Thursday, November 27, 2014

லூர்து மேரி - பகுதி 2

மீண்டும் லூர்து மேரி.      முணுக் முணுக்கென்று கோபம் வந்து விடும் லூர்து மேரிக்கு.   அவள் புத்திசாலிதான். தான்  புரிந்து கொண்டதை அவளுக்கு சரியாய் விளக்க மொழியறிவு போதுமானதாக இல்லை என்பதுதான் அவளது ஆரம்பகால பிரச்சனையாக இருந்தது.   ஆங்கிலம்  தமிழ் தவிர  இதர பாடங்களில் அவள்  எழுத்துப் பிழையுடனோ இலக்கணப் பிழையுடனோ எழுதினாலும் கூட, அவளது விடை, அவளது புரிதலை வெளிப்படுத்துவதாக இருந்தால்  அவளுக்கு மதிப்பெண் அளிக்க தயங்க மாட்டார் ஆசிரியை. போகப் போக தமிழ் மொழி வந்து விடும் என்பதால் அவளை ஊக்குவிக்க மதிப்பெண்களை அளித்து விடுவார்.

ஆனால் தமிழ் பாடத்தில் அப்படி மதிப்பெண் அளிப்பது சரியாகாது என்பதால் அவள் ஒற்றை இலக்கத்தில்தான் மதிப்பெண் பெறுவாள்.  நீ விரைவில் தமிழ் மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் கற்க வேண்டும்  என்று லேசாய் மிரட்டுவது போல் சொல்லுவார்.

லூர்து மேரிக்கு தமிழ் மொழி கற்க இந்த மிரட்டு என்றால் எனக்கு ஆங்கிலப் பாடத்திற்கு மிரட்டல் இலவசம்.  அவள்  ஆங்கில பரீட்சையின்   திருத்திய விடைத்தாள் வாங்கும் போது  நெஞ்சு நிமிர்த்தி  நடந்து செல்வாள்.  நான் தமிழ் விடைத்தாள் பெறும் போது  ரொம்ப பெருமையாக செல்வேன்.

ஒரு முறை டீச்சர்  என் ஆங்கில மதிப்பெண்ணுக்கு எல்லோர் முன்னாலும் என்னை திட்ட நான் லஞ்ச்  சாப்பிடக் கூட செல்லாமல் உர்ரென்று உட்கார்ந்திருந்தேன். .  "எல்லா காளியும் வாங்க   என் நாக்குல எழுதுங்க. நான் சூப்பரா எல்லா பாஷையும் பிளந்து கட்டணும்.  அப்டி செய்தா எல்லா பாஷைகளிலும்  உம்மேல கவிதையா பாடறேன்  சரியா?  காளியோடு பேரம் பேசினேன்.  காளி  இடத்தை காலி செய்து கொண்டு ஓடிப் போயிருப்பாள். அதற்கு பதில்  லூர்து மேரி என்னிடம் வந்தாள் .  ஐ வில் டீச் யு இங்க்லீஷ்  என்றாள்.   இந்த நாலு வார்த்தைக்கே நான்,  என்னமா பேசறா இவ என்று  வாய் பிளந்தேன்.  நான் உடனே இ வில் டீச்  யு  தமிழ்  என்றேன் அவள் வார்த்தைகளிலேயே தமிழை மட்டும் சேர்த்து.  ஆஹா  நானும் என்னமாய் இங்கிலீஷ் பேசறேன்!

அடுத்த நாள் அவள் மத்தியானம் அரைமணி எனக்கு ஆங்கிலமும் நான் சாயங்காலம் அரைமணி அவளுக்கு தமிழும் கற்றுக் கொடுத்தோம். அவள் உடைத்த தமிழில் பேசக் கற்றாள் . என்னை கலாய்க்க வேண்டுமென்றால் வேகமாக மலாயில் பேசிக் கொல்லுவாள். .

அரைப்பரீட்சைக்குள் லூர்து மேரி நன்றாகவே தமிழில் உரையாடத் தொடங்கி விட்டாள்  எனலாம்.   வேறு வழி.  சுற்றிலும் தமிழாறு ஓடிக் கொண்டிருந்தால் அவளென்ன செய்வாள்?   கற்க வேண்டிய கட்டாயம்.  வட  இந்திய சினிமா  நடிகை மாதிரி  திக்கி திக்கி பேசுவாள்.  அதுவும் இனிமையாகவே இருக்கும்.  போறாததற்கு தமிழ் பாடத்தில் நான் வேறு அவளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அரைப் பரீட்சை வந்தது.   தமிழ் பரீட்சையன்று  லூர்து மேரி படு சீரியசாகவும் வேகமாகவும் எழுதுவதை வியப்புடன் பார்த்தேன்.  பரீட்சை முடிந்து என் விடைத்தாள்களை குண்டூசியால்  இணைத்து குத்தி  மடித்து என் பெயரெழுதி டீச்சரிடம் கொடுத்து விட்டு வேகமாக வகுப்புக்கு வெளியில்வந்து விட்டேன். அரை நாள் அதுவும் கடைசி பரீட்சை என்பதால் ஹாலிடே மூடில் வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

லீவு முடிந்து மறுபடியும் ஸ்கூல் துடங்கியது. ஒவ்வொரு பேப்பராக மதிப்பெண்களோடு கொடுக்கப் பட்டது.  நல்ல காலம் என் ஆங்கில மதிப்பெண் 45. சந்தி  சிரிக்கவில்லை.    லூர்து மேரிக்கு நன்றி சொன்னேன்.  அடுத்து தமிழ் பேப்பர்.  லூர்து மேரி  எண்பதுக்கு மேல் வாங்கியிருந்ததாலள்.  டீச்சர்  கை தட்ட சொன்ன போது   லூர்து மேரியின் முகம் சூரியனை விழுங்கினாற்போல் ஜொலித்தது. எனக்கு சந்தோஷமாகவே இருந்தது.  . அந்த சந்தோஷம் என் மார்க்கை பார்க்கும் வரைதான்.  நான் 60 க்கும் கீழ் வாங்கியிருந்தேன். என் முகம்  சந்திரனை தொலைத்த வானம் போல் இருண்டு விட்டது.  சத்தியமாக நான் எதிர்பார்த்ததை விட இது மிகவும் குறைவு.  எப்படி குறைந்தது டீச்சரிடம் கேட்கும் தைரியமில்லை.  அன்று முழுக்க நான் அசோகா வனத்து சீதை போல் துயரத்திலாழ்ந்திருந்தேன்.

