Thursday, December 9, 2010

பொதிகை மலை உச்சியிலே....

night halt at peyaar. eppoodi?
Paeyaaru

Through the forest (me)

Boating at kaaraiyaar dam

kalyaana theertham.

k way to kalyaana theertham.


pothigai forest.


பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலே
தவழ்ந்திடும் தென்றல்

இந்த இனிமையான பாடலைக் கேட்கும் போதெல்லாம் அதென்ன அப்படி ஒரு சுகம் அந்த பொதிகைத் தென்றலுக்கு என்று யோசிப்பேன். கூடவே பொதிகை மலை உச்சிக்கு ஏறிப் போய் அந்த தென்றலை அனுபவிக்கும் ஆசையும் ஏற்படும். நான் அப்படி ஆசைப் பட்ட போது எந்த தேவதை 'ததாஸ்து' என்றதோ? ஒரு சுபயோக சுபதினத்தில் நன் அந்த பொதிகை உச்சியில் நின்றிருந்தேன். அட கனவில்லைங்க நிஜமாத்தான்.

பொதிகை உச்சிக்கு எல்லாம் மனிதர்கள் போவார்கள் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது. நான் அங்கு வரவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் எனில் அதை நோக்கித்தானே எல்லா காரியங்களும் நடக்கும்?


2008 ஆம் ஆண்டை என்னால் மறக்க முடியாது. மே மாதம் பொதிகை மலை,
ஜூன் மாதம் ஆதி கைலாஷ் யாத்திரை, அக்டோபர் மாதம் சதுரகிரி என்று மூன்று முக்கியமான மலைகளை ஏறும் யோகம் கிட்டியிருந்தது.

ஆதி கயிலாய யாத்திரையைப் பிறகு பார்க்கலாம். அது மிகவும் கடினமான அதே நேரம் அற்புதமான யாத்திரை. அந்த யாத்திரை செல்வதற்கான உடல் தகுதியும் மன உறுதியும் நமக்கு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முறை பொதிகை மலை ஏறி விட்டு வர வேண்டும்.

2006 இல் என்னோடு கயிலாய யாத்திரை வந்த நண்பர்கள் சிலரோடு 2007 இல் ஆதி கயிலாயம் செல்வதற்கு முன் பொதிகை ஏறி விட வேண்டும் என்று புறப்பட்டோம்.

இதற்கு வன இலாகாவின் அனுமதி தேவை. சித்ரா பௌர்ணமி அன்றும், மே முதல் தேதியும் பொதிகை உச்சியில் பக்தர்கள் அகஸ்தியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது வழக்கம். பொதிகை மலை உச்சியை அடைய மூன்று நாட்கள் காட்டு வழியே மலை ஏற வேண்டும்.

ஆயிரக்கணக்கான் பக்தர்கள் காட்டு வழியே மேற்கொள்ளும் இந்த யாத்திரையால் காடுகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து சுற்றுச் சூழல் கெடுவதோடு வன விலங்குகளுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்துவதால் இந்த வருடம் பொதி மலையேற யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என வன இலாகா திட்ட வட்டமாக அறிவித்த போது என் பலூனில் காற்றெல்லாம் புஸ் !

இருப்பினும் விகரமாதித்யனைப் போல் மனம் தளராமல் அகத்தியரிடம் ஆணையிட்டு கூறி விட்டேன், வன இலாகாவின் ஆணையை உடைக்கச் சொல்லி.

குறித்த நாளில் அகத்தியருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்காவிடில் உம்மாச்சி வந்து கண்ணை குத்திப்புடும் என்கிற ரீதியில் பக்தர்கள் வன இலாகாவை எச்சரிக்கை செய்ய ஒருவழியாய் அவர்கள் மலையிறங்கி வந்தார்கள். மிகக் குறைந்த அளவில்தான் அனுமதி அளிப்போம் என்று நிபந்தனை விதித்தது. அகத்தியர் அருளால் எங்கள் ஐந்து பேருக்கும் அனுமதி கிடைத்து விட்டது.

