். உயிரோவியத்தின் பல வர்ணங்கள்

தனது “துணையெழுத்து புத்தகத்தில், எஸ்,ரா. எழுதிய வரிகள் இவை.

“ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான். அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதுக்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்தபடிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில்,`மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது என்று ஒரு வரி இருக்கிறது. அதுதான் வாழ்வின் அரூபமான பயணம்.

எஸ்.ரா. தனது “உப பாண்டவத்தில் தான் மகாபாரதம் வாசிக்க விரும்பியதையும் அது மெல்ல மெல்ல தன்னில் ஊறிப்ப் போனதையும் சொல்லியிருப்பார்.
“ஜனவரி மாத குளிர் நாளொன்றில் டெல்லியில் அதிகாலையில் நடந்து கொண்டிருந்த போது பனி மூட்டத்தின் நடுவே தொலைவில் குதிரைகள் நடந்து வரும் சப்தம் கேட்டது. நெருங்கி வரும் குதிரைகளில் பாண்டவர்கள்தான் வருகிறார்கள் என ஒரு நிமிஷம் எழுந்த யோசனை விரிய ஆசையும் படபடப்பும் பெருகியது. மிலிட்டரி குதிரை வீரர்கள் கடந்து சென்றார்கள். கடந்த காலத்தின் ஓசை மட்டுமே கேட்க முடிகிறது எனத் தனியே பேசியபடி திரும்பிய நான் எதோ ஒரு முனையில் மகாபாரதத்தில் பிரவேசித்து எங்கோ விலகி விட்டேன்.

தமிழக அரசின் பரிசு பெற்ற எனது “வனத்தில் ஒரு மான் சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றதில் அதற்கு முகவுரை எழுதிய பாலகுமாரனின் எழுத்துக்களுக்கும் பங்கிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். பாலகுமாரனின் முகவுரை கடித வடிவிலேயே இருக்கும். அவர் எழுதியதில் கொஞ்சம் இங்கே.

“உங்கள் வாலிபம் என்பது சிறுகதை படித்தேன். இதுவரை பல எழுத்தாளர்களுக்குத் தீனியாக இருந்த மன்னன் யயாதியே உங்கள் கதைக்கும் கருவாக இருந்தான். மூப்பைக் கொடுத்து இளமையை வாங்கிக் கொள்ளும் பண்டமாற்றே உங்கள் கதையிலும் முக்கியமாக அலசப்பட்டது. அப்பாவின் இளமையை வாங்கிக் கொள்ள மறுக்கும் மூத்த மகனைக் கண்டிப்பதுதான் மூலக் கதையின் நோக்கம். கடைசி மகன் புரு வாங்கிக் கொண்டான் என்பதுதான் இதுவரை எல்லா எழுத்தாளர்களும் பாராட்டிய விஷயம்.ஆனால் எல்லோரும் பாராட்டிய புருவின் மீது நீங்கள் இலக்கு தப்பாமல் ஒரு அம்பு எய்திருக்கிறீர்கள். யயாதியின் கதையைப் புது விதமாக அணுகி இருக்கிறீர்கள். எதுசரி எது தவறு என்பதுதான் ஆதி நாள் முதல் மனிதருடைய கேள்வியாக இருக்கிறது. அதற்கு இறுதியான விடை காண முடியாமல் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சமாதானம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு எழுத்தாளனுடைய கதைகளும் இவ்விதமே. வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை நடந்தவை பற்றிய அலசலை அவன் கதைகள் உரக்கப் பேசி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும். எழுதத் தூண்டுவதே இந்த ஆராய்ச்சி மனப்பான்மைதான். எல்லோரும் சொன்ன ஒரு பழங்கதையைப் புது விதமாகப் பார்ப்பதுதான். ஆனால் இது எளிதல்ல. அனுபவமும் தெளிவுமுள்ளவர்கள்தான் ஆராய்ச்சியில் ஒரு நியாயமான முடிவைக் கொண்டு வர முடியும். இதை எழுத்தாக மாற்றுகிற செய்திறனும் முக்கியம். இந்தக் கதையின் மொழி நடை வசனமாக இருப்பது ஒரு சிறப்பு. வர்ணனைகளில்லாது மனிதருடைய கேள்வி பதில்கள் மோதிக் கொண்டு நிமிர்வது ஒரு அழகு.


பாலகுமாரனின் செப்புப் பட்டயம் நாவலுக்கு நான் எழுதிய முகவுரையின் ஒரு பகுதி கீழே.
“இந்தக் கதை வாசித்து முடித்தபிறகு நான் தேவதாசிப் பெண்களைப் பற்றி நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். இறைமையைப் பரப்புவதே தொழிலாகிப் போன நிலையில் சுகப்படுத்துவதும் சுகிப்பதும் கூட அவர்களுக்குப் பிடிக்காமல் போகிறது. எப்போதுமே தன்னை நிரூபிக்க பெண்தான் அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டியிருக்கிறது தேவரடியவள் என்ற நெற்றிப் பட்டத்தை எடுத்து, குலமகள் என்ற பட்டம் பெற்றுக் கொடுத்து விட்டுக் குளிர்ந்து போயிற்றா அந்த அக்னி? தேவதாசிகளின் பிரும்மாண்டத்தை ஒப்பிட உலகில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. கடல்! எல்லோருக்கும் சுகமளிப்பது கடல். பனையளவு உயரம எழும்பினாலும் சரி, சிற்றலைகளாய் வந்து பாதம் தொட்டு பின்னோக்கிச் சென்றாலும் சரி, கடல் என்பது சந்தோஷத்தின் ரூபம். சந்தோஷம் தேடி எத்தனைகோடி பேர் மணலில் கால் புதைத்து வந்தாலும் அது சந்தோஷப் படுத்தும். அந்தக் காலடிகள் யாருடையதென்று எவரும் ஆராய்வதுமில்லை. குழப்பிக் கொள்வதுமில்லை. எத்தனை பேர் பாதம் தொடுகிறாய் என்று கடலை நோக்கி முகம் சுளிப்பதுமில்லை. அன்றைய காலத்தில் அவர்கள் சமுத்திரமாகத்தான் அலையடித்தபடி இறைத்தொண்டு புரிந்திருக்கிறார்கள்.

திரு இறையன்பு அவர்கள் எனது நான்கு புத்தகங்களுக்கு முகவுரை எழுதியுள்ளார். அதில் இரண்டு புத்தகங்கள் பரிசு பெற்றுள்ளது.

ஸ்டேட் பேங்க் விருது பெற்ற “ஆகாயம் அருகில் வரும் என்ற புதினத்திற்கு அவர் எழுதிய முன்னுரை அழகானது. ஆழமானது.

