Wednesday, April 27, 2016

உப்புக் கணக்கு (மதிப்புரை)



எனது உப்புக்  கணக்கு  புதினத்திற்கு  சந்தக்  கவி அய்யா   எழுதிய  மிக  அழகான  மதிப்புரை இது.    

                                                          *****************************************


உப்புக்கணக்கு இது தப்புக்கணக்காகி விடுமோ.
சிறிது கூடினாலும் கரிக்குமே. சிறிது குறைந்தாலும் சுவைக்குமோ.
உப்பமைந்தற்றால் புலவி
அளவினும்,மிகினும் நோய்செய்யுமே.
சரித்திர நிகழ்ச்சிகளில் பல கரிக்கத்தான் செய்யும். ஒருவருக்கு இனிப்பது மற்றவருக்குக் கரிக்குமே.
நானூற்றுப் பதினைந்து பக்கநாவல் அதுவும் எம்பக்க ஊர்நிகழ்ச்சிகளாயிற்றே
என்று எண்ணித்தான் தொடங்கினேன். விட்டுவிட்டு ஒரே நாளில் முடித்தேன் நேற்று. பின் வேறு எதுவும்
ஓடவில்லை.
நிறையப்பேர் பாராட்டியுள்ளனர்.நாமென்ன பாராட்டுவது என்றொதுங்கவும் மனம் வரவில்லை.
தீயதை எதிர்ப்பதுபோல நல்லதையும் பாராட்டவேண்டும். இதுவே சாத்திரநீதி.
பாராட்டுவதற்கே எங்கிருந்து தொடங்குவது என்றகுழப்பமிருக்கையில், இவர் குழப்பமான சரித்திர
நிகழ்வுகளைச் சரியான புள்ளியில்தொடங்கி முழுமையான வட்டத்தில் அழகாகக் கோலமிட்டிருக்கிறார்.
காவிய ஓவியப் புலவரன்றோ இவர்.
வாயுங்கையும் பேசும்பொழுது எதிரடிக்க யாவரே உளர்.
விறுவிறுப்பான கதையைக்கற்பித்துக்கதைக்கும் உயிரூட்டிச் சத்தியத்தைத் தொட்டுவிட்டார்.
தாத்தாக்களை உலாவவிட்டுத் தாத்தா இல்லாத இக்காலத்தாருக்கு ஏக்கத்தை வரவழைத்துவிட்டார்.
கல்யாணத்தாத்தா வாகவே படிக்கிற எம்மையும் ஆக்கியதழகே.
வெறும் வரட்டுச் சொற்களைக்கூறாமல், ஒவ்வொரு வாக்கியத்திற்கும் உயிரூட்டிவிட்டார்.
அக்காலக்கல்யாணம் சாத்திரம் விதித்தபடியே இளமைக்கல்யாணம்.
பதினேழு(தாத்தா,) பதினொன்று(பாட்டி) வயதுக்கல்யாணம்.
நண்பர்களுக்குப் பதினாலில் என்று கொள்ளுத்தாத்தா கூறுவதில் எத்தனையோ ரகசியங்களுள்ளன.
இக்காலத்திற்குப் பொருந்தாததுபோலத்தோன்றலாம். முன்னோர்கள் மடையரல்லர்.
த்வயஷ்டவர்ஷ: அஷ்டவர்ஷாம் கன்யாம் உத்வஹேத்.
பதினாறு வயதுடையவன் எட்டுவயதுப்பெண்ணை மணந்துகொள்ள வேண்டுமென்பது சாத்திரம்.
இதனால் ஆணிற்பாதிவயதானவளே பெண் ஆவாள்.
ஸ்ரீ இராமபிரானுக்குப்பனிரண்டில் திருமணம். சீதைக்கு ஆறுவயது.
இக்கதையில் ஒருபெண்ணின் இளமைக்கல்யாணம் விவரிக்கப்படுகிறது அழகாக.
பாட்டியும் பதினோருவயதுப்பெண்ணாய்ப் பேசிய இடங்களை நயமாக வருணித்துள்ளார்.
அஷ்டவர்ஷா பவேத் கந்யா நவவர்ஷாது ரோஹிணீ
தசவர்ஷா பவேத்கௌரீ அத ஊர்த்வம் ரஜஸ்வலா.
என்ற சாத்திரத்தினால் எட்டுவயதுப்பெண்ணே கந்யா என அழைக்கப்படுகிறாள்.
இவ்வயதுதான் கந்யா தானமாகும். இதற்குமேற்பட்டால் கந்யாதான பலனில்லையாம்.
இக்காலம் எந்தத்தந்தைக்கும் இப்பலனில்லை
காலமாற்றத்தில் தர்மங்கள் மாறுகின்றனவா. அதர்மமாகின்றனவா.(கலி விசேடம்)
எல்லாநிகழ்ச்சி விவரிப்பதையும் குறிப்பிடவேண்டும். ஆனால் இதுவே மற்றொரு காப்பியாகிவிடும்.
மனவயது,உடற்பயிற்சி,யோகா, வயிறு முன்னால வந்தால் ஆரோக்யம் பின்னாலேபோய்விடும்,
மாடியிலிருந்து பெண்களை வேடிக்கைபார்க்கும் விடலையானாலும் நாகரிகமாக ஓவியரசனைஎன்றது,
உயர்வானாலும் உள்ளூர்ச்சரக்குக்கு மவுசில்லை,(தாத்தாவுக்கு),சுதந்திர விழாக்கொண்டாட்டம்,
தியாகிகளின் தியாகம்,
வெளிநாட்டு மோகமுள்ளவனிடம், வெள்ளையனை விரட்ட தாத்தாபட்ட கஷ்டம் தெரியாமல்,
நீ வெள்ளைக்காரியைக் கூட்டிவந்துவிடாதே என்றதும், மயிலைவருணனைகள்,
இரவில் பெருச்சாளி நடமாட்டம், அக்காலப்பெண்மணிகள்(பாட்டி) ச்ராத்த ச்ரத்தையைச் சாத்திரிகள்
புகழ்வது,அன்னபூரணியவதாரமே, என்றது,
வாழ்வு வெறுத்தாலும் விதிப்படிதான் உயிர் போகும்,
திருமூலரின்படி உடம்பே ஆலயம், அவரவர் வாயே கோபுர வாசல், எனவே வாசல்வழியே கண்டகண்ட
குப்பையும் கூளமும் தள்ளாதே.உடம்புளே உத்தமன் உள்ளான் என்றதும்,
நோய்வராமற்காக்கமகிழ்ச்சியாயிரு என்பதும்,
பாரதத்தாயின் பெருமைகளும்,
பேரனிடம் வெளிநாடு போகவேண்டாம் எனக்கூறாமல் நன்மைதீமைகளைக்கூறி ,கண்ணன் அர்ஜுனனிடம்
கூறியதுபோல நீயே முடிவெடு என்றதைப்போலவும், சீதை
இராமனிடம்,ஆரண்யத்தில் பலப்பலசொல்லி ,இறுதியில் நீயேமுடிவெடு என்றதுபோலவும்
சுதநதிரத்தில் தலையிடக்கூடாது என்பதில் உறுதியான தாத்தாவைச் சுதந்திர வாதியாகக்காட்டியதும்,
அக்கால தெவச சூழ்நிலையைக்கொண்டுவந்து எங்கள் இல்ல ஒற்றுமைத் தெவசத்தை நினைப்பூட்டியும்,
அனந்துவும் விஜியும் பேசிய நயமான முதிர்ந்த காதற்பேச்சுக்களும்,
உள்மனத்தியானத்தின் ஏற்றமும்
அதர்வண வேதம்படித்தவன் எதற்கும் நடுங்கமாட்டான்,தர்வம்னா நடுக்கம் அதர்வம்னா நடுக்கமின்மை
எனவே நன்மையே பேசு,நினை,செயற்படு என்ற வேத உபதேசமும்,
தீ வளர்த்திடுவோம் என்ற அக்கால ப்பெரியோரின் உலகநன்மைச்செயலைப் பாரதி பாடலாலும்,
(என்தாத்தா ஒரு நித்ய அக்னிஹோத்ரி. அதனால் எரிவாத்யார் குடும்பம் என்றழைப்பர் எங்களை)
மன்னார்குடி என்ற என் ஊர் காபிகிளப் காரரைப்பற்றியும்,
பிரமசர்யம் என்பது ஒருவித சுதந்திரம்தான். இதைச்சுதந்திரம் என்று எண்ணுபவனுக்குக் கல்யாணம்
என்பது கஷ்டமான சிறைதான் என்றதும், இஸ்லாமியரின் தியாகத்தையும் நடுவு நிலையுடன் விளக்கிய
இடங்களும்,கத்தியின்றி,ரத்தமின்றித் தியாகிகள் பட்ட அவஸ்தைகளும், கம்பீரமும்,
இராஜாஜி,சநதானம் போன்ற அறிஞர்களின் சமயோஜித புத்தியின் நிகழுவுகளும்,
மாறுவேடப்போட்டிவிளையாட்டைத்தத்ரூபமாக ஆக்கிய விதமும்,
அதில் சாத்திரியின் காமம்போலக்காட்டி,ஏமாற்றிய அன்பின்திறமும்,
விஷ்ணுச்சக்கரம் போன்ற அப்ப வருணனையும்,
பாழ்பட்ட அக்னீஸ்வரர் கோயில் வர்ணனையும்,அதில், கடவுளுக்கு ரூபமுண்டா, விஸ்வத்துக்கு ஏது ரூபம்.
எங்கும் நிறைந்திருக்கும் ஒரு சக்திக்கு எப்படி உருவங்கொடுக்கமுடியும். இவையெல்லாம் மனுஷனோட
கற்பனை.அதேநேரம் அவன் சாதாரண மனுஷன்னு யாரும் அலக்ஷியப்படுத்திடக்கூடாதுன்னு நாலுகை
எட்டுக்கை,ஆறுமுகம் ,மூணுமுகம்னு அவனை வித்யாசமாக உருவகப்படுத்தினான்
என்ற வித்யாவின் வாக்கில் அத்வைதம் கரைபுரண்டு கொட்டுகிறது.


