Monday, December 22, 2014

நம்பிக்கையே அமிர்தம்.

ஒவ்வொரு டிசம்பர் சீசன் வரும்போதும் எனக்கு என் சின்னக்காவுடைய   மாப்பிள்ளையின் நினைவு வரும்.  அவர் ஒரு கடம் மற்றும் மிருதங்க வித்வான்.  இந்த வாத்தியங்களை வாசிப்பவருக்கு விரல்கள் எவ்வளவு முக்கியம் என்று சொல்லத் தேவையில்லை.  சும்மார் பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பு என் அக்கா பெண்,   தன பிறந்த குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார இவர் வாகனம் ஒட்டி இருக்கிறார்.  லஸ்  சர்ச் சாலையில் எதிரில் வந்த டெம்போ டிராவலர் இவர் மீது  லேசாய் மோதிய வேகத்தில்  வண்டியின் handle bar ஐ பிடித்திருந்த இவரது இரு கைகளின் எட்டு விரல்களிலும்  அவை மடங்கும் இடத்திலுள்ள மூட்டுகள் நொறுங்கிப் போயிற்று.    நல்ல காலம் குழந்தைக்கும் என் அக்க பெண்ணுக்கும் ஒன்றும் இல்லை. விரல்களால்தான் வாழ்வே என்ற நிலையில் இரண்டு கைகளிலும் விரல்கள்  இப்படி ஆகிவிட  என் அக்காவும் அவள்   பெண்ணும் மனம் நொறுங்கிப் போனார்கள்.   ஆனால் என் அக்காவின்  மாப்பிள்ளை மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்.

டாக்டர் சுப்பிரமணியம் மட்டும் சளைக்காமல்,  உன்னை சரிப்படுத்தி காட்டுகிறேன் என்று  விரல் மூட்டுகளில் மிகச் சிறிய அளவில் அவை அசையும் வண்ணம்  அதற்குத் தகுந்தார்போன்ற பிளேட் பொருத்தினார்.  வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை. எட்டு விரல்களிலும் அறுவை சிகிச்சை நடந்தது.    அடுத்தவர் உதவியின்றி எதுவும் முடியாது.  ஆபரேஷன் ஆனதும்  அடுத்த நிமிடம் சரியாகி விடுமா ஏன்ன?  அதற்குப் பிறகு அந்த விரல்கள் அசைய வேண்டுமே. physiotherapy  ஆரம்பித்தது.   ஆரம்பத்தில் ஒரு விரலும் அசையவில்லை.  அனால் இவர் விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையை இழக்காமல்  ஒரு ரப்பர் பந்தை கையில் வைத்து மெல்ல பிசைந்து பிசைந்து  அவைகளில் அசைவைக் கொண்டு வந்தார்.    அப்போதும் அவரால் கடம் வாசிக்க முடியுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அவராவது விடுவதாவது.  தன்னம்பிக்கையோடு மிகுந்த இறை பக்தியும் கொண்டவர் அவர்.    கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் கடுமையான  முயற்சி செய்து ஒரு வழியாக  மீண்டும் கடம் வாசிக்க ஆரம்பித்து விட்டார்.  இந்த சீசனிலும் கூட அவரது பங்களிப்பு இருக்கிறது.    இருங்கள், இதோடு முடிந்து விடவில்லை விஷயம்.


அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து அதற்கு அதற்கு ஒரு வயசாகும் போது அவர்  குழந்தையின் ஆயுஷோமத்திற்கு அழைப்பதற்காக  என் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போதுதான் நான்  கைலாஷ் மானசரோவர் யாத்திரை முடித்து திரும்பியிருந்தேன்.  அவருக்கு மானசரோவர் தீர்த்தமும் அங்கு நடத்திய ஹோம பிரசாதங்களும் கொடுத்து  பேசிக்கொண்டிருந்தேன்.

ஆயுஷோமத்திற்கு இரண்டு நாள் முன்பு என் அக்கா  எனக்கு போன்  பண்ணினாள்.   ஆயுஷ் ஹோமம் கேன்சல்  ஆகியிருப்பதாக சொன்னவளின் குரலில் துக்கம் தெரிய நான் என்ன ஏதென்று விசாரித்தேன். அவள் உடைந்து அழுதாள்.   மாப்பிள்ளைக்கு உடம்பு சரியில்ல.  அட்மிட் பண்ணி இருக்கு. ஆபரேஷன் பண்ணப் போறா என்றாள்   என்னடி பிரச்சனை நன்னாத்தானே இருந்தார் என்றேன்.   "அவருக்கு...    "   அவள் மேலும் அழுதாள். அழுகையினூடே திக்கித் திக்கி அவருக்கு கேன்ஸராம்   என்றாள். அவ்ளோதானே  சரியாப் போய்டப் போறது. எவ்ளவோ ட்ரீட்மென்ட் வந்தாச்சு இதுக்கு இப்போ என்றேன்.

