Thursday, December 5, 2013

மொட்டை மாடி தோட்டம்

நேற்று  கிருஷ்ணமுர்த்தி  மாமா வீட்டிற்கு  அவர் வீட்டு மொட்டை  மாடி தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே  போயிருந்தேன்.    CSK  மாமா  மாமியுடன் 2006 ல் இருந்து  3 முறை  கயிலாயமும்,  ஆதி  கயிலாயமும்  சென்று வந்திருக்கிறேன்.   அவர் வயது 73.   சிறந்த சிவபக்தர்.  விங் கமாண்டர் அக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  முதுமையை எப்படி பயனுள்ளதாய் கழிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

நமது பாரம்பரிய மூலிகைகளின் மீது மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்.    தோட்டக் கலையில் அபார ஈடுபாடு உள்ளவர். மொட்டைமாடியில்  அபூர்வ மூலிகைச் செடிகளையும் இதர செடிகொடிகளையும்  வளர்த்து வருகிறார்.  பார்க்கவே பிரம்மிப்பாய் இருக்கிறது.   நம் ஆரோக்கியத்தை எப்படி  எல்லாம் பேணலாம் என்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார்.   காலை மாலை நேரங்களில் அந்த செடி கொடிகளுடன் அளவளாவியவாறு  நடை பழகுவது  கூட  தியானத்தின் ஒரு பகுதியாகவே எனக்குத் தோன்றியது.    

ஒவ்வொரு செடியையும்  தன குழந்தை மாதிரி பெருமையுடன் அறிமுகப் படுத்தினார்.  அவரது அன்பில் செழித்து வளர்ந்திருக்கின்றன அந்த குழந்தைகள். மொட்டைமாடியே பசுமையாக இருக்கிறது.  தக்காளி, கத்திரி, அகத்திக் கீரை,  லெமன் கிராஸ்,  அன்னாசி,  சித்தரத்தை,    வில்வம்,   திருநீற்று பச்சை என்று   பல்வேறு மூலிகைகளுமாய்  மொட்டை மாடியே மணம் வீசிக் கொண்டிருக்கிறது.  பெப்பர்மென்ட் செடியின் ஒரு இலையைக் கொடுத்து உண்ணச் சொன்னார். வாயெல்லாம் பெப்பர்மென்ட் வாசம்.

இன்சுலின் செடியின் இலை மெலிதான புளிப்புடன் இருக்கிறது.  சர்க்கரை நோய்க்கு அருமையான மருந்தாம் அது. தினம் ஒரு இலை சாப்பிட்டால் கணையத்தை வலுப்படுத்தி இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யுமாம். இன்சுலின் செடியை பல பேருக்கு இலவசமாகவே கொடுப்பதாகக் கூறி எனக்கும் ஒன்று கொடுத்தார்.  கூடவே பெப்பர்மென்ட் செடியும் ஒன்று கொடுத்தார்.   கற்றாழை போல்  அடுத்தடுத்து பெருகி வளரக் கூடியவை என்றும் சொன்னார்.   என் வீட்டில் இரண்டு செடியையும் வைத்து தண்ணீர் ஊற்றி  பேசத் தொடங்கி விட்டேன்.  

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?  என்ற வைர வரிகள் நினைவுக்கு வருகிறது.   நாம் நமது  பாரம்பரிய உணவுகளையும் மருத்துவ மூலிகைகளையும்  மறந்து  விட்டு  நம் கலாச்சாரங்களை மாற்றிக் கொண்டதால்தான்  தமிழகம்  சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறி  விட்டது. கேன்சர்  போன்ற உயிர்க் கொல்லி நோய்கள்  நமக்கிடையே பெருகி வருகிறது.  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? . விழித்துக் கொள்ளுங்கள் இளைஞர்களே.

                                                                                                                                                            

 எலுமிச்சை 




திருநீற்று பச்சை 

 அகத்திக் கீரை 

செத்தி 

 இன்சுலின் 

கொடி  எலுமிச்சை 

லெமன் கிராஸ் 

மயில் மாணிக்கம் 

நித்ய கல்யாணி 

நித்ய கல்யாணி 

சித்தரத்தை 

அன்னாசி 

தக்காளி 

வாஸ்து செடி 

வில்வம்