நீ எதன்மூலம் என்னைக்காண்கின்றாயோ அதுவே நான் என்கிறான் கிருஷ்ணன். இது வித்யா. இதைத்தான்
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்.
எவர்கள் எப்படியாகவேணுமென்று என்னைப் பஜிக்கிறார்களோ, அவர்களைக்குறித்து, அப்படியே அடைவதற்குத்
தகுந்தபடி நான் என்னை ஆக்கிவைக்கிறேன் என்றான் கண்ணன்.
ஆழ்வாரும்,
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் நானே, என்றும்
நெஞ்சினால் நினைப்பான் யாவன் அவனாகும் நீள்கடல் வண்ணனே. என்றார்.
சாத்திரங்களில், நான் பரமபதத்தைவிட கோயில்களில்தான் மகிழ்கிறேன் என்கிறான்.
எனவே,கல்,மரம்,மண், உலோகம் முதலியவற்றில் நான் ப்ரவேசிக்கிறேன். மந்திர உச்சாடனங்களால்
அதற்கு வலு ஏற்படுகிறது. வழிபடுவோர்க்கும் பயன். என்ற ஆகம ,சாத்திரக் கருத்துக்களையும்
நடுநடுவே புகுத்திச்செல்கிறார் நூலாசிரியர்.
இப்படி ஊர்ஊர்தோறும் சென்ற சத்தியாக்கிரகிகள்,நடுநடுவே காந்திஜியின் மதுஒழிப்புப் பிரசாரத்திலும்
ஈடுபடுகின்றனர் என்று நடந்ததை வர்ணிக்கிறார்.
ஓரிடத்தில் ஏழு படங்களைக் காட்டி மக்கள் மனத்தை மாற்றுகிறார்கள்.
மேலும் ஓரிடத்தில் தலைவர்(இராஜாஜி), கள்ளின் தீமைகளை விளக்கி, உங்கள் குடும்பம் ஏழ்மைநிலை மாற
நான் சொல்வதைச் செய்வீர்களா என்றார்.
கூட்டம் உடனேயே என்னசெய்யவேண்டுமென்று சொல்லுங்கள், செய்கிறோம் என்றது
நிச்சயம் செய்வீர்களா
நிச்சயம் செய்வோம் என்றது
இந்தச் செய்வீர்களா என்ற மந்திரச்சொல்லை, இன்றுள்ள தலைவர் கூறுவதற்கு, அடித்தளம் அமைத்தார் வித்யாஜியே.
மேலும் ஓரிடத்தில் தலைவர் நாம் யாரிடமும் ஏமாறக்கூடாதல்லவா என்றார்.
கூட்டமும் ஆம்ஆம் ஏமாறக்கூடாது என்றது.
அப்படியானால் நாம் நினைவிழக்கக்கூடாதன்றோ என்றார்.
கூட்டமும் ஆம் ஆம் என்றாமோதித்தது.
நம்நினைவை அழிப்பது மதுவன்றோ. ஏமாறலாமா என்றவுடன் தான் மக்களுக்கு உரைத்தது.
இனிமதுவைத்தொடோம் எனச்சத்தியம் செய்தனர்.
இதுவன்றோ மதுஒழிப்புப போராட்டம்.
இப்படித் தீண்டாமை ஒழிப்புக்காகச்சேரிகளிலும் தங்கிப் பிரசாரம் செய்தனர்.
பயணம் பலப்பல ஊர்களைக் கடந்து ஐயாற்றை அடைந்தது(பலப்பல ஊர்ப்பெயர்களைச்சுட்டி
நிகழ்வில் தொய்வு ஏற்படாமல் அழைத்துச்செல்கிறார்.
மாதர்பிறைக்கண்ணியானைச்சத்தியாக்கிரகிகள் கண்டு, கயிலைக்காட்சி குள தரிசனமும் செய்து
அம்பாளின் விசேஷ தர்சனமும் செய்யவைக்கிறார்.(சத்தியாக்கிரகிகள் சக்திபெறவேண்டி)
அடுத்தது அம்மன்பேட்டை .வடுவூர் துரைசாமி ஐயங்காருடைய பூர்ண சந்திரோதய நாவலின்
நாயகி கூத்தாடி அன்னத்தின் பேட்டையாயிற்றே.
இப்படிப் பெருங்கூட்டமும் கூட்டி அரசைத் திணறடித்து ,கட்டுப்பாடுடனும்,கண்ணியத்தோடும்
பெரும் தியாகங்களைச் செய்த கர்மவீரர்களையன்றோ படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
தஞ்சைக்கலெக்டரின் கடும் ஆணையால் உதவிகளெல்லாம் தடைசெய்யப்பட்டாலும்,
தமிழக மக்களின் அறிவாற்றலால் எல்லா உதவிகளும் கிட்டின.
சாப்பாட்டையே தடுத்தனர்.
ஆனால் மக்கள் ஆங்காங்கே மரக்கிளைகளில் பலவித உணவுப்பொட்டலங்களைக் கட்டிவைத்து,
மப்டியில் இவர்களுடனிருந்த போலீஸாருக்கும் தெரியாமல் அறியச்செய்து உணவூட்டினர்.
உப்பே அமிர்தம். உப்பில்லாதன குப்பையிலே என்ற இன்றியமையாத உப்பை முடக்கிவிட்டு
இலண்டன் உப்பை இந்தியாவிற்குள் விற்கும் முயற்சியை முறியடிக்கவே இத்தனைப்போராட்டம்.
ஓரிடத்தில் தங்கிவிட்டுப் புறப்படும்முன் மிக ஒழுங்காகக் கிளம்புவதை எப்படிக்கூறுகிறார்பாருங்கள்.
பெரும் கூட்ட வரிசையில் முன்பு தலைவர்களுடன் வயதான முதியவர் ஒருவர் முன் நிற்கிறார்
நீண்ட தாடியும்,காவிவேட்டியும்,உடம்பில் துவாதச நாமங்களும்(பனிரண்டு திருமண்ணுடன்)
தடியில் கட்டித்தொங்கவிடப்பட்ட ஓலைப்பையுமாய் ஒருமுதியவர்,
""திக்விஜயம் புறப்பட்ட ராமானுஜர் மாதிரி தெய்வீகமாய்த் தோன்றினார். என்றதழகே.
ஓரூரில் சாப்பிடமுடியாமல் செய்ய சாமர்த்தியமாகப் பத்துப்பத்துப்பேராகப் பலப்பல இடங்களில்
உணவுண்ணவைத்துக் கூடவே இருந்த காவலர்களையும் ஏமாற்றிய தலைவரன்றோ முன்நிற்கிறார்.
ஒருவழியாக வேதாரண்யம் அடைந்தனர் சத்யாக்கிரகிகள்.
இடையிலே மன்னார்குடி முதலிய ஊர்நிகழ்ச்சிகளைக்கூறின் படிப்பவர்க்குச் சோர்வுண்டாகுமே
என்றுகருதியே கூறாதுவிட்டாரோ.
இது தவிர்க்க முடியாததே.
ஐந்தும் மூன்றும் எட்டு, ஏ ப்ளஸ் பி ஹோல்ஸ்கொயர் இப்படியான இடங்களில் ஏற்படும்
சிறு அலுப்பைத் தொடர்ந்து செய்யாமல் மீண்டும் எழுத்துக்குக்கள்ளூட்டி(சோமரசம்)
படிப்போர்க்குப் பரவசம் ஊட்டுகிறார்.