விடைத்தாள்களில் அப்பாவின் கையெழுத்து வாங்க வேண்டும்.  எல்லாவற்றிலும் பாஸ் என்பதால் என் அப்பா கையெழுத்து போட்டு விட்டார். அடுத்த நாள் ஸ்கூலுக்கு வந்த லூர்து மேரி பிரேயருக்கு முன்பே என்னை அழைத்துக் கொண்டு தமிழ் டீச்சரிடம் போனாள்.  என் விடைத்தாள்ள கடைசி நாலு பக்கம் என்னுதில்ல. உஷாவுது. அது பறந்து கீழ விழுந்திருக்கு.  அது என்னுதுன்னு நினைச்சு நா  எடுத்து என் பேப்பரோட குண்டூசி குத்தி கொடுத்திட்டேன்.  என்று டீச்சரிடம் காட்ட நான் திகைத்துப் போனேன். நாலு பக்கங்கள் குறைத்திருப்பதை நான் எப்படி கண்டு பிடிக்காமல் போனேன்  என வெட்கமாக இருந்தது.  டீச்சர் வெகுவாக லூர்து மேரியை பாராட்டி அந்த நாலு பக்கத்து மதிப்பெண்களை அவளுடையதிலிருந்து கழித்து  என்னுடையதோடு கூட்டி எனக்கு மதிப்பெண் போட்டு விட்டு  எங்கள் இருவரையும் பார்த்தால்.

இனிதான் கிளைமாக்ஸ்.  உஷா நீ உன் பேப்பரை சரிபார்க்காம பறக்க விட்டுட்டு  குண்டூசி  குத்தினது தப்பு.  இதனால் உனக்கு அஞ்சு மார்க் மைனஸ். லூர்து நீ இதை கண்டு பிடிச்சு உன் மார்க் குறைஞ்சாலும் பரவால்லன்னு எங்கிட்ட வந்து இதைச் சொன்ன பார் அதனால உனக்கு  அஞ்சு மார்க் போனஸ். என்றாள். அது நியாயமாகவே பட்டாலும்,  கையெழுத்து வித்தியாசத்தை கண்டுபிடிக்காமல்  நீங்கள் எப்படி பேப்பர் திருத்தினீர்கள் என்ற என் கேளிவி, தைரியமில்லாத காரணத்தால் எனக்குள்ளேயே செத்துப் போயிற்று.

லூர்து மேரியும் நானும் ரொம்ப சிநேகமாகி விட்டோம்.  அனால் முழு பரீட்சை முடித்த கையேடு அவளை  அவள் அப்பா  டிசி  வாங்கி அழைத்துச் சென்று விட்டார்.    வகுப்பில் எல்லாருமே அவள் போவதற்காக வருத்தப் பட்டார்கள். நான் நிறைய.  ஆனால் அவள் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக கிளம்பி விட்டாள் . சொந்த பந்தங்களோடு இருக்கப் போகும் சந்தோஷமாயிருக்கக் கூடும்.

இத்தனை காலம் கழித்து   ஏதோ ஒரு குழந்தையால் லூர்து மேரியின் நினைவு வந்தது வியப்பாயிருக்கிறது.   லூர்து மேரி எங்கிருக்கிறாய் நீ.?  என்னை உனக்கு நினைவிருக்கிறதா?  தமிழ் பேசிக் கொண்டிருக்கிறாயா  இல்லை மறந்து விட்டாயா தமிழையும்?

lலூர்து மேரி - பகுதி 1

நேற்று அபிராமபுரத்திலிருந்து  நடந்து வரும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. அந்த நேரம் எனக்கு லூர்து மேரியின் நினைவு வந்தது. அந்த காட்சி என்ன என்பதை  கடைசியில் சொல்கிறேன். முதலில் லூர்து மேரியைப் பற்றி.

நான்  ஏழாவது வகுப்பில் படிக்கும்போது.  அவள் புது அட்மிஷனாக வந்து சேர்ந்தாள்.    நான் கடைசி பெஞ்ச்.   லூர்து மேரியை  எனக்கு துணையாக என் பக்கத்தில் உட்காரச்சொல்லி அனுப்பினார் டீச்சர்.  இந்திராகாந்தி மாதிரி நீண்டு கூர்மையான மூக்கு, சின்ன கண்கள், மெலிந்த தேகம்,   குச்சி குச்சியாய் ரெட்டை சடை.  டக் டக்கென்று  செருப்புகள் சப்திக்க என்னருகில் வந்து உட்கார்ந்தாள்.   ஆரம்பத்தில் சட்டென்று பேச ஒரு தயக்கம்.   அவளும் பேசவில்லை. நானும் பேசவில்லை.    பிறகு மெதுவாக பேரென்ன என்றேன். என்னை முறைத்து பார்த்து விட்டு லூர்து மேரி என்றாள்.  என் பேர் உஷா என்றேன் அவள் கேட்காமலே.   இதுக்கு முன்னாடி எங்க படிச்ச? எனது அடுத்த கேள்வி இது.   அதற்கு அவள் சொன்ன பதில் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. என்ன சொன்ன?    மறுபடியும் கேட்டேன். அவள்  மீண்டும் அதைத் திரும்பச் சொன்ன போது அது நிச்சயமாகத் தமிழ் மொழி இல்லை என்பது புரிந்தது.  இது என்ன மொழி என்று கேட்டாலும் அவள் சொல்லப் போகும் பதில் எனக்கு புரியுமா என்பது சந்தேகம்.

ஏற்கனவே என் நெருங்கின சிநேகிதியையும் என்னையும்  சேர்ந்து உட்கார விடாத வருத்தத்தில் இருந்த எனக்கு இப்படி பாஷை தெரியாத பெண் வேறு பக்கத்தில் வந்து  படுத்த வேண்டுமா என்ற வருத்தம் கூடியது.   லஞ்ச் நேரம்  எல்லாரும் சாப்பிடப் போன போது எங்கள் பேச்சு முழுக்க லூர்து மேரியைப் பற்றிதான்.   சில சி.ஐ.டி. சிங்கங்கள் அவளைப் பற்றி அத்தனை  தகவல்களையும் எப்படியோ கண்டு பிடித்திருந்தனர்.

அவ வெளியூராம்.  மலாயா  பக்கமாம்.   தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியுமாம். அவ நல்லா  தமிழ் கத்துக்கணும்னுதான் இங்க வந்து தமிழ் மீடியத்துல சேர்த்து விட்டுட்டாராம் அவங்கப்பா. ஹாஸ்டல்லதான் இருப்பாளாம்.  இங்கிலீஷ் ஓரளவுக்கு பேசுவாளாம்.