என் நினைப்பு பூராவும் அங்குதான் இருந்தது. மிருத்யஞ்ச மந்திரத்தை இடை விடாமல் சொல்லிக் கொண்டிருந்தேன்.  என் வீட்டு கிருஷ்ணனிடம் சண்டை போட்டேன்.  போன வாரம் இதோ உன் முன்னால்  இங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த மனுஷனோடு இப்படி நீ விளையாடலாமா?   நீ என்ன செய்வாயோ தெரியாது  அவர் நல்லபடியாக குணமடைந்து இங்கே வந்து இதே இடத்தில்  உன் முன்னால் மீண்டும்  உட்கார்ந்து என்னோடு பேச வேண்டும். இது வேண்டுதல் எல்லாம் இல்லை. என் அன்புக் கட்டளை என்று கெஞ்சினேன்.   கிட்டத்தட்ட பதிமூன்று  மணிநேரம்  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து  முடிந்தது.     நான் தொலைபேசியில்  அடிக்கடி பேசி தகவல் கேட்டு ஆறுதலும் தைரியமும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அடுத்தநாள்  போஸ்ட் ஆபரேஷன் தியேட்டரில் மீண்டும் பதட்டம்.  சற்றே நினைவு வந்தவர்  வலி தாங்காமலோ என்னவோ தன்மீது சிலந்தி வலை மாதிரி  அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த  மூக்கிலும், கைகளிலும் பொருத்தப்பட்டிருந்த அத்தனை குழாய்களையும்   அரை மயக்க நிலையில் பிடுங்கிப் போட்டிருக்கிறார்.   டாக்டர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளாத  குறையாய்  மீண்டும் அவற்றைப் பொருத்தி விட்டு 24 மணிநேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று  சொல்லி இருக்கிறார்கள்.   என் அத்திம்பேர் சௌந்தர்யலஹரியிலிருந்து  அத்தனை  சுலோகங்களையும் அவர் அருகிலமர்ந்து சொல்லிக் கொண்டிருக்க  24 மணி நேரத்தில் ஒரு முறை கண் விழித்தவர்,   நா வர மாட்டேன் எனக்கு நிறைய வேலையிருக்கு என்று மட்டும்  குழறலாய் சொல்லி இருக்கிறார்.  அவர் யாரிடம் அதைச்சொல்லியிருக்கக் கூடும்?   நிச்சயம் அவருக்கும் எமனுக்கும் இடையேயான வாக்குவாதத்தின் கடைசி வரியாகத்தான் இருக்கக் கூடும்.

எமன் தற்காலிகமாக  பின்வாங்கி நகர அவர் நல்லபடியாய் கண்விழித்தார்.  ராகவேந்திரன் என்னை கைவிட மாட்டான்னு நம்பினேன், கைவிடல  என்றிருக்கிறார் மனைவியிடம்.   மிகப் பெரிய அறுவை சிகிச்சை அதைத் தொடர்ந்த கீமோ என்று படாத பாடு பட்டது அந்தக் குடும்பம்.   இதற்கு நடுவில் அடுத்த செக்கப்பில் மேலும் சில பகுதிகளில் நோயின் தாக்கம் இருப்பதாக டாக்டர்கள் சொன்னதோடு மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள்   மிஞ்சிப்போனால் இன்னும் நாற்பது நாட்கள்  அவர்  உயிருடன் இருப்பார் என்று  சொல்லி கிட்டத்தட்ட கை விட்டு விட்டார்கள்.

