Showing posts with label கார்கில் வார் ஆதர்ஷ் ஊழல். Show all posts
Showing posts with label கார்கில் வார் ஆதர்ஷ் ஊழல். Show all posts

Sunday, November 28, 2010

தாய் மண்ணே வணக்கம்

சுற்றிலும் வெள்ளிப் பனி மலைகள்
சல சலவென ஓடும் நதிகள்
மனிதர்களில்லாத உயரத்தில்
பிராண வாயுவும் கூட குறைவாகவே
உள்ள இடத்தில் நான் மட்டும்
தனித்திருக்கிறேன், விழித்திருக்கிறேன்,
பசித்திருக்கிறேன், உங்களைப் பாதுகாக்க.


என் குடி நீர் வாயருகில் செல்வதற்கு முன்
உறைந்து விடும். என் உணவில் இரு சுவைதான்
ரொட்டியும் பருப்பும் மட்டுமே.
என்னை மகிழ்விக்க அங்கே எதுவுமில்லை
என் குடும்பம் புகைப் படமாய் என் பர்சில்.
என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீர்ந்து பல நாளாகிறது.
என் பொழுதுபோக்கு என் வீட்டிலிருந்து
எழுதப்பட்ட கடிதங்களே.
என் குழந்தையின் அசைவும் அழுகையும்
சிரிப்பும் எனக்குள் நான் சேமித்து
வைத்திருக்கும் சக்தி.

ஹோவென கூச்சலிடும் பேய்க் காற்றும்
சுள்ளென தசைச் சுடும் சூரியனும்
ஊசியாய் தரையிறங்கும் மழையுமாய்
சட்சட்டென பருவநிலை மாறினாலும்
என் பணி விழித்திருப்பதே எந்நேரமும்.
மாசற்ற வானில் கோடிகோடியாய்
மின்னும் நட்சத்திரங்களே உற்ற துணையாய்
என் இரவுகள் கரையும்.

எந்நேரமும் எமனை முதுகில் சுமந்து செல்லும்
நானும் இந்திய அரசு ஊழியன்தான்.
இந்தியாவைக் காக்கும் அரசு ஊழியன்.
எனது ஒவ்வொரு விடியலுமே நிச்சயமற்ற பிச்சைதான்
இருப்பினும் தினமும் நான் உற்சாகமாகவே
புதிதாய்ப் பிறக்கிறேன்.

எங்கள் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில்
வீர மரணம் அடைந்திருக்கிறார்கள்.
கார்கில் போரில் என்னுயிர்த் தோழனின் மரணம்
கண் முன்னே கண்டவன் நான்.

எங்கள் சாமி இந்தியத் தாய்தான்
எங்கள் மந்திரம் தாய் மண்ணே வணக்கம்தான்.

நா செத்துட்டா அழக்கூடாது
சல்யுட் அடித்து கர்வப்படனும் சரியா?
எனக்குப் பிறகு நீ அனாதையில்லை
என் சாமி உன்னை கை விட்டு விடாது

இது என் மனைவிக்கு இரு மாதம் முன்பு
நான் அனுப்பிய கடிதம்.

என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீருவதற்கு முன்
நான் கேட்ட கடைசி செய்தி கார்கில் வீட்டு
மனைகள் பற்றிய ஊழல்தான்.
செத்தவன் பேரைச் சொல்லி யாராரோ
அபகரித்திருக்கிறார்களே!
என்ன கொடுமை ஐயா இது?

நாளை என் குடும்பத்திற்கும்
இதே நிலைதானா? இதற்காகவா
இங்கே நான் தனித்திருக்கிறேன்,
விழித்திருக்கிறேன், பசித்திருக்கிறேன்?

பிள்ளைக்கறி தின்னும் இந்த
காட்டு மிராண்டிகளையுமா பெற்றிருக்கிறாள்
என் இந்திய அன்னை?

உண்மையில் யாரைக் காப்பாற்றிக்
கொண்டிருக்கிறேன் நான் ?

தேசத் துரோகிகள் உள்ளேயும் இருக்கிறார்கள்
என் துப்பாக்கி முனை உட்புறமாய் திரும்பி விடுமோ ?
என் கரம் நடுங்குகிறது, இன்னொரு விடுதலைப்போர்
வேண்டும் அவசியம், நம்மை நம்மிடமிருந்து
காப்பாற்றிக் கொள்ள.

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி- கிளியே
வாய் சொல்லில் வீரரடி!