சரிதான். என் நேரம் சரியில்லைதான் போலருக்கு என்று நான் நொந்து போனேன். அவளுக்கு தமிழ் வராது என்பதை விட அவள் ஆங்கிலம் தெரிந்தவள் என்பதுதான் என் கவலைக்கு காரணம்.  நமக்கு  ஆங்கில அட்சராப்பியாசம் ஆரம்பித்ததே  ஐந்தாம் வகுப்பில்தான்.  அதனால் அவள் என்னிடம் ஆங்கிலத்தில் ஏதாவது பேசி விடப் போகிறாளோ என்று எனக்கு தொடை நடுங்கியது. இனி அவள் பக்கம் திரும்பவே கூடாது என்ற முடிவோடு லஞ்ச் முடித்து வந்து அமர்ந்தேன்.

வகுப்பு ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் லூர்து மேரி திடீரென்று  எழுந்து "பண்ணா  பண்ணா  என்று அலறினாள். டீச்சர் தூக்கி வாரிப்போட போர்டிலிருந்து தலையைத்திருப்பிப் பார்த்தாள். "பண்ணா பண்ணா"  அவள் மீண்டும் கத்த டீ ச்சர் என்னைப் பார்த்தாள் . "

"ஏய் உஷா என்ன பண்ண அவள? "

"அய்யோ நா ஒண்ணும்  பண்ணல டீச்சர்! "

டீச்சர் லூர்து மேரியைப் பார்த்து என்ன என்பது போல்  செய்கையால் கேட்டாள்

லூர்து மே ரிக்கு முகம் சிவந்தது. கீழே குனிந்தவள் என்  காலிலிருந்த செருப்பைக் கழட்டி  கண்ணகி சிலம்பைப் பிடித்திருப்பது மாதிரி  தூக்கி வைத்துக்  கொள்ள  மொத்த வகுப்பும் அவள் என்னை அடிக்கப் போகிறாளா அல்லது டீச்சரையா  என்று மிரண்டு   போ ய் பார்த்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.  நானோ பயத்தில் சர்வ நாடியும் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தேன்.

லூர்து மேரி அடுத்த கணம் என் செருப்பை கீழே போட்டு விட்டு வேகமாய் நடந்தாள் . டீச்சரிடம் ஏதோ செய்கை செய்து விட்டு  வகுப்புக்கு வெளியில் ஓடினாள்  அவள் திரும்பி வந்த போது அவள் கையில் அவளது செருப்புகள். அதை டீச்சரிடம் காட்டி " பண்ணா" என்ற படி தன்  காலில் அணிந்து கொண்டு சிரித்த படி வந்து உட்கார்ந்தாள் . அப்புறம்தான் புரிந்தது செருப்புக்கு அவளது பாஷையில் பண்ணா என்று பெயர் என்பது.  சாப்பிட்டு வரும்போது  செருப்பை அணிய மறந்து வந்திருக்கிறாள். அதற்குதான் இத்தனை அமர்க்களம்.

அதற்குப்பிறகு எங்கள் செருப்புகளும் பண்ணா என்றே  பெயர் பெற்றன

அபிராமபுரத்தில் என்ன பார்த்தேன் என்று சொல்லி விடுகிறேன். ஒரு பெண்மணி குழந்தையோடு சென்று கொண்டிருக்க அவள் இடுப்பிலிருந்த ஒரு ரெண்டு வயது குழந்தை திடீரென்று அழுதது. இவள் ஏன்  அழறடி செல்லம் அது இது என்று கேட்க அந்த குழந்தை மழலையில் இப்பல்  இப்பல் என்று சொல்ல அந்த பெண்மணிக்கு அது என்ன சொல்கிறதென்று புரியவேயில்லை. நான் தயங்கி தயங்கி அவர்களருகில் கைப்பையில் எதையோ எடுப்பது  போல் நின்று கவனித்தேன்.

குழந்தை அவள் இடுப்பை விட்டு இறங்கி தன காலை தூக்கி தூக்கி காட்டியது. அப்போதும் புரியவில்லை. அதற்கு வந்ததே கோபம், அந்த  பெண்ணின் செருப்பை பிடித்து இழுத்து "இப்பல்ல்ல் .." என்று கத்தியது.

ஒ உன் செப்பல் போட்டுக்கலையா என்று அந்த பெண்மணிக்கு அப்போதுதான் புரிய  அவள் மீண்டும் வீடு நோக்கி திரும்பிச் செல்ல எனக்கு லூர்து மேரியின் நினைவு வந்தது.

அவளைப்பற்றி இன்னொரு சுவாரசியமான சம்பவமும் அடுத்த பதிவில் எழுதுகிறேன். லூர்து மேரியை நினைவு படுத்தின குழந்தைக்கு நன்றி.


    

Wednesday, November 26, 2014

மூக்குத்தி - பகுதி - 2

மூக்குத்தி  - II

எனக்கு அப்போது ஆறேழு வயசிருக்கும்.  பூம்புகார் என்னும் படம்  வெளியான நேரம்.  என் அத்தை பெண்கள்,  என் பெரியக்கா எல்லோரும் கிளம்பும் போது   நானும் வருவேன் என்று உடும்புப் பிடியாய் சுகுணாவின் காலைக் கட்டிக் கொண்டேன்.  

நீ தூங்குவ அங்க வந்து  

மாட்டேன் நா வருவேன். 

சமத்தோல்யோ   நா வரச்சே நோக்கு முட்டாய்  வாங்கிண்டு வரேன்.  

வேண்டாம் நா வருவேன்.  நா அழுது ஆர்ப்பாட்டம் பண்ண,   வேறு வழியின்றி என்னை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.  இல்லா விட்டால் அவர்கள்  போவதும் கேட்டு விடுமே என்ற பயம்தான். 

சாந்தி தியேட்டர் என நினைக்கிறேன்,.  நான் சுகுணாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். சொன்னாற்போல் பாதிப் படத்தில் தூங்க ஆரம்பித்து விட்டேன். 