 என் அக்கா என் வீட்டுக்கு வந்த  போது  அன்றிரவு  என் வீட்டு  மொட்டை மாடியில்  வைத்து   இதைச் சொல்லி  குழந்தை மாதிரி அழுதாள். நான் உடனே சொன்னேன்,  இதை  யார் சொன்னது டாக்டர்தானே? கடவுள் இல்லையே?  டாக்டர் என்பவர் தனது பரிசோதனையின் முடிவில் தான் ஊகித்ததைச் சொல்கிறார் அவ்வளவே.   ஆனால் கடவுள் அம்முடிவுகளை மாற்றக் கூடிய சர்வ  வல்லமை கொண்டவர்.    நாம் திரௌபதியைப் போல் கை தூக்கி வேண்டுவோம்.  நீதான் கதி என்று அவனை கெட்டியாய்ப் பிடித்துக்கொள்வோம்.    தவிர உன் மாப்பிள்ளைக்கு இருக்கும் தன்னம்பிக்கைக்கு அவருக்கு ஒன்றும் ஆகாது.  அவரை அவ்வளவு சீக்கிரம் எமனால் நெருங்க முடியாது என்று  தைரியம் சொன்னேன்.

என் அக்கா கிளம்பிப் போனதும்  மீண்டும் கிருஷ்ணனோடு சண்டை.  உன்னை விட மாட்டேன் என்றேன்.   என் அக்கா மாப்பிள்ளைக்காக,  கோவில் கோவிலாக ஏறி இறங்கினேன்.  தன்வந்திரிக்கு எண் ணெய்  அபிஷேகம் செய்து செய்து கொடுத்தனுப்பினேன்.  உச்சக் கட்டமாக அவருக்காக பொதிகை மலை ஏறி வருவதாக வேண்டிக் கொண்டேன்.  அது மிகவும் கடினமான ஒரு மலை ஏற்றம்.  இரத்தம் குடிக்கும் அட்டைக்காடுகளின் வழியே மூன்று நாள் கடும் காட்டில் மலையேறி,   6200 அடி உயரத்தில் உள்ள அகத்தியரை தரிசிப்பது அவ்வளவு சுலபமல்ல.   அதுவும் கடைசி STRETCH  மிக மிக கடினம். சங்கிலியைப் பிடித்து தொற்றிக்கொண்டு தான்  குழவிக்கல் போல் நேராக நின்ருக்கும் ஐம்பதடி பாறையை ஏற வேண்டும்.  கடும் குளிர்க் காற்று  வீசி நிலை குலைய வைக்கும்.  நான் எதையும் சட்டை செய்யவில்லை. எனக்கேற்பட்ட நிலை என் அக்கா பெண்ணுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே ஒரு பிரார்த்தனையோடு   அகத்தியர் அருளால் ஒரு வழியாய் ஏறினேன்.  அவரருளால் அவரை தரிசித்தேன்.   என்னுடன் வந்தவர்கள் எல்லோரும் அங்கே அவருக்காக வேண்டிக் கொண்டனர்.

அதன் பிறகு நெல்லையப்பர் கோயிலில் வேறொரு விஷயம் எனக்கு சொல்லப்பட்டது.  அங்கே  காந்திமதியம்மன் சந்நிதிக்கு முன்  ஒரு குழி உள்ளது. ஸ்ரீ சக்கர குழி என்றார்கள். அதில்  நம் மூலாதாரத்தை  நடுவில் வைத்து அமர்ந்து அம்மனிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நிச்சயம் நிறைவேற்றப் படும் என்றார்கள்.  நான் உடனே அதில் அமர்ந்து என் அக்கா மாப்பிள்ளையைக் காப்பாற்றக் கோரி வேண்டிக் கொண்டேன்.  பிறகு சந்நிதி சுற்றி வரும்போது இன்னொரு அதிசயம் நடந்தது.

பிரகாரத்தில்  ஒரு மரம் இருந்தது. அதனை சுற்றி தொட்டி மாதிரி மேடை கட்டி இருந்தது. அதிலிருந்து எல்லோரும் ஏதோ  எடுத்துச் சென்று கொண்டிருக்க நான் ஒருவரிடம் என்னவென்று  விசாரித்தேன்.  இது புற்று மண் அம்மா.  எவ்வளவு எடுத்தாலும் குறையாது வந்து கொண்டே இருக்கும்.  இதை நீரில் ஒரு சிட்டிகை போட்டு குடித்தாலும் போதும் புற்று நோய்  போய் விடும் என்று நம்பப் படுகிறது.  என்றார்.  எனக்கு கண் கலங்கி விட்டது.  என் தேவைக்கேற்ப அங்கங்கே வழிகள் தெரிய நான் ஒரு பிளாஸ்டிக் கவரில் நிறையவே புற்று மண்ணை எடுத்துக் கொண்டேன். ஊருக்கு வந்து அதையும் கொடுத்தனுப்பினேன்.   அவருக்காக எனது கயிலாய நண்பர்கள் பல சமயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.