கூட்டம் ஒருவழியாக வேதாரண்யம் சென்று தங்கியது.
வெள்ளையரசு எப்படியாவது வெள்ளை உப்பள்ளுவதைத் தடைசெய்ய எண்ணியது.
ஆனால் தலைமை ஏற்ற இராஜாஜி முதலியோரின் முயற்சியால், குறித்த நேரத்திற்கு முன்பே உப்பெடுத்துச்
சேமிக்கப்பட்டது.
அதிலும் எடுக்குமிடத்தில் கள்ளிச்செடிமுள்ளைப்போட்டுத் துன்புறுத்தினர்.
சிறைநிரம்பிற்று. ஒவ்வொருநாளும் புதுப்புதுத் தலைவர்கள்.
சிறையிலும் சித்ரவதை.
இப்படிப் பெற்ற உண்மை வரலாறன்றோ இது. இளம்தலைமுறைக்குப் பாடமாக்கலாம்.
இதோடு முடிக்காமல் கதைத்தொடர்ச்சியை மீண்டும் விறுவிறுப்பாக்கினார்.
இந்திய சுதந்திர வரலாறு தொடர்கிறது.
நடுவிலே கல்யாணத்தாத்தாவின் பண்பாடான குடும்ப வரலாறு பல பண்புகளைப்படிப்பவர்க்குச் சொல்கிறது.
கதாநாயகன் கல்யாணத்தின் குழந்தைக்கல்யாணம் போற்பல.
இஸ்லாம் மத ஒற்றுமை .(அனைவரும் தீவிரவாதிகளல்லர்)
கல்கத்தா இந்தியர்களின் சாத்விகத்தால் ஏற்பட்ட பலி.
லாகூர் க்கலவரம். ஆர்.எஸ்.எஸ் உதவி.
இப்படி ஏராளம்.
இதில் எனக்குப்பிடித்தது ஜின்னா ஆதரவாளர்கள் செய்த கொலை,கொள்ளை,கற்பழிப்பு
முதலிய உண்மை நிகழ்வுகளை இவர் மறைத்து மேற்போக்காகப் பூசிவிடுவாரோ என்றிருந்தேன்.
செம்மையான சாட்டையடி போல விவரித்துள்ளார்.
இங்குள்ள போலிப்பெண்ணியவாதிகளைப் போல மறைக்காமல் சீறியுள்ளார்.
ஒவ்வொரு தலைப்பிலும் மிகப்பொருத்தமான பாரதியின் சிந்து முதலியவற்றையல்லவா செதுக்கிவிட்டார்.
மஹாத்மா காந்தி எத்தனை நன்மைசெய்தாலும் இறுதியில் அவர்பேச்சு செல்லாக்காசானது.
அவர்மீதும் பலப்பல குற்றச்சாட்டுக்கள் நிரம்பிய நூல்கள் வந்துவிட்டன.
ஒருமதத்தார்க்கு மட்டும் உபதேசமா. என்ற கல்யாணத்தாத்தாவழியாகக் கேட்டுக்கோபத்தை வெளியிட்டாலும்
என்னசெய்வது,நான்சொல்வதைக்கேட்கும் நல்லபிள்ளைகளிடம் தானே(இந்துக்கள்) கூறமுடியும்
அவர்கள் அடங்காப்பிடாரிப்பிள்ளைகளே என்று சமாதானம் ஓரளவுக்கு ஏற்புடைத்தானாலும்,
கொலை,உடைமை அபகரிப்பு,கற்பழிப்பு இதனை எப்படி மற்றொரு குழந்தையிடம் செய்வதைப் பொறுத்துக்
கொண்டார்.
எனவே இவர் வெறும் மகாத்மாவாகவே ஆனார்.
ஆனால் பாரதி,
பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதிமிதித்துவிடு பாப்பா முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
என்றன்றோ சீறிப்பாய்கிறான்.
தீமையைப் பார்த்துக்கொண்டிருப்பதும் பாவம், பாவம் காந்தி.
அதனால் தான் பொறுமை மீறியபோது,எல்லைதாண்டியபோது,
அர்ஜுனா, ஆசிரியரானாலும் விடாதே. அதர்மக்கூட்டத்தை அடி என்ற கீதைபிறந்த நாடு. இதுவேதர்மம்
இவனே பரமாத்மா..மஹாத்மா இல்லை.
ஆனாலும் சொல்லவேண்டியதைச்சொல்லி சிந்துதேச முடிவுடன் அழகாக முடித்துள்ளார்.
உப்புக்கணக்கு நூல் கரிக்கும் உப்பில் தொடங்கினாலும் வெற்றிபெற்று
இந்துப்பில் நிறைவுபெற்றது.
சரஸ்வதி பாய்ந்த ஸிந்துதேசம்(இங்குத்தான் இந்துப்பு என்ற நல்ல உப்பு, நோய்நீக்கும் உப்பு, ராக் ஸால்ட் என்ற
பெயரில் கிடைக்கிறது. இது ஆயுர்வேத,சித்தமருத்துவரின் பெரும்பாலான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
நானும் முப்பது வருடமாக இச்சிந்துப்பையே உணவுக்கும் பயன்படுத்துகிறேன்.
நோயின்மைக்கு இவ்வுப்பும் காரணம்.)
ஆதலால் கல்லுப்பில்(கடலுப்பில்)தொடங்கிய இவ்வரலாற்றைச் சிதைக்காமல், மூலத்தை மாற்றாமல்
கற்பனா பாத்திரங்களுடன் வந்த சத்திய சோதனை நூலாகவே ஏற்போம்.
வாழ்க வித்யாஜி. அடுத்த சுதந்திர நாவலெழுதக் கண்ணனும் முக்கண்ணனும் அருள்வானாக.