எவ்வளவு நேரம் தூங்கினேனோ   திடீரென்று ஏதோ பெரும் சப்தம் கேட்க  நான்  திடுக்கிட்டு எழுந்த வேகத்தில் என்ன நடந்ததோ   திரையில்  விரித்த கூந்தலும் விழித்த கண்களுமாய்   கையில் சிலம்போடு விஜயகுமாரி நின்றிருக்க,  இங்கே சுகுணா  மூக்கைப் பொத்தியபடி  என்னை முறைத்து பார்த்தபடி கண் கலங்க நின்றிருந்தாள்

விஜயகுமாரி ஆவேசமாக பேசிய பேச்சில் பயந்து போய்   நான் அலறிக் கொண்டு எழுந்த வேகத்தில் என் கை சுகுணாவின் மூக்கில்  வேகமாய் மோத   அவளது முக்குட்டி டைப் மூக்குத்தி  சதையைப் பிய்த்துக் கொண்டு தொங்க மூக்கிலிருந்து ரத்தமாய் வழிய  சுகுணா இன்னொரு கண்ணகியாய்  நின்றிருந்தால்.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.   

கடங்காரி   என்னடி பண்ணின?  என் அக்கா கத்த   அக்கம் பக்கம் பரபரக்க பிறகென்ன கர்ச்சீப்பை மூக்கில் அழுத்தி வைத்துக் கொண்டு   படம் முடிவதற்கு முன் என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.   வழி முழுக்க அவர்கள் திட்ட,  நான் அழ,   போனாப் போட்டும் விடுடி என்று சுகுணாவே சொல்ல,  நல்ல காலம் பெரிய ஆபத்தொன்றுமில்லை என்று மூக்கில் பாலை வார்த்தார் டாக்டர்.  

 கொஞ்ச நாளில் மூக்கு சரியாகி விட்டது.  அதற்குப் பிறகும் என்னைப்  பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொள்வாள் சுகுணா. இனிமே உன்னைக் கூட்டிண்டு சினிமா போறேனா பார் என்பாள். அதற்குப் பிறகு  அவளோடு  கபாலி தியேட்டரில் நான் பார்த்த படம் சிவந்த மண்.   நான்  நன்கு வளர்ந்து விட்டாலும் கூட,  நீ இந்த பக்கமவே  உக்கந்துக்கோடி தாயே என்று மூக்குத்தி இல்லாத,  தனது  இடப்பக்கம்தான் என்னை அமர்த்திக் கொண்டாள். 

இன்று வரை என்னால் மறக்க முடியாத சம்பவம் இது.  இப்போதும் பூம்புகார் படப்  பாட்டு கேட்டால் கூட அதை நினைத்து சிரிப்பேன். 
                                         ******************************
என் பத்து வயதில் நடந்த சம்பவம் இது.,   எண்ணை  தேய்த்து குளிப்பதற்காக  என் பெரியக்கா  தன மூக்குத்தியை  கழட்டி கூடத்தில் இருந்த சின்ன மர  ஷெல்பில்  வைக்க, அவள் அந்தப் பக்கம் போனதும் நான் அதை எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு விஷமத்தனம் பண்ணுவதாக நினைத்து அதை  ஒரு சின்ன டப்பியில் போட்டு வேறொரு இடத்தில் மறைத்து வைத்தேன்.   நான் ஸ்கூலுக்கும் போயாகி விட்டது.


சாயங்காலம் வரும் போது வீடு களேபாரமாக இருந்தது.   என்னாச்சு?   நான் மெதுவாக என் சின்னக்காவிடம் கேட்க   நீ பாத்தயாடி அவ மூக்குத்திய என்றாள்.   எனக்கு சுரீரென்றிருந்தது.   என் அப்பா என் அம்மாவை உச்சஸ்தாயியில்  திட்டிக் கொண்டிருந்தார்.  சவத்தெழவுகள்!, கொரங்கெழவுகள்  கொஞ்சமானும் பொறுப்பிருக்கா பாரு !   எனக்கு பயத்தில் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது.  நான்தான் எடுத்து வைத்தேன் என்று எப்படி சொல்ல? அதே சமயம் இன்னொரு பிரச்சனையும் கூட.  நான் அதை ஒரு டப்பியில் போட்டது மட்டும் நினைவிருக்கிறது. எங்கே வைத்தேன் என்பது நினைவுக்கு வரவில்லை. தவிர மொத்த வீடும்  கலைந்து கிடந்தது.   எனக்குத் தெரியாது  நான் அவசரமாய் தலையாட்டினேன். 

 நானும் எல்லோரோடும் சேர்ந்து மூக்குத்தியைத் தேடினேன்.   டாய்லெட் குழியில்கூட கொட்டாங்குச்சி கரண்டி கொண்டு தேடினாள்  வேலைக்காரி. அன்று முழுக்க என் அம்மாவும் அக்காவும் சாப்பிடாமல் அழுது சிவந்த மூக்கோடு   அசோக வனத்து சீதை மாதிரி அடுக்களையில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தார்கள்.   

எனக்கு மட்டும் குறுகுறுப்பு.  மூக்குத்திய   எடுத்தேன்....... டப்பில போட்டேன்.   டப்பிய   எங்க வெச்சேன்?   நடுவுல கொஞ்சம் என் பக்கங்கள் காணாமல் போனது அக்காவின் துரதிருஷ்டம்.     அப்படி ஒரு ஞாபக மறதி  உண்டு எனக்கு.  (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்?)   ஒரு வாரம் என் அப்பாவின் கோவத்தோடு நகர்ந்தது. வீட்டில் யாரும் யாரோடும் பேசுவதற்கே பயந்தார்கள்.     துணி மடித்து வைக்கும்  ஷெல்பில்  நான்சட்டை ஒன்று தேடுவதற்காக  முனைந்த போது என் கையில் தட்டுப் பட்டது மூக்குத்தி டப்பி. 
சந்தோஷத்தோடு பயமும் ஏற்பட்டது. நான்தான் வைத்தேன் என்பது தெரிந்தால்  முதுகு பழுத்து விடும்.  

 நான் மெல்ல டப்பியிலிருந்து மூக்குத்தியை எடுத்து டப்பியை மறைத்து விட்டேன்.  மூக்குத்தியைக் கீழே நழுவ விட்டேன். பிறகு கண்கள் பளிச்சிட அய்   மூக்குத்தி என்று குரல் கொடுத்தேன். மொத்த வீடும் பரபரப்பாய்  வந்தது. என் அக்காவின் முகத்தில் சந்தோஷம்.    இருந்தாலும் இதெப்டி இங்க வந்தது என்றாள்.  என்னைக் கேட்டா?    நான் சமாளித்தேன்.  எப்படியோ மூக்குத்தி கிடைத்து விட்ட நிம்மதியில் என் அப்பாவின் கோபமும் குறைந்தது. இதெல்லாம் அறியாத வயதில் செய்யும் குறும்புகள்.  இந்த பதிவைப் படித்தால் என் அக்காவுக்கும் அம்மாவுக்கும் மூக்குத்தி மர்மம் விளங்கும்.  சிரிப்பார்கள் என நம்புகிறேன். . 

