Showing posts with label vidya subramaniam. Show all posts
Showing posts with label vidya subramaniam. Show all posts

Wednesday, March 2, 2016

கொடியாலம் கிராமம் சென்ற அனுபவம்

உப்புக் கணக்கு நாவல் வேதாரண்யம் சத்தியாக்கிரகத்தின் பின்னணியில் எழுதப்பட்ட புதினம். இதை எழுத நான் பலவகை தகவல்கள் திரட்டினேன். ராஜாஜியின் தலைமையில் சத்தியாக்கிரகிகள் சென்ற பாதையில் செல்ல ஆசைப்பட்டாலும் அது லபிக்கவில்லை. இருந்தாலும் திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலடி, திருவையாறு, தஞ்சை வரை சென்றேன். ( வாகனத்தில்தான். நடந்தல்ல)


 ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தாற்போல் தஞ்சாவூர் கலெக்டர் தார்ன் துரையின் ஏக கெடுபிடி செய்தான். சத்தியாக்கிரகிகளுக்கு சாப்பாடு கொடுத்தால் தண்டனை என்று தண்டோரா போட்டு மக்களை பயமுறுத்தி இருக்கிறான். சத்தியாக்கிரகிகளை தேசவிரோத கூட்டம் என்றும் கூறியிருக்கிறான். இந்நிலையில் அடுத்த கேம்ப்பில் உணவு கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியா விட்டாலும் சத்தியாக்கிரகிகள் உற்சாகமும் உத்வேகமும் குறையாது கோஷமெழுப்பியவாறு நடக்கிறார்கள். அடுத்த ஊரான கோவிலடியில் ஒரு ஆளைக் கூட காணவில்லை. தாரனுக்கு பயந்து விட்டார்கள் மக்கள் என்று நினைத்த வேளையில் ஒரு திருப்பத்தில் பெரும் கூட்டத்தோடு அவர்களை வரவேற்று அன்னமிட்டு வாழ்த்தி உரையாற்றியவர்தான் கொடியாலம் திரு ரங்கசாமி ஐயங்கார் அவர்கள்   (முதல்  படம்  உப்பு  சத்தியாக்கிரகி  கொடியாலம்  ரங்கசாமி  ஐயங்கார் ,  இரண்டாவது  படம்,  இடப்புறம்  அவரது  தந்தை  வாசுதேவ  ஐயங்கார்,  வலப்புறம்  கொடியாலம்  ரங்கசாமி  ஐயங்கார் ,   மூன்றாவது  கொடியாலம்  ரங்கசாமியின்  மகன்  வாசுதேவ  ஐயங்கார்.)



.
கொடியாலம் ரங்கசாமி அவர்கள் ஆற்றிய உரையையும் நான் நாவலில் எழுதியிருந்தேன். என் பிறப்புக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. "உப்புக் கணக்கு" புதினம் 2009 ஆம் ஆண்டு வெளியாயிற்று. ஏழாண்டுகள் ஓடிவிட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் அறிமுகமாகி விரைவிலேயே எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராகி விட்ட திருமதி வசந்தா பாலா அவர்கள். திருமதி வசந்தா பாலா DAV கோபாலபுரம், கில் நகர் (Ghill Nagar) பள்ளியின் பிரின்சிபாலாக இருந்து ஓய்வு பெற்றவர். அமைதியானவர். இனிமையானவர். விஷயஞானி என்றாலும் அலட்டிக் கொள்ளாதவர். முகநூல் எனக்களித்த வெகுமதிகளில் இவரது நட்பும் அடங்கும். இவரும் ராதிகா பார்த்தசாரதி மேடமும் பள்ளிப் படிப்பிலிருந்து ஒன்றாகப் பயின்ற தோழிகள். (இடது  கோடியில்  நிற்பவர்  திருமதி  வசந்தா  பாலா)


இருவாரம் முன்பு என்னை அழைத்த வசந்தா பாலா "வித்யா என்னோட நீங்க ஒரு இடத்துக்கு வரணும்". என்றார். எங்கே என்றேன். நீங்கள் உப்புக் கணக்கில் கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள் அல்லவா? அந்த கொடியாலம் கிராமத்தில் பிரம்மோத்சவம் நடக்க இருக்கிறது. நாங்கள் ஆண்டு தோறும் ஏதேனும் இரண்டு நாட்களாவது அங்கு செல்வோம். இம்முறை நீங்களும் எங்களோடு வரவேண்டும் என்பது என் ஆசை என்றார். ஆஹா எப்பேர்ப்பட்ட வாய்ப்பு! கசக்குமா என்ன? உடனே வருகிறேன் என மகிழ்ச்சியோடு கூறினேன்.