“கதை என்று தனியாய் எதுவுமில்லை. வாழ்க்கை நம், விழிகளின் முன்பாக நம் அனுபவ ஆழத்திற்கேற்ப விரித்து வைத்திருக்கும் அசாதாரணமான நிகழ்வுகள் எல்லாமே கதைக்கான கருவை உள்ளே ஒளித்து வைத்திருக்கிறது. இதை எழுதலாமே என்பதைவிட இதை எழுதித்தான் தீரவேண்டும் என்கிற தீர்மானத்தோடு எழுதும்போது நாமே காகிதத்தில் கரைந்து போன ஒரு திருப்தி தென்படுகிறது. நமக்கு திருப்தி தராத படைப்பு யாரால் பாராட்டப் பட்டாலும் நமக்கு அது மகிழ்ச்சியை அளிக்காமலேயே ஒதுங்கி நின்று விடுகிறது.
வேலையில்லா திண்டாட்டம் என்பது பொதுப் பிரச்சனையல்ல தனிப்பட்ட பிரச்சனை என்பதை ஆழ்ந்து கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். இருக்கிற வேலைகளுக்கு ஏற்ப நம்மை நாம் செதுக்கிக் கொள்ளாத வரை இந்தப் புலம்பல் நம் செவிப்பறைகளை சேதப்படுத்தக் கூடும். தன்னை முழுவதுமாய் இழக்க சம்மதிக்கிற போதுதான் பனித்துளி பாற்கடலில் கலக்க முடியும்.

எனது “கான்க்ரீட் மனசுகள் தொகுப்பில் திரு இறையன்புவின் முகவுரையிலிருந்து சில பகுதிகள்.
"மானுடத்தின் அசிங்கமான பக்கங்களைக் காட்டி இப்படித்தான் நாம் இருக்கிறோம் என சுட்டிக் காட்டுவது ஒரு வகை வெளிப்பாடு. இல்லையில்லை ...நாம் மேன்மையானவர்கள்தான் என்று `வீடு என்பது கழிவறை மட்டுமல்ல கமகமக்கும் வரவேற்பறையும்தான்` என வெளிச்சம் போடுவது இன்னொரு வகை. நல்ல மனிதர்களைப் பற்றியும் மானுடம் பற்றியும் தொடர்ந்து படித்தால் நம்மையும் அறியாமல் “நாம் இன்னும் மேம்பட்டவர்களாக, கூடுதல் கருணையுடன் அதிக அன்புடன் இருப்போமே, நம்மிடம் இருக்கும் சிலவற்றைத் தொலைக்க முற்படுவோமே என்கிற எண்ணம ஆழ்மனத்தில் விழுந்து விடும். உயர்ந்தவற்றைச் சொல்வதற்குத்தான் இலக்கியம். உயர்ந்தவனை இன்னும் உயர்த்த வல்லவைதான் உண்மையான கதைகள். இதைத்தான் வித்யா சுப்ரமணியம் செய்ய முயன்றிருக்கிறார். இதில் அவர் பெறுகிற வெற்றியின் விஸ்தீரணம் நம்முடைய கைகளில். மனித மனங்களில் அமுங்கி எழுந்த அடையாளம் தத்துவக் கீற்றுகளாகத் தெறித்து விழுந்திருக்கின்றன. உயரப் பறக்க சொல்லித் தருகின்றன".

ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் என்ற தனது புத்தகத்தில் இரா.முருகன் எழுதிய முன்னுரை.
தமிஷ் இலக்கியம் பழைய சிவகங்கை - மதுரை ஜெயவிலாஸ் பஸ்ஸில் பக்கவாட்டு 
இருக்காய் மாதிரி - எத்தனை படைப்புகள் வந்தாலும் இன்னும் உட்கார இடம் 
இருக்கிறது. பீடியை வார்செருப்பால் தேய்த்து அனைத்து விட்டு பூவந்தி டீக்கடை
 வாசலில் கைகாட்டி நிறுத்தி ஐம்வ்பது பைசா ஷேக்ஸ்பியரும் ஏறி உள்ளே வருகிறார்.
இரா முருகன் தனது சிலிக்கன் வாசலில், காக்கையை யாரும் முஷுசாக பார்த்து 
முடிக்கவில்லை என்று கவிதை சொன்னார் ஞானக் கூத்தன். இந்த சிறுகதைக்
காக்கையை இன்னும் நான் முழுசாகப் பார்த்து முடிக்கவில்லை. யார் கண்டது? அது 
முடிந்தால் சிறுகதையே அப்புறம் இல்லாமல் போகுமோ என்னவோ........

எனது சமீபத்திய வரலாற்றுப் புதினம் “உப்புக் கணக்கு புத்தகத்திற்கு முகவுரை எழுதியது என் மூத்த பெண் வித்யாதான், அவள் தமிழ் வழியில் பயின்றவள் அல்ல. ஆயினும் அவள் எழுதிய முகவுரை ஒரு தமிழ் எழுத்தாளராக, ஒரு அன்னையாய் என்னை பெருமிதம் அடையச் செய்தது. அதிலிருந்து சில துளிகளை உங்களோடு பகிர விழைகிறேன்,


“இது ஒரு யாத்திரை. இதில் பயணிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் நெடும் பயணம் செய்த அசதியும் தானே வெற்றி பெற்று விட்டாற்போல் எண்ணமும் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு Virtual Travel Experience ஐ படிக்கும் அனைவரும் உணர்வீர்கள்.

இதன் வெற்றி, Blurred Boundaries என்று அதனைக் குறிப்பிடலாம். கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் நிஜ கதாபாத்திரங்களுக்குமிடையே தெரியாத வித்யாசம். “நீங்கள்ளாம் என்பது தொண்ணுறும் மார்க் வாங்கரதுக்காகவா சரித்திரங்கள் நடக்கின்றது? என்று கொள்ளு தாத்தா கேட்கும்போது பளாரென அறைகிராற்போல் இருக்கிறது. இவ்விடம் சட்ட விரோதக் கூட்டத்திற்கு மட்டும்தான் இளநீர் வெட்டிக் கொடுக்கப்படும் எனக் கூறும் பெயரற்ற ஒரு வியாபாரி, அஹிம்சையால் வெள்ளையர்களை சுதந்திரம் தர சம்மதிக்க வைத்த காந்தியால் ஜின்னாவை என்ன செய்ய முடிந்தது? என்று கேட்கும் கோபால், கல்கண்டு போல் சிரிக்கும் கலியுக சபரி, கண்கலங்கச் செய்யும் குழந்தை விதவை காமு என்று நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஏராளம். உப்புக்கு மனிதப் பாதுகாப்பு வளையம் கொடுத்து தடியடி வாங்கிய சத்யாக்கிரகிகளின் தேசப் பற்று, லாகூரை இரத்த நகரமாகிய மதக கலவரம் என்று இந்த தேசம் பட்ட கஷ்டத்தைத் தெரிந்து கொள்ள இந்த உப்புக்கணக்கைப் படித்தேயாக வேண்டும். நான் கற்றது உப்பளவு... கல்லாதது?