                            ***************************************************************************************

சந்தக்  கவி ராமசாமி  அய்யா தன்யளானேன். எத்தனையோ பேர் இது குறித்து எழுதினார்கள். உங்கள் வார்த்தைகளின் ஆன்மா என்னை அசைத்து விட்டது. கண்ணீருடன் இதை எழுதுகிறேன். உங்களை நமஸ்கரிக்கிறேன். என் உப்புக்கணக்கு இன்று பேறு பெற்று விட்டது. ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு நுணுக்கமாக வாசித்து நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். //செய்வீர்களா // இதை  நானே கவனித்ததில்லை. இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் ரசித்து சிரித்தேன்.

நான் செய்த பாக்கியம் தங்கள் நட்பு கிடைத்தது. கல்யாணம் தாத்தாவை வெறும் கதாபாத்திரம் என்று நான் எண்ணியதில்லை. கபாலி கோயிலின் மேற்கு வாசலுக்கும் தெப்பக்குளத்திற்கும் இடைப்பட்ட ரோடில் நடக்கும் போதும் சரி, அண்ணாமலையார் சந்நிதி முன் அமரும் போதும் சரி அவரை என் கண்கள் அனிச்சையாய்த் தேடும். சிறுவயதில் நான் பார்த்த வடக்கு மாடவீதி வீடு ஒன்றைத்தான் நாவலில் அவர் வீடாக வர்ணித்திருக்கிறேன். அந்த வீடு எப்போதோ வணிக ஸ்தலமாக மாறி விட்டாலும், என் மனசில் மட்டும் இன்னும் இடிபடாமல் இருக்கிறது. மயிலை மாடவீதி வீடுகளை ஹெரிடேஜ் வீடுகளாக அரசு அறிவித்திருந்தால் பழமை மாறாமல் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. பாலக்காட்டில் புதிய கல்பாத்தி அக்ரஹாரங்களை (கல்லிடைக்குறிச்சி க்கு அடுத்த மிக நீண்ட அக்கிரஹாரம் அது) கேரள அரசு ஹெரிடேஜ் கிராமங்களாக அறிவித்து விட்டது. எனவே வீட்டை யாரும் இடித்து கட்ட முடியாது. உட்புறங்களில் ரிப்பேர் செய்து பராமரிக்கவும் அரசே மான்யமளிக்கிறது. அரசு செலவிலேயே அனைத்து வீடுகளுக்கும் வாசற்படிக்கு இருபுறமும் உட்காரும் திட்டுகள் வழ வழவென்று ரெட் ஆக்ஸைடில் போடப் பட்டுள்ளது. ஆனால் மயிலையின் முகமும் ஹெரிடேஜும் வெகுவாக மாறி விட்டது. குடியிருப்புகள் எல்லாம் வணிக ஸ்தலமாக மாறிக் கொண்டு வருகிறது. என்னால் முடிந்த வரை நாவலில் அதன் அழகை விவரித்திருக்கிறேன்.
புதிதாய் ஒரு சந்தோஷம் தொற்றிக் கொண்டது. கல்யாணம் தாத்தாவுக்கு ஒரு உருவம் கிடைத்து விட்ட சந்தோஷம்தான். ஆம். இனி உங்களை நினைத்துக் கொள்வேன். உங்களை விட பொருத்தளானவர் யார் இருக்க முடியும்? நன்றி என்று சொன்னால் அது சாதாரண வார்த்தையாகி விடும். மனசுக்குள் ஏற்பட்டிருக்கும் உணர்வை வார்த்தையில் வடிக்கத் தெரியவில்லை. //கண்ணனும் முக்கண்ணனும்// எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள். இருவரும் என்னிரு கண்களே.
___________/\___________

..

