Thursday, April 15, 2010

நானும் என் வனமும்

இன்றைக்குப் போல் அன்றைக்கு புத்தகச் சுமையோ, கல்விச் சுமையோ அதிகமில்லை. விளையாடுவதற்கும் வாசிப்பதற்கும் வேண்டிய நேரமிருந்தது. பதினான்கிலிருந்து இருபத்திமூன்று வயது வரையான ஒன்பதாண்டுகாலம் என் வாசிப்பின் பொற்காலம். என் கதை ருசி மாறிக் கொண்டேயிருந்தது. ஒரு சமயம் சரித்திரக் கதைகளின் பின்னே பைத்தியமாய் அலைந்தேன். கல்கியும், சாண்டில்யனும் அகிலனும், என்னைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றார்கள். என் கனவுகள் முழுவதும் குளம்பொலியும் வாட்களின் உரசல்களும் காதலின் வண்ணங்களும் நிரம்பியிருந்தன. கண்ணாடியில் நான் யவன ராணியாகவும் வானதியாகவும், குந்தவையாகவும் சிவகாமியாகவும்
பார்த்திபன் மகளாகவும் இன்னும் ஏதேதோ இளவரசிகளாகவும் தெரிந்தேன்.
எழுத்துலகம் என்பது மிக மிக அழகான, அடர்த்தியான ஒரு ஆரண்யம். அந்த வனத்தில் பற்பல பிரும்மாக்கள் தங்கள் நினைவாக அதியற்புதமான விருட்சங்களை விளைவித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு அதிசய மூலிகை. அந்த விருட்சங்களின் பெயர்கள் எல்லாம் சக்தி வாய்ந்தவை. நான் எப்போதும் உச்சரிக்கும் மந்திரங்கள். முழு நிலா, முள்ளும் மலரும், கடல் புறா, யவன ராணி, பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, பாற்கடல், அலையோசை, பொன்விலங்கு, குறிஞ்சிமலர், சித்திரப்பாவை, சிவகாமியின் சபதம், துப்பறியும் சாம்பு, மிஸ் ஜானகி, தில்லானா மோகனாம்பாள், சிலநேரங்களில் சில மனிதர்கள், ஜய ஜய சங்கர , உன்னைப் போல் ஒருவன், அரக்கு மாளிகை, இத்யாதி இத்யாதி என்று நீண்டு கொண்டே போகும். என்னடா தி.ஜா. வை விட்டு விட்டாளே என்று தோன்றுகிறதா? இந்த மூலிகை வனத்தில் என் பங்குக்கு நானும் சில விதைகளைத் தூவியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணமே அவர்தானே! என் பதினெட்டாவது வயதில் எனது நூலகத்தில் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. பெயரே வித்யாசமாய் இருந்தது. எழுத்தாளரும் எனக்கு புதியவர். படித்துதான் பார்க்கலாமே என்று வீட்டிற்கு எடுத்து வந்தேன். அந்த எழுத்து என்னைப் புரட்டிப் போடப் போகிறதென்று எனக்கு அப்போது தெரியாது. அந்த எழுத்துக்களின் வீரியமும், கூர்மையும் எனக்குப் புதுமையாயிருந்தது. ஸ்தம்பிக்க வைத்தது. மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது. அந்த புத்தகம் "அம்மா வந்தாள்". அவரை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் எதோ ஒரு சக்தியும் புத்துணர்வும் எனக்குக் கிடைத்தது. அதுவும் ஒரு போதைதான். அவரது கதை வாசத்திற்கு இன்று வரை நான் அடிமை. எனக்குள் இன்னும் அந்த மோக முள் குத்திக் கொண்டேயிருக்கிறது. செம்பருத்தி வாசம் வீசிக்கொண்டிருக்கிறது. அந்த நளபாகம், வேறு எவராலும் சமைக்க முடியாத விருந்து. உயிர்த்தேன் இன்னும் என் தொண்டைக்குள் காந்திக்கொண்டிருக்கிறது. நானும் எழுத வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது அவரை வாசிக்கத் துவங்கிய பிறகுதான்.

2 comments:

Vidya Pinto said...

I am so happy that you started blogging ma. All your wonderful childhood memories and intellectual conversations you had with me will be in digital form for all to read and enjoy.

Anonymous said...

I came by this blog page purely by chance but was surprised to find that the author's choice of books in her young age was more or less than the same as mine. As a matter of fact, the novel "Muzhu Nila" by Uma Chandran was my all time favourite and its main character Uppili has a permanenet place in my heart. Good to know that my tastes are shared by others also.