Monday, November 30, 2015

தாரமா டாலியா - நாடகம்

மீண்டும்  ஒரு   நாடகம்.   தாரமா  டாலியா.   ஃபாத்திமா   பாபு அவர்கள் இயக்கி  நடித்த  நாடகம்.   நானும்   வல்லபாவும்   ஞாயிற்றுக்  கிழமை போவதென முடிவு  செய்திருந்தோம்.   மாலை   சரியாய்   ஐந்து   மணிக்கு   மழை   துவங்கியது.   மழை   வலுக்குமோ   என்று  கவலையும்  ஏற்பட்டது.   போகலாமா   வேண்டாமா  என்று  இங்கி பிங்கி  பாங்கி   போடுவதற்குள்   மழை  நிற்க  போயே    தீருவதென  தீர்மானித்தோம்.   சி.பி.ராமசாமி  ரோடிலிருந்து  நடக்கிற  தூரம்தான்  என்றாலும், லேசாய்   மழை   தூறிக்  கொண்டிருந்ததால் ஹரிகிச்சு  எங்களை  சமத்தாக  காரில்  கொண்டு  வந்து  இறக்கி  விட்டான். ஆறேகாலுக்கே  போயாகி  விட்டது.   அரங்கிற்கு   வெளியில்  இருபது   ரூபாய்க்கு   சுமாரான  டீ  ஒன்றைக்  குடித்து   விட்டுக்   காத்திருந்தோம்.  

குரு வணக்கத்திற்குப்  பின் சரியாய்   ஆறு ஐம்பதிற்கு  திரை  உயர,   அழகான ஒரு  வீட்டின்  பெரிய   கூடம்.   இடப்பக்க ஓரமாய்   விளக்குகள்  ஏற்றப்பட்ட   கண்ணைக்கவரும்   பூஜையறை.   வலப்பக்கம்,   ஆஹா   என்று  வியக்க வைத்த   ஒரு  நிஜ   ஊஞ்சல். (என்  வீட்டிலும்  ஊஞ்சல்  இருந்தது. அது பற்றி பிறகு   எழுதுகிறேன்)

முதல்   காட்சியின்  முதல்   வசனத்தில்   ஆரம்பித்த   கலகலப்பு  இறுதிக் காட்சி   வரை   வஞ்சனையின்றி  நிறைந்திருந்தது.  எல்லா  பிரச்சனைகளையும்   மறந்து  ரெண்டு  மணி  நேரம்  ஒவ்வொரு   வசனத்திற்கும்   கைதட்டி   வாய்  விட்டு   சிரிக்க   வைத்து   மனதை   லேசாக்கி  அனுப்புவது  கூட   ஒரு   வகை  வைத்தியம்தான்.   அதை  பக்காவாக   செய்திருக்கிறார்   ஃ பாத்திமா   பாபு. 


நாடகத்தில்   நகைச்சுவை  என்பது  துணுக்குத்  தோரணமாக   இல்லாதிருப்பதற்கு  தனியாக ஒரு  முறை  கை  தட்டலாம்.  கதைக்கேற்ற   வசனங்கள், அந்த  ஸ்டோரி லைனிற்குள்ளேய  நகைச்சுவை மிளிர  சுற்றி  வந்ததற்கு,   சித்ராலயா  ஸ்ரீராம்க்கு  ஒரு  ஓ  போடலாம்.  

வேலைக்காரி   மல்லிகாவின்   ஃபேஸ்புக்  புரொபைல்  மற்றும்   ஸ்டேட்டஸ் என்று   ஆரம்பமே  கல  கல.   ஃபாத்திமா   என்ன   அழகு!  ஐயங்கார்  பாஷை அட்டகாசம்.   போறாததற்கு  மெட்ராஸ்   பாஷையும்  வெளுத்துக்  கட்டுகிறார்.  நடித்தவர்கள்   அத்தனை பேருமே தன்  பாத்திரத்தை  வெளுத்து   வாங்கியிருப்பதற்கு   ஒரு  சபாஷ்.  

