Wednesday, December 24, 2014

இயக்குனர் சிகரம்

திரு பாலசந்தர்  என் அத்திம்பேருக்கு தாயாதி உறவு.  புஷ்பா கந்தசாமியின் கல்யாணத்திற்கு  என் அக்கா வீட்டுக்கு அழைப்பு  வந்திருந்தது.  "வரயாடி நிறைய நடிகர் நடிகைகளைப் பார்க்கலாம்" என்றாள்  என் அக்கா.   வரேன். ஆனா நடிகர் நடிகைகளுக்காக அல்ல.  பாலச்சந்தரைப் பார்க்கறதுக்காக வரேன்  என்றேன்.  அதே மாதிரி ஏ.வி,.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்திற்கு எல்லோருடனும் சென்றிருந்தேன்.   சரிதாவும்,  சீமாவும் இன்னும் சிலரும்தான் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.  என்னைக்கடந்து எலுமிச்சம்பழ நிறத்தில் ஒரு ஆப்பிள் பழம்  நடந்து சென்றது. ஜெயலலிதா.   யார் மீதும் என் கவனம் செல்லவில்லை.  பாலச்சந்தரைத் தேடி என் கண்கள் அலைந்தன. ஒரு வழியாய்  யாருடனோ பேசியபடி மேடை நோக்கி நடந்து வந்த அவரைப் பார்த்தே விட்டேன்.  போதுண்டா சாமி  என்பது போல் பரவசமாயிற்று.

ஏய் வா சாப்பிடலாம் என் அக்கா என்னை இழுத்துச் சென்றாள்.   அங்கே கூட்டம் அலை மோதியது.   எனக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி.  பிரபலங்கள் எல்லாம் சாப்பாட்டு ஹாலுக்குள் நுழைய படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு பாலச்சந்தரைப் பார்த்ததுலயே வயறு  நிறைஞ்சாச்சு.  நா வரல நீங்க வேணா சாப்ட்டுட்டு வாங்கோ. நா முன்னாடி போய் உக்காந்துண்டு கொஞ்ச நேரம் கூட அவரைப் பார்த்துண்டிருக்கேன். என்றேன்.  கடைசியில் கூட்டம் பார்த்து பயந்து யாருமே சாப்பிடவில்லை. கிளம்பி விட்டோம்.

இதற்குப் பிறகு மீண்டும் நான் அவரைப் பார்த்தது தமிழரசி விருது வழங்கும் விழாவில்.  என் சிறுகதை ஒன்று இரண்டாம் பரிசு பெற்றிருந்தது. திரு நடராசன் அவர்கள்தான் பரிசளித்தார்.  புகைப்படத்தில்  கை தட்டுவது யாரெனத் தெரிகிறதா?  பாலசந்தர் அவர்கள்தான்.   அப்போது எனக்கேற்பட்ட உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என சொல்லவும் வேண்டுமோ?

பரிசளிப்பு முடிந்ததும் நான் முதலில் பாலசந்தரிடம் ஓடினேன்.   என் கையிலிருந்த இரண்டு புகைப்படங்களை அவரிடம் காட்டினேன்.

"எங்கப்பா அப்டியே அச்சு அசலா உங்களாட்டமே இருப்பார் சார்.  நீங்க இதுல உங்க கையெழுத்து போட்டு தரணும்"  என்றேன்.

அவர் புகைப்படங்களைப் பார்த்து வியந்தார். "நீ என்னை எப்டி  கூப்டப் போற  சித்தப்பான்னா,  பெரியப்பானா?"  என்று சிரித்தபடி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.  "எங்கப்பா உங்களை விட நன்லஞ்சு வயசு நிச்சயம் பெரியவராத்தான் இருக்கணும். அதனால சித்தப்பாதான்"  என்றேன்  நானும் சிரித்தபடி.

அதற்குப் பிறகு நான் அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.  ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிகப்பெரிய கனவு இருக்கும்.  பாலச்சந்தர் இயக்கத்தில் தங்களது ஒரு கதையாவது  திரைப்படமாகாதா என்ற ஏக்கம் இருக்கும். எனக்குமிருந்தது.     அதெல்லாம் நடக்கிற காரியமா?  ஆயினும் நான் என் கற்பனையில் நடத்திக் கொள்வேன்.   என் கதை அவர் இயக்கத்தில் படமாவது போல் கற்பனையில் நினைத்து மகிழ்வேன்.  அவர் இல்லா  விட்டாலும் கற்பனை தொடர்ந்து கொண்டிருக்கும். .

கீழே என் அப்பாவின் புகைப்படங்கள். அதன் பின் புறம் பாலசந்தர் சாரின் கையொப்பம்.   நான் விருது வாங்கிய  தமிழரசி விருது புகைப்படம்.  என் பார்வை கூட பாலசந்தர் மீதுதான் இருக்கும் பாருங்கள்.

உங்கள் ஆன்மா திரையுலகில் நிரந்தரமாய் உறைந்திருக்கும் KB  சார்.








1 comment:

'பரிவை' சே.குமார் said...

கேபி சாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.