இது நீண்டு கொண்டே போகும் இறுதியில் மீண்டும் லா.ச.ரா விற்கே வருகிறேன். “கங்காவில் அவர் எழுதியிருப்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பொருந்தும். வாசகனுக்கும் பொருந்தும்.

யாருக்காக எழுதுகிறேன்?
யாருக்காக கருவுற்றேன்?

இரண்டும் ஒரே கேள்விதான். ஒரே பதில்தான்.

“நானா இதை எழுதினேன்?, என்னிடமிருந்தா இது வெளிப்பட்டது? இந்த பூதம் என்னுள் எப்படி இத்தனை நாள் ஒளிந்து கொண்டிருந்தது? இது எழுத்தாளனின் வியப்பு.

வாசகனின் வியப்பு “ எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கிறது? எனக்கே தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின? இவை என் எண்ணங்கள், வேதனைகள் என் வேட்கைகள், என் ஆபாசங்கள் என்று அஞ்சி என் நெஞ்சுக்குள் மறைத்ததெல்லாம் இங்கு எழுத்தில் கண்ட பின் உண்மையில் அவை என் ஆத்மதாபம் என்று இப்போதுதான் விளங்குகிறது. எழுத்து ஊமைச் சிரிப்பு சிரிக்கின்றது. அதற்குத் தெரியும் இருவர் கதையும் ஒரு கதைதான். உலகக் குடும்பத்தின் ஒரே கதை என்று. அதற்குத் தெரியும் தான் சுண்டியது ஒரு தந்திதான். சொல்வதெல்லாம் ஒரு சொல்தான் என்று. உருவேற்றி ஏற்றி, திருவேறி, ஆகாசத்தையும் தன் சிமிழில் அடக்கிக் கொண்டு இன்னும் இடம் கிடைக்கும் சொல் அது.


முன்னுரைகள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால்
நானே எழுதுவதைவிட தொடர்பதிவாக நீங்களும் எழுதலாமே. இத்தொடர் பதிவுக்கு நான் முதலில் அழைப்பது நிறைய புத்தகங்கள் வாசிக்கும் திரு கோபி ராமமூர்த்தியையும், எழுத்தாளர் ரிஷபனையும் மனோசாமினாதனையும்.. யார் எழுதினாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். பொறுமையாய் வாசித்தமைக்கு என் நன்றி.

Thursday, April 14, 2011

அன்பென்ற மழையிலே (சிறுகதை)

நான் இருந்தது ஒரு இருட்டு அறை. என் பசிக்கு உணவு யார் தந்தார்கள், நான் சுவாசிக்க யார் உதவுகிறார்கள்? எதுவும் தெரியாது எனக்கு.

அந்த இருட்டறையில் அவ்வப்போது என்னோடு வந்து பேசிக் கொண்டிருந்தவன் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டான்.

அவன் மட்டுமே என் உற்ற தோழன். நற்றுணையும் அவனே. கடவுள் என்றால் என்ன உறவு? ஒருநாள் நான் அவனிடம் கேட்டேன்.

“அதை நீ உணரும் போது மீண்டும் என்னைக் காண்பாய் என்றான் அவன்

“அது வரை உன்னைக் காண முடியாதா? ஏன் இப்படிச் சொல்கிறாய்? இனி எனக்குத் துணை யார்?

“கவலை வேண்டாம். உனக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள். நானும் உன்னோடுதான் இருப்பேன். நீ மனது வைத்தால் என்னைக் காண முடியும்.

அவன் சொன்னது எதுவும் எனக்கு விளங்கவில்லை. என் உடல் நழுவுவது போலிருந்தது. உடம்பெல்லாம் வலி. நான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தேன். கண் கூசிற்று.

என் பத்து விரல்களிலும் பொம்மலாட்ட பொம்மையைப் போல ஏகப்பட்ட பாசக் கயிறுகள். ஒவ்வொன்றும் ஒரு உறவு. அம்மா, அப்பா, பாட்டி அக்காக்கள், மாமாக்கள், அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்கள் சகோதரர்கள், நான் பிறந்த பிறகும் கூட கயிறுகள் புதுசாய் சுற்றிக் கொண்டன. தம்பி, தங்கைகள் என்றார்கள். வளர வளர நட்புக் கயிறுகளும் என்னைச் சுற்றிக் கொள்ள, ஆஹா இந்த உலகம் எவ்வளவு அன்பாய் அழகாயிருக்கிறது என்று பூரித்துப் போனேன்.

எல்லா உறவுகளுக்கும் நான் செல்லம். என் கண்ணில் கண்ணீர் வந்ததில்லை. வேளைக்கொரு உடை போட்டு அழகு பார்த்தார்கள். என் பசிக்கு பல கரங்கள் சோறூட்டக் காத்திருந்தன. நான் கடவுளை மறந்தே போனேன்.

ஒருநாள் மொத்த உறவுகளும் என்னை எங்கோ அழைத்துச் சென்றது.

கோயில் என்றார்கள். அப்படி என்றால்? நான் கேட்டேன்.

“கடவுள் இருக்கும் இடம்.

நான் திகைத்தேன். எங்கே?

“உள்ளே கருவறையில்

நான் ஓடினேன். கருவறை இருட்டாயிருந்தது உற்றுப் பார்த்தேன்.

கருப்பாய் சிலையொன்று கண்டேன். இதுவா கடவுள்? நான் கண்ட கடவுள் வேறு. காணும் கடவுள் வேறு. அவன் எங்கே? எனக்கு குழப்பமாயிருந்தது.

நான் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளேனா அல்லது வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு வந்துள்ளேனா? எனக்குப் புரியவில்லை

ஆயினும் இதுதான் கடவுள் என்று எல்லோரும் சொல்ல நானும் ஏற்றுக் கொண்டேன். இது ஏன் பேசவில்லை? ஏன் சிலையாய் அசையாது நின்றிருக்கிறது? கடவுள் பற்றி ஆளுக்கொன்று சொன்னார்கள். சிலர் பயமுறுத்தினார்கள். தப்பு செய்தால் கண்ணைக் குத்தும் என்றார்கள். சிலர் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றார்கள்.

யாருமே கடவுளை சரியாய் அறியவில்லை. தினப்படி பூ போட்டு, விளக்கேற்றி வழிபடுவது, பண்டிகைகள் கொண்டாடுதல் இவைதான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் செய்யும் காரியமாயிருந்தது. நானும் அந்த ஜோதியில் கலந்தேன். கடவுளைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒவ்வொரு பருவமாய் என்னை விட்டு வலியின்றி பிரிந்தது. நான் தினமும் புதிதாய்ப் பிறந்தேன். வளர்ந்தேன்.

என் கழுத்தில் புதிதாய் ஒரு பாசக் கயிறு சுற்றிக் கொண்டது. புருஷன் என்றார்கள். இனி எல்லாம் அவன்தான் உனக்கு என்றார்கள். புருஷன் மூலமும் புதுசு புதுசாய் உறவுகள்.