ஒரு  காட்சி  முடிந்து  மேடை  இருளாகி   அடுத்த  காட்சிக்கு  செல்லும்   வரை  அந்த பூஜையறையும்   விளக்குகளும்  மட்டும்  இருளில்  ஒளிர்ந்து  கொண்டிருப்பது   கொள்ளையழகு. 

கஜினி  பாட்டியும்   நேரு  மாமாவும்  வயிறு  வலிக்க   வைத்து  விட்டார்கள். அந்த  ஒல்லி  உடம்பை  வைத்துக்  கொண்டு  அந்த  நேரு  மாமா  பண்ணும்   அலப்பறை  அட்டகாசம். 

பட்டிமன்ற   பார்த்தாவின்  நடிப்பு   தனி  முத்திரை.   இறுதி  காட்சியில்  அவர் தொபுகடீரென்று  மாட்டுப்  பெண்ணை   சாஷ்டாங்க   நமஸ்காரம்  செய்து   ஒரு  கணம்  நம்மை திகைக்க  வைத்தாலும்,  லேசாய்   கண்ணில்   ஈரம் படர்கிறது.   அனிருத்   சி.ஏ  பாஸ்   செய்த  போ து   நாமே   பாஸ்   செய்து  விட்ட  மகிழ்ச்சி.  அதே  நேரம்  அந்த  சீனில்   பார்த்தாவுக்கும்   ராதாவுக்கும்   மட்டுமல்ல,  நமக்குமே  சவாலில்  அவர்கள்   தோற்று  விட்டது   மறந்து போகிறது. 

"டிவி  சீரியல்கள்  எல்லாமே   அழுது வடியறது.   அழுது  வடியாத  நிகழ்ச்சி செய்தி  ஒன்றுதான்", 

"கஜினி  பாட்டிக்கு  எப்டி  போன எபிசோடு  கதை  நினைவுல  இருக்கும்?"  

"அது  நமக்கே   எங்க  நினைவுல  இருக்கு?"

இப்படி  நிறைய   டிவி  கலாட்டா. 

நாடகம்  முழுவதுமே எங்கள்  பின்   வரிசைகளிலிருந்து  சிரிப்பு  சத்தமும்,  கை தட்டும்   ஓசையும்   கேட்டுக்  கொண்டே  இருந்தது.  அந்த  அளவுக்கு   ரசித்தார்கள்.  

  
சின்ன   கதைதான்,   அதில்   ஒரு  நல்ல  மெசேஜ்,  ஒரு  சில   சந்தேகங்கள்  நடு நடுவே   எழுந்தாலும்.  இரண்டு  மணி  நேர  நகைச்சுவை   நாடகத்தில்  அதை  பெரிதாக  நினைக்கத்  தோன்றவில்லை.  நாடகத்தின்  முடிவில்  இந்த  நாடகம்  பிடித்திருக்கிறதா  நூறு   ஷோ  போகுமா  என்றார்.  நிச்சயம்  போகும்.  மழை,  காய்கறி  விலையேற்றம்,   உச்சாணியில்  உட்கார்ந்திருக்கும் துவரம்  பருப்பு,  மழையில்  பல்லை இளிக்கும்   சாலைகள்,   மோசமான  டிராஃபிக்  என்று  பல்வேறு  மன  அழுத்தத்திலும்  எரிச்சலிலும்  இருக்கும்  மக்கள்   ரெண்டு  மணிநேரம்  எல்லாவற்றையும்  மறந்து  சிரிக்க  இது  ஒரு  ஸ்ட்ரெஸ்  பஸ்டர்  நாடகம்தான்.   சந்தேகமேயில்லை. 


மொத்தத்தில்  மழை நேர  மாலையை  இனிதாக்கியதற்கு   ஃ பாத்திமா  பாபுவுக்கு  ஒரு  ஸ்பெஷல்  தேங்க்ஸ்.