Monday, February 11, 2013

பதிலற்ற கேள்விகள்

தன்னை சந்திக்காமலே இறந்து போன ஒரு வாசகி குறித்து  எழுத்தாளர் இரா.முருகன்  தனது  முக  சுவரில்  எழுதியுள்ளது படித்த போது எனக்கும்  சற்றே வலித்தது. காரணம்  பல வருடங்களுக்கு முன் எனக்கும் இது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டு, இன்று வரை அது ஒரு ஆறாத  காயமாக இருக்கிறது.  எனது ஒவ்வொரு நாவல் வெளியாகும் போதும் எனது  எழுத்தாள நண்பர் பாலகுமாரன்  அவர்களுக்கு கொடுப்பது வழக்கம். அவரும் தனது புத்தகங்களை கொடுப்பார்.  அப்படித்தான் எனது "ஆகாச தூது"  புதினம் வெளியான போதும் அவர் இல்லத்திற்கு சென்று கொடுத்து  விட்டு எல்லோரிடமும் சற்று நேரம் பேசி விட்டு வந்தேன். அவர் அம்மாவும் அங்கு  இருந்தார். மகா மேதை அற்புதமான மனுஷி அவர்.  எப்போது போனாலும் அன்போடு பேசுவார் என் புத்தகங்கள் குறித்து விசாரிப்பார். அவரை நமஸ்காரம் செய்து கொண்டு கிளம்பினேன்.     ஒரு மாதம் கழிந்திருக்கும்  ஒருநாள் பாலகுமாரனிடமிருந்து போன்.  "உஷா   எங்க வீட்டுக்கு வர முடியுமா?  என்றார் என்னப்பா விஷயம்? என்று கேட்டதற்கு "அம்மா உன்னைப்   பார்க்கணுமாம்.  உன்னோட "ஆகாசத் தூதை " படிச்சுட்டு உன்னைப் பார்த்தே ஆகணுமாம் அதைப் பத்தி பேசணுமாம். வரச் சொல்லுன்ரா.  வந்துட்டு போயேன்" என்றார்.  கண்டிப்பா வரேன் பாலா என்றேன்.   அனால் தொடர்ந்து மாற்றி மாற்றி எதோ ஒரு வேலை. ஒரு ஆட்டோ பிடித்தால் பததே நிமிட தூரம்தான்.  ஆனாலும்  நான் அங்கு செல்ல முடியாதபடி தடைகள்.   இந்த  சனி ஞாயிறில் கண்டிப்பாக போய்  விட வேண்டும் என்று நான் நினைத்த நேரம்  ஒரு இரவு சாந்தாவிடமிருந்து போன்."உஷா பாலாவோட அம்மா தவறிட்டாங்க"   நான் துடித்துப் போனேன்   அது போல் வலி எப்போதும் ஏற்பட்டதில்லை.  அடுத்த நிமிடம்  என் கணவரோடு  ஓடினேன் அவர் வீட்டுக்கு.    என் கண்ணிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர். " உன்னை பார்க்கணும்னு ஆசைப்பட்டா" பாலா சொன்ன போது  குற்ற உணர்ச்சியில் தவித்தேன்.  என்னிடம் என்ன பேச நினைத்தாய் தாயே ?  இன்று வரை இந்த கேள்வி எனக்குள் பதிலின்றி உறைந்து போயிருக்கிறது. .




10 comments:

நிலாமகள் said...

நினைக்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் துடித்துக் கிடக்க வேண்டியது தான்!

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத பதிலற்ற கேள்வி தான்...

அந்த நேரத்தில் நம் மீது வரும் கோபம், குற்ற உணர்ச்சியை மறைக்க நினைத்தாலும் முடியாது...

உஷா அன்பரசு said...