25-2-2016 வியாழனன்று காலை காரில் நாங்கள் ஆறு பேர் கிளம்பினோம். கொடியாலம் ரங்கசாமி அவர்களது பேரன் திரு ரங்கசாமி திருமதி வசந்தாவின் கணவர் திரு பாலாவுக்கு நெருங்கிய தோழர். இருவரும் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள். நீண்ட கால குடும்ப நண்பர்கள். ரங்கனை சேவித்த கையோடு ஸ்ரீரங்கத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கொடியாலத்திற்குப் பயணம். பசுமையும் அழகும் நிறைந்த சிறு கிராமம். நூறு சத்தியாக்கிரகிகள் வந்து தங்கிய, உணவருந்திய, அவர்களுக்கு உணவிட்ட அந்த மகானின் இல்லத்தின் முன் எங்கள் கார் நின்றது. மறக்க முடியாத தருணம் அது. சுதந்திர வரலாற்றில் பெயர் செதுக்கிய புகழ்பெற்ற ஒரு மனிதர். அந்த குடும்பத்தின் பெருமையும், கண்ணியமும், விருந்தோம்பலும் இன்று வரை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் அவரது பேரன் திரு ரங்கசாமி வீட்டுக்கு முன்புறம் வேய்ந்திருந்த பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அவரது மனைவி சித்ரா எங்களை அன்புடன் வரவேற்றார். என் கரம் பற்றிக் கொண்டு உங்களைப் பற்றி வசந்தா மூலம் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் உங்களது முகநூல் எழுத்துக்களை வாசிப்பதுண்டு என்றார். (முதல்  படத்தில்  புத்தகத்தை  மடியில் வைத்தபடி  அமர்ந்திருப்பவர்தான்கொடியாலம்  ரங்கசாமியின்  பேரன் ரங்கசாமி   எனக்கு  இடப்புறம்  வலது  கோடியில்  அமர்ந்திருப்பவர்  அவரது  மனைவி.)




வசந்தா தான் கொண்டு வந்திருந்த உப்புக் கணக்கு புத்தகத்தை கொடியாலம் ரங்கசாமியின் பேரன் திரு ரங்கசாமியிடம் கொடுத்தார். உப்பு சரித்திரத்தின் அங்கமான அந்த ஊரில் வைத்து அந்த மாமனிதரின் வழித்தோன்றலிடம் அப்புத்தகத்தைக் கொடுப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம். தன் தாத்தாவின் பங்காற்றலும் நிறைந்த அந்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் போது அந்த பேரனின் முகத்திலும் அவ்வளவு பெருமை.


நூற்று முப்பத்தேழாவது பக்கத்தை பிரித்து படித்தவர் கண்கள் ஒளிர்ந்தது. இப்போதைக்கு இங்கே நான்தான் கொடியாலம் ரங்கசாமி என்றார் சிரித்தபடி. சரித்திரக் கதைகளில் முதலாம் ராஜராஜன், இரண்டாம் ராஜராஜன் மூன்றாம் ராஜராஜன் என்று சொல்வார்கள். பரம்பரை பரம்பரையாக பெயர்களும் தொடரும். அது போல்தான் இங்கேயும் தொடர்கிறது. வாசுதேவ ஐயங்காரின் மகன் ரங்கசாமி அய்யாங்கார். ரங்கசாமி ஐயங்காரின் மகன் வாசுதேவன். அந்த வாசுதேவ ஐயங்காரின் மகன் இப்போதைய ரங்கசாமி ஐயங்கார். இவரது மகன் பெயர் வாசுதேவன்


கொடியாலத்தில் இருக்கும் கோயில் அவர்களது கோயில். ஒரு பெரிய வீடே கோவிலானாற்போல் இருக்கிறது. கருவறைக்கு மேலே விமானம். கருவறைக்கு முன்பு கொடிமரம். கொடிமரத்தின் உச்சியின் மேலே தேக்குமரக் கட்டைகள் பொருத்திய பண்டைய காலத்து சீலிங் தெரிகிறது.
மூலவர் சந்தான கோபாலன். தாயார் ருக்மிணியும் உடனுறைகிறாள். சற்று கீழே நவநீத கிருஷ்ணன். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும்.
நாங்கள் சென்ற பொது சேஷவாகனம் தயாராக இருந்தது வீதிஉலா செல்ல. உற்சவர் தகதகவென்று குட்டி குருவாயூரப்பனாக ஜொலிக்கிறார். கோயிலை ஒரு சுற்று சுற்றிய பிறகு வாசலில் நின்று நாயனக்காரர்கள் ஊதும் மகுடிக்கு உற்சவர் அசைந்தாடுகிறார். அந்நிகழ்வு முடிந்ததும் மண்டபம் கொண்டு செல்லப்படும் உற்சவர் திரைக்குப் பின்னே மறைகிறார்.




பின்னர்அரை மணி கழித்து அந்த ஆச்சர்யம் ஆரம்பிக்கிறது.