                                                      ***********************

இப்போதெல்லாம்  இளசுகள் மூக்கு குத்திக் கொள்ள விரும்புவதில்லை.  என் பெண்கள் மூக்கு குத்திக் கொள்ளவில்லை.   என் பக்கத்து வீட்டு  சாஸ்திரிகள் வீட்டு பெண் வித்யாவிடம் ஒரு நாள் கேட்டது. அதற்கு நாலு வயசிலேயே மூக்கு குத்தியாகி விட்டது. 

"வித்யாக்கா  நீ ஏன் மூக்கு குத்திக்கல?"

"எதுக்குடி குத்திக்கணும்?" 

"அப்பறம் உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா?" 

                                                           ***********************

கவிதாவின்  மூக்கு புரொபைலில் அழகாக இருக்கும்.    அவளுக்கு மூக்கு குத்தினால்  அழகாயிருக்கும்.   அவள் நா குத்திக்க மாட்டேன் எனறாள். ஆனால் கல்யாணத்தின் போது அவள் மூக்கில் ஒற்றை கல் வைத்த ஒட்டும் பொட்டு ஒன்று ஒட்டி விட்ட போது அவளுக்கு அது வெகு அழகாயிருந்தது.   போட்டோவில் மூக்கு குத்தினாற்  போலவே இருக்கும்.  

மூக்குத்தி பற்றி ஆராய்ந்தால் நிறைய தகவல்கள்  இருக்கிறது.  அது நரம்பைத் தூண்டி விடும்.    தங்க மூக்குத்தி உடலில் உள்ள வெப்பத்தையும் நரம்பு மண்டலத்தில் உள்ள  கெட்ட வாயுவையும்  வெளியேற்றும். விஞ்ஞான  ரீதியாய் நிறைய நன்மைகளை நமக்கு தருகிறது. மூக்கு குத்தின பெண்களை யாராலும் மெஸ்மரைஸ்  பண்ண முடியாதாம்.   பொதுவாக வயதுக்கு வந்த பின் தான் மூக்கு குத்த வேண்டுமாம். ஏனெனில் பருவமடைந்த பெண்களுக்கு கபாலத்தில்  ஒரு வித வாயு சேருமாம்.  மூக்கில் ஒரு துளை  போட்டு மூக்குத்தி அணிந்தால்  அந்த வாயு வெளியேறுமாம்.

தவிர ஒற்றைத் தலைவலி, மனத்தடுமாற்றம் இதையும் குறைக்கிறதாம் மூக்குத்தி அணிவது. மூக்குத்தியை வலது மூக்கில் அணிவதை விட இடது பக்கம் அணிவதுதான் நல்லதாம். பெண்களுக்கு இடப்பக்கமும் ஆண்களுக்கு வலப்பக்கமும் இயற்கையிலேயே பலம் மிகுந்ததாக இருப்பதுதான் இதற்கு காரணம். அர்த்தநாரீஸ்வர  தோற்றத்தில் உமைக்கு இடப்பாகம்தான் தந்திருக்கிறான் ஈசன் என்பதில் நிறைய அர்த்தம் இருக்கிறது.

மூக்குத்தி என்பதே 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்த அணிகலன் என்கிறது விக்கிபீடியா. அதற்கு முந்தைய நூற்றாண்டு சிற்பங்களில் மூக்குத்தி கிடையாதாம்.   தமிழர் அணிகலன்களிலும்  காதணி, கழுத்தணி, இடுப்பணி, காலணி,  தலையணி  என்று  உள்ளதே தவிர மூக்கணி  பற்றி சொல்லப் படவில்லை.   எனவே அது பிற்பாடு   அதன் நன்மை கண்டறியப்பட்ட பின் தோன்றிய நாகரிகமாக இருக்கலாம்.    

வட இந்தியாவில் மூக்குத்தியை "நத்"  என்கிறார்கள் பொதுவாக.  ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது மூக்குத்திக்கு.   விதம் விதமாய் நிறைய வகை மூக்குத்திகள் இருக்கின்றன.  "எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு"  என்று  எதிர் நீச்சலில் சௌகார் பாடுவது  போல் நிறைய பேருக்கு அது அழகுதான்.  ஒரு கல் மேலேயும்  இரண்டு முதல் மூன்று கற்கள் அதற்கு கீழேயும் வைத்த முக்குட்டி,  நாலு கல் மூக்குத்தி   என்றும் உண்டு. வட்டமாய் வைத்த கற்களும் உண்டு.   மூக்கு வளையமும்  இப்போது நாகரீகம்.  வட இந்தியாவில் வளையத்திலிருந்து காது வரை ஒரு செயின் கோர்க்கப் பட்டு நெற்றிப் பட்டை நகையோடு இணைந்திருக்கும்.    பழங்குடி மக்களின் மூக்குத்தி  அவர்களைப் போலவே  பழமையின் சின்னமாக இருக்கும்.

ஆண்  குழந்தைகளுக்குக் கூட மூக்கு குத்தும் வழக்கம் நிறைய ஊர்களில் இருந்திருக்கிறது.  நரிக்குறவ ஆண்கள் மூக்கில் வளையம் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் நான்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் போட்டி நடனத்தில் பத்மினியின் அந்த அழகு மூக்குத்தி அவர் முகத்தில் அத்தனை அழகாயிருக்கும்.  தில்லானா  மோகனாம்பாளில் மூக்குத்தி வளயமும், புல்லாக்குமாய்  அழகு சொட்டுவார். 

சங்கராபரணம்  படத்தில் மஞ்சு பார்கவி  அணிந்திருந்த பெரிய முக்கோணம் போன்ற கல் வைத்த மூக்குத்தியில் அவர் வெகு அழகாய்த் தெரிவார்.   "வேதம் புதிது"  படத்தில் அமலாவின் அழகு மூக்கில் அந்த பேசரி அவாளவு அழகாய் இருக்கும்.  ஸ்ரீதேவி மூக்குத்தி பற்றி சொல்லவே வேண்டாம்.   அந்த மூக்குத்திக்கே அவர் பேர் வைக்கப் பட்ட அளவுக்கு பிரபலமாயிற்று.

சிகப்பு கல்லு மூக்குத்தி,    மாணிக்க மூக்குத்தி,  மூக்குத்தி பூ மேலே என்று   சினிமா பாடல்களும் மூக்குத்தி பற்றி இருக்கின்றன.