ஏப்ரல் 28 ஆம் தேதி நெல்லை எக்ஸ்ப்ரசில் ஏறின போது பொதிகையே ஏறி விட்டாற்போல் ஒரு மகிழ்ச்சி. அடுத்த நாள் நெல்லையில் இறங்கியதும் முதலில் சங்கர நாராயணரை தரிசித்து விட்டு பாபனாசத்திற்குச் சென்றோம். அங்குதான் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

பாபநாசம் மிக அழகான ஊர். சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலைகள் அழகான கோயில், கோயில் வாசலில் படியிறங்கிச் சென்றால் தாமிரபரணி ஆறு சுழித்தோடிச் செல்கிறது. நெல்லைவாசிகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான். வருடம் முழுக்க அதிசுவையான நீரைக் குடிக்கிறார்கள். அப்படி ஒரு சுவை அந்த தண்ணீருக்கு. இயற்கையிலேயே தாமிரம் கலந்த நீரல்லவா? நான் அங்கே இருந்தவரை உணவு உண்டதை விட தண்ணீர் குடித்ததுதான் அதிகம். நெல்லை வாசிகள் மீது பொறாமையே வந்து விட்டது எனலாம்.

சென்னையில் கூவத்தைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த மனசு சுத்தமான நதியைக் கண்டதும் குழந்தையாகி விட்டது. அன்றிரவு ஆசை தீர அனைவரும்
நதியில் எருமை கணக்கில் கிடந்தோம்.

பாபவினாசத்தில் பொதிகை அடி இல்லம் என்றிருக்கிறது. இதன் உரிமையாளரான திரு புருஷோத்தமன் என்பவரது பொறுப்பில்தான் நாங்கள் பொதிகை மலை ஏற வேண்டும். மலை ஏறுவதற்கு முன்பு கல்யாண தீர்த்தம் என்னுமிடத்தில் அகத்தியருக்கு வழிபாடு செய்தது வன விலங்குகள் யாத்திரையிநூடே தொல்லை செய்யாமல் இருக்க காப்புக் கட்டுகிறார்கள். இப்படி காப்பு கட்டும்போது அகத்தியர் கானக விலங்குகளுக்கு உத்தரவிடுவாராம். என் பக்தர்கள் வருகிறார்கள், உங்கள் இருப்பிடத்தை இரண்டு நாட்களுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று. அது உண்மைதான். களக்காடு முண்டந்துரைக் காடுகள் எவ்வளவு அடர்த்தியானது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த மூன்று நாட்களும் நம் கண் களில் ஒரு மிருகம் கூட படாதது ஆச்சர்யம்தான்.

பொதிகை மலைக்கு ஏறுவதற்கு முன் அகத்தியரைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்வது நல்லது. ஈசனின் திருமண நாளன்று தென்புலம் உயர்ந்த போது அதனை சமன் படுத்த ஈசனால் அனுப்பப் பட்டவர்தான் அகத்தியக் குறுமுனி. பின்னர் அதுவே அவரது நிரந்தர வசிப்பிடமாயிற்று. தன்

கமண்டலத்தில் அவர் கொண்டு வந்த நீர்தான் பின்னர் தாமிரபரணியாயிற்று. சிவனின் அம்சமாக கும்பத்திலிருந்து அவதரித்ததால் கும்ப முனி. சிறிய உருவமாக இருந்ததால் குறுமுனி. பிறப்பு அற்றவர் என்பதால் அவருக்கு இறப்புமில்லை. அகத்தியரைத் தனது அம்சமாகவும் லோபாமுத்திரையை உமையின் அம்சமாகவும், சிவன் முன்மொழிந்திருக்கிறார். இன்றளவும் அவர் தன் மனைவி லோபமுத்ராவுடன் அங்கு வசிக்கிறார் என்பதே உண்மை. இதை அங்கு செல்லும்போது நிச்சயம் உணர்வோம்.

ஏப்ரல் முப்பதாம் தேதி பொதிகை அடி இல்லத்திலிருந்து நாங்கள் கிளம்பினோம். அதற்கு முன் ஏகப்பட்ட உத்தரவுகள். காட்டில் எந்த தாவரத்தையும் சட்டெனத் தொடக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை வீசி எரியக் கூடாது. கூட்டத்தை விட்டு பிரிந்து விடக் கூடாது, இப்படி நிறைய கட்டளைகள்.