நான் பிறக்கும்போது என் அம்மாவும் இப்படித்தான் அலறினாளா? நேற்று வரை என் குழந்தைகளும் கடவுளோடு பேசியிருக்குமோ?. எனக்கே இன்னும் விளங்காத உண்மையை அவர்களுக்கு எப்படி விளங்க வைக்கப் போகிறேன்.

மகளாய் மட்டுமிருந்தபோது வராத கஷ்டங்கள் எல்லாம் தாயான பிறகு வரிசை கட்டி வந்து நின்று வாசற கதவை தட்டியபோது வாழ்க்கை என்பது துன்பமும் நிறைந்தவைதான் எனப் புரிந்தது. இப்படித்தான் என்னைப் பெற்றவர்களும் துன்பங்களை மறைத்து என்னை வளர்த்தார்களோ?

பணம் பொருள் இன்பம் என்று தேடுதல் வேட்டையில், காலம் முதலையைப் போல என்னைப் புரட்டிப் புரட்டிப் போட்டது. என் உறவுகளும் நட்புகளும் திசைக்கொன்றாய் கயிறை அறுத்துச் செல்ல, மிகச் சில கயிறுகளே என் விரல்களில் மிச்சமிருந்தன. ஒன்று அப்பா இன்னொன்று அம்மா, பின், தம்பி, தங்கை அக்கா இவ்வளவே உடனிருந்தன.

ஒரு மழைநாளில் அப்பாவின் கயிறும் இற்றுப் போய் அறுந்தது. இனி அப்பாவைக் காண முடியாது என்பது கொடுமையான உண்மை. கொஞ்சம் சக்தி என்னை விட்டு அகன்றாற்போல் தோன்றியது. அப்பாவை மரணம் பிரித்தது என்றால். மற்றதை கருத்து வேறுபாடுகள் அறுத்தெறிந்தன.

என் கையில் புருஷனும் பெண்களும் மட்டுமே ஒட்டியிருந்தார்கள். என் கையில் மட்டும் ஏன் கயிறுகள் இத்தனை சீக்கிரம் அறுந்து போகின்றன. ஏன் என் பாதையில் மட்டும் இத்தனை மேடு பள்ளங்கள்? அந்த இருட்டில் எத்தனை சந்தோஷமாயிருந்தேன்.! எங்கே போனான் கடவுள்? உன்னோடு இருப்பேன் என்றானே! இருக்கிறானா இல்லையா, அல்லது என் கண்ணுக்குத்தான் தெரியவில்லையா?

“இருக்கிறேன், காணும் முயற்சியை நீதான் எடுக்கவில்லை,

நான் திகைத்தேன். எங்கே இருந்து வந்தது இந்தக் குரல்.?

“உனக்குள்ளிருந்துதான்.

உள்ளேயா?

“ஆம் உன் பார்வையை உள்ளே திருப்பு.

நான் முயற்சித்தேன். நிறைய யோசித்தேன். வாசித்தேன்.

நிறைய பேர் கடவுளைக் கண்டிருக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள். அறியும் முயற்ச்சியில் இருக்கிறார்கள். மிக மெல்லிய திரைதான் அவனுக்கும் எனக்கும் நடுவில். அதை நீக்கி அவனைக் காண்பது என் கையில்தான் உள்ளது.. மும்மலமும் என்னிலிருந்து வெளியேறினால்தான் திரை நீங்கும. எப்படி நீக்குவது? அது அவ்வளவு சுலபமாயில்லை. நான் தவித்த நேரம் படீரென்று அறுந்தது மற்றொரு கயிறு. என் கழுத்து விடுபட்டது. என் உடலின் பாதி எரிந்து சாம்பலாயிற்று. மரணம் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஜீவன் உடலை விட்டு எங்கே செல்கிறது? இனி நான் என் காதலை எப்படி யாரிடம் காட்டுவேன்?

“ஏன் என்னிடம் காட்டேன்.

நான் உள்ளே பார்த்தேன். சற்றே வெளிச்சம் தெரிந்தது. இருட்டில் நான் கண்ட அதே கண்கள்!

வந்து விட்டாயா நீ?

“எப்போதும் இங்குதான் இருக்கிறேன். நீதான் கவனிக்கவில்லை.

ஆமாம் என்னைச் சுற்றி இருந்த உறவுகள் உன்னை மறைத்துக் கொண்டிருந்தன. அவர்கள்தாம் எல்லாம் என்ற அகந்தையில் நீ இருப்பதை கவனிக்கவில்லை. ஆனால் உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருந்தேன் நம்பு.

அந்தக் கயிறுகள் நிலையற்றவை. என்னைப் பற்றிக் கொள். உன்னை என்றும் விட மாட்டேன். உன் துன்பங்கள் எல்லாம் நீயாகத் தேடிக்கொண்டவை. பாசம் எப்போதும் வழுக்கும். அதில் உழலாதே.

அப்படியானால் உன்னிடமும் பாசம் வைக்கலாகாதா?

“ என் கேள்விக்கு பதில் சொல். உன்னை நீ நேசிக்கிறாயா? “

“ஆம்.

“அதே போல் என்னையும் நேசி. நீ வேறு நான் வேறு அல்ல. உண்மையான அன்பை மனிதர்கள் அறிய மாட்டார்கள். நான் அறிவேன். உன் பாசக் கயிறால் என்னை கட்டிப் போட்டுப் பார். அது என்றும் அறுந்து போகாது. நான் உனக்குள் கட்டுண்டு கிடப்பேன்.

எனக்கு அழுகை வந்தது. “ஏன் மனிதர்களுக்கு அன்பு உணர முடியவில்லை.?

“அதனால்தான் அவர்கள் மனிதர்களாகவும், நான் கடவுளாகவும் இருக்கிறேன்.

என் இருள் சற்றே அகல, நான் அவனைப் பற்றிக் கொள்ளத் தயாரானேன். மனதில் பயமில்லை. பொய்யில்லை. அன்பு மட்டுமே இருந்தது.

நான் அவனைத் தொட்ட வினாடி மொத்த உலகத்தின் மீதும் என் அன்பு பொங்கி வழியத் துவங்கியது


பின் குறிப்பு.:

இந்த கதை, சிறுகதை இலக்கணம் மீறியது. காலம் பல உள்ளடக்கியது, இதை இப்படித்தான் எழுத முடியும் என்பதால் இலக்கணம் மீறியிருக்கிறேன்.