கீழே உள்ள படங்களை நிதானமாக ரசித்துப் பாருங்கள்.  எத்தனை வகை மூக்குத்திகள்!.  இன்னும் கூட இருக்கின்றன.   கடைசி படம் "பொ ட்டு" மூக் குத்தியோடு  கவிதா 

இருந்தாலும்  மூக்குத்தி என்றால் உடனே மனக்கண்ணில் தோன்றுவது தெய்வீகமான இரண்டு முகங்கள்தான்.  ஒன்று கன்யாகுமரி  பகவதி அம்மன், மற்றொருவர்   எம்.எஸ். சுப்புலட்சுமி.  அந்த முகங்களின் தெய்வீகத்தால்  அந்த மூக்குத்திகள்  ஜொலிக்கிறதா அல்லது அந்த மூக்குத்தியின் அபூர்வ வைரங்களால் அவர்கள் முகம் ஜொலிக்கிறதா என்பது புரியாத புதிர்.












Monday, November 24, 2014

மூக்குத்தி பூ மேலே



நேற்று கோயிலுக்கருகில்  ஒரு வயதான பெண்மணியைப் பார்த்தேன்.  வட இந்தியர் போல் தெரிந்தது.  அவர் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்திதான் இந்தப் பதிவுக்குக்  காரணம்.   ஒரு குட்டி தோசைக்கல் மாதிரி வட்டமாக தட்டையாக  அவரது இடது மூக்கு துவாரத்தையே மறைப்பது மாதிரி இருந்தது. .   அவர் அப்படி அணிந்திருந்தது  எனக்கு சிரமமாயிருப்பது போல் தோன்றியது.  அவரைப் பார்த்த பிறகு எனக்கு மூக்குத்தி பற்றி நிறைய நினைவுகள்  ஏற்பட்டன.

கல்யாணத்திற்கு முன்புதான்  நான் மூக்கு குத்திக் கொண்டேன். ஒற்றையாய் ஒரு வெள்ளைக் கல்.     எதிர் வீட்டிலேயே  வெகு நாள் பழக்கமான ஆசாரி இருந்தார்.   முதல் நாள் போய் சொல்லி விட்டு வந்தேன்.  கூடவே வலிக்குமா என்றேன்.  

"எறும்பு கடிக்கறா  மாதிரி இருக்கும் அவ்ளோதாம்மா".

ஓ  அப்போ வலிக்கும்.  எனக்கு எறும்புக் கடியே தாங்காதே.  என நினைத்தபடி அடுத்த கேள்வியைக் கேட்டேன்.  "பேசாம மயக்க மருந்து குடுத்து குத்திடறீங்களா?" 
ஆசாரி   விழுந்து விழுந்து சிரித்தார்.

உனக்கு காதே நான்தான் குத்தினேன்.  அதே மாதிரி வலிக்காம  மூக்கும் குத்திடறேன் சரியா?

மூக்கு குத்துவதற்கு முன்னாடியே எனக்கு வலிப்பது போலிருந்தது.  ராத்திரியெல்லாம் பயம்.


மறுநாள்  என் பெரியம்மாவோடு  சென்று ஆசாரியின் முன்னால்  மூக்கு குத்துவதற்காக உட்கார்ந்திருந்த போது  தொடை நடுங்கியது.

கண்ணை மூடிக் கொண்டேன். அவர் குங்குமத்தில் பொட்டு வைத்து   கை கூப்பி சாமிக்கு பிரார்த்தித்து விட்டு கையை என் முகத்தருகே கொண்டு வரும் போது நான் பின்னால் சற்றே சாய்ந்தேன் பயத்தில்.  அவர் சிரித்தார். மீண்டும் முயற்சிக்க நான் மீண்டும் பின் வாங்க,  மூன்றாவது முறை என் பெரியம்மா என் தலையைப் பிடித்துக் கொள்ள  மூக்குத்தி கம்பி சர்ரென்று என் மூக்கில் இறங்க என் கண்களில் காவேரி பொங்கி வழிந்தது.  

 "நன்னார்க்கு  கேட்டயா?   லட்சணமார்க்கு"  என் பெரியம்மாவின்  முதல் விமர்சனம்.  ஆசாரி கண்ணாடி காட்ட  நல்ல காலம்  ஒரு வழியா முடிஞ்சுதே என்ற ஆஸ்வாசம்தான்  எனக்கு ஏற்பட்டது.

மறு நாள் கண்ணாடியை பார்த்த  போது பரவால்ல நன்னாத்தான் இருக்கு என்று தோன்றியது.

"ஏய் உஷா நன்னார்க்குடி"   என்றாள்  சினேகிதி ஒருத்தி

அழகா இருக்கேனா?

"நா மூக்குத்தியச் சொன்னேன்".  கலாய்க்கறாளாம் .  

கல்யாணத்திற்கு முதல் நாள் என் அப்பா ஒரு எட்டுக் கல் பேசரியைக் கொடுத்து போடச்சொன்னார்.   என் அழகே போய் விட்டாற்  போல் இருந்தது.  எட்டுக் கல் பேசரி போடும் அளவுக்கு எனக்கு அழகான எள்ளுப் பூ மூக்கா கொடுத்திருக்கிறான் கடவுள்?    வேறு வழி?  எதிர்த்துப் பேச பயம். கல்யாணமான பின்னும் ஒரு இரண்டு வருஷம் அந்த  எட்டுக் கல் பேசரியோடுதான் அலைந்தேன்.  

அதற்குப் பிறகு வேலைக்கு போய் முதல்  சம்பளம் வாங்கின பிறகு  நான் செய்த முதல் செலவு  மூக்குத்தி வாங்கினதுதான்.   அதுவும் அப்போது பிரபலமாக இருந்த ஸ்ரீதேவி மூக்குத்தி.  ஸ்ரீதேவியின் இடுப்பெல்லாம் நமக்கு  அமையா விட்டாலும் மூக்குத்தியாவது வங்கி விடுவது என்று வாங்கி விட்டேன்.   அதற்கும் ஒரு மூக்கழகு வேண்டாமா. என் மூஞ்சிக்கு அது சகிக்கவில்லை.    ஒரு வருஷம் கழித்து அதையும் மாற்றி வெறும் ஒற்றைக்கல்  வாங்கி அணிந்தேன். தேவலை என்றிருந்தது.

ஒரு நாள் ஆபீஸ் நண்பர் ஒருவர் என்னை உற்று உற்று பார்க்க என்ன என்றேன்.

