Thursday, November 27, 2014

லூர்து மேரி - பகுதி 2

மீண்டும் லூர்து மேரி.      முணுக் முணுக்கென்று கோபம் வந்து விடும் லூர்து மேரிக்கு.   அவள் புத்திசாலிதான். தான்  புரிந்து கொண்டதை அவளுக்கு சரியாய் விளக்க மொழியறிவு போதுமானதாக இல்லை என்பதுதான் அவளது ஆரம்பகால பிரச்சனையாக இருந்தது.   ஆங்கிலம்  தமிழ் தவிர  இதர பாடங்களில் அவள்  எழுத்துப் பிழையுடனோ இலக்கணப் பிழையுடனோ எழுதினாலும் கூட, அவளது விடை, அவளது புரிதலை வெளிப்படுத்துவதாக இருந்தால்  அவளுக்கு மதிப்பெண் அளிக்க தயங்க மாட்டார் ஆசிரியை. போகப் போக தமிழ் மொழி வந்து விடும் என்பதால் அவளை ஊக்குவிக்க மதிப்பெண்களை அளித்து விடுவார்.

ஆனால் தமிழ் பாடத்தில் அப்படி மதிப்பெண் அளிப்பது சரியாகாது என்பதால் அவள் ஒற்றை இலக்கத்தில்தான் மதிப்பெண் பெறுவாள்.  நீ விரைவில் தமிழ் மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் கற்க வேண்டும்  என்று லேசாய் மிரட்டுவது போல் சொல்லுவார்.

லூர்து மேரிக்கு தமிழ் மொழி கற்க இந்த மிரட்டு என்றால் எனக்கு ஆங்கிலப் பாடத்திற்கு மிரட்டல் இலவசம்.  அவள்  ஆங்கில பரீட்சையின்   திருத்திய விடைத்தாள் வாங்கும் போது  நெஞ்சு நிமிர்த்தி  நடந்து செல்வாள்.  நான் தமிழ் விடைத்தாள் பெறும் போது  ரொம்ப பெருமையாக செல்வேன்.

ஒரு முறை டீச்சர்  என் ஆங்கில மதிப்பெண்ணுக்கு எல்லோர் முன்னாலும் என்னை திட்ட நான் லஞ்ச்  சாப்பிடக் கூட செல்லாமல் உர்ரென்று உட்கார்ந்திருந்தேன். .  "எல்லா காளியும் வாங்க   என் நாக்குல எழுதுங்க. நான் சூப்பரா எல்லா பாஷையும் பிளந்து கட்டணும்.  அப்டி செய்தா எல்லா பாஷைகளிலும்  உம்மேல கவிதையா பாடறேன்  சரியா?  காளியோடு பேரம் பேசினேன்.  காளி  இடத்தை காலி செய்து கொண்டு ஓடிப் போயிருப்பாள். அதற்கு பதில்  லூர்து மேரி என்னிடம் வந்தாள் .  ஐ வில் டீச் யு இங்க்லீஷ்  என்றாள்.   இந்த நாலு வார்த்தைக்கே நான்,  என்னமா பேசறா இவ என்று  வாய் பிளந்தேன்.  நான் உடனே இ வில் டீச்  யு  தமிழ்  என்றேன் அவள் வார்த்தைகளிலேயே தமிழை மட்டும் சேர்த்து.  ஆஹா  நானும் என்னமாய் இங்கிலீஷ் பேசறேன்!

அடுத்த நாள் அவள் மத்தியானம் அரைமணி எனக்கு ஆங்கிலமும் நான் சாயங்காலம் அரைமணி அவளுக்கு தமிழும் கற்றுக் கொடுத்தோம். அவள் உடைத்த தமிழில் பேசக் கற்றாள் . என்னை கலாய்க்க வேண்டுமென்றால் வேகமாக மலாயில் பேசிக் கொல்லுவாள். .

அரைப்பரீட்சைக்குள் லூர்து மேரி நன்றாகவே தமிழில் உரையாடத் தொடங்கி விட்டாள்  எனலாம்.   வேறு வழி.  சுற்றிலும் தமிழாறு ஓடிக் கொண்டிருந்தால் அவளென்ன செய்வாள்?   கற்க வேண்டிய கட்டாயம்.  வட  இந்திய சினிமா  நடிகை மாதிரி  திக்கி திக்கி பேசுவாள்.  அதுவும் இனிமையாகவே இருக்கும்.  போறாததற்கு தமிழ் பாடத்தில் நான் வேறு அவளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அரைப் பரீட்சை வந்தது.   தமிழ் பரீட்சையன்று  லூர்து மேரி படு சீரியசாகவும் வேகமாகவும் எழுதுவதை வியப்புடன் பார்த்தேன்.  பரீட்சை முடிந்து என் விடைத்தாள்களை குண்டூசியால்  இணைத்து குத்தி  மடித்து என் பெயரெழுதி டீச்சரிடம் கொடுத்து விட்டு வேகமாக வகுப்புக்கு வெளியில்வந்து விட்டேன். அரை நாள் அதுவும் கடைசி பரீட்சை என்பதால் ஹாலிடே மூடில் வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