எங்கள் பேருந்து எங்களை காரையார் அணையில் இறக்கி விட்டது. அங்கே வன இலாகாவினர் நம்மை சோதனை செய்கிறார்கள். அனுமதி கொடுத்தவர் பெயர்ப் பட்டியலை வாசிக்கிறார்கள். எங்கள் ஐந்து பேரில் மூவர் பெண்கள். எங்களைக் கண்டதும் வன இலாகா அதிகாரி தயங்கினார், முதல் முறை செல்கிறோம் என்றதும் அனுமதிக்க யோசித்தார். சாமி வரம் தந்தாலும் பூசாரி தர யோசிப்பார்னு இதைத்தான் சொல்றாங்க. அட கயிலாய மலையையே சுற்றி வந்து விட்டார்கள். இதிலும் ஏறி விடுவார்கள் என்று சிலர் சொல்ல ஒருவழியாய் பூசாரி வரம் கொடுத்தார். மனது மாறுவதற்குள் படகில் ஏறி அமர்ந்தோம்.

நீரைக் கிழித்தபடி படகு சென்றது. போகும்போதே எங்கள் தண்ணீர் பாட்டில்களில் நீரை நிரப்பிக் கொண்டோம். நீரில் கை விட்டு விளையாடிய படி வந்த என்னை படகோட்டி எச்சரித்தார். நீரில் நிறைய முதலைகள் உண்டு என்று.

வெடுக்கென்று கையை உள்ளே இழுத்துக் கொண்டேன். அணையின் மற்றொரு ஒதுக்குப் புறமாய் மலையை ஓட்டி படகுகள் நிற்க நாங்கள் இறங்கிக் கொண்டோம். குருமுனிக்கு அரோகரா! ஒருவர் குரலெழுப்பினார்.

புதர் மாதிரி ஓரிடம். முதலில் வழியறிந்த ஆண்கள் ஒன்றிரண்டு பேர், பிறகு சிறுவர்கள், பெண்கள், பிறகு முதியவர்கள், பின்னால் இளைஞர்கள் என்று ஒரு அணி வகுப்போடு நடக்க ஆரம்பித்தோம். பாதை என்று எதுவுமில்லை. காட்டுக்குள் செங்குத்தாக இருந்தது மலையேற்றம். முதல் மூன்று மணி நேர மலையேற்றம் தண்ணீர் குடிக்க வைக்கிறது. அதன் பிறகு துளுக்கமட்டை என்ற இடத்தை அடைவதற்குள் சக்தியெல்லாம் தீர்ந்து விட்டாற்போல் தோன்றுகிறது.

வன இலாகாவின் வண்டிப் பாதை இருந்தாலும் கூட நங்கள் குறுக்கு வழியில் அந்த இடத்தை அடைந்திருப்பதாக அறிந்தோம். அய்யோடா! அதுக்கே மூணு மணி நேரமா?

அடர்ந்த காடு, விண்ணைத் தொட்ட மரங்கள், பறவைகளின் சப்தங்கள், நாடு நடுவே சிற்றோடைகளின் சலசலப்பு, எங்கோ கேட்கும் அருவியின் இரைச்சல், என அடேயப்பா விலங்குகள் கொடுத்து வைத்தவைதான். என்ன ஆரோக்கியமான சூழலில் வாழ்கின்றன.

வழியில் ஆங்காங்கே பெரிய பெரிய காட்டு மரங்கள் சரிந்து கிடக்க, தாண்டித் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. ஒருவர் பின் ஒருவராய் எறும்பு கணக்கில் மலை மீது ஊர்ந்து சென்று கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் செங்குத்தாக ஏறி கொண்டிருந்தவர்களிப் பார்த்தால் பிரம்மிப்பாக இருந்தது. அப்படி ஒரு சரிவு அது. கொடிகளையும் வேர்களையும் கிளைகளையும் பற்றிக்கொண்டுதான் ஏற முடிந்தது. பல இடங்களில் பலர் எங்களுக்கு கை கொடுத்து ஏற்றி விட்டார்கள்.

