Tuesday, December 30, 2014

நான் பாடும் ராகம்

ஒருவருக்கு ரெண்டு பெண் குழந்தைகளோ அல்லது ரெண்டு ஆண் குழந்தைகளோ பிறந்து, அந்த  ரெண்டு  பேருமே  ஏதோ ஒரு துறையில்  முக்கியமாய் சங்கீதத் துறையில்  பிரபலங்களாக ஆவதென்பது  எத்தனை பெரிய விஷயம்.  அவர்களைப் பெற்றவர்களுக்கு எத்தனை சந்தோஷமாயிருக்கும்.  காலையில் ஜெயாவில் ரஞ்சினி காயத்ரி கேட்ட  போது  இப்படி தோன்றியது.   கலைகளுக்கான எனது  பட்டியலில் எப்போதும் முதலிடம் சங்கீதத்துக்குதான்.   பிறகுதான் ஓவியம், டான்ஸ்  மற்றதெல்லாம்.  சங்கீதம் ஒன்றுதான் பாடுவரையும், கேட்பவரையும் ஒரு சேர உடனடியாய் மகிழ்விக்கும்.  ஒலி வடிவிலும் ரசிக்கலாம்.  .

என் ஆறு வயதில் என்னையும் என் அக்காவையும் அம்மா பாட்டு கிளாசுக்கு அனுப்பினாள்.   என் நேரம் காலம் எல்லாம்  நன்றாயிருந்திருந்தால் மைலாப்பூர் சகோதரிகளாய் சங்கீதத்தை ஒரு வழி பண்ணி இருப்போம். ஆனால் முதல் நாளே டீச்சர் என் அம்மாவிடம் சொல்லி விட்டாள்  "உச்சிக்கு பாட்டு வராது "   என்று. ( என் அக்கா ஆசையாய் உஷி என்று கூப்பிடும்  என் பெயர்தான்  டீச்சரின் வாயில் உச்சியாகி விட்டது)   பாட்டு டீச்சர் யார் தெரியுமோ?   பல பிரபலங்களுக்கு நாட்டியம்  கற்றுக்கொடுத்த இந்திரா  ராஜனின் அம்மாதான்.  

பிறகென்ன  என் அக்கா மட்டும் தொடர,  நான் அந்த சோகத்தில்  கதவிடுக்கில் மாட்டிய எலி  மாதிரி  குரலை மாற்றிக் கொண்டு  கீச்சுக் குரலில் பாடி பழக ஆரம்பித்தேன். என்னமா பாடறேன் !!   இந்த டீச்சருக்கு கொஞ்சம் கூட ஞானமேல்லயே... எனக்குப் போய் பாட்டு வராதுன்னுட்டாளே .... என்று  பொருமுவேன்.   உஷிக்குட்டி கொஞ்ச நாளில் எலிக்குட்டியானேன்.  அந்த கட்டைய எடுடி  எங்கயோ  எலி மாட்டிண்டுடுத்து என்பாள் என் அத்தை பெண்.

அப்போதெல்லாம் எங்கள் வீட்டு  குளியலறைக்கு கதவு கிடையாது.  கதவு வைக்க யாரும் வீட்டுக் காரரிடம் கேட்டதில்லை.  பாத்ரூம் என்பது வீட்டுக்கு பின் புறம் தனியாய் இருக்கும்.  நான்  குட்டிப் பெண்தான்  என்றாலும் முற்றத்தில் குளிக்க மாட்டேன்  பாத்ரூமில்தான் குளிப்பேன் என்று அடம் பிடிப்பேன்.  எங்கள் வீட்டில் பெரும்பாலும் பெண்கள்தான். என் அப்பா, நாராயண்ணா, என் குட்டித் தம்பி இவர்கள்தான் ஆண்கள்.  உள்ளே  யாரும் இல்லை என்று தெரிந்தால்தான் ஆண்கள் அந்தப் பக்கம்  போவார்கள். குளிக்கும் போது கீச்சுக் குரலில் பாடிக்கொண்டே குளிப்பதுதான் எனக்கு வழக்கம்.   நான் உள்ளே இருக்கிறேன் என்று தெரிவிப்பதும் கூட. அந்த சுவர்களுக்கு வாயிருந்தால் கதறியிருக்கும் பாடாதே என்று.    யார் கேட்டால் என்ன  கேட்கா விட்டால்  என்ன  என் பாட்டுக்கு நான் ரசிகை.   ரொம்பக் காலம்  இப்படி பாடிக் கொண்டிருந்தேன்.


எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு ஒரு பெரிய ஸ்டோர்.  30  ஒண்டுக் குடித்தனங்கள் உண்டு. அதில்  என் சினேகிதி இந்துவின் வீட்டின் சமையலறை எங்கள் பாத்ரூம் சுவரின் அடுத்த பக்கம் இருந்தது. அதன் வென்டிலேஷன் ஜன்னல்  எங்கள் பாத்ரூம் சுவரில்  ஏழடி உயரத்திற்கு  மேலே இருக்கும்.     ஒரு நாள்  இந்துவின் வீட்டுக்குப் போன  போது  அவள் அம்மா  "உஷா நீ நன்னா பாடறயே"   என்ற போதுதான்   ஆஹா எனக்கு  இன்னொரு ரசிகையும் இருகிறாள்  எனத் தெரிந்தது எனக்கு.   கொஞ்சம் கூச்சம், நிறைய சந்தோஷம் ...  "உங்க வெங்காய சாம்பாரும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  வாசனையும் கூட சூப்பர் மாமி   காலம்பர குளிக்கறச்சே வாசனை வந்துது"   இது என் பதில் பாராட்டு.  மாமிக்கும் சந்தோஷம் .  நான் வெளியில் வந்த  போது இந்துவின் அண்ணா என் பின்னால் ஓடி வந்தான்.

 "ஏய்  எங்காத்து வெங்காய சாம்பார், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் எல்லாத்தையும் வேணா உனக்கே கொடுத்துடறோம்  பதிலுக்கு  நீ ஒரு உபகாரம் செய்யணும் "

"என்னடா?"

"இனிமே பாடாதே.....தாங்கல"

நான் என்ன செய்தேன் என்கிறீர்கள்?  அடுத்த நாள் வெள்ளி விழா வாணிஸ்ரீ மாதிரி  (அந்தப் படம்  அப்போதுதான் வெளியாகியிருந்தது)  " நா.........ன்..... சத்தம் போட்டுதான் பாடுவேன்"   என்று  அந்தப் பாட்டையே   சவுண்டை அதிகரித்துப் பாடினேன்.   என்னைப பார்க்கும் போதெல்லாம்   பல்லைக் கடித்தபடி முறைப்பான் அவன்..   "உனக்குப் பிடிக்காட்டி  வீ ட்டை மாத்திண்டு போ " என்பேன் கறாராய்.

அதெல்லாம் பொற்காலங்கள்.  என் சங்கீதக் காதல் இப்போது கேட்பதில் மட்டும்  தொடர்கிறது.  நான் எப்படிப் பாடினாலும் கேட்பான் என்பதால் கிருஷ்ணனுக்கு முன்னால்   ஞானப்பானயை  மட்டும்  (பி.லீலாவோடு சேர்ந்து)  முணுமுணுப்பேன்.

அடுத்த ஜன்மத்தில்   நீ பாடகியாய்ப்  பிறப்பாய் என்று  எந்த தெய்வமாவது  வரம் தந்தால்  டபுள் ஓகே சொல்லி   பிறக்க சம்மதிப்பேன்.
ஒரே ஒரு உத்தரவாதம் இப்போதே  உங்களுக்கு  தரத்தயார்.   சஞ்சய் சுப்ரமணியம் மாதிரி  ராகங்களை மட்டும் தக தகவென்று அலங்கரிப்பேன்.


6 comments:

pudugaithendral said...

அம்மா பாட்டு கத்துக்கிட்டவங்க. அந்த ஆசைக்கு என்னையும் அனுப்பினாங்க.பாட்டு நல்லாத்தான் வந்தது. ஆனா என்ன கத்துக்கிட்ட எங்க பாடிகாட்டுன்னு வீட்டுல ஒருத்தர் கூட கேட்கலை. அதனால பாட்டு கிளாஸ் போகமாட்டேன்னு சொல்லிட்டேன். இப்ப வரைக்கும் சங்கீதம் மிக ரசித்து கேட்பேன். குரல் வளம் மாறாம நல்லாத்தான் இருக்கு. பூஜையின் போது பாடி ஆரத்தி காட்டுவேன். சமைக்கும்போது மனசுக்கு பிடிச்ச பாட்டு பாடிக்கிட்டு வேலை செய்வேன்.
:)

'பரிவை' சே.குமார் said...

உங்கள் சங்கீத ஸ்டோரி அருமை அம்மா... அதுவும் சாம்பாரைத் தாரேன் பாட்டை நிறுத்திக்கோ என்றதும் கத்திப் பாடினேன் என்பது எல்லாம் சிறுவயதுக் குறும்புகள்...
அருமை அம்மா.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி புதுகைத் தென்றல், நன்றி செ.குமார்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா...

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.