Tuesday, April 12, 2011

பெண் எழுத்து (தொடர் பதிவு)

பெண் எழுத்து எனும் தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்த மனோ சாமிநாதனுக்கு நன்றி. தனது பதிவில் மனோ எழுதியதெல்லாம் ஒப்புக் கொள்ளக் கூடியவைதான், ஆண் எழுத்து பெண் எழுத்து என்றெல்லாம் கிடையாது என்றாலும் எல்லை மீறி காமமும் வர்ணனையும் எழுத பெண்ணால் முடியாது. பெண் எழுத்தின் அழகும் அதுதான். அப்படியே விதி மீறலாக ஒரு பெண் கவிஞர் சுய வர்ணனை செய்து எழுதிய கவிதையும் அந்த கவிதாயினியும் பட்ட பாடும், அவரும் மிகத் துணிச்சலாக அதை எதிர் கொண்டதும் அனைவரும் அறிந்ததுதான். விரசமில்லாமல் கண்ணியமாய் எழுதுகிற ஆண் எழுத்தாளர்களையும் நான் அறிவேன். பெண்ணை மட்டம் தட்ட சுஜாதாவின் கதாநாயகன் ஒருவன் கேட்பான். என்னால் முடிவதெல்லாம் உன்னால் முடியுமா என்று. அவளும் முடியும் என்பாள். எங்கே இதைச் செய் என்று சுவற்றில் சிறுநீர் கழிப்பான். பெண்ணை மட்டம் தட்ட இதுவா வழி? எனக்கு சுஜாதாவை மிகவும் பிடிக்கும் என்றாலும் இது படித்த போது கோபம் வந்து சற்றே மரியாதையும் குறைந்தது. இனவிருத்திக்காக கடவுள் ஆண் உடலுக்கு ஒரு அமைப்பையும் பெண் உடலுக்கு வேறொரு அமைப்பையும்அளித்தது ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொள்வதற்கு அல்ல. சங்க காலத்திலேயே பெண் எழுத்துக்கு பெருமை சேர்த்தவர் அவ்வையார். அவரது கவிகளில் சொல்லப் பட்ட விஷயத்தின் வீரியமும், கண்ணியமும் இன்றளவும் பிரம்மிக்க வைக்கும். ஆண் பெண் நட்பு என்பது அவர் காலத்திலேயே அற்புதமாக இருந்திருக்கிறது. அதியமானோடு அவர் கொண்டிருந்த உன்னதமான நட்பு பெண்ணுக்கு பெருமை சேர்த்தது எனலாம். சாண்டில்யனின் எழுத்துக்களில் காமம் சற்று தூக்கலாகவே இருப்பதற்கு காரணம் அவர் ஆண் என்பதுதான் என்றாலும், கல்கியின் கதைகளில் அவர் ஒரு ஆணாக இருந்தாலும் எல்லை மீறாமல் எழுதியதற்கு எது காரணம்? எழுதுவது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருத்தல் அவசியம். வாழ்வின் நிஜத்தை ஓட்டி கதை எழுவதையே நான் விரும்புகிறேன். தனக்கும் ஒரு ராஜகுமாரன் கிடைப்பான் என்று இளம் பெண்களை கற்பனை சுகத்தில் மிதக்க வைக்க என்னால் நிச்சயம் முடியாது. அன்பெனும் வேர், பலமாக ஊன்றி இருந்தால்தான் தன்னம்பிக்கை இலை நுனி வரை ஊடுருவிச் செல்லும் என்பதுதான் எனது எழுத்துக்களின் ஆதார நாதமாய் இருக்கும். அன்பெனும் அச்சாணியில்தான் இவ்வுலகம் சுழல்வதாக நான் நம்புகிறேன். அன்பின்றி செய்யப்படும் அனைத்துமே போலியானவை என நினைப்பவள் நான். என் வீட்டில் மிகச்சில பத்திரிகைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. கண்ணியமான எழுத்துக்களைப் படித்து வளர்ந்தவள் நான். அம்மா வந்தாள் நாவலில், ஒழுக்கம் கெடும் அம்மாவைக் கூட கம்பீரமாக கண்ணியமாக சித்தரித்துக் காட்டியிருப்பார் தி.ஜா. இரண்டு பேர் என்று ஒரு தொடர். இரண்டு பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதியது. கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. காரணம் அதில் வெளிப்பட்ட எல்லை மீறிய வர்ணனைகளும் ஒழுக்க மீறல் சொல்லப் பட்ட விதமும்தான். கண்ணியம் என்பது ஒருவர் தனக்குத்தானே அமைத்துக் கொள்ளும் எல்லை. ஆணோ பெண்ணோ கண்ணியம் காப்பதென்பது அவரவர் விருப்பம். ஆபாசமாக எழுத ஆணுக்குதான் உரிமை இருக்கிறதா என்று ஒருவர் கேட்டார். ஆண் செய்யும் தவறுகளைச் செய்வதுதான் பெண்ணுரிமையா? நம் இலையில் விருந்தேன்கிற பேரில் பல்வேறு பதார்த்தங்களும் இனிப்புகளும் வந்து விழும். நமக்கு தீங்கு செய்யாதவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுவது நமது பொறுப்பு. வாசகர்களுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. கண்ணியமானவற்றைத் தேடிப் பிடித்துப் படிப்பது. என்னை பாதித்த கண்ணியம் மிகு எழுத்துக்களுக்கு சொந்தமானவர்கள் இவர்கள். தி.ஜா, கல்கி, தேவன், நா.பா. உமா சந்திரன், லஷ்மி, அனுத்தமா, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், லஷ்மி ராஜரத்தினம், வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி, லா.ச.ரா. சுபா, அனுராதா ரமணன், எஸ்.ரா. தமிழருவி மணியன், இறையன்பு, சுஜாதா (சிறுகதைகள், கட்டுரைகளுக்கு மட்டும்) இந்த தொடர் பதிவுக்கு பல்வேறு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாசிக்கும் கோபி ராம மூர்த்தியையும், நான் அழைக்க விரும்புகிறேன். அவரது கருத்தையும் அறிய விரும்புகிறேன். படிச்சுட்டு சும்மா போகாம ஒட்டு போட்டுட்டு போங்களேன். ஓட்டுக்கு பணமெல்லாம் கிடையாது சொல்லிட்டேன்.

Tuesday, March 22, 2011

கணிப்பொறியும் நானும்

ஆங்கிலமும் நானும் என்ற கோபியின் பதிவு படித்ததன் வெளிப்பாடு இது.

கணிப்பொறி என்பது நான் படித்த காலத்தில் இல்லை. எழுபதுகளில் பள்ளி, கல்லூரிப் படிப்பு. அப்போதெல்லாம் எஸ் எஸ் எல்.சி படிக்கும் போதே டைப்பிங் ஷார்ட் ஹாண்ட் கண்டிப்பாக சேர்ந்து விட வேண்டும். என் வீட்டுக்கருகில் அருண்டேல் தெருவில் கன்னட ராவ் ஒருவர் நடத்திய காமக் கோட்டி டைப்பிங் இன்ஸ்டிடியுட்டில் நானும் என் சிநேகிதியும் நல்ல நாள் பார்த்து சேர்ந்தோம். டைப்பிங் அடிப்பதே அந்த காலத்தில் ஒரு பெருமைக்குரிய விஷயம். அந்த சப்தமும் வேகமும் காதுக்கு இனிமையாகவே இருக்கும். ஆறாம் மாதம் லோயர், அடுத்த ஆறாம் மாதம் ஹயர். சுருக்கெழுத்தின் மீது எனக்கு ஒரு காதலே உண்டு. ஷார்ட் ஹாண்ட் இன்டர் வரை பாஸ் பண்ணிய போது என் அப்பாவுக்கு என்னை விட சந்தோஷமும் பெருமையும் கூடியது எனலாம்.