பல மணி நேர கடுமையான மலை ஏற்றத்திற்குப் பிறகு ஒரு காட்டாறு தென்பட்டது. கண்ணாடி மாதிரி சுத்தமாக வழிந்த நீரை பாட்டிலில் பிடித்தால் ஐஸ் மாதிரி சில்லிட்டது. அடேயப்பா என்ன சுவை. அந்த இடத்தில் எங்கள் கட்டுச் சோற்றைப் பிரித்தோம். ஒருநாளுக்கான் உணவு மட்டும் பொதிகை அடி இல்லத்தில் தயார் செய்து கொடுக்கிறார்கள். மிச்ச நாட்களுக்கு இருக்கவே இருக்கிறது நொறுக்ஸ்.

சிற்றுண்டிக்குப் பிறகு சிறிது ஓய்வு. பின் மீண்டும் நடை. கண்ணிகட்டி என்ற இடம் வரை நடந்தால் வன இலாகாவுக்கு சொந்தமான பூத் பங்களா ஒன்றிருக்கிறது , அதில்தான் அன்றிரவு தங்க வேண்டும் என்றார்கள். எங்கள் அதிர்ஷ்டம் அந்த பங்களா அன்று வன அதிகாரிகள் தங்கியிருந்ததால் காலியாக இல்லை. மேலும் சில மணி நேரம் நடந்தால் பேயாற்றின் கரையில் தங்கலாம் என்றார்கள். ஹையா வானம் பார்த்து படுக்கலாமே! உற்சாகமாக நடந்தோம்.

பேயாற்றின் கரையை ஒருவழியாய் அடைந்தோம். அருவியோன்றிளிருந்து பாறைகள் வழியே ஓடும் நதியின் கரையில் ஆங்காங்கு சிறிதும் பெரிதுமான பார்கள். கட்டாந்தரைகள். அதில் எங்களது பிளாஸ்டிக் விரிப்புகளை விரித்தோம். சலசலவென்று ஓடும் நதி சுற்றிலும் ஓங்கி நெடிதுயர்ந்த மரங்கள், மேலே ஆகாசம், மின்னும் நட்சத்திரக் கூட்டம். குளிர்க் காற்று. அன்றைய இரவு அனுபவம் மறக்க முடியாதது.

கொஞ்சம் காத்திருங்கள். மீண்டும் நாளை வருகிறேன். தொடர்ந்து மலை ஏறுவோம்.







14 comments:

Chitra said...

எங்க ஊரு பக்கம்..... கண்குளிர படங்களை பார்த்து ரசித்தேன்..... சந்தோஷமாக இருக்கிறது. பதிவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
This comment has been removed by the author.
வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி சித்ரா.

raji said...

உடனே பொதிகை மலை கிளம்பி விட வேண்டியதுதான்

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ராஜி, நன்றி பிரபாகரன்.

சாந்தி மாரியப்பன் said...

அற்புதமான அனுபவம்.. அகத்தியர் அருவிக்கு போயிட்டு வந்தீங்களா!!

மதார் said...

Ada neengalum ennai mathiriye karaiyar dam boating la kai vitteengala . Nellai makkal nangal kuduthu vaithavargalthan . Appa solluvar punniyam panniyavan thamiraparani karaiyil pirapan enru . Thodarungal.

மதார் said...

Ada neengalum ennai mathiriye karaiyar dam boating la kai vitteengala . Nellai makkal nangal kuduthu vaithavargalthan . Appa solluvar punniyam panniyavan thamiraparani karaiyil pirapan enru . Thodarungal.

ராம்ஜி_யாஹூ said...

nice photos, write up.
thanks for sharing

"உழவன்" "Uzhavan" said...

அற்புதமான அனுபவம்.பதிவும் அருமை

R. Gopi said...

கைலாஷ் பத்தி எழுதுங்க. எனக்கு அங்கே ஒரு வாட்டியாவது போகணும்

snkm said...

நன்றி! எங்களுக்கும் என்று இந்த பாக்கியங்கள் எல்லாம் கிடைக்குமோ, இறைவன் சித்தம். நன்றி!

Anonymous said...

அருமையான ஒரு பயணம்.
நான் கண்ணிகட்டி என்ற இடத்தில் ஏலக்காய் விவசாயம் செய்து வந்த காலத்தில் 15 முறை இந்த புனித யாத்திரை சென்று வந்துள்ளேன்.
பூங்குளம் - கல்லார் மற்றும் கேரளா வானக்காடு பாதையில் சென்று அனுபவித்து வந்தேன்.
எல்லாம் அவன் செயல்
.