கழுத்தில் வீணையைக் கட்டித் தொங்க விட்டுக் கொண்டு நின்றபடி வீணை வாசித்து கூடவே தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலைப் பாடல்களை பாடவும் செய்கிறார்கள் இருவர் . ஒவ்வொரு பாடலும் முடிந்த பின் பின்னோக்கி ரெண்டடி நடந்து மீண்டும் வாசித்து பாடுகிறார்கள். நின்று வாசிப்பதே கடினம். அதோடு பாடவும் வேண்டுமானால் எவ்வளவு கடினம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேல் நீள்கிறது இந்நிகழ்வு. . உற்சவர் உள்ளே செல்ல இனிதே நிறைகிறது. உற்சவரைத் தூக்க ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்துதான் ஆட்கள் வருகிறார்கள். எல்லா பூஜா கர்மங்களும் முறைப்படி நடக்கிறது.



ரங்கசாமியவர்களின் குடும்பக் கோவில் என்பதால் பிரம்மோத்சவத்திற்கான முழுச் செலவும் அவர்களுடையதுதான். கோயிலில் உண்டியல் கிடையாது. கோவிலுக்கு எதிரே சத்திரம் போல் அவர்கள் வீடு. எத்தனை பேர் வந்தாலும் வாய்க்கு ருசியாய் எவ்வித கேடும் செய்யாத உணவு.
மொத்தத்தில் இது போல் ஒரு விழா இதுவரை கண்டதில்லை. பச்சைப் பசேல் கிராமம், பண்பு நிறைந்த மனிதர்கள். ராஜாஜியின் நண்பரும் சுதந்திர போராட்ட வீரருமான, பிரபல சத்தியாக்கிரகி ஒருவரின் வழித்தோன்றலுக்கு எனது உப்புக் கணக்கை கொடுக்க இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்றோ, நாவலில் எழுதிய சத்யாக்கிரக யாத்திரையின் முக்கியமான ஒரு இடத்திற்கு சென்று பார்ப்பேன் என்றோ நான் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இறையருளால் இது நிகழ்ந்ததாகவே நினைக்கிறேன். மனம் நிறைந்து விட்டது.

Wednesday, November 26, 2014

மூக்குத்தி - பகுதி - 2

மூக்குத்தி  - II

எனக்கு அப்போது ஆறேழு வயசிருக்கும்.  பூம்புகார் என்னும் படம்  வெளியான நேரம்.  என் அத்தை பெண்கள்,  என் பெரியக்கா எல்லோரும் கிளம்பும் போது   நானும் வருவேன் என்று உடும்புப் பிடியாய் சுகுணாவின் காலைக் கட்டிக் கொண்டேன்.  

நீ தூங்குவ அங்க வந்து  

மாட்டேன் நா வருவேன். 

சமத்தோல்யோ   நா வரச்சே நோக்கு முட்டாய்  வாங்கிண்டு வரேன்.  

வேண்டாம் நா வருவேன்.  நா அழுது ஆர்ப்பாட்டம் பண்ண,   வேறு வழியின்றி என்னை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.  இல்லா விட்டால் அவர்கள்  போவதும் கேட்டு விடுமே என்ற பயம்தான். 

சாந்தி தியேட்டர் என நினைக்கிறேன்,.  நான் சுகுணாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். சொன்னாற்போல் பாதிப் படத்தில் தூங்க ஆரம்பித்து விட்டேன். 

எவ்வளவு நேரம் தூங்கினேனோ   திடீரென்று ஏதோ பெரும் சப்தம் கேட்க  நான்  திடுக்கிட்டு எழுந்த வேகத்தில் என்ன நடந்ததோ   திரையில்  விரித்த கூந்தலும் விழித்த கண்களுமாய்   கையில் சிலம்போடு விஜயகுமாரி நின்றிருக்க,  இங்கே சுகுணா  மூக்கைப் பொத்தியபடி  என்னை முறைத்து பார்த்தபடி கண் கலங்க நின்றிருந்தாள்

விஜயகுமாரி ஆவேசமாக பேசிய பேச்சில் பயந்து போய்   நான் அலறிக் கொண்டு எழுந்த வேகத்தில் என் கை சுகுணாவின் மூக்கில்  வேகமாய் மோத   அவளது முக்குட்டி டைப் மூக்குத்தி  சதையைப் பிய்த்துக் கொண்டு தொங்க மூக்கிலிருந்து ரத்தமாய் வழிய  சுகுணா இன்னொரு கண்ணகியாய்  நின்றிருந்தால்.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.   

கடங்காரி   என்னடி பண்ணின?  என் அக்கா கத்த   அக்கம் பக்கம் பரபரக்க பிறகென்ன கர்ச்சீப்பை மூக்கில் அழுத்தி வைத்துக் கொண்டு   படம் முடிவதற்கு முன் என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.   வழி முழுக்க அவர்கள் திட்ட,  நான் அழ,   போனாப் போட்டும் விடுடி என்று சுகுணாவே சொல்ல,  நல்ல காலம் பெரிய ஆபத்தொன்றுமில்லை என்று மூக்கில் பாலை வார்த்தார் டாக்டர்.  