Monday, April 11, 2016

ஈரம் (சிறுகதை)

 ஈரம்

பாதி  வழி  கூட  வந்தபாடில்லை.  தலை சுற்றியது சம்பாவிற்கு.  இன்னும்  நாலைந்து  கிலோ  மீட்டராவது  இந்தப்  பானைகளையும்  தோல்  பைகளையும்  சுமந்து  கொண்டு  நடக்க  வேண்டும்.  அங்கே  எவ்வளவு  பேர்கள்  காத்திருக்கிறார்களோ?  வற்றிப் போன  கிணற்றின்  அடியாழத்தில்  ஒரு  ஊற்றில்  மட்டும்   நீர்  ஊறுகிறது.  அதை  ஒவ்வொருவராய்  தங்கள்  பானைகளில்  சேகரித்து,  எப்போது  தன்  முறை  வந்து  பானைகளும்  தோல்  பைகளும்  நிரம்பி  வீடு  திரும்புவோமா தெரியவில்லை.  திடீரென்று  ஏன்  இப்படி  ஒரு  தண்ணீர்ப்  பஞ்சம்  வந்ததெனத்  தெரியவில்லை.

கண்ணுக்கெட்டிய  தூரம்  வரை  பூமி  வறண்டு  பாளம்  பாளமாய் வெடித்திருந்தது.  சுட்டுப்  பொசுக்கும்  சூரியனையும்  அனல்  காற்றையும்  தவிர  வேறொன்றுமில்லை அந்தப்  பிரதேசத்தில்.  நிறைய  ஆடுமாடுகள்  நீரின்றி  இறந்து  விட்டன.  தண்ணீர்  வற்ற  வற்ற  ஊரிலுள்ளோரின்  செல்வமும்  வற்றிப்  போயிற்று.   பாதி  பேர்  ஊரை விட்டு  குடிபெயர்ந்து  விட்டனர்.  நிறைய  பேர்  வறட்சியில்  இறந்து  விட்டனர்.    வெள்ளம் வந்தாலும்  வறட்சி  ஏற்பட்டாலும்  இயற்கை  ஏழைகளையே  அதிகம்  துன்புறுத்துகிறது.

இந்தத்  துன்பம்  எத்தனை  நாளென்று தெரியவில்லை. வானம்  என்று இரக்கப்படுமோ?   தண்ணீர்  தூக்கித்  தூக்கித்   தோள்கள்  கழன்று  விட்டன. அம்மா ஸ்கூலை  விட்டு  நிறுத்தி  விட்டாள்.  படித்தது  போதும்  தண்ணீர் கொண்டு  வா  என்று  பானைகளோடு  அனுப்பி  விட்டாள். ஊருக்கு  வெளியே ஆறு  கிலோமீட்டர்  தூரத்தில்  ஒரு  அகண்ட  கிணற்றின்  அதல பாதாளத்தில் பாறைக்  கற்களுக்கிடையில்  நீர்  சுரந்து  கொண்டிருக்கிறது.  அந்த  நீர்தான் இங்கிருக்கும்  நூற்றுக்  கணக்கான  குடும்பங்களின்  தொண்டையை   ஓரளவுக்கு  நனைக்கிறது.  வாரத்திற்கொரு முறை  ஈரத்துணி  கொண்டு உடம்பு  துடைப்பதுதான்  குளியல்  என்றாகி  விட்டது.

எப்போதாவது  அரசாங்கத்  தண்ணீர்  வண்டி  வரும்.  ஆளுக்கு  இரண்டு  பானை  தண்ணீர்  கிடைத்தாலே  பெரிய  விஷயம்.  தண்ணீர்  வண்டி  வரும்  வழியிலேயே  அதிலிருக்கும்  நீரை  காசுக்கு  விற்று  விட்டு  மீதியைத்தான்  இங்கு  விநியோகிக்கிறார்கள்  என்று  ஊர் மக்கள்  முணுமுணுக்கிறார்கள்.  அரசாங்கம்  இலவசமாய்  அனுப்பும்  நீரை  உரியவர்களுக்கு  விநியோகிக்காமல்  காசுக்கு  விற்பது  குற்றமில்லையா?  சம்பாவுக்குப்  புரியவில்லை.  மனிதர்கள்தான்  எல்லாவற்றையும்  விற்கிறார்கள்.    மேகங்கள்  மழையை  விற்பதில்லை.  பூமி  தன்  ஊற்றுத்  தண்ணீரையும்,  நதிகளின்  நீரையும்  காசுக்கு  விற்பதில்லை.   எந்த  மரங்களும்  செடிகளும்  தங்கள்  கனிகளையும்  காய்களையும்  விற்பதில்லை.  மனிதன்  மட்டும்தான்  வியாபாரி.

சற்றே  ஓய்வெடுத்துக்  கொண்டு  மீண்டும்  நடந்தாள்  சம்பா.  நீரை ஒட்டித்தான் மனித  வாழ்வு.  நீரை  ஒட்டித்தான்  நாகரிகங்கள்.  நீரின்றி  எதுவுமில்லை.  எது  ஒன்று குறைகிறதோ  அது  இன்னும்   விலைமதிப்பற்றதாகி விடுகிறது.  மனிதன்  அதைத்  தேடி  ஓடுகிறான்.  சேமித்து  வைத்துக்  கொள்ளத்  துடிக்கிறான்.  வியாபாரியோ பதுக்க  முனைகிறான்.  பெரும்  லாபம்  காண  நினைக்கிறான்.  இயற்கையை  உற்று  நோக்கினால், அது  எவ்வளவோ  போதனைகளை  மௌனமாய்க்  கூறும்.  ஆயினும்  மனிதன்  கற்க  விரும்புவதில்லை.  சுயநலம்  அவன்  கண்ணை  மறைத்துவிடுகிறது.

