Friday, November 18, 2011

குருவாயூருக்கு வாருங்கள்




ஆண்டுக்கு ஒரு முறையாவது குருவாயூருக்கு சென்று உண்ணிக் கண்ணனை தரிசிக்கா விட்டால் என் சக்தி எல்லாம் வடிந்து விட்டாற்போல் தோன்றும். அந்த அளவுக்கு அவன் என் இஷ்ட தெய்வம். என் கைபேசியில் தினமும் காலை மூன்று மணிக்கு நாராயணாய நமோ என்று பி.லீலாவின் பாடல் அலாரமாய் ஒலிக்கும். சரியான பிரம்மமுஹுர்த்த்ம். என் மனம் குருவாயயூரப்பன் சந்நிதிக்கு முன் நின்று நிர்மால்ய தரிசனம் செய்யும். தொடர்ந்து வாகச்சார்த்து சங்காபிஷேகம் என்று ஒவ்வொன்றாய்க் காணும். இப்போதெல்லாம் கயிலாயத்திற்கும் தினமும் ஒரு முறை சென்று வருகிறேன்.


என்னதான் இருந்தாலும் நேரில் தரிசிக்கப் புறப்படும் போது ஏற்படும் சந்தோஷம் இருக்கிறதே. சொல்லி மாளாது. நவம்பர் பதினான்கு ஒவ்வொரு வருடமும் பாலக்காட்டில் ரதோல்சவம் (தேர் திருவிழா) நடக்கும். அதற்கும் செல்கிறார் போல புறப்படுவது வழக்கம். வழக்கமாய் குருவாயூரில் இரண்டு நாட்கள், பாலக்காட்டில் மூன்று நாட்கள் இருப்போம். இம்முறை விடுப்பு பிரச்சனை. எனவே மொத்தமே மூன்று நாட்கள்தான். பனிரெண்டாம் தேதி திருவனந்தபுரம் மெயிலில் கிளம்பினேன் என் நாத்தனாருடன். என் சின்னப் பெண் கவிதா பெங்களுரிலிருந்து வருவதாக ஏற்பாடு.


எங்கள் பெட்டியில் எல்லோரும் பெண்களே. நடுவில் பளிச்சென்று ஒரு பையன். பதினாறு வயதிருக்கும். நல்ல நிறம். நல்ல உயரம. டீக்காக பேன்ட் ஷர்ட் அணிந்து நவீன கைக் கடிகாரம் கட்டிக் கொண்டு ஐடி மாணவன் போல தோற்றம். அந்த பையனுக்கு எஸ் ஒன்பதில் இருக்கை. அவனது அம்மாவிற்கு எங்கள் பெட்டியில் இருக்கை. சற்று உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது. பையன் மன நலம் குன்றிய்வ்ன் என்பது. கடவுளின் மீது கோபமாக வந்தது.


அந்தப் பையனுக்கு இடம் கொடுப்பதற்காக ஒருவர் எஸ் ஒன்பது பெட்டிக்கு செல்ல சம்மதித்தார். நானும் என் நாத்தநாரும் எங்களது லோவர் பர்த்தை அவர்கள் இருவருக்கும் அளித்து விட்டு மிடில் பர்த்தில் படுத்துக் கொண்டோம் ஆளாளுக்கு காட்டிய அன்பில் நெகிழ்ந்து விட்டார் அந்தத் தாய்..


மிடில் பர்த்தில் இருந்த வலைப் பையில் என் மூக்கு கண்ணாடியை கழட்டிப் போட்டு விட்டு படுத்தேன் நான். மறுநாள் காலை மூன்று மணிக்கு என் கை பேசி நாராயணா எனப் பாடி எழுப்பியது. மூன்று நாற்பதுக்கு பாலக்காடு ஸ்டேஷனில் வண்டி நின்றது. என்னமோ எல்லாம் சற்று மங்கலாகவே தெரிய ஒரு வேளை கண்ணாடி மாற்ற வேண்டுமோ என நினைத்தபடி ஆட்டோ ஏறி வீட்டுக்கு வந்தோம். உறவுகளோடு பேசியபடி கண்ணாடியைத் துடைப்பதர்காகக் கழற்றிய போதுதான் தெரிந்தது, இரண்டு பக்க லென்சுமே அதில் இல்லை என்பது. நான் புரண்டு படுத்த போது இடித்து அந்த வலைப் பையிலேயே அவை விழுந்திருக்கிறது, வெறும் பிரேமை மட்டும் மாட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.