எந்த ஒரு நோய்க்கும்  வெளியிலிருந்து  கொடுக்கப் படும் மருந்தை விட மிகப் பெரிய மருந்து நமக்குள் இருக்கும் நம்பிக்கைதான். நம்பிக்கையின்றி மருந்தைக் குடித்தாலும் அது செயல்படாது போய்விடும்.  நம்பிக்கையுடம் விஷத்தையே குடித்தாலும் அது மருந்தை மாறிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  என் அக்கா மாப்பிள்ளையிடம் நம்பிக்கை என்பது வற்றாத கங்கையைப் போல்  பெருகிக் கொண்டிருந்தது.  நான் இப்போது மரணிக்க விரும்பவில்லை என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  அவரது பிடிவாதத்திற்கும், நம்பிக்கைக்கும், அவருக்காக எல்லோரும  செய்து கொண்டிருந்த  பிரார்த்தனைக்கும் மனமிரங்கி தெய்வம் மார்க்கண்டேயனுக்கு உதவினாற் போல் இவருக்கும் உதவியது.    இது வெறும் பிரார்த்தனையால் மட்டுமேநிகழ்ந்த அதிசயம் அல்ல.  நோயாளிக்கு நம்பிக்கையில்லாத இடத்தில் பிரார்த்தனைகளுக்கு பயனிருக்காது.

தனக்கு இன்னும்  நாற்பதே நாள்தான் என்ற நிலையை  அவர் தனது  தன்னம்பிக்கையால்தான்   மாற்றிகே கொண்டார்.  இதோ இன்று வரை அதே  தன்னம்பிக்கையோடு வளைய வந்து கொண்டிருக்கிறார்.   எனக்கு என்ன ஒரு கஷ்டம் வந்தாலும் இவரை நினைத்துக் கொள்வேன். என் மனம் வலுப்பெற்று விடும்.

இப்போதும்  கூட நான்  முகமறியாத புற்றுநோயாளிகளுக்காக வேண்டிக் கொண்டு,  மானசீகமாய் ஒரு முறை பொதிகை ஏறி அகத்தியரிடம் அவர்களுக்காக பிரார்த்தித்து வருகிறேன்.  தவிர அந்த ஸ்ரீ சக்ர குழியிலும் மானசீகமாய் அமர்ந்து யாராக இருந்தாலும் இந்நோயிலிருந்து காத்து விடு தாயே என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.   உங்களாலும் இது முடியும் நண்பர்களே.   இந்த நிமிடம் எத்தனையோ பேர் தவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக   தினமும் பிரார்த்திப்போம்.  நம் பிரார்த்தனையின் சக்தி கேன்சர் எனும் கொடிய நோயை  இந்த உலகை விட்டே ஒழித்து, இல்லாது ஆக்க வேண்டும்.   அதே நேரம் நோயாளிகளும் நம்பிக்கையோடு இருப்பது அவசியம்

நம்பிக்கை.....நம்பிக்கை....  நம்பிக்கைதான் அமிர்தம். அருமருந்து! .  கற்பக விருக்ஷம் வேறெங்கும் இல்லை. அது  நமக்குள்தான் இருக்கிறது  நாம் கேட்டதை அளிப்பதற்கு.  .எத்தகைய இடர் வரினும் நம்பிக்கையை மட்டும் இழக்காதிருப்போம்.     நம் நம்பிக்கை,  கடவுளைக் கூட தன்  முடிவைக் மாற்றிக்  கொள்ளச்  செய்து விடும் சர்வ சக்தி கொண்டது.  

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையான நினைவுகள் நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ரூபன்

திண்டுக்கல் தனபாலன் said...

/// எந்த ஒரு நோய்க்கும் வெளியிலிருந்து கொடுக்கப் படும் மருந்தை விட மிகப் பெரிய மருந்து நமக்குள் இருக்கும் நம்பிக்கைதான்... ///

உங்களின் பிரார்த்தனை - மனம் நெகிழ வைத்தது...

/// இந்த நிமிடம் எத்தனையோ பேர் தவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக தினமும் பிரார்த்திப்போம்... ///

கடவுளின் மனது... வாழ்த்துக்கள் பல...