சம்பா  வானத்தைப்  பார்த்தாள்.   இந்த  நீல  வானத்தில் மழை  மேகம்  பார்த்து  எத்தனை  நாளாகிறது!  கடவுளுக்கு  இந்தப்  பிரதேசத்தின்  மீது  என்ன  கோபம்? அந்தக்  கோபம்  நீக்கி  அவரைக்  குளிரச்  செய்ய  என்ன  செய்ய  வேண்டும்?  சம்பா  யோசித்தவாறு  நடந்தாள்.

விவசாயத்திற்கு  மழையில்லை.  குடிக்க  நீரில்லை  என்ற  நிலையில்  தண்ணீர் தேடுவதே  அனைவருக்கும்  வாழ்க்கையாகி விட்டது.  வீட்டு  வேலைகளையும்  கவனித்துக்  கொண்டு    அம்மாவால்  தண்ணீர்  தேடி  அலையமுடியவில்லை.  "பிழைத்துக்  கிடந்தால்  அடுத்த  ஆண்டு  படித்துக்  கொள்ளலாம்  இப்போதைக்கு  தண்ணீர்  கொண்டு  வருவது  உன்  வேலை  என்று  பதினாறு   வயது  சம்பாவின்  படிப்பை  நிறுத்தி  விட்டாள்.  தலையில்  ஒன்றின்  மேல்  ஒன்றாக  மூன்று  பானைகள்,  தோளில்  நான்கு  தோல்  பைகள் என்று  சுமந்து,  சிந்தாமல்  சிதறாமல்  ஆறு  கிலோமீட்டர்  நடப்பது  என  வித்தைக்காரன்  பிழைப்பாகி  விட்டது  வாழ்க்கை.

 காலங்காலையில்  கஞ்சித்தண்ணி  குடித்து  விட்டு  தண்ணீருக்காகக்  கிளம்பினால்  வீடு  திரும்ப  மதியமாகி விடும்.  கொண்டுவரும்  நீரை அன்று  முழுவதும்  மருந்து  மாதிரி  உபயோகிக்க  வேண்டும். வரும்  வழியில்  ஒரு  சொட்டு  தண்ணீர்  வீணாக்கினாலோ  குறைந்தாலோ  காட்டுக்  கத்தல்  கத்துவாள்  அம்மா. கையில்  கிடைத்த  பொருட்களை  எடுத்து  அடிப்பாள்.  தண்ணீர்க்  கஷ்டம்  அந்த  அளவுக்கு  அவளை  ராட்சசியாக்கியிருந்தது  அவளது  கோபத்திற்கு  பயந்தே  கூட  தண்ணீர்  சிந்தாது  நடக்கப்  பழகியிருந்தாள்  எனலாம்.   எத்தனை  நாளைக்கு  இப்படி  நீர்  சுமக்கும்  கஷ்டம்  எனத்  தெரியவில்லை.   ஏற்கனவே  பாதி  ஜீவன்  போய்  விட்டாற் போலிருக்கிறது.  முழுசும்  போய்  விட்டால்  நன்றாக  இருக்கும்  என்று  கூடத்  தோன்றியிருக்கிறது.   எல்லா  அவதிகளும்  தேவைகளும்  உடலுக்குதான்.  ஆத்மாவுக்கு  தாகமில்லை.  குளிரில்லை,  வெப்பமில்லை.  பசியில்லை,  வாழ்தலைக்  காட்டிலும்  மரணம்  இனிதோ  என்று  கூடத்  தோன்றியது  அவளுக்கு.

வெயிலில்  நடந்ததில்  தொண்டை  வறண்டு  போயிருந்தது.  தூரத்தில் இரண்டொருவர்  தண்ணீர்  சுமந்தபடி  திரும்பிக்  கொண்டிருந்தார்கள். கொஞ்சம்  தண்ணீர்  கேட்க  நினைத்தாலும்  கேட்கவில்லை.  நிச்சயம்  தர மாட்டார்கள்.  இவ்வளவு  பாடுபட்டு  இத்தனை  தூரம்  நடந்து வந்து  உயிர்  ஊசலாட  கிணற்றுக்குள்  கயிறு  பிடித்து  பலமுறை இறங்கிச்  சென்று   ஊறிய  நீரை  தோல்  பையில்  சேகரித்து  மேலே  வந்து  பானைகளை  நிரப்பி சுமந்து  வரும் நீரை  எப்படி  கொடுப்பார்கள் ?  ஒரு  கோப்பை  நீருக்கு  எவ்வளவு  உடல்வலி?  அவர்களிடம்  நீர்  கேட்கக்  கூட  மனம்  வராதே.  இன்னும்  சற்று  தூரம்தான்.  கிணறை  நெருங்கி  விடலாம்.  தாகம்  தணித்துக்  கொள்ளலாம்.  உமிழ்நீரால்  தொண்டை  நனைத்துக்  கொண்டு  நடையை  வேகப்  படுத்தினாள்.


எதிரில்  வந்து  கொண்டிருந்த  பெண்கள்  சட்டென  நின்று கீழே  எதையோ  பார்த்தார்கள்.    யாரோ  ஒரு  ஆள்  கீழே  விழுந்து  கிடந்தான்.  அவர்களிடம்  சைகையால்  குடிக்க  கொஞ்சம்  நீர்  கேட்டான்.    அவர்கள்  ஒருவரை  ஒருவர்  பார்த்துக்  கொண்டார்கள்.  தண்ணீருக்காக   கிணற்றுக்குள்  கயிறு  பிடித்து  தொங்கி   இறங்கி  நீர்  சேகரித்ததால்  தங்கள்  கைகளிலும் உடலிலும்  ஏற்பட்டிருந்த  சிறாய்ப்புகளையும்   பார்த்துக்  கொண்டார்கள்.  அவர்களுக்கு  அந்த  மனிதன்  மீது  ஏற்பட்ட  இரக்கத்தை  விட  தங்கள்  மீது  ஏற்பட்ட  சுய இரக்கம்  அதிகமாக  இருந்தது.   ஒரு  துளி  நீருக்கு  எத்தனை  பாடு! அதை  வாரி  வழங்குவதாவது.   அவர்கள்   மௌனமாக அவனைக்  கடந்து  நடந்தார்கள்.  அவர்களைச்  சொல்லிக்  குற்றமில்லை.  கண்முன்னே  நிறைய  மரணத்தைக்  கண்டு  விட்டவர்கள்.

சம்பா  அவனைப்   பரிதாபமாகப்  பார்த்தாள்.  ஊருக்குப்  புதியவன்  போலும்.  பார்த்தால்   படித்தவன்  போலிருந்தான்.   எதற்கு  இந்த  வறண்ட  பிரதேசத்திற்கு  வந்தான்?  ஒரு  வேளை  வழிதவறி  வந்து  விட்டானா?