டைப்பிங் ஷார்ட் ஹாண்ட் தகுதிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. திருமணத்திற்குப் பிறகு சர்வீஸ் கமிஷனை பாஸ் செய்த போது (அதுவும் முதல் அட்டம்ப்ட்டிலேயே) சத்தியமாக எனக்குத் தெரியாது. டைப்பிங்கும் ஷார்ட் ஹான்டும் என்னை விட்டு விலகப் போகிறதென்று. வெறும் எழுத்தராகப் பணியில் சேர்ந்த போது டைப்பிங் பிரிவிலிருந்து கேட்கும் தட்டச்சு ஒலி ஏக்கமாக இருக்கும். காலப் போக்கில் அது பழகி விட்டது.

கணிப்பொறி அறிமுகமான புதிதில் அலுவலகத்தில் ஒரே ஒரு கணிப்பொறிதான் இருந்தது. இரண்டே பேருக்குதான் அதனருகில் செல்லும் உரிமை. பள்ளியிலிருந்து கல்லூரிக்கு சென்ற புதிதில் ஆங்கிலத்தைக் கண்டு மிரண்டது மாதிரிதான் கணிப்பொறியும் மிரள வைத்தது. அயல் கிரகத்திலிருந்து எதோ வந்திருப்பது போல் மலங்க மலங்க பார்ப்பேன் . அந்த உபகரணம் ஒரு காலத்திலும் எனக்கு தேவைப் படாது என்றுதான் நினைத்திருந்தேன். ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும். எனவே கண்டு பிடிக்கப்படும் ஒவ்வொரு பொருளையும் கையாளத் தெரிந்து கொள்ளும் இயல்பு அவனுக்கு உண்டு என்றாலும், மின்சாரத்திளிருந்து, கணிப்பொறி வரை முதலில் ஒரு பயமும் தயக்கமும் அனைவருக்குமே இருந்திருக்கிறது.

ஆண்டுகள் உருள உருள தட்டச்சு இயந்திரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் ஓரம் கட்டப்பட, அலுவலகம் மெல்ல மெல்ல கணிப்பொறி மயமாகிக் கொண்டு வந்த நிலையில் திடீரென நான் பட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அதனாலென்ன என்று கேட்கிறீர்களா? பட்டியல் பிரிவில் பணியாற்ற கணிப்பொறி பயிற்சி அவசியம். நானோ அது வரை அதை தொட்டது கூடக் கிடையாது. மொத்த ஊழியர்களுக்கும் சம்பள பட்டியல் தயாரிக்க அரசாங்கம் ஒரு மென் பொருளை அளித்திருந்தது. அதன் மூலம் பட்டியல் தயாரித்து ECS இல ஊதியம் பெற்றுத் தருவதற்கு அசாத்திய பயிற்சி வேண்டும். பட்டியல் பிரிவில் ஒரு தற்காலிக ஊழியர் ஒருவர் இதில் தேர்ந்தவர். அந்த வித்தையை அவரிடமிருந்து யாரும் கற்கவும் முயலவில்லை. அப்படியே கேட்டாலும் அவர் சொல்லித்தந்து விட மாட்டார்.

கற்றுத்தந்துவிட்டால் தன மவுஸ் (mouse) பறிக்கப் பட்டு விடும், பிறகு யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தார். பட்டியல் பிரிவே அவர் இல்லாவிட்டால் ஸ்தம்பித்து நின்று விட வேண்டும் என்பது அவர் ஆசை.

இது வரை அவரைச் சார்ந்தே இருந்து விட்ட மற்றவர்களை போலவே நானும் இருப்பேன், அவருக்கு எடுபிடி ஊழியம் செய்வேன் என்று எதிர்பார்த்தார். நானாவது விடுவதாவது. பட்டியல் போட கற்றுத்தருமாறு கேட்டேன். முடியாது என்றார். கூடவே அதெல்லாம் உங்களால கற்றுக்கவே முடியாது. கம்முனு மத்த வேலையப் பாருங்க என்றார். கணிப்பொறியை பாஸ்வோர்ட் போட்டு திறக்க முடியாமல் வைத்து விடுவார். அது என்னமோ யாராலும் கற்க முடியாத பிரம்ம வித்தை என்பதொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.

அவரது திமிரும் கர்வமும் அலட்சியமும் என் வெறியை அதிகரித்தது. தலையைக் கொடுத்தாவது அந்த வித்தையை அறிவது என உறுதி கொண்டேன். இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்லியே ஆக வேண்டும். என் வீட்டில் என் பெண்களுக்காக கணிப்பொறி ஒன்று வாங்கி பல வருடங்களாகி இருந்தது. அம்மா கம்ப்யுட்டர் கத்துக்கோ என்று பெண்களும் சொல்லி சொல்லி பார்த்தார்கள். நான் கேட்பதாயில்லை. முதல் காரணம் நேரமில்லை. இரண்டாவது எனக்கு எலி என்றால் பயம். அதனால் மௌஸை பிடிக்க பயம் என்று என் பெண்கள் கேலி செய்வார்கள்.

ஆக மொத்தம் நான் கணிப்பொறி கற்க வேண்டிய அவசியம் வந்தே விட்டது. ஆன்னா ஆவன்னா தெரியாது. அடிப்படை பயிற்சியே இனிமேல்தான். கூச்சப்படாமல் அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி பெண்களிடமும் சக ஊழிய நண்பர்களிடமும் சரி கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டு என் பயிற்சியைத் துவங்கினேன். முக்கியமாக எக்ஸ்செல்லில பணியாற்ற பழகிக் கொண்டேன். எது பிரம்ம வித்தை என்று அந்த உதவியாளர் நினைத்தாரோ, அந்த பட்டியல் தயாரிக்கும் வித்தையை நான் ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டேன். மறு மாதம் நம்புங்கள் அத்தனை ஊழியர்களுக்கும் ஊதிய பட்டியல் தயாரித்து அனுப்பி வைத்தேன்.

பிறகுதான் சோதனையே. நான் அந்த வித்தை கற்ற பிறகு அந்த உதவியாளருக்கு மிக சாதாரண பணிகள் அளிக்கப் பட, அவர் அந்த ஆத்திரத்தை வேறு விதமாய் காட்டினார். நான் இல்லாத நேரத்தில் நான் தயாரிக்கும் பட்டியல்களில் தன கைவரிசையைக் காட்டுவார். அதாவது ஒரு ஊழியரின் ஊதிய பிடித்தம் ஆறாயிரம் என்றால் அதில் ஒரு பூஜ்யத்தைக் கூட்டி விடுவார். அறுபதாயிரம் என்றாகி விடும். அவர் செய்து வைத்த மாற்றங்களுக்கெல்லாம் பழி எனக்கு. என்னை பட்டியல் பிரிவிலிருந்து ஒழித்துக் கட்டுவதில் குறியாயிருந்தார். அவர் விருப்பப் பட நான் தூக்கியும் அடிக்கப் பட்டேன்.

