Sunday, February 1, 2015

குகைக்குள் ஒரு பயணம் (பாதாள் புவனேஸ்வர்)

2007 ல்  ஆதி கைலாஷ் செல்லும் வழியில், உத்தராஞ்சல் மாநிலத்தில் பாதாள்  புவனேஸ்வர் என்று ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். என்னால் மறக்கவே  முடியாத அதிசயம் இது. .சரயு நதியும், ராம்கங்கா நதியும் ஓடும்  இந்த இடத்தில்தான்  உலகிலேயே மிக  மிக அதிசயமான,  பல ரகசியங்களை  தன்னுள் மறைத்து வைத்திருக்கும் பாதாள குகை இருக்கிறது. நம் புராணங்களில் சொல்லப்பட்ட அத்தனை சம்பவங்களும் தெய்வங்களும் இங்கே சுயம்புவாய் காட்சியளிக்கின்றன  என்பதுதான் இதன் அதிசயம்.  உலகின்  ஏழு  பாதாள அதிசயங்களில் இதுவும் ஒன்று. அல்மோராவில்  கங்கோலிஹட்  என்ற இடத்திலிருந்து 14 km  தொலைவில் உள்ளது.

நான்தான் இறங்குவதற்கு முன்னால்  ஒரு போஸ் 

இது காளமேகம் 


திரேதா  யுகத்தில்தான் இது முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியை ஆண்ட ரிதுபர்ணன் என்ற மன்னன் ஒரு நாள் ஒரு மானைத்துரத்திக் கொண்டு செல்ல,  இந்த குகைக்கருகில் வந்ததும் மான் மறைந்து விட, மன்னன் அந்த குகையைக்கண்டு  அதனுள்  இறங்கிப் பார்த்திருக்கிறான்.   பூமிக்கடியில் ஆதிசேஷன் எழுப்பிய  சுவர்க்கம் இது என அறிகிறான். அறிந்த ரகசியத்தை வெளியில் சொல்லாதே என எச்சரிக்கிறது ஆதிசேஷன்.   ஆனால் அவன் மனைவியிடம் சொல்ல, மரணம் அவனை கொண்டு செல்கிறது.  அவன் மனைவி குகைக்கு வருகிறாள்,  அதற்குள் இறங்குகிறாள்.   அவளும் ரகசியம் அறிகிறாள்.

இறங்கும் வழி 




திரேதா யுகத்திற்குப்பின், துவாபர யுகத்தில் பாண்டவர்கள் இதனுள் நுழைத்திருக்கிறார்கள்.   இதிலுள்ள ஒரு வழி மூலம்தான்  அவர்கள் சுவர்க்க ரோகினிக்கு சென்றிருக்கிறார்கள். அதன் பின் கலியுகத்தில் ஆதிசங்கரர் இதனுள் இறங்கி மாதக்கணக்கில் இங்கே தவமிருந்திருக்கிறார்.  . அங்கே உள்ள சுயம்பு  லிங்கங்களை (பிரும்மா, விஷ்ணு, சிவன்)  பூஜித்து  அவற்றிற்கு செப்புத்தகடு ஒன்றும் அணிவித்திருக்கிறார். அது இன்னமும் உள்ளது.  இந்த லிங்கங்கள்தான் குகையின் கர்ப்பக்கிரஹ தெய்வங்களாக  பூஜிக்கப்படுகிறது.  இங்கிருந்துதான் ஒரு ரகசிய வழி மூலம் அவர் கயிலாயம் சென்றிருக்கிறார். 1941 ல்  சுவாமி பிரணவானந்தர் இதை மீண்டும் கண்டறிந்து உள்ளே சென்று தரிசித்திருக்கிறார்.

ஆதிசங்கரர் பூஜித்த லிங்கங்கள் 


அதன் பிறகு எழுபதுகளில்  ராணுவ அதிகாரி  ஜெனரல் டெயிலர்  என்பவரின்  கனவில் சத்திய சாயி பாபா தோன்றி அவருக்கு  ஒரு பாதையைக் காட்டி மறைந்திருக்கிறார். அந்த அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவர் தன பணி  நிமித்தமாய் இந்த இடத்திற்கு வந்த  போது இதை தான் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட அவருக்கு தன்  கனவும் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் உடனே தேடித் தேடி இந்த குகையைக் கண்டு பிடித்திருக்கிறார்.  பின்னர்தான் இது மக்கள் சென்று வரும்படியான  இடமாயிற்று. குகையைச்சுற்றி கோயில் போல அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனுள் அப்படி என்னதான் அதிசயங்கள் இருக்கின்றன?   உண்மையிலேயே அதிசயங்கள்தான்.   பிரும்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, பஞ்ச பாண்டவர்கள், ஆதிசேஷன்,   கொய்யப்பட்ட பிரும்மனின் தலை மீது பால் சொரியும் காமதேனு  (இந்த இடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம்),  தொங்கிக் கொண்டிருக்கும், காலபைரவனின் நாக்கு,  அதிலிருந்து உமிழ் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால்  கபால மாலைகளோடு சிவனின் இருப்பு,