என் முதல் கவலை கண்ணாடி இல்லாமல் குருவாயூரப்பனை எப்படி தரிசிக்கப் போகிறோம் என்பதுதான். அதற்குள் என் சித்தி தனது உபரி கண்ணாடி ஒன்றைக் கொடுத்து சரியாகுமா எனப் பார்க்கச் சொன்னார். என் நல்ல நேரம், ஓரளவுக்கு சமாளித்து விடலாம் போலிருந்தது.


நாங்கள் குளித்து விட்டு குருவாயூருக்குப் புறப்படத் தாயாரானோம். ஏன் பெண் வரவேண்டிய பெங்களூர் வண்டி ஒரு மணி நேரம் தாமதம் என்றாள் தொலைபேசியில். ஒரு வழியாய் அவள் வந்து சேர்ந்த பிறகு கிளம்புவதற்குள் தாமதமாகிவிட்டது. உச்சிக்கால பூஜை முடிந்து நடை சார்த்துவதற்குள் தரிசிக்க முடியாவிட்டால் நான்கு மணிக்கு மேல் தரிசித்து விட்டு பாலக்காடு திரும்ப இரவு வெகு நேரமாகி விடும். “ஹல்லோ நான் வந்து கொண்டிருக்கிறேன். ஏமாற்றி விடாமல் தரிசனம் கொடுத்து விட வேண்டும் சரியா? உள்ளுக்குள் கொஞ்சலும் கெஞ்சலுமாய் சம்பாஷணைகள். பயணம் முழுவதும் குருவாயூரப்பன் நினைவுதான்.


பீ.லீலாவின் ஒரு பாடல் உண்டு. அந்த பாடலின் ஒலி நாடா இணைத்திருக்கிறேன். அதில் ஒரு வரி. நிர்மால்ய தரிசனத்திற்கு நடை திறப்பதற்கு முன்பே மேல்சாந்தி எனப்படும் தலைமை பூசாரி குளத்தில் குளித்து வந்தாயிற்று என்றிருக்கும். பிறகு பகவானின் எண்ணைக் காப்பு, வாகப் பொடி சார்த்து,, நவகாபிஷேகம், சங்காபிஷேகம், அலங்காரம் என்று ஒவ்வொன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கும். அந்த மேல்சாந்தி குளித்து வருவதை யாரும் பார்க்க முடியாது. சிறப்பு நிர்மால்ய தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தாலலொழிய. அப்படி ஒரு நிர்மால்ய தரிசனம் நீ என்று எனக்கு அளிக்கப் போகிறாய்? அந்தப் பாடலில் வரும் அத்தனை விஷயங்களையும் நான் பார்க்க வேண்டாமா? அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் இந்தக் கேள்வி எழும். கூடவே பாடலின் அர்த்தத்தில் கண்கள் கலங்கிக் கொட்டும்.