உஷா உங்க மூக்குத்தி எங்க  காணும் என்றார்.  நான் அவசரமாய் மூக்கைத் தடவ அதன் கடுகு போன்ற மேற்புறம் உடைந்து எங்கேயோ விழுந்திருக்க,  உள்ளே தாண்டும் திருகும் பத்திரமாயிருந்தது. எப்போது எப்படி அது உடைந்தது என்று புரியவில்லை.   அன்று முழுக்க எல்லாரும் என்னையே பார்ப்பது போல் தோன்றியது.

இப்போது மிகச்சிறிய ஒற்றைக்  கல்  வைர மூக்குத்திதான் பத்து வருடமாய்
மூக்கோடு கிடக்கிறது.   போன வருஷம் எனக்கு உடல் நலம் குன்றி ஒரு பயாப்சி அறுவை சிகிச்சைக்கு அட்மிட் ஆனா போது டாக்டர் மூக்குத்தியைக் கழட்டச் சொல்லி விட்டார். அதோடு அனஸ்தீசியா  கொடுத்தால் அது கரிந்து போவதோடு உனக்கும்  ஆபத்து என்றார்.    அன்று முழுக்க நானும் வித்யாவும் பிரம்ம பிரயத்தனப் பட்டும்  அது அசைவேனா என்றது.  மூக்கு வலித்ததைத்தவிர வேறு பலனில்லை.    என்னைப் பிரிய அதற்கு இஷ்டமில்லை என்பது போல்  கல்லு மாதிரி இருந்தது.  எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  உடம்பில் இரத்தமில்லாததால் ரெண்டு பாட்டில் ரத்தம் வேறு எனக்கு  ஏற்ற ஆரம்பித்தார்கள்.  மூக்குத்தி கழட்ட என்ன வழி என்று புரியவில்லை எனக்கு.

மயக்க மருந்து அளிக்கும் மருத்துவர்  பரிசோதிப்பதற்காக   வந்த போது   நிலைமையைச் சொன்னோம்.   ஒரு நர்சும் வந்து முயன்று பார்க்க அது அவளுக்கும் பெப்பே என்றது. சரி நான் பார்த்த்துக்கறேன் என்றார்.   எனக்கோ கற்பனை கொடி கட்டி பறந்தது. மயக்க மருந்தில் மூக்குத்தியோடு மூக்கும் பற்றிக் கொள்வது போல்  நினைத்து பயந்து கொண்டிருந்தேன்.  நல்ல காலம் டாக்டர் மிக சாமர்த்தியமாய்   எனக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டார். என் மூக்கும் மூக்குத்தியும் பிழைத்தது.

மூக்குத்தி பற்றி நினைக்கும் போது   எனக்கு இன்னும் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.  என் ஆறேழு  வயதில் சாந்தி தியேட்டரில் நடந்தது அது. இப்போது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிப்பேன்.   அடுத்த பதிவில் அதை எழுதுகிறேன்.

Sunday, November 23, 2014

அரசூர் வம்சம்

ஒரு வழியாய்  இரா.முருகனின் "அரசூர் வம்சத்தை  இன்று  வாசித்து முடித்தேன்  . முழுமையான மேஜிகல் ரியலிசம்.    இதற்கு முன்  லா.சா.ரா. வின்  சில மாய யதார்த்தக் கதைகள் படித்திருக்கிறேன்.  லா.சா.ரா.வின் மொழி வளம் தீயைத்தீண்டுவது போலிருக்கும்.   புதுமைப் பித்தனின் கடவுளும் கந்த சாமிப் பிள்ளையும்   கூட இந்த வகைதான். அரசூர் வம்சத்தில் முருகனின் நடை அசைந்தாடும் படகில் அலைகடலில் முன்னும் பின்னும் நகர்வது போல் ஒரு இதமான எளிமையான பிரயாணமாக  இருந்தது.    இதற்கு முன் எத்தனையோ பேர் இது குறித்து எழுதியிருக்கக் கூடும்.  நான் மிகத்தாமதமாகப் படித்திருக்கிறேன்.   என்  பங்காக நானும் இது பற்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

தனக்கு விருப்பமான் ஒரு மாய உலகம் , மாய மனிதர்கள்  இவர்கள்  மூலம், ஒரு வம்சத்தின் வேரைத் தேடி அலையும் முயற்சியின் பலனாக  இது வெளிப்பட்டிருக்கிறது.   படகு  மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. சில நேரம்  அது ராஜாவாயிருக்கும்.  சில நேரம்  நித்ய சுமங்கலி சுப்பம்மா, சில நேரம் சாமிநாதன் எனும் சாமா,  கிட்டாவையன்,  சங்கரன்,  சாவக்காட்டு வேத பிராம்மணன்,  கொட்டக் குடி தாசி,  அந்தரத்தில் மிதந்து  கொடி மரத்தை அசுத்தம் செய்யும் வயசன்,    சிநேகாம்பாளின் கருவிலிருக்கும் சிசு, யந்திரத்தில் கொட்டமடிக்கும் தேவதைகள்   என்று இப்படி பல படகுகள் மூலம் பல புதிர்கள் அவிழ்கின்றன. 


ஒரு வரி கூட விடாமல் உன்னிப்பாகப் படிக்க வேண்டிய புதினம்.   வாசிப்பு சங்கிலியில் ஒரு கண்ணி  விடு பட்டாலும் மீண்டும் பக்கங்களை முன்னோக்கி புரட்ட வேண்டியிருக்கும்.  சில இடங்களில் மீள்வாசிப்பு என்பது இன்றியமையாததாகிறது. 

பனியன் சகோதரர்களின்  வடிமைப்பு  நுணுக்கமாய் புரிந்து கொள்ளப்பட வேண்டிய  ஒன்று.  எதிர்காலத்தின் அலங்கோலங்களும்,  இறந்த காலத்தின் அழகும், பெரு மூச்சுகளும்,  நிகழ்காலத்தின் நிதர்சனங்களும்  அவர்கள் மூலம் கட்டியம் கூறப்பட்டுள்ளன.   கதை நடக்கும் நூற்றாண்டில் இல்லாத  சில பல எதிர்கால கண்டு பிடிப்புகளில் அவர்கள் பயணிப்பது  அவர்களின் வடிவத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறது எனலாம்.  பழுக்காத்தட்டு,  புகைப்படக் கருவி,  ஆபாசப் புகைப்படங்கள்,  மோட்டார் வண்டி,  இந்த வரிசையில் கணிப்பொறியும் எட்டிப் பார்க்குமா என்று  நான் காத்திருந்தேன். 