கழுத்து திருப்பிப் பார்க்கும் அன்னப்பறவை, இந்த அன்னப்பறவை, நாகங்களிடமிருந்து தண்ணீரைக் காக்க  பிரும்மாவால் நியமிக்கப்பட்டது. ஆனால் இது தன கடமைச் சரியாகச் செய்யாததால்  பிரும்மா இதன் கழுத்தை திரும்பியிருக்குமாறு சபித்து விட்டாராம். ஆயிரம் கால்கள் கொண்ட ஐராவதம் அதன் முன் பகுதியில் அதன் தலையும், தும்பிக்கையும்,   பஞ்ச பாண்டவர்கள் அருகிலிருக்க, சொக்கட்டான் விளையாடும் சிவன்  பார்வதி, சிவனின் கமண்டலம், சிவனின் ஜடை, அதிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் கங்கை நீர்,  கேதார்நாத் லிங்கம், பத்ரிநாதர், அமர்நாத் குகை,   தலை வெட்டப்பட்ட கணபதி,  உச்சியிலிருந்து அதன் மீது அமிர்த தாரை  சொட்டும் அஷ்ட தள தாமரை,  என அத்தனையும்  இங்கே சுயம்புவாய்  உருவாகியிருக்கிறது.   மூன்று யுகங்களாய் இந்த அதிசயம் பூமிக்குள் இருக்கிறது.

ஆதிசேஷன் 



பிரும்ம தீர்த்தம். அருகில் நந்தி 

தலை வெட்டப்பட்ட கணேஷா மேலே அஷ்ட இதழ் தாமரை 

கேதார், பத்ரி, அமர்நாத் 

சிவனின் கமண்டலம் 


பஞ்ச பாண்டவர்களுடன் சிவன் பார்வதி 

ஐராவதத்தின் கால்கள் 

ஐராவதத்தின் முகப் பகுதி 


முகம் திரும்பியிருக்கும் அன்னப்பறவை 

இவற்றை கற்பாறைகளில்  ஏற்பட்ட  தோற்றம் என நம்பவே முடியாது.  மென்மையான சதை ரூபம்  காண்பது  போல்  தத்ரூபமாய்த் தெரியும்.  கர்ப்பகிரகமாக பூஜிக்கப்படும்  பிரும்மா விஷ்ணு, சிவன் மூவருமே லிங்க வடிவில் வெவ்வேறு வர்ணங்களுடன் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டு தெரிவது மிகவும் அதிசயம். அதிலும், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும் மேலிருந்து நீர்த்தாரை சொட்டுகிறது. பிரும்மாவின் மீது சொட்டுவதில்லை.   இந்த லிங்கங்களுக்கு நாங்கள்  கொண்டு சென்ற மானசரோவர் தீர்த்தால் அபிஷேகித்து, வில்வம் சார்த்தி பூஜித்தோம்.

பகீரதன் கங்கையைக் கொண்டு வந்த கதையைசொல்வது போல்  சிவனின் ஜடையிலிருந்து வடியும் கங்கை அதனடியில் பகீரதனின் உருவம்  அதற்கருகில் சிறிய குளம்  போல் பிரும்ம தீர்த்தம்,  அதனருகே உள்ள நந்தி, முப்பத்து முக்கோடி தேவ ரூபங்கள்.  என்று அத்தனையும் இயற்கையாய் உருவாகியிருக்கிறது.  இந்திர லோகத்திலிருந்து கிருஷ்ணர் கொண்டு வந்த பாரிஜாத மரமும் இங்குள்ளது.

சிவனின் ஜடை 


பாரிஜாத மரம்  



ஓரிடத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் லிங்கங்கள் உள்ளன. இவற்றில் கலியைக் குறிக்கும்  மற்றதை விட சற்று உயரமான விரல் அளவு லிங்கம் ஒன்றிருக்கிறது. இது மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறதாம். இது எப்போது  குகையின் உச்சியைத்தொடுகிறது அப்போது கலியுகம் முடிந்து விடுமாம்.  இதன் பினால் ராமேஸ்வரத்திற்கு ஒரு ரகசிய பாதை உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.  இது தவிர இந்த குகையிலிருந்து காசிக்கும், பூரிக்கும் கூட ரகசிய பாதைகள் உள்ளனவாம். ஆக மொத்தம் ஒரு மினியேச்சர் தெய்வ ரூபங்களைத்  தன்னுள் கொண்டிருக்கும் பாதாள அதிசயம் இது.  (புகைப்படங்களைப் பாருங்கள் நிச்சயம் உங்கள் விழிகள் விரியும்)