 கொஞ்ச நாளில் மூக்கு சரியாகி விட்டது.  அதற்குப் பிறகும் என்னைப்  பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொள்வாள் சுகுணா. இனிமே உன்னைக் கூட்டிண்டு சினிமா போறேனா பார் என்பாள். அதற்குப் பிறகு  அவளோடு  கபாலி தியேட்டரில் நான் பார்த்த படம் சிவந்த மண்.   நான்  நன்கு வளர்ந்து விட்டாலும் கூட,  நீ இந்த பக்கமவே  உக்கந்துக்கோடி தாயே என்று மூக்குத்தி இல்லாத,  தனது  இடப்பக்கம்தான் என்னை அமர்த்திக் கொண்டாள். 

இன்று வரை என்னால் மறக்க முடியாத சம்பவம் இது.  இப்போதும் பூம்புகார் படப்  பாட்டு கேட்டால் கூட அதை நினைத்து சிரிப்பேன். 
                                         ******************************
என் பத்து வயதில் நடந்த சம்பவம் இது.,   எண்ணை  தேய்த்து குளிப்பதற்காக  என் பெரியக்கா  தன மூக்குத்தியை  கழட்டி கூடத்தில் இருந்த சின்ன மர  ஷெல்பில்  வைக்க, அவள் அந்தப் பக்கம் போனதும் நான் அதை எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு விஷமத்தனம் பண்ணுவதாக நினைத்து அதை  ஒரு சின்ன டப்பியில் போட்டு வேறொரு இடத்தில் மறைத்து வைத்தேன்.   நான் ஸ்கூலுக்கும் போயாகி விட்டது.


சாயங்காலம் வரும் போது வீடு களேபாரமாக இருந்தது.   என்னாச்சு?   நான் மெதுவாக என் சின்னக்காவிடம் கேட்க   நீ பாத்தயாடி அவ மூக்குத்திய என்றாள்.   எனக்கு சுரீரென்றிருந்தது.   என் அப்பா என் அம்மாவை உச்சஸ்தாயியில்  திட்டிக் கொண்டிருந்தார்.  சவத்தெழவுகள்!, கொரங்கெழவுகள்  கொஞ்சமானும் பொறுப்பிருக்கா பாரு !   எனக்கு பயத்தில் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது.  நான்தான் எடுத்து வைத்தேன் என்று எப்படி சொல்ல? அதே சமயம் இன்னொரு பிரச்சனையும் கூட.  நான் அதை ஒரு டப்பியில் போட்டது மட்டும் நினைவிருக்கிறது. எங்கே வைத்தேன் என்பது நினைவுக்கு வரவில்லை. தவிர மொத்த வீடும்  கலைந்து கிடந்தது.   எனக்குத் தெரியாது  நான் அவசரமாய் தலையாட்டினேன். 

 நானும் எல்லோரோடும் சேர்ந்து மூக்குத்தியைத் தேடினேன்.   டாய்லெட் குழியில்கூட கொட்டாங்குச்சி கரண்டி கொண்டு தேடினாள்  வேலைக்காரி. அன்று முழுக்க என் அம்மாவும் அக்காவும் சாப்பிடாமல் அழுது சிவந்த மூக்கோடு   அசோக வனத்து சீதை மாதிரி அடுக்களையில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தார்கள்.   

எனக்கு மட்டும் குறுகுறுப்பு.  மூக்குத்திய   எடுத்தேன்....... டப்பில போட்டேன்.   டப்பிய   எங்க வெச்சேன்?   நடுவுல கொஞ்சம் என் பக்கங்கள் காணாமல் போனது அக்காவின் துரதிருஷ்டம்.     அப்படி ஒரு ஞாபக மறதி  உண்டு எனக்கு.  (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்?)   ஒரு வாரம் என் அப்பாவின் கோவத்தோடு நகர்ந்தது. வீட்டில் யாரும் யாரோடும் பேசுவதற்கே பயந்தார்கள்.     துணி மடித்து வைக்கும்  ஷெல்பில்  நான்சட்டை ஒன்று தேடுவதற்காக  முனைந்த போது என் கையில் தட்டுப் பட்டது மூக்குத்தி டப்பி. 
சந்தோஷத்தோடு பயமும் ஏற்பட்டது. நான்தான் வைத்தேன் என்பது தெரிந்தால்  முதுகு பழுத்து விடும்.  

 நான் மெல்ல டப்பியிலிருந்து மூக்குத்தியை எடுத்து டப்பியை மறைத்து விட்டேன்.  மூக்குத்தியைக் கீழே நழுவ விட்டேன். பிறகு கண்கள் பளிச்சிட அய்   மூக்குத்தி என்று குரல் கொடுத்தேன். மொத்த வீடும் பரபரப்பாய்  வந்தது. என் அக்காவின் முகத்தில் சந்தோஷம்.    இருந்தாலும் இதெப்டி இங்க வந்தது என்றாள்.  என்னைக் கேட்டா?    நான் சமாளித்தேன்.  எப்படியோ மூக்குத்தி கிடைத்து விட்ட நிம்மதியில் என் அப்பாவின் கோபமும் குறைந்தது. இதெல்லாம் அறியாத வயதில் செய்யும் குறும்புகள்.  இந்த பதிவைப் படித்தால் என் அக்காவுக்கும் அம்மாவுக்கும் மூக்குத்தி மர்மம் விளங்கும்.  சிரிப்பார்கள் என நம்புகிறேன். . 