இந்த நிலையில் அவருக்கு பணி நிரந்தரமாகி வேறு ஒரு துறைக்கு மாற்றப்ப்பட்டார். எந்த பட்டியல் பிரிவு தன தலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவர் நினைத்தாரோ அந்த பிரிவு இப்போதும் யார் தலையிலோ ஓடிக கொண்டுதான் இருக்கிறது.

அந்த ஒரு வருடத்தில் நான் புலியானேனோ இல்லையோ எலி (மௌஸ்) பிடிக்க நன்றாகவே கற்றுத் தேர்ந்தேன். முதலில் அலுவலக வேலை, பிறகு மெல்ல மெல்ல மின்னஞ்சலனுப்புவது, வலைத்தளங்களில் தேடுவது, என்று இன்டர்நெட்டிலும் இயங்கத் தெரிந்து கொண்டேன். இன்று பதிவு எழுதும் அளவுக்கு முன்னேறி உள்ளேன் என்றால் காரணம் அன்று பட்ட அவமானம்தான். அது ஏற்படுத்திய வலி தான். அனைத்தும் நன்மைக்கே என்று நம்புகிறவள் நான். அந்த உதவியாளர் உண்மையில் எனக்கு உதவிதான் செய்திருக்கிறார். அவர் மட்டம் தட்ட தட்ட நான் அதிகம் கற்றேன். அதற்கு நான் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

எட்டு மாதம் முன்பு அந்த உதவியாளர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்த போது எல்லோரையும் விட அதிகம் அதிர்ந்ததும், வருத்தப்பட்டதும் நான்தான். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தது. உயர உயர பணிவு வர வேண்டும். இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. நம்மால் முடிந்தது பிறராலும் முடியும். பிறரால் முடிவது நம்மாலும் முடியும்.

பதிவுலகம் வந்த பிறகுதான் எவ்வாவு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இங்கிருக்கிரார்கள் என்பது புரிந்தது. நான் கற்றது கையளவுதான். கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது. எந்தரோ மகானுபாவலு...........!

Tuesday, March 8, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள் (ஆண்களுக்கும்தான்)

தலைப்பைப் பார்த்ததும் உள்ளே வருவீர்கள் என்று தெரியும். ஆண்களுக்கு எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லலாம் என்று யோசிக்கிறீர்களா?
மீராவின் பார்வையில், கண்ணன் ஒருவனே புருஷோத்தமன். மற்றபடி அனைவரும் பெண்கள்தான். எனவே அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.

Monday, March 7, 2011

பெயர்க் காரணம்

பெயர்க் காரணத்தை ஆரம்பித்து வைத்த ராஜிக்கும், தொடர் பதிவு எழுத அழைத்த கோபிக்கும், நன்றி.

எனக்கு பல பெயர்கள் (அம்பாள் மாதிரி?) எல்லாவற்றிற்கும் காரணம் சொல்ல வேண்டாமா?

எக்மோர் ஹாஸ்பிடலில் அன்று ஒரு குழந்தை சிரித்துக் கொண்டே பிறந்ததாம். (இந்தக் கதைதானே வேணான்றதுன்னு யார் முணுமுணுப்பது?)

சூரியன் சுட்டுப் பொசுக்கும் நட்ட நடு மே மாதம். ஒரு பெண் பிரசவ வேதனையும் பிரார்த்தனயுமாய் தவிக்கிறாள். என்ன பிரார்த்தனை என்கிறீர்களா? இருக்கிறதே. வரிசையாய் நான்கு பெண்கள் (மூன்றாவது தவறி விட்டது.) இது நான்காவது முயற்சி. இதுவாவது பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கட்டுமே என்கிற பிரார்த்தனைதான்.. தாயின் பிரார்த்தனை கேட்டு வயிற்றுக்குள் பிறப்புக்குக் காத்திருந்த எனக்கு சிரிப்பாக இருந்தது. ஒரு பெண்ணாக முழுவதும் உருவாகி விட்ட பிறகு காதில் விழுந்த பிரார்த்தனை கேட்டு சிரிக்காமல் என்னசெய்ய?

அம்மா: கடவுளே இதுவானம் பிள்ளையா பொறக்கணும்

கடவுள்: இதுவும் பிள்ளை மாதிரிதான். உருவத்தில் என்ன இருக்கிறது? நிறைய சாதிப்பாள் உன் பெண்

அம்மா: அதெல்லாம் வேண்டாம். கொள்ளி போட ஒரு பிள்ளை போதும்.

நான் (உள்ளேயிருந்து): கொள்ளி வைக்க என்னாலும் முடியும் அம்மா. நான் வைத்தாலும் நீ ஜோராக எரிவாய். ::

அம்மா: கடவுளே பிள்ளை வேண்டும்

கடவுள்: நீ மீண்டும் முயற்சி செய். இம்முறை என் விருப்பப்படி பெண்தான்.

நான்: நன்றி கடவுளே. உன்னை இறுதி வரை நினைத்துக் கொண்டிருப்பேன். நீ எந்த மலை மீது இருந்தாலும் ஏறி வந்து பார்ப்பேன். (கயிலாயம், பொதிகை,முக்திநாத், சதுரகிரி என்றுமலை மலையாய் ஏறி இறங்கின காரணம் புரிந்திருக்குமே) என்னைப் படைத்த உன்னை நானும் படைத்துக்கொண்டேயிருப்பேன்

(நான்தெய்வ திரு உருவங்களை ஓவியமாகப் போடுவதன் காரணமும் புரிந்திருக்குமே

இப்படித்தான் நான் சிரித்துக் கொண்டே பிறந்தேன்)

பெண்ணா? அம்மா முகம் சுருங்கி விட்டது. கவலைபடாதே அம்மா. நான் நன்கு படிப்பேன். வேலைக்குப் போவேன். இதர கலைகளையும் கற்பேன். பின்னாளில் BLOG எல்லாம் எழுதுவேன் அம்மா.

அம்மா காதில் விழுந்ததா எனத் தெரியவில்லை. எங்கே என் அப்பாவைக் காணவில்லை. பெண் என்பதால் அவருக்கும் ஏமாற்றமா?

“பெண் கொழந்த அழகா இருக்குடா பார்த்தா விட மாட்ட(அது சரி. நெனப்ஸ் தான் பொளப்ச கெடுக்கும்ன்னு சித்ரா முனகுவது கேட்குது.) என் அத்தை அப்பாவிடம் சொல்ல அப்பா ஆஸ்பத்திரி வந்து என்னைப் பார்த்தவர்தான். சாகும் வரை என் மீது தனி அன்பு அவருக்கு.