Vagacharthu1 by vidyasubramaniam


இரண்டு வருடம் முன்பு என் சினேகிதி மைதிலி மற்றும் லலிதா என்பவர்களுடன் குருவாயுருக்குப் போனபோது மைதிலி, “உஷா ஸ்பெஷல் நிர்மால்யம் பார்க்கப் போகிறோம் என்றாள். அவளது உறவினர் ஒருவர் மூலம் அனுமதி வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. இரவெல்லாம் தூங்கவில்லை. உடலும் மனமும் பரபரத்தது. விடியற்காலை ஒரு மணிக்கு எழுந்து குளித்து விட்டு மேற்கு கலவரா வாதிலுக்கு (கதவு) அருகில் வந்தோம். இரண்டேகால் மணிக்கு அந்தக் கதவு வழியாக உள்ளே அனுமதிக்கப் பட்டோம். எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கோவிலுக்குள் நாங்கள் ஒரு பத்து பேர் மட்டுமே கொடிமரத்திர்க்கருகில் நின்றிருந்த போது எனக்கு அது கனவா நனவா என்றே புரியவில்லை. நாங்கள் நின்றிருக்க்கையில் இன்னும் இருவர் வந்தனர். அதில் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டாரில் ஒருவரான சுரேஷ் கோபி.


மனசுக்குள் நாம ஜெபத்துடன் நின்றிருக்கையில் அந்தக் காட்சி....! குளித்து ஈர முண்டுடன் சற்றே உடல் உதர வேகமாக வந்து கொண்டிருந்தார் கோவிலின் மேல்சாந்தி. (மேல்சாந்தி ஸ்நானம் கழிஞ்சு வன்னு) பாடல்வரி என் மனசுக்குள் ஓடிற்று. அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் நாங்களும் உள்ளே அழைக்கப்பட, மூடிய சந்நிதிக் கதவுகளுக்கு வெளியே நாங்கள். நின்றோம். உடம்பு நடுங்கியது எனக்கு. எதிர்பாராமல் கிடைக்கும் சிறப்பு நிர்மால்ய தரிசனமல்லவா? கோவிலுக்கு வெளியில் இதைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கையில் நாங்கள் சன்னிதி முன் அதை முதலில் காண நின்றிருக்கிறோம் என்பது எத்தகைய பேறு.


சடாரென நடை திறக்கப் பட்டது. முந்தைய இரவு அலங்காரங்களோடு நிர்மால்ய தரிசனம் தந்தான் அவன். அவசரமாய் விழி நீரை துடைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தேன். அதேநேரம் கோவில் வெளிக் கதவு திறக்கப்பட பக்தர்கள் கூட்டமும் முண்டியடித்து வந்தது. நான் சட்டென சுரேஷ் கோபியின் அருகில் ஒதுங்கி நிற்க அவரது பிராபல்யத்தால் எங்களுக்கும் அங்கே நிற்க சற்று நேரம் அனுமதி கிடைத்தது. அலங்கராம் கலைக்கப் பட்டு முழு விக்கிரகமும் பளிச்சென எண்ணைக் காப்பில் மின்னியது. அடுத்து வாகப் பொடி சார்த்து.


(கேசவனுண்ணி கண்ணன்டே மேனி கேஸாதி பாதம் எண்ண தேச்சு. வாசன வாகப் பொடிசார்த்தி, வாசுதேவன் மேனி நீராட்டி) உள்ளே பாடல் ஒலித்தது. போதும்டாப்பா போதும். இந்த ஜென்மம் நற்பயனடைந்தது.

தொடர்ந்து சங்காபிஷேகமும் பார்த்து விட்டு கண்ணீரோடு வெளியில் வந்து விட்டேன். இப்போதும் என் மனசுக்குள் அந்தக் காட்சிகள் பத்திரமாக இருக்கிறது. தினமும் விடியல் மூன்று மணிக்கு அதைத்தான் பார்க்கிறேன்.


குருவாயூரில் பஸ் நின்றது. பின் வாசல் வழியே உள்ளே நுழைந்தோம். நல்ல காலம் நேரமிருந்தது. பெண்கள் வரிசையில் நின்று கொண்டோம். உச்சிக்கால அலங்காரத்திற்கு நடை சார்த்தப் பட கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்தோம். குருவாயூர் கோவிலில் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் சலிப்பு ஏற்படவே படாது. பொழுது போய்விடும்.