                                                      ***********************

இப்போதெல்லாம்  இளசுகள் மூக்கு குத்திக் கொள்ள விரும்புவதில்லை.  என் பெண்கள் மூக்கு குத்திக் கொள்ளவில்லை.   என் பக்கத்து வீட்டு  சாஸ்திரிகள் வீட்டு பெண் வித்யாவிடம் ஒரு நாள் கேட்டது. அதற்கு நாலு வயசிலேயே மூக்கு குத்தியாகி விட்டது. 

"வித்யாக்கா  நீ ஏன் மூக்கு குத்திக்கல?"

"எதுக்குடி குத்திக்கணும்?" 

"அப்பறம் உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா?" 

                                                           ***********************

கவிதாவின்  மூக்கு புரொபைலில் அழகாக இருக்கும்.    அவளுக்கு மூக்கு குத்தினால்  அழகாயிருக்கும்.   அவள் நா குத்திக்க மாட்டேன் எனறாள். ஆனால் கல்யாணத்தின் போது அவள் மூக்கில் ஒற்றை கல் வைத்த ஒட்டும் பொட்டு ஒன்று ஒட்டி விட்ட போது அவளுக்கு அது வெகு அழகாயிருந்தது.   போட்டோவில் மூக்கு குத்தினாற்  போலவே இருக்கும்.  

மூக்குத்தி பற்றி ஆராய்ந்தால் நிறைய தகவல்கள்  இருக்கிறது.  அது நரம்பைத் தூண்டி விடும்.    தங்க மூக்குத்தி உடலில் உள்ள வெப்பத்தையும் நரம்பு மண்டலத்தில் உள்ள  கெட்ட வாயுவையும்  வெளியேற்றும். விஞ்ஞான  ரீதியாய் நிறைய நன்மைகளை நமக்கு தருகிறது. மூக்கு குத்தின பெண்களை யாராலும் மெஸ்மரைஸ்  பண்ண முடியாதாம்.   பொதுவாக வயதுக்கு வந்த பின் தான் மூக்கு குத்த வேண்டுமாம். ஏனெனில் பருவமடைந்த பெண்களுக்கு கபாலத்தில்  ஒரு வித வாயு சேருமாம்.  மூக்கில் ஒரு துளை  போட்டு மூக்குத்தி அணிந்தால்  அந்த வாயு வெளியேறுமாம்.

தவிர ஒற்றைத் தலைவலி, மனத்தடுமாற்றம் இதையும் குறைக்கிறதாம் மூக்குத்தி அணிவது. மூக்குத்தியை வலது மூக்கில் அணிவதை விட இடது பக்கம் அணிவதுதான் நல்லதாம். பெண்களுக்கு இடப்பக்கமும் ஆண்களுக்கு வலப்பக்கமும் இயற்கையிலேயே பலம் மிகுந்ததாக இருப்பதுதான் இதற்கு காரணம். அர்த்தநாரீஸ்வர  தோற்றத்தில் உமைக்கு இடப்பாகம்தான் தந்திருக்கிறான் ஈசன் என்பதில் நிறைய அர்த்தம் இருக்கிறது.

மூக்குத்தி என்பதே 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்த அணிகலன் என்கிறது விக்கிபீடியா. அதற்கு முந்தைய நூற்றாண்டு சிற்பங்களில் மூக்குத்தி கிடையாதாம்.   தமிழர் அணிகலன்களிலும்  காதணி, கழுத்தணி, இடுப்பணி, காலணி,  தலையணி  என்று  உள்ளதே தவிர மூக்கணி  பற்றி சொல்லப் படவில்லை.   எனவே அது பிற்பாடு   அதன் நன்மை கண்டறியப்பட்ட பின் தோன்றிய நாகரிகமாக இருக்கலாம்.    

வட இந்தியாவில் மூக்குத்தியை "நத்"  என்கிறார்கள் பொதுவாக.  ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது மூக்குத்திக்கு.   விதம் விதமாய் நிறைய வகை மூக்குத்திகள் இருக்கின்றன.  "எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு"  என்று  எதிர் நீச்சலில் சௌகார் பாடுவது  போல் நிறைய பேருக்கு அது அழகுதான்.  ஒரு கல் மேலேயும்  இரண்டு முதல் மூன்று கற்கள் அதற்கு கீழேயும் வைத்த முக்குட்டி,  நாலு கல் மூக்குத்தி   என்றும் உண்டு. வட்டமாய் வைத்த கற்களும் உண்டு.   மூக்கு வளையமும்  இப்போது நாகரீகம்.  வட இந்தியாவில் வளையத்திலிருந்து காது வரை ஒரு செயின் கோர்க்கப் பட்டு நெற்றிப் பட்டை நகையோடு இணைந்திருக்கும்.    பழங்குடி மக்களின் மூக்குத்தி  அவர்களைப் போலவே  பழமையின் சின்னமாக இருக்கும்.