வாழ்க்கை முழுதும் இந்த கேள்விகள் பயணித்து கொண்டிருக்கும். அவசர யுகத்தில் நாம் தொலைத்து விட்ட வினாடிகளில் எதோ ஒரு நெருடல் ஒவ்வொருவருக்கும் நிகழத்தான் செய்கிறது. இந்த நெருடல்களையே நினைத்து கொண்டிருந்தால் குற்ற உணர்ச்சி மேலோங்கும். மாறாக தவற விட்ட வினாடிகளை விட்டு வரும் நாட்களின் நிகழ்வுகளில் நமக்கும், அடுத்தவர்களுக்குமான அன்பு பரிமாற்றத்திற்கு நேரம் காப்போம்.

மதுரை அழகு said...

Heart touching incident!

எம்.ஞானசேகரன் said...

இது போல எனக்கும் நேர்ந்திருக்கிறது எழுத்தாளரே! எனக்கும் ஒரு நண்பர் (தோழி) முகம் பார்க்காமலேயே மலர்ந்த நட்பு! இன்றுவரை பார்க்க முடியவில்லை. பார்க்க முடியுமா என்றும் தெரியவில்லை. உங்கள் தளம் இன்றுதான் கண்ணில் பட்டது. இனி தொடர்ந்து வருவேன்.

'பரிவை' சே.குமார் said...

பதிலற்ற கேள்விக்கு யார் பதிலளிப்பார் அக்கா...

இந்த வலி என்றும் தொடரத்தான் செய்யும்... அந்த அன்னை என்ன சொல்ல நினைத்தாரோ...

இராய செல்லப்பா said...

கலிஃஃபோர்னியாவிலிருந்து வெளியாகும் ‘தென்றல்’ இதழில் (மார்ச் 2013) உங்களைப் பற்றிய விவரமான கட்டுரையைப் படித்தபிறகு உங்கள் வலைப்பூவைப் பார்க்கிறேன். உருக்கமாக எழுதுவது உங்களுக்குக் கைவந்த கலை ஆயிற்றே!

Unknown said...

ஒரு எழுத்தாளர் அவருடைய எழுத்துகளால் மட்டுமே அறியப் பட வேண்டுமோ என்பது என் எண்ணம். சரியா வித்யா அவர்களே! உங்கள் எழுத்துகள் என்னை பாதிக்கும் பட்சத்தில் நானும் அதை எழுத்தில் வெளிப்படுத்துவதுதான் சரியோ என்று வெகு காலம் நான் எண்ணிஇருக்கிறேன். திரு பாலகுமாரன் அவர்களின் அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் என்னுடைய மகள் ஒரு இரண்டு வருடம் குடியிருந்தாள். என்னுடைய பேத்தியைக் கூட அவர் எடுத்து கொஞ்சுவார்.(என் தங்கம்! என் தங்கம்!) அவரிடம் பேசிவிட வேண்டும் பேசி விட வேண்டும் என்று பல முறை எண்ணியும், என் தொண்டையை தாண்டி என் வார்த்தைகள் வெளியே வரவே இல்லை. இத்தனைக்கும் நான் அவருடைய ஆத்மார்த்தமான ரசிகன் மெர்குரிப் பூக்கள் காலத்திலிருந்தே. இதை என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த தயக்கத்துக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. நானும் அவருக்கு சமமாக உயர்ந்த பின்தான் ஒரு சாதாரண வாசகனாக மட்டும் இல்லாமல் ஒரு எழுத்தாளனாக நான் அடையாளம் காணப்பட்ட பின்னர்தான் அவருடன் பேச வேண்டும் என்ற என்னுடைய ஈகோவாக இருக்கலாமோ!? தெரிய வில்லை. பார்ப்போம்.

ரவி

PARVATHI said...

VAALKAYIL PALA ARIVURAIGALAI UNGALIDAMIRUNTHU KARKUM ENAKKU IKKELVIKKU VIDAI THERIAVILLAI

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் அம்மா...

தங்கள் வலைப்பூவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே..


http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7179.html

நன்றி...

நேசத்துடன்
சே.குமார்