ஒரு வழியாய் வரிசை நகர்ந்து. என் கண்களிடம் கெஞ்சினேன். கலங்கி விடாதீர்கள். எனக்கு காட்சி மறைந்து விடும். கலங்காமல் ஒத்துழையுங்கள் ப்ளீஸ். சன்னதிக்கு முன் இருந்த சிறிய மண்டபம வரைதான் அனுமதி. அங்கேயே அனைவரும் தரிசனம் முடிந்து அனுப்பப் பட்டோம். ஒரு சில வினாடிகள்தான். கருடன் மீது அமர்ந்த கோலம்.! நீ பறந்து வந்தற்கு நானும் பறந்தபடி காட்சி தருகிறேன் என்கிறார் போலிருந்தது. ஒரு சில வினாடிகளே என்றாலும் மனசு திருப்தியடைந்தது. என் பெண்ணுக்கு துலாபாரப் பிரார்த்தனையும் நிறைவேற்றிய பிறகுதான் வயிற்றுப் பசி தெரிந்தது.


கேரளா டூரிசம் ஹோட்டல் ஒன்றிருந்தது. சாப்பாடு வெறும் நாற்பத்தி ஐந்து ரூபாய்தான். வாசனையான புழுங்கலரிசி சோறுடன் படு சுவையாக இருந்து. பால் பாயசத்தோடு. ஒரு வழியாய் இந்தவருட குருவாயூர் தரிசனம் முடிந்து உடம்பு நிறைய புது சக்தியோடு பாலக்காட்டிற்குத் திரும்பினோம். அடுத்த நாள் காலை எங்கள் அடிமைக் காவு எனப்படும் குலதெய்வக் கோவிலான காவசேரியில் இருக்கும் பறக்காட்டு பகவதி கோவிலுக்கு ஆட்டோ ஒன்றில் போய் விட்டு திரும்பிய பொது கல்பாத்தி சிவன் கோவில் தேர் முழு அலங்காரத்தோடு சிவா பெருமான் ரத ஆரோகணம் செய்வதற்குக் காத்திருந்தது.


இந்தபதிவில் பீ.லீலாவின் பாடலை அப்லோட் செய்வதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே, கற்றலும் கேட்டலும் ராஜிக்குதான் வெளிச்சம். மொபைலின் ராஜி சொல்ல சொல்ல நானும் ஏதேதோ செய்து ஒருவழியாய் அப்லோட் ஆயிற்று. குருதட்சினையாக ராஜிக்கே இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.



17 comments:

R. Gopi said...

மிக்க நன்றி மேடம். எனக்கு நிர்மால்ய தரிசனம் ஆகிவிட்ட திருப்தி.

அந்தப் பாடல் தெய்வீகம். மானசீகமாகக் குருவாயூர் சென்று வந்துவிட்டேன்.

raji said...

நேரிலேயே தரிசித்து விட்ட நிறைவு எனக்கு.பகிர்விற்கு நன்றி

பாடலில் மனம் கரைகிறது.

'நர ஜன்ம பாபம் நசிச்சு' என்கிற இடத்தில் கண்ணில் நீர் வருகிறது மேடம்.

'குரு தட்சிணை' பெரிய வார்த்தை மேடம்.நான் விளையாட்டாகக் கூறியது.பாடல் கேட்டதும் என் மனதை அந்த குருவாயூரப்பனிடமே நான் சமர்ப்பித்து விட்டேன்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உணர்வுப்பூர்வமான பதிவு வித்யா. பி.லீலாவின் குரல் ஒலிக்கத்துவங்கும் முந்தைய 10 நொடிக்குள் ஒரு காலை விடிந்து பக்ஷிகள் சிறகசைக்க உறங்கிய உலகத்தின் விழி திறக்கும் ஓர் காட்சி விரியும் அற்புதம். அது மதங்களைக் கடந்த எல்லா ஜீவராசிகளையும் தொடும் பூபாளத்தின் உன்னதம். அதன் பின் தொடரும் குரலும் அந்த குருவாயூர் கண்ணனின் அபிஷேக விவரணைகளும்.....