ஆண்  குழந்தைகளுக்குக் கூட மூக்கு குத்தும் வழக்கம் நிறைய ஊர்களில் இருந்திருக்கிறது.  நரிக்குறவ ஆண்கள் மூக்கில் வளையம் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் நான்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் போட்டி நடனத்தில் பத்மினியின் அந்த அழகு மூக்குத்தி அவர் முகத்தில் அத்தனை அழகாயிருக்கும்.  தில்லானா  மோகனாம்பாளில் மூக்குத்தி வளயமும், புல்லாக்குமாய்  அழகு சொட்டுவார். 

சங்கராபரணம்  படத்தில் மஞ்சு பார்கவி  அணிந்திருந்த பெரிய முக்கோணம் போன்ற கல் வைத்த மூக்குத்தியில் அவர் வெகு அழகாய்த் தெரிவார்.   "வேதம் புதிது"  படத்தில் அமலாவின் அழகு மூக்கில் அந்த பேசரி அவாளவு அழகாய் இருக்கும்.  ஸ்ரீதேவி மூக்குத்தி பற்றி சொல்லவே வேண்டாம்.   அந்த மூக்குத்திக்கே அவர் பேர் வைக்கப் பட்ட அளவுக்கு பிரபலமாயிற்று.

சிகப்பு கல்லு மூக்குத்தி,    மாணிக்க மூக்குத்தி,  மூக்குத்தி பூ மேலே என்று   சினிமா பாடல்களும் மூக்குத்தி பற்றி இருக்கின்றன.

கீழே உள்ள படங்களை நிதானமாக ரசித்துப் பாருங்கள்.  எத்தனை வகை மூக்குத்திகள்!.  இன்னும் கூட இருக்கின்றன.   கடைசி படம் "பொ ட்டு" மூக் குத்தியோடு  கவிதா 

இருந்தாலும்  மூக்குத்தி என்றால் உடனே மனக்கண்ணில் தோன்றுவது தெய்வீகமான இரண்டு முகங்கள்தான்.  ஒன்று கன்யாகுமரி  பகவதி அம்மன், மற்றொருவர்   எம்.எஸ். சுப்புலட்சுமி.  அந்த முகங்களின் தெய்வீகத்தால்  அந்த மூக்குத்திகள்  ஜொலிக்கிறதா அல்லது அந்த மூக்குத்தியின் அபூர்வ வைரங்களால் அவர்கள் முகம் ஜொலிக்கிறதா என்பது புரியாத புதிர்.












Saturday, February 18, 2012

விருது வாங்கலையோ விருது.!


நேற்று இரவு ஒன்பதரை மணிக்கு கற்றலும் கேட்டாலும் ராஜி என் கைபேசிக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை இன்று காலை எட்டு மணிக்குதான் பார்த்தேன். ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி மேற்படி விருதுகளை எனக்கு அளித்திருப்பதாக ராஜி செல் போனிலும் அழைத்து சொல்ல ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவுப் பக்கம வந்திருக்கிறேன். இரண்டு மாதமாய் நான் பதிவு எழுதாத கரணம் குறித்து ஒரு பதிவே எழுதி விடுகிறேன். என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.


இனி எனக்குப் பிடித்த விஷயங்கள்.

இசை மழை எந்நேரமும் வேண்டும். (கர்நாடக இசை, மலையாள திரை இசை, பழைய தமிழ் திரைப் பாடல்கள்)

நிஜ மழையும் பிடிக்கும். கொட்டும் மழை, மெலிதாய் குழலிசை, கையில் தி.ஜா.வின் புத்தகம் வேறென்ன சுகம் வேண்டும்?

குழந்தைகள். இந்த விஷயத்தில் நான் நேருவுக்கு அக்கா. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எனக்குள் ரோஜாக்கள் மலரும். என் வீட்டின் இரட்டை ரோஜாக்கள்தான் இப்போது என் சொர்க்கம்.

நல்ல திரைப் படங்கள் - மொழி பேதமின்றி நல்ல படங்களை தேடித் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த படம் "Pursuit of Happiness"

நட்பு - நான் மிகவும் மதிப்பளிக்கும் விஷயம் நட்பு. நான் மிக உண்மையான நட்பை கொடுப்பவள். எதிர்பார்க்கிறவள். என் நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்பாகவே இருக்கும். என்னுடைய ஒவ்வொரு நட்பும் நண்பர்களும் உயர்ந்தவை. என் குழந்தைப் பருவத்து தோழியோடு இன்றளவும் இறுக்கமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து உறவுகளுக்குள்ளும் உறவு மீறிய நட்பிருத்தல் அவசியம் என எண்ணுபவள்.


எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் படி இந்த விருதுத் திருவிழா பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இதுவும் ஒரு சந்தோஷம்தான். காக்கைக் கூட்டமாய் பகிர்ந்து கொள்வோமே.