இனி பெயர்க் காரணம் பார்ப்போம். மயிலாப்பூரில்தான் அப்போது வாசம்.(இப்போதும்தான்) கோயிலில் வேறு எதோ விசேஷம். எனவே கற்பகவல்லி என்று பத்தாம் நாள் நெல்லில் பெயரெழுதி காதில் மூன்று முறை சொன்னதோடு சரி. அதன் பின் அந்தப் பெயரை கல்யாணப் பத்திரிகையில்தான் மீண்டும் பார்த்தேன். (கற்பகவல்லி என்கிற உஷா.) (நானும் கப்பிதான் ராஜி) இந்த உஷா என்கிற பெயர் என் பெரியக்கா வைத்ததாம் கற்பகவல்லி கர்நாடகப் பெயர். மாடர்னா வைக்கணும் என்று வைத்ததாக அறிந்தேன்.

ஆக கற்பகவல்லி அலைஸ் உஷாவானேன். அந்த உஷாவும் செல்லமாக உஷிக் குட்டியாகி விட்டது. எனக்கு நகை நட்டு எதுவும் பிடிக்காது. சின்ன வயதில் ஒரு பாசி மாலை கூட அணிந்ததில்லை. ஆனாலும் என் அத்தை மகன் என்னை குருவிக்காரி என்று அழைத்ததன் காரணத்தை அவனிடம்தான் கேட்க வேண்டும்.

சின்ன வயதில் சலசலவென்று பேசிக்கொண்டேயிருப்பேன். வாயாடி என்பது டீச்சர் வைத்த பெயர்.

தெருவில் ஆம்பளைப் பசங்க விளையாடும் அத்தனை விளையாட்டையும் விளையாடி இருக்கிறேன். கில்லி, கோலி, முந்திரிக்கொட்டை வைத்து கோலி மாதிரி ஆடுவது, பம்பரம் விடுவது, மாஞ்சா போட்டு காற்றாடி விடுவது என்று ஒன்றையும் விட்டு வைத்ததில்லை. எங்கள் வீட்டு மாடிக்கு செல்ல ஒரு போதும் படிகளை உபயோகித்தது கிடையாது. தண்ணீர்க் குழாய் மூலம்தான் ஏறிப் போயிருக்கிறேன். அதனால் ரவுடி ராக்கம்மா என்று ஒரு பெயரும் உண்டு. யார் வைத்தது என நினைவில்லை.

எனக்கு மறதி அதிகம். மிளகாய் வாங்கி வரச் சொன்னால் சீயக்காய் வாங்கி வரும் ரகம். அதனால் அரணை என்றும் ஒரு பெயருண்டு. என் மறதி குறித்து ஒரு பதிவு எழுத மறந்து விட்டது.

ஏழெட்டு வயசில் அம்புலிமாமா வாசிக்க அர்ரம்பித்த பிறகு ஒரூ சுப முகூர்த்தத்தில் முழு நிலா என்னும் நாவலை படித்தேன். பிறகு தொடர்ந்து வாசிப்புதான். கல்கியும், சாண்டில்யனும், தேவனும், தி.ஜா. வும் ஒரு கட்டத்தில் என்னை மிகவும் பாடாய்ப் படுத்த உங்க கெட்ட நேரம், நான் எழுத்தாளினி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன பெயரில் எழுதலாம் என்ற கேள்வி குடைந்தது. சொந்தப் பெயரில் எழுதுவதில் சுவாரசியமில்லை. நான் சுஜாதாவின் சிறுகதைகளுக்கு அடிமை. எனது துரோணாச்சாரியாரும் அவர்தான்.(கட்டை விரல் கேட்காத) .

எனவே, எழுதுவதற்கு முதலில் . நான் தேர்ந்தெடுத்த பெயர் சுஜாதாப்ரியா

ம்ஹும்.. க்ளிக்காகவில்லை.. (சுஜாதா தப்பித்தார்.) பிறகு உஷா என்றே எழுதினேன். அப்போது இன்னொரு உஷாவும் இருந்தார். சரி வேண்டாம் என நினைத்தபோது, ஒரு சுப முஹூர்த்தத்தில் திருமதி சுப்ரமணியம் ஆனேன். ஆஹா உஷா சுப்ரமணியம் என்றே எழுதலாம் என சந்தோஷப் பட இயலவில்லை. ஏனெனில் என்னைவிட சீனியர் எழுத்தாளர் உஷா சுப்ரமணியம் அபோது பிரபலமாக இருந்தார். (ஆமா...! ஏதோ என் கதைக்காக பத்திரிகைகள் எல்லாம் வரிசையில் காத்திருக்கிறார் போல் நான் பெயர் தேடிக் கொண்டிருந்தேன்.)

ஒருவழியாய் என் பெண் பிறந்ததும் பெயர்ப் பிரச்சனை தீர்ந்தது. நான் வித்யா சுப்ரமணியம் ஆனேன். என் பெண் மாஸ் கம்யூனிகேஷன் முடித்து தூர்தர்ஷனில் செய்தியாளராகப் பணியாற்றிய போது அவளது பெயரும் வித்யா சுப்ரமணியம்தான். போன் வந்தால் கூத்துதான்.

இட்ட பெயர் கற்பகவல்லி, அழைக்கப்பட்டது உஷா, நானே எனக்கு வைத்துக் கொண்டு பிரபலமாகி பெயர் பெற்றது வித்யா சுப்ரமணியமாக. இதற்கு நடுவில் பட்டப் பெயர்கள் வேறு. பெண்கள் என்னை அழைப்பது அம்மா என்று. சக பதிவர்களுக்கு சகோதரி. இப்போது பாட்டி என்று அழைக்கவும் இரண்டு குழந்தைகள் வந்தாயிற்று.

எந்த பெயருக்குள்ளும் நான் நானாக மட்டுமே இருக்கிறேன். எனக்குள் இருக்கும் குழந்தை மனம் அவ்வப்போது மேலே வந்து எட்டிப் பார்க்கும். அது என்னோடு இறுதி வரை இருக்கும்.

ஆக மொத்தம் பெயர் என்பது ஒரு அடையாளம். பிறந்த நிமிடம் குழந்தை என்பார்கள். இறந்த நிமிடம் பாடி என்பார்கள். இறப்புக்குப் பின்னும் என் பெயர் சொல்கிராற்போல் எனது சில படைப்புகளாவது இருக்கும் என நம்புகிறேன். வாழும்போது புகழ் பெற்று மரணத்திற்குப் பின்னும் அவன் பெயர் போற்றப் படுவதே உண்மையான வாழ்வு. பாரதியார், விவேகானந்தர், காந்தி, ரமணர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதுவே உண்மையில் சாகா வரம். (ரொம்ப அறுத்துட்டேனோ?)