"சகோதரி  கொஞ்சம்  நீர்  கொடுங்கள்.   தாகத்தில்  செத்து  விடுவேன்  போலிருக்கிறது"  உடைத்த  இந்தியில்  அவன்  அவளைப்  பார்த்து  கெஞ்சினான்.   சம்பா  காலிப்  பானையைக்   கவிழ்த்துக்  காட்ட  அவன்  முகம்  வாடியது.

அவள்  அவனைத்  திரும்பித்  திரும்பிப்  பார்த்தபடி  நடந்தாள்.  திரும்பி  வரும்  போது  உயிருடன்  இருப்பானா?    பாவம்  யாரோ?  எங்கே  பிறந்தவனோ?  மரிப்பதற்கு  இங்கே  வந்திருக்கிறான்.  எத்தனை  ஜீவன்கள்  இவனை  நம்பியிருக்கின்றனவோ?  எதற்கு  வந்தான்  நீரற்ற  இந்த  பாலைக்கு? யோசித்தவாறு  நடந்தாள்.


கிணற்றில்  கூட்டம்  அதிகமிருந்தது.  பல பேர்  கயிறு  கட்டி  இறங்கிக் கொண்டிருக்க  அவர்களுக்கு  சிலர்  உதவிக்  கொண்டிருந்தார்கள்.   ஏதேனும் ஒரு  கயிறு  கிடைத்தால்  இறங்கி  விடலாம். எப்படியும் ஒருமணி நேரமாவது  காத்திருக்க  வேண்டும்.  அவள்  ஒரு  சிறிய  பாறைக்கல்   மீது  அமர்ந்து,  நடந்த  களைப்பில்  கெஞ்சிய  பாதங்களுக்கு  ஓய்வு  கொடுத்தாள். அரைமணி கழித்து  சம்பா  என்று  யாரோ  அழைப்பது  கேட்க  நிமிர்ந்து  பார்த்தாள்.  தோழி  ஒருத்தி  இவளைப்  பார்த்து  கையசைத்து  அழைப்பது  தெரிய,  விரைந்து  அருகில்  சென்றாள்.

சம்பா  இந்தா  கயிறைப்  புடி.  எனக்கு  வயிறு  வலிக்குது.  ஒதுங்கிட்டு  வரேன்.  வேற  யார்கிட்டயும்  கயிறைக்  குடுத்தா  திரும்பக்  கிடைக்காது.  நா  வர  வரைக்கும்  நீ  தண்ணி  எடுத்துக்க.  என்றபடி  கயிறைக்  கொடுத்து  விட்டு  ஒரு  சிறிய  பானை  நீருடன்  ஒதுங்கிப்  போனாள்.  இது  எதிர்பாராத  அதிர்ஷ்டம்.  அவள்  பானைகளை  வைத்து  விட்டு  கயிறு  பிடித்தபடி  கிணற்றுக்குள்  தொங்கியவாறு  இறங்கினாள்.   வழக்கத்தை  விட  இன்று  கிணற்றில்  அதிகம்  சுரப்பிருந்தது. முதலில்  தாகம்  தீர்த்துக்  கொண்டாள்.  தொண்டை  வழியே  சில்லென்ற  நீர்  இறங்கிய  போது  அந்த  மனிதனின்  நினைவு  வந்தது.   கயிறு  பிடித்து  இறங்கியதில்  உள்ளங்கை  எரிந்தது.  ஒவ்வொரு  குவளையாய்   நீர்  எடுத்து தோல்பைகளில்  நிரப்பினாள்   நாலு தோற்பை  நிரப்ப  முக்கால்  மணியாயிற்று. மேலே  வந்து  பானைகள்  நிரப்பியபோது  தோழிவர,  கயிறை   நீட்டினாள்.  "பரவால்ல  நீ  இறங்கி  தோல்  பை  நிரப்பிக்க.  எனக்கும்  கொஞ்சம்  களைப்பார்க்கு.  அப்டி  உக்காந்துக்கறேன்"  என்றாள் தோழி.  சம்பா  மறுபடியும்  இறங்கி  தோற்பைகளிலும்   நீர்  நிரப்பிக்  கொண்டு  மேலே வந்தாள்.


"நன்றி  சாந்தினி.  நீ இறங்கு  நான்  உதவுகிறேன்"  என்றாள்.

"தேவையில்லை.  நீ  களைப்பாக  இருக்கிறாய்.  இன்னும்  ஒன்றிரண்டு  பானைகள்தான்.  நான்  பார்த்துக்  கொள்கிறேன்  கிளம்பு"

தோழி  சொல்ல  மீண்டும்  ஒரு  முறை  நன்றி  சொல்லி  விட்டு  சம்பா  கிளம்பினாள்.  உண்மையிலேயே  களைப்பாகத்தான்   இருந்தது.  உடம்பெல்லாம்  வலித்தது.  ஆனாலும்  ஓய்வெடுக்க  முடியாது.  அம்மா  காத்திருப்பாள்.  நடுவழியில்  பசித்தால்  சாப்பிடுவதற்கு, அம்மா  கட்டிக்  கொடுத்திருக்கும்  பழைய  சோறை  சாப்பிட்டு  விட்டு  தெம்பாகக்  கிளம்பலாம்  என  எண்ணி  ஒரு பக்கமாக அமர்ந்து  சோற்றுப்  பொட்டலத்தைப  பிரித்து  இரண்டு  வாய்  உருட்டி உண்ட  போது,  அந்த  மனிதனின்  நினைவு   வர  அதற்கு  மேல்  சோறு  இறங்கவில்லை.  பிரித்த  பொட்டலத்தைக்  கட்டி  பத்திரப்  படுத்தி  கை  கழுவிக்  கொண்டு  தண்ணீர்ப்  பானைகளைத்  தலையில்   ஒன்றன்  மேல்  ஒன்று  வைத்து  தோற்பைகளைத்  தோளில் மாட்டிக்  கொண்டு  நடக்கத் தொடங்கினாள்.