நான் விருதளிக்கவிழைவது.


கோபி ராமமூர்த்தி. http://ramamoorthygopi.blogspot.in/2012/02/2.html





இவர்கள் எல்லோரும் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களா எனத் தெரியாது.
இருந்தாலும் நானும் அளிக்கிறேன்.

இந்த விருதுத் திருவிழாவில் அதிகபட்ச விருதுகள் பெறுபவருக்கு இப்பவே எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

மீண்டும என்னை ஒரு அவசர பதிவெழுத வைத்த ஆரண்ய நிவாசிற்கு எனது நன்றி.

Friday, December 9, 2011

ஆஹா, மெல்ல நட மெல்ல நட ...

சென்ற சனிக்கிழமைக்கும் முந்தைய சனிக்கிழமை காலை ஒரு ஒன்பதரை மணி இருக்கும். மைலாப்பூர் வடக்கு மாடவீதியில் சரவணபவன் அருகில் சாலையைக் கடக்கலாம் என எண்ணி இரண்டடி எடுத்து வைத்திருப்பேன். ஒரு வினாடி கும்மிருட்டு. ஒரு ஸ்கூட்டர் என்னை இடித்த வேகத்தில் நான் அப்படியே உட்கார்ந்த வாக்கில் கீழே விழுந்திருப்பது அடுத்த வினாடியில்தான் எனக்குப்புரிந்தது. என் தவறா ஸ்கூட்டர் ஒட்டி வந்த இளைஞனின் தவறா தெரியவில்லை. நான் தடுமாறி எழுந்து நின்றேன். பார்த்து வர வேணாமா? இது அந்த இளைஞனின் கேள்வி. நான் நடக்கலாம் என எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தால் இடது காலை ஊன்றவே முடியவில்லை. வலி என்னைப் பிளந்தது. “பார்த்துப் போங்க என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். நான் நடக்க முடியாமல் திகைத்து நின்றேன். ஒரு பெண் உதவிக்கு வர, ஆட்டோ ஒன்று பிடித்து மிகுந்த சிரமத்தோடு எப்படியோ ஏறிக் கொண்டேன். உடனே என் பெரிய பெண் வித்யாவுடன் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.

அவள் கீழேயே காத்திருந்தாள. ஆட்டோவிலிருந்து இறங்குவது அதை விட சவாலாயிருந்தது. என் பெண் பயந்து விட்டாள் என்னை காம்பவுண்டுக்குள் ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு மாடிக்குப் போனாள். குழந்தைகள் இருவரையும் சர்வன்ட்டின் பொறுப்பில் விட்டு விட்டு பெண்ணும் மருமகனும் கீழே வந்தார்கள். மறுபடியும் கார் ஏறும படலம். மலர் மருத்துவமனையில் எனக்காக ஒரு சக்கர நாற்காலி காத்திருந்தது. எக்ஸ்ரே பெஞ்ச்சில் ஏறிப் படுப்பதற்குள் வலி பிராணன் போயிற்று.

மனசு குருவாயூரப்பனுடன் தர்க்கம் செய்தது. “இடிச்சு கீழ தள்ளியாச்சு. சந்தோஷம்தானே? அதோட நிறுத்திக்கோ சொல்லிட்டேன். எலும்பு கிலும்பு ஏதாவது முறிஞ்சிருந்துதோ படவா உன்னை சும்மா விட மாட்டேன். அப்டி எதாவது இருந்தா பாவம் என் பொண்ணு கைக்குழந்தைகளோட என்னையும் எப்டி பார்த்துப்பா? அவளை நீ கஷ்டப் படுத்தப்படாது சொல்லிட்டேன்.

சற்று நேரத்தில் என் பெண் வந்தாள். “அம்மா பிராக்ச்சர் இல்ல. லிகமென்ட் டேர் ஆகியிருக்கு. பெல்விக் போன்ல லேசா கிராக் விட்ருக்கு. தானா சரியாய்டும்னார் டாக்டர் என்றாள் அந்த வரை தலைப்பாகையோடு போயிற்று என்றாலும் வலி பெரும் பிரச்சனையாக இருந்தது. இடது காலை ஊனவே முடியவில்லை என்றால் எப்படி நடப்பது? வாக்கரில் கூட நடப்பது சிரமமாகவே இருந்தது. வலி தெரியாமலிருக்க ஊசியும் மாத்திரைகளும் கொடுத்தார்கள். வீடு வந்தால் அங்கே மாற்றொரு சோதனை. லிப்ட் இயங்கவில்லை. மழை வேறு கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய ஆலோசனையே நடந்தது. இறுதியில் சேரில் உட்கார வைத்து தூக்கிச் சென்று விடுவதென்று முடிவாயிற்று.

கார் டிரைவரும் வாச்மேனும் மாடிப்படி வரை தூக்கி வந்து சற்று மூச்சு வாங்குவதற்கு நிற்க என் வில் பவர் விழித்துக் கொண்டது.

“நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிரித்தார்கள். முடிந்தால் ஏறு என்றாள் பெண். கீழ்ப் படியில் உட்கார்ந்தேன். அப்படியே மெது மெதுவாக பின்பக்கமாகவே ஒவ்வொரு படியாக உட்கார்ந்தபடியே ஏறினேன். இனி படிகள் திரும்பும். மறுபடியும் சேர் பயணம். இதுவே அந்தக் காலத்து ராஜ ராணி கதைகளில் வரும் பல்லாக்காக இருந்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். (குசும்புதான்)

இந்த லிகமென்ட் டேர் எப்போது சரியாகும் எப்போது நான் நன்றாக நடப்பேன் என்கிற விக்ரமாதித்யன் கேள்வியோடு படுக்கையில் அமர்ந்தேன். “கழுத அது நடக்கறப்போ நடந்துட்டு போகட்டும். அது வரை இந்த அனுபவத்தையும் என்ஜாய் பண்ணி விட்டு போவோமே. மனம் குதூகலத்திற்கு தயாராயிற்று.

ஆறு வருடம் முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது உபயோகித்த வாக்கர் புத்தம் புது பெயின்ட் வாசத்தோடு வந்து சேர்ந்தது. பத்து மாத இரட்டைப் பேரக்குழந்தைகள் வாக்கரில் நான் நடப்பதை கண்ணகலப் பார்த்தார்கள். நடக்க முடியவில்லையே தவிர உட்கார்ந்தபடி என்னால் என்னென்ன செய்ய முடியுமோ செய்து கொடுத்தேன்.

என் உலகம் என் பேரக்குழந்தைகளிடம் ஒடுங்கியது. அவர்களும் இப்போதுதான் எதையாவது பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பேரக் குழந்தைகளோடுநானும் நடை பயின்று கொண்டிருக்கிறேன். எப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது! நான் வாக்கர் பிடித்து நடக்கத் துவங்கினால் போதும் ஆளுக்கொரு திசையிலிருந்து தவழ்ந்தோடி வந்து வாக்கரின் இரு பக்கத்தையும் பிடித்துக் கொண்டு நின்று விடுவார்கள்.

வாக்கரில் அழுத்தம் கொடுத்து நடக்கும் போது விலாப் பக்கம் வலிப்பதால் நேற்று வாக்கர் இல்லாமல் சுவற்றைப் பிடித்தபடி கால்களைத் தரையில் இப்படியும் அப்படியுமாய் திருப்பியபடி நான் நடந்தது என் பேரக் குழந்தைகளுக்கு நாட்டியமாடுவது போல் தோன்றியது போலும் அப்படி ஒரு சிரிப்பு இருவருக்கும். அந்த சிரிப்பில் வலி போயே போச் என்பது போலிருந்தது. .

இந்த பதினைந்து நாளில் நானுமே பாதி குழந்தையாகி விட்டேன் எனலாம்.

குழந்தைகள் கேட்பதற்க்காக போடப்படும் நர்சரி ரைம்ஸ் எல்லாம் இப்போது மனப்பாடம். படிக்கிற காலத்தில் ஒன்று கூட உருப்படியாய் சொன்னதில்லை. எங்கே அந்த என் ஒன்றாம் கிளாஸ் மிஸ்? இப்போது வந்து கேட்கட்டும். பஸ்ட் மார்க் எனக்குத்தான் நிச்சயம்..

இதோ பதினைந்து நாட்கள் ஓடியே போய் விட்டது. இன்டர்நெட்டில் லிகமென்ட் டேர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இதில் மூன்று நிலை உண்டாம். முதல்நிலை சாதாரணமானது. நான்கைந்து நாளில் சரியாகி விடும். இரண்டாம் நிலை ஒன்றிலிருந்து இரண்டு மாதம் வரை ஆகலாம். மூன்றாம் நிலைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. ஆக என்னுடையது இரண்டாம் நிலை என்று தெரிந்து கொண்டேன்.

இது இறைவன் எனக்குக் கொடுத்திருக்கும் கட்டாய தற்காலிக ஓய்வு. அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும்தான் நடக்கவில்லையே தவிர மற்றபடி எனக்கு எல்லாம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. வேளா வேளைக்கு என் பெண் சுடச் சுட சாப்பிடக் கையில் கொண்டு வந்து கொடுக்கிறாள். அனுபவி ராணி அனுபவி! கால் சரியானதும் எந்த மலை ஏறலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் மலை ஏறும் நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என் பாலிசி நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும். எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும்.

இது வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே. சாலையில் நடக்கும்போது கவனத்துடன் நடக்க வேண்டும் என்று சொல்லவே எழுதியுள்ளேன்.

தினமும் என் நலம் விசாரிக்கும் “கற்றலும் கேட்டலும் ராஜிக்கும், ராஜி மூலம் விஷயம் தெரிந்து என்னோடு பேசிய கோபி ராமமூர்த்திக்கும் என் நன்றி.