லீவு முடிந்து மறுபடியும் ஸ்கூல் துடங்கியது. ஒவ்வொரு பேப்பராக மதிப்பெண்களோடு கொடுக்கப் பட்டது.  நல்ல காலம் என் ஆங்கில மதிப்பெண் 45. சந்தி  சிரிக்கவில்லை.    லூர்து மேரிக்கு நன்றி சொன்னேன்.  அடுத்து தமிழ் பேப்பர்.  லூர்து மேரி  எண்பதுக்கு மேல் வாங்கியிருந்ததாலள்.  டீச்சர்  கை தட்ட சொன்ன போது   லூர்து மேரியின் முகம் சூரியனை விழுங்கினாற்போல் ஜொலித்தது. எனக்கு சந்தோஷமாகவே இருந்தது.  . அந்த சந்தோஷம் என் மார்க்கை பார்க்கும் வரைதான்.  நான் 60 க்கும் கீழ் வாங்கியிருந்தேன். என் முகம்  சந்திரனை தொலைத்த வானம் போல் இருண்டு விட்டது.  சத்தியமாக நான் எதிர்பார்த்ததை விட இது மிகவும் குறைவு.  எப்படி குறைந்தது டீச்சரிடம் கேட்கும் தைரியமில்லை.  அன்று முழுக்க நான் அசோகா வனத்து சீதை போல் துயரத்திலாழ்ந்திருந்தேன்.

விடைத்தாள்களில் அப்பாவின் கையெழுத்து வாங்க வேண்டும்.  எல்லாவற்றிலும் பாஸ் என்பதால் என் அப்பா கையெழுத்து போட்டு விட்டார். அடுத்த நாள் ஸ்கூலுக்கு வந்த லூர்து மேரி பிரேயருக்கு முன்பே என்னை அழைத்துக் கொண்டு தமிழ் டீச்சரிடம் போனாள்.  என் விடைத்தாள்ள கடைசி நாலு பக்கம் என்னுதில்ல. உஷாவுது. அது பறந்து கீழ விழுந்திருக்கு.  அது என்னுதுன்னு நினைச்சு நா  எடுத்து என் பேப்பரோட குண்டூசி குத்தி கொடுத்திட்டேன்.  என்று டீச்சரிடம் காட்ட நான் திகைத்துப் போனேன். நாலு பக்கங்கள் குறைத்திருப்பதை நான் எப்படி கண்டு பிடிக்காமல் போனேன்  என வெட்கமாக இருந்தது.  டீச்சர் வெகுவாக லூர்து மேரியை பாராட்டி அந்த நாலு பக்கத்து மதிப்பெண்களை அவளுடையதிலிருந்து கழித்து  என்னுடையதோடு கூட்டி எனக்கு மதிப்பெண் போட்டு விட்டு  எங்கள் இருவரையும் பார்த்தால்.

இனிதான் கிளைமாக்ஸ்.  உஷா நீ உன் பேப்பரை சரிபார்க்காம பறக்க விட்டுட்டு  குண்டூசி  குத்தினது தப்பு.  இதனால் உனக்கு அஞ்சு மார்க் மைனஸ். லூர்து நீ இதை கண்டு பிடிச்சு உன் மார்க் குறைஞ்சாலும் பரவால்லன்னு எங்கிட்ட வந்து இதைச் சொன்ன பார் அதனால உனக்கு  அஞ்சு மார்க் போனஸ். என்றாள். அது நியாயமாகவே பட்டாலும்,  கையெழுத்து வித்தியாசத்தை கண்டுபிடிக்காமல்  நீங்கள் எப்படி பேப்பர் திருத்தினீர்கள் என்ற என் கேளிவி, தைரியமில்லாத காரணத்தால் எனக்குள்ளேயே செத்துப் போயிற்று.

லூர்து மேரியும் நானும் ரொம்ப சிநேகமாகி விட்டோம்.  அனால் முழு பரீட்சை முடித்த கையேடு அவளை  அவள் அப்பா  டிசி  வாங்கி அழைத்துச் சென்று விட்டார்.    வகுப்பில் எல்லாருமே அவள் போவதற்காக வருத்தப் பட்டார்கள். நான் நிறைய.  ஆனால் அவள் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக கிளம்பி விட்டாள் . சொந்த பந்தங்களோடு இருக்கப் போகும் சந்தோஷமாயிருக்கக் கூடும்.

இத்தனை காலம் கழித்து   ஏதோ ஒரு குழந்தையால் லூர்து மேரியின் நினைவு வந்தது வியப்பாயிருக்கிறது.   லூர்து மேரி எங்கிருக்கிறாய் நீ.?  என்னை உனக்கு நினைவிருக்கிறதா?  தமிழ் பேசிக் கொண்டிருக்கிறாயா  இல்லை மறந்து விட்டாயா தமிழையும்?

3 comments:

RajalakshmiParamasivam said...

உங்கள் தோழி லூர்து மேரி உங்களைத் தொடர்பு கொள்வாள் என்று நம்புவோம். நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டது, மேரி தமிழ் கற்றுக் கொண்டதும்....ஆஹா... மிகவும் ரசித்தேன்.

'பரிவை' சே.குமார் said...

உங்கள் தோழி உங்களை தொடர்பு கொள்வார் அம்மா...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ராஜலக்ஷ்மி நன்றி, பரிவை சே.குமார்.