கலி லிங்கம் 


இந்த பாதாள குகை பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் நூறடிகள் வரை உள்ளே இருக்கிறது.  மேலிருந்து செங்குத்தாய் ஒரு  பள்ளம்,  அதில் குறுகிய பாதை  அதன்  இரண்டு பக்கமும் நம் பிடிப்புக்காக கட்டப் பட்ட இரும்புச் சங்கிலிகள்  இதனைப் பற்றிக்கொண்டு அமர்ந்த நிலையில்தான் நிதானமாக உள்ளே இறங்க வேண்டும். நம் காலுக்கு கீழே பாறைக் கற்களைக் கொண்டு  ஒரு சரிவு அமைக்கப் பட்டிருக்கும்.  இதில் இறங்குவதே ஒரு த்ரில்லிங்கான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நூறடி இறங்கி விட்டோம்  எனில்  பாதை பிரியும் இடத்தில் நரசிம்ம மூர்த்தியின் பாதங்கள் பதிந்திருப்பதைக் காணலாம்.  பின்னர் விஸ்தாரமான  பெரிய குகை.  குளுமையோ குளுமை.  உள்ளே ஜெனரேட்டர் உதவியோடு எரியும்  மங்கிய மின் விளக்குகளின் ஒளியில் அந்த அதிசயங்களைப் பார்க்கும்  போது  மனசு சிலிர்க்கும், திரேதா யுகத்திலிருந்து இருக்கும் இந்த  அதிசய குகையில்,  பாண்டவர்கள் கால் பதித்த,   ஆதிசங்கரர் தவம் செய்த, புண்ணிய இடத்தில் நாமும் கால் பதித்திருக்கிறோம்   என்ற சிலிர்ப்பு  நம் கண்களில்  ஜலப்பிரவாகத்தை வெளிப்படுத்தும்.

குகையின்  தரைப்பகுதி முழுவதும் வளைந்து நெளிந்து  தன் வயிற்றுப்பகுதியின்   தடங்களோடு  சிலந்தி வலையாய்  பரவிச் செல்லும் ஆதிசேஷனின் உடற்பகுதி அதிசயத்தின் உச்சம். சர்ப்ப வேட்டையில் இறங்கியிருந்த ஜனமேயஜயனிடமிருந்து  தப்பித்த ஆதிசேஷன்  இங்கே வந்து மறைந்திருந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.  இந்த ஆதிசேஷனே  இந்த பாதாலத்திளிருந்தபடி பூமியைத் தன தலையில் சுமப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனுள் நான்கு சுரங்கப் பாதைகளுக்கான கதவுகள் உள்ளது.  இந்த நான்கு கதவுகளைபற்றி ஸ்கந்த புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது.  முதல் கதவு பாவப்பாதை.  ராவண வதத்திற்க்குப்பின் இது மூடப்பட்டு விட்டது.  அடுத்தது ரணப்பாதை (way to war)  இதுவும் பாரதப் போருக்குப் பின் மூடப்பட்டு விட்டது. இப்போது இரண்டு பாதைதான் திறந்துள்ளது.  ஒன்று  தர்மப்பாதை. இது கலியுகத்தின் முடிவில் மூடப்படும்.  மற்றொன்று, காலபைரவரின் நாவிற்கு அடியில் இருக்கும்  மோட்சப்பாதை.   இதில் மனதை ஒருமுகப்படுத்தி இறை நம்பிக்கையோடு பயணித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது ஸ்கந்தபுராணம். இந்தப் பாதை அடுத்த யுகமான சத்ய  யுகத்தில் மூடப்பட்டு விடுமென ஸ்கந்த புராணத்தின் மானஸ்கந்தம்  சொல்கிறது.  இந்த குகைக்குள் இருக்கும் ஒரு சிறிய குகையில்தான் மார்க்கண்டேய மக்கரிஷி மார்க்கண்டேய புராணம் இயற்றியிருக்கிறார்.

காலபைரவரின் நாக்கு. பின்னால் மோட்சப் பாதை 


எனக்கு இந்த குகையும் இந்த அதிசயங்களும் மற்றொரு சிந்தனையை ஏற்படுத்துகிறது.  நம் மனம் கூட இப்படி ஒரு பாதாளத்தில் உள்ள இருண்ட குகைதானோ?  அதனுள் பயணிக்க நாம் முயற்சித்திருக்கிறோமா? ஒருவேளை   முயற்சித்தால் இப்படிப்பட்ட அதிசயங்கள்  நமக்கு தரிசனம் கொடுக்க நம் மனக்குகையிலும்  காத்திருக்குமோ?

உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு  ஆலயம்,
வள்ளல்   பிரானற்கு  வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா  மணிவிளக்கே

என்று சும்மாவா சொன்னார் திருமூலர்?

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறு பொருள் கண்டேன்
உடம்புலே உத்தமன் கோயில் கொண்டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே

இதுவும் அவர் பாடியதுதான்.   உத்தமன் உள்ளேதான் இருக்கிறான். அங்கேயும் தேடிக்  கண்டறிவோம்,  அதற்கு முன்னால்  பாதாள்  புவனேஸ்வர் அனுபவத்தையும் ஒரு முறையாகிலும் பெற்று விடுங்கள்.  நம் மண்ணில்தான் அது இருக்கிறது. எங்கேயோ அல்ல.