ஆஹா!முதல் தடவை கேட்கிறேன்.ஜன்ம சாபல்யம்.

அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்.

//பளிச்சென்று ஒரு பையன். பதினாறு வயதிருக்கும். நல்ல நிறம்//

நிறம் குறித்த விவரணைகளை மிகத் தேவையான இடம் தவிர மற்ற இடங்களில் தவிர்த்துவிடலாமே! ஏற்கனவே நம் சமூகம் அந்தப் படுகுழியிலிருந்து மீளவில்லை வித்யா.என் ஆலோசனை தவறானால் தள்ளிவிடுங்கள்.

raji said...

தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்

RAMA RAVI (RAMVI) said...

//அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் நாங்களும் உள்ளே அழைக்கப்பட, மூடிய சந்நிதிக் கதவுகளுக்கு வெளியே நாங்கள். நின்றோம்.//

இதை படிக்கும் பொழுது உடல் சிலிர்த்தது மேடம் எனக்கு.ஏதோ நானே கோவில் கதவுக்கு முன் தரிசனத்திர்க்கு காத்திருப்பது மாதிரி..

அழகான கண்ணன் தரிசனத்திற்கு மிகவும் நன்றி.

கே. பி. ஜனா... said...

நாங்களும் கூடவே வந்து தரிசித்த மாதிரி இருந்தது... அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

RVS said...

குருவாயூரப்பனின் கையில் இருக்கும் தாமரைப்பூ கஜேந்திர மோட்சத்தின் போது கஜேந்திரன் பூஜை பண்ணியதாம். சேங்காலிபுரம் உபன்யாசத்தில் சொன்னார்.

நிர்மால்ய தரிசனம் கிடைக்கப்பெற்றேன். நன்றி. :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

ARUMAIYAANA PATHIVU.
PAKIRVUKKU NANDRI, MADAM.
vgk

R.Gopi said...

குருவாயூருக்கு வாருங்கள்... ஒரு குறைகளை தீர்ப்பதை பாருங்கள்...

காலையில் குருவாயூரப்பனின் ஆனந்த தரிசனம் செய்து வைத்த வித்யாவிற்கு மிக்க நன்றி....

நேரமிருப்பின் என் வலையின் பக்கம் வருகை தரலாமே...

(என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5 http://jokkiri.blogspot.com/2011/11/5.html)

தனிமரம் said...

குருவாய்யூரானின் தரிசனத்திற்கு நானும்  முயல்கின்றேன் இன்னும் கிடைக்கவில்லை தரிசிக்க உங்கள் பதிவு அந்தக்கவலையைப் போக்கிவிட்டது. நன்றி!

தக்குடு said...

நானும் அப்பாவும் தரிசனம் பண்ணனும்னு ஆசைபடும் ஒரு முக்கியமான ஷேத்ரம். தரிசனம் எப்போ கிட்டுமோ!!! ஹும்ம்ம்ம்ம் பாக்கலாம்!

உங்க எழுத்துல ஏகதேசம் தெரிஞ்சான் கிருஷ்ணன்!:)

raji said...

தங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.வேண்டுகோளை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

raji said...

தங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.வேண்டுகோளை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அப்பாதுரை said...

சரியாத்தானே அப்லோட் பண்ணியிருக்கீங்க!
குருவாயூர் போன உணர்வு, படித்ததும்.

Unknown said...

"குருதட்சினையாக ராஜிக்கே இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்".நன்றி மறப்பது நன்றன்று என அழகாகக் காட்டியதற்கு நன்றி. எங்களையே கோவிலுக்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள்

ரிஷபன் said...

முன்பு ஒரு முறை ஒரு நாள் முழுக்க குருவாயூரப்பன் முன் நின்று வித விதமாய் அலங்காரங்கள் தரிசித்த நினைவுகள் இப்போது.. பாடலும் பதிவும் ஜோர்.