அவன்  அங்கேயே  அரை  மயக்கத்தில்  கிடந்தான்.  லேசாய்  எழுந்து  அடங்கிய  மார்பு,  மூச்சிருப்பதைக்  காட்டியது.  கண்கள்  மூடியிருக்க  உதடுகள்  காய்ந்து  கிடந்தன.  இப்படியே  கிடந்தான்  என்றால்  எத்தனை  மணி  நேரம்  ஜீவன்  தாக்குப்  பிடிக்குமோ?  அவனைக்  கடந்து  செல்ல  சம்பாவுக்கு  மனம்  வரவில்லை. இவன்  செத்தால்  அது  கொலைக்குச் சமானம்  என்று  தோன்றியது.  ஈவிரக்கமற்றிருப்பது  கூட  கொலைதான்.  சம்பா  தலையிலிருந்த  பானைகளை  ஒவ்வொன்றாக  இறக்கி  வைத்தாள்.  தோற்பைகளை  இறக்கி  விட்டு  அதில்  ஒன்றைப்  பிரித்து  அவனருகில்  அமர்ந்து  நீரை  சிறிது  சிறிதாக  அவன்  வாயில்  ஊற்றினாள்.  கங்கையைக்  கண்ட  பகீரதன்  மாதிரி  அவன்  முகத்தில்  பிரகாசம்.  காய்ந்த  நிலம்  உறிஞ்சுவது  மாதிரி  நீரை  உறிஞ்சினான்.  அவளைநோக்கி  கங்காமாயி   என்று  முணுமுணுத்தபடி  கை  கூப்பினான்.  பிறகு  மெல்ல எழுந்து  அமர்ந்தான்.  மிகவும்  சோர்ந்திருந்தான்.

"ஊருக்குப்  புதியவரா?

"ஆம்.  தென்னிந்தியாவிலிருந்து  வருகிறேன்"

"என்ன  வேலையாக  இந்த  பஞ்சபூமிக்கு  வந்தீர்கள்?"

"எழுதுவதற்கு.   உங்கள்  ஊர்  வறட்சி  பற்றி  நேரடியாகப்  பார்த்து  எழுத.  என்னோடு  இன்னும்  இருவரும்  வந்தார்கள்.  நான்  வழிதவறி  விட்டேன்.  எப்படிச்  செல்வதென ஒன்றும்  புரியவில்லை.  தண்ணீர்  பாட்டில்கள்  அவர்களிடம்  இருக்கின்றன.   பசி  தாகம்  எல்லாம்  சேர்ந்து  என்னை  மயங்கச்  செய்து  விட்டது. மிகவும்  நன்றி  சகோதரி.  நான்  நகரத்தை  அடைய  வழி காட்டினால்  நன்றியோடிருப்பேன்.  அவன்  சட்டைப்  பையிலிருந்த  கைபேசியை  எடுத்து  பரிதாபமாகப்  பார்த்தான்.  அதுவும்  சார்ஜ்  இன்றி  தற்காலிகமாக  தன் மூச்சை   நிறுத்தியிருந்தது.

"ஒரு  நிமிடம்"  அவள்  சோற்றுப்  பொட்டலத்தை  எடுத்து  நீட்டினாள்

"சாப்பிடுங்கள்"

அவன் கண்கள்  பளிச்சிட்டன. தயங்காது  அதை  வாங்கி, அவசர  அவசரமாய்  பொட்டலத்தைப்  பிரித்து  அள்ளி  விழுங்கினான்.  சாப்பிட்டதும்,  மீண்டும்  நீர்  வாங்கி  மளக்  மளக்கென   குடித்தான்.  கை  கழுவி  முகத்திலும்  சிறிது  நீர்  தெளித்துக்  கொண்டு  தோற்பையை  அவளிடம்  நீட்டினான்.  அது  காலியாகியிருந்தது.  மீண்டும்  அவளை  நோக்கி  கண்ணீர்  மல்க  கை  கூப்பினான்.

"நன்றி  சகோதரி  நீங்கள்  எனக்கு  நீரும்  சோறும்  மட்டும்  கொடுக்கவில்லை.  உயிர்  கொடுத்தீர்கள்"  என்றவன்  தன்   பேண்ட்  பாக்கெட்டில்  கை விட்டு  ஐநூறு   ரூபாய்  நோட்டு  ஒன்றை  எடுத்து  நீட்டினான்.

"வாங்கிக்  கொள்ளுங்கள்  சகோதரி  நன்றியினால்  கொடுக்கிறேன்.  பெற்றுக்  கொள்ளுங்கள்."

"வேண்டாம்"  அவள்  மறுத்து  தலையசைத்தாள். "அந்தக்  கிணறு  இந்த  நீரை  எனக்கு  விற்கவில்லை.  வழங்கியது.   நன்றியினால்  நான்  ரூபாய்  கொடுத்தாலும்  அது  பெற்றுக்  கொள்ளாது.  இத்தனை  கடும்  வறட்சியிலும்,  இந்த  பூமியின்  அடி  ஆழத்தில்   ஈரம்  சுரந்து  கொண்டிருக்கிறதே   அதற்குச்  சொல்லுங்கள்  உங்கள்  நன்றியை.  நீங்கள்  பத்திரமாக  ஊர்  போய்ச்   சேர்ந்ததும்,  இந்த  வறண்ட  பூமியில்  மழை  பெய்யவும்,  நீர்  உயரவும்,  பிரார்த்தனை  செய்யுங்கள்  அது  போதும்"    அவள்  பானைகளை  எடுக்க,  அவன்  அவற்றை  அவள்  தலையில்   ஏற்றி  வைக்க  உதவினான்.  அவள்  அவனுக்கு  வழிகாட்டி  விட்டு  தன்   வழியில்  நடந்தாள்.   ஒரு  தோல் பை  காலியாக  இருப்பதற்காக  அம்மா  அடிப்பாளா?  கூச்சலிடுவாளா?  மீண்டும்  கிணறு  நோக்கி  நடப்பதும்  இயலாது.  மிகவும்  நேரமாகி  விடும்.  அம்மா  கேட்டால் என்ன  சொல்வது  அவளிடம்?  உண்மையா  அல்லது  ஏதேனும்  பொய்யா?

ச்சட்  எதற்கு  பொய்  சொல்ல  வேண்டும்.  குற்றமேதும்  செய்யவில்லையே.   நல்ல  காரியம்தானே  செய்திருக்கிறேன்.   நீரை  வீணாக்கினால்தானே  அவளுக்கு  கோபம்  வரும்.  தவித்துக்  கொண்டிருக்கும்  ஒரு  ஜீவனுக்கு  கொடுத்து  உயிர்  காத்தேன்  என்று  கூறினால்  புரிந்து  கொள்ள  மாட்டாளா  என்ன?   நிச்சயம்  புரிந்து  கொள்ளுவாள்.  அவள்  அடி  மனசிலும்  ஏதோ  ஒரு  அடி  ஆழத்தில்  ஈரம்  நிச்சயம்  இருக்கும்.

சம்பா  புன்னகையோடு  நடையின்  வேகத்தைக்  கூட்டினாள்.