அரசூர் வம்சத்து  மாந்தர்கள் எல்லாரது  மனசிலும் காமம் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.  இந்த அலை சமுத்திர அலைகளுக்கு நேர்மாறானது. வெளித்தோற்றத்தில் அமைதியும் உள்ளே எந்நேரமும் அலையடிக்கும் காமமுமாக   இவர்கள் அலைகிறார்கள்.   இதுதான் மனித இயல்பாக எல்லா காலத்திலும் இருக்கிறது  என்பதை மறுப்பதற்கில்லை.   யாராவது  சரியான கோணத்தில் யந்திரம் பதித்தால் இது கொஞ்சம் அடங்கி மனசு அமைதியாகுமோ என்னமோ. 

பைத்தியக்காரனாக சித்தரிக்கப் பட்டாலும்  சாமாவிடம்  இருக்கும் உண்மையும்,  அவன் அறிவு தீட்சண்யமும்  புரிந்து கொள்ளப் பட வேண்டிய ஒன்று.  அவனது சுய மைதுனமும் விந்துத்  தெறிப்பும்,  செத்துப் போன மூத்தகுடி பெண்ணுடனான  சம்போகமும்,  எவ்வித அருவறுப்பும் ஏற்படுத்தாமல் அவனை ரசிக்க வைத்திருக்கிறது. முருகனை இதற்காக  பாராட்டத் தோன்றுகிறது. 

இன்று தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யத்திற்கும் அன்றே வித்திடப்பட்டிருக்கிறது.   வாழ்தலுக்காக (survival )  மனிதன் தன்னை எதனோடும் சமன் செய்து கொண்டுதான் இருக்கிறான்.  பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, தேவைகளுக்காக வேதம் மாறும் கிட்டாவைய்யன், குரிசு சுமக்கும் அவன்  வாரிசுகள்,   துரைத்தனம் கொடுக்கும் மான்யம் போதாமல்  அரண்மனையின் பகுதிகளை புகையிலை அடைக்க  கொடுக்கும் ராஜா,  வியாபாரத்திற்காக  துருக்கரோடு  கூட்டு சேர்ந்து  கப்பலேறிச சென்று  வெள்ளைக்க்காரிகளிடம்  கற்பிழக்கும் சங்கரன்,   என்று எல்லோருமே இதற்கு சாட்சிகள். 

எண்ணங்களை குவித்து  அதன் அலைகளை வேறொருவருக்கு கடத்துவதன் மூலம் இருந்த இடத்திலிருந்தே செய்ய வேண்டியவற்றை செய்யலாம்   என்ற 
விஷயமும் சரியான சமயத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.   

ஓரிடத்தில் ராஜாவின்  நினைப்பாக இரண்டு வரிகள்  இருக்கும். 

" சீக்கிரம் இதெல்லாம் முடிந்து விடும் என்றது அவருடைய மனம் 
   இது முடிந்து இன்னொண்ணு  ஆரம்பிக்கும் என்றது புத்தி" 

மிக முக்கியமான வரிகள் இவை.   அரசூர் வம்சம் முடிந்து விடுவதில்லை. அதன் மாந்தர்கள்  எல்லா காலத்திலும் வேறு சட்டை அணிந்து,  இருந்து கொண்டே இருப்பார்கள்.  பிறன் மனை குளிப்பதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்..  புதிது புதிதாய் வியாபாரம் செய்வார்கள்.  தாசியின் நினைப்பிலிருப்பார்கள்.  சுய மைதுனம் செய்வார்கள்.  தேவைக்காக வேதம் மாறுவார்கள்.   பனியன்  சகோதரர்கள் அவர்களை எதிர்காலத்துக்கும் நிகழ் காலத்திற்கும்  இறந்தகாலத்திற்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பார்கள்.  

இந்நாவலில்  சம்பவங்களோடு,  மிக மெல்லிய இழையாய் காமமும் புணர்ச்சியும்  நாவல் நெடுக நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால்  கிஞ்சித்தும் முகம் சுளிக்க வைக்காமல்  தன மொழி வளத்தால் நம்மை வியக்க வைக்கிறார் முருகன்.   நிறைய புது வார்த்தைகளை  நான் கற்றுக் கொண்டேன்.  மலையாளம் அறிந்தவர்களுக்கு இன்னும் கூட கூடுதல் சுவாரசியமும் புரிதலும் ஏற்படும்.  ஆனால்  நிச்சயம் அது ஒரு தடையாக இருக்காது. 

குறை என்று ஒன்றுமேயில்லையா?  இருக்கிறது அது  இரா.முருகனுக்கு மட்டும் சொல்லப்படும்.  பலர் காண பாராட்டு,  குறையை தனியே சொல் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் என் மூத்த குடி மக்கள் .

புத்தகம் கிடைக்குமிடம்
கிழக்கு பதிப்பகம்,
ராயபேட்டை,  சென்னை-14






Thursday, November 13, 2014

சுகந்தா காளமேகம்



சுகந்தா காளமேகம்.  தேனும் வெண்ணையும் கலந்து வழுக்கிக் கொண்டு வழியும் அற்புத குரலுக்கு சொந்தக் காரர்.  படாடோபம் கிடையாது. அலட்டிக் கொள்ளத் தெரியாது.   சுத்த சங்கீதம் மட்டுமே பாடத்தெரிந்தவர்.  2006 ல் ஒன்றாக நாங்கள் கயிலாய யாத்திரை செய்தோம் அன்று முதல் ஒரு extended  familiy  போல் ஆகி விட்டவர்.

2008 ல் ஆதி கயிலாய யாத்திரை   சென்று வந்த பிறகு நானும் கவிதாவும் பக்காவாக அந்த யாத்திரையை  ஒரு வீடியோவாக தயாரித்தோம் வீட்டிலேயே.   தமிழில் நானும், ஆங்கிலத்தில் சுகந்தாவும் voice over கொடுத்தோம். அதற்காக வீட்டுக்கு வந்த போது  காலா என்னுமிடத்திலிருந்து புத்தி என்னுமிடத்திற்கு செல்வதற்கான விவரிப்பை அதன் அழகான வர்ணனைக்கு பொருத்தமாகத்  தோன்றுவதாக சொல்லி  சட்டென  மோகன ராகத்தில் அவர் பாடிய அழகு..... hats off  to  Sugandha Kalamegham.   யாம் பெற்ற இன்பம் சங்கீதம் பிடிக்கும் அனைவரும் பெரும் பொருட்டு இங்கே ப்கிர்ந்திருக்கிறேன்.