Monday, April 11, 2016

ஈரம் (சிறுகதை)

 ஈரம்

பாதி  வழி  கூட  வந்தபாடில்லை.  தலை சுற்றியது சம்பாவிற்கு.  இன்னும்  நாலைந்து  கிலோ  மீட்டராவது  இந்தப்  பானைகளையும்  தோல்  பைகளையும்  சுமந்து  கொண்டு  நடக்க  வேண்டும்.  அங்கே  எவ்வளவு  பேர்கள்  காத்திருக்கிறார்களோ?  வற்றிப் போன  கிணற்றின்  அடியாழத்தில்  ஒரு  ஊற்றில்  மட்டும்   நீர்  ஊறுகிறது.  அதை  ஒவ்வொருவராய்  தங்கள்  பானைகளில்  சேகரித்து,  எப்போது  தன்  முறை  வந்து  பானைகளும்  தோல்  பைகளும்  நிரம்பி  வீடு  திரும்புவோமா தெரியவில்லை.  திடீரென்று  ஏன்  இப்படி  ஒரு  தண்ணீர்ப்  பஞ்சம்  வந்ததெனத்  தெரியவில்லை.

கண்ணுக்கெட்டிய  தூரம்  வரை  பூமி  வறண்டு  பாளம்  பாளமாய் வெடித்திருந்தது.  சுட்டுப்  பொசுக்கும்  சூரியனையும்  அனல்  காற்றையும்  தவிர  வேறொன்றுமில்லை அந்தப்  பிரதேசத்தில்.  நிறைய  ஆடுமாடுகள்  நீரின்றி  இறந்து  விட்டன.  தண்ணீர்  வற்ற  வற்ற  ஊரிலுள்ளோரின்  செல்வமும்  வற்றிப்  போயிற்று.   பாதி  பேர்  ஊரை விட்டு  குடிபெயர்ந்து  விட்டனர்.  நிறைய  பேர்  வறட்சியில்  இறந்து  விட்டனர்.    வெள்ளம் வந்தாலும்  வறட்சி  ஏற்பட்டாலும்  இயற்கை  ஏழைகளையே  அதிகம்  துன்புறுத்துகிறது.

இந்தத்  துன்பம்  எத்தனை  நாளென்று தெரியவில்லை. வானம்  என்று இரக்கப்படுமோ?   தண்ணீர்  தூக்கித்  தூக்கித்   தோள்கள்  கழன்று  விட்டன. அம்மா ஸ்கூலை  விட்டு  நிறுத்தி  விட்டாள்.  படித்தது  போதும்  தண்ணீர் கொண்டு  வா  என்று  பானைகளோடு  அனுப்பி  விட்டாள். ஊருக்கு  வெளியே ஆறு  கிலோமீட்டர்  தூரத்தில்  ஒரு  அகண்ட  கிணற்றின்  அதல பாதாளத்தில் பாறைக்  கற்களுக்கிடையில்  நீர்  சுரந்து  கொண்டிருக்கிறது.  அந்த  நீர்தான் இங்கிருக்கும்  நூற்றுக்  கணக்கான  குடும்பங்களின்  தொண்டையை   ஓரளவுக்கு  நனைக்கிறது.  வாரத்திற்கொரு முறை  ஈரத்துணி  கொண்டு உடம்பு  துடைப்பதுதான்  குளியல்  என்றாகி  விட்டது.

எப்போதாவது  அரசாங்கத்  தண்ணீர்  வண்டி  வரும்.  ஆளுக்கு  இரண்டு  பானை  தண்ணீர்  கிடைத்தாலே  பெரிய  விஷயம்.  தண்ணீர்  வண்டி  வரும்  வழியிலேயே  அதிலிருக்கும்  நீரை  காசுக்கு  விற்று  விட்டு  மீதியைத்தான்  இங்கு  விநியோகிக்கிறார்கள்  என்று  ஊர் மக்கள்  முணுமுணுக்கிறார்கள்.  அரசாங்கம்  இலவசமாய்  அனுப்பும்  நீரை  உரியவர்களுக்கு  விநியோகிக்காமல்  காசுக்கு  விற்பது  குற்றமில்லையா?  சம்பாவுக்குப்  புரியவில்லை.  மனிதர்கள்தான்  எல்லாவற்றையும்  விற்கிறார்கள்.    மேகங்கள்  மழையை  விற்பதில்லை.  பூமி  தன்  ஊற்றுத்  தண்ணீரையும்,  நதிகளின்  நீரையும்  காசுக்கு  விற்பதில்லை.   எந்த  மரங்களும்  செடிகளும்  தங்கள்  கனிகளையும்  காய்களையும்  விற்பதில்லை.  மனிதன்  மட்டும்தான்  வியாபாரி.

சற்றே  ஓய்வெடுத்துக்  கொண்டு  மீண்டும்  நடந்தாள்  சம்பா.  நீரை ஒட்டித்தான் மனித  வாழ்வு.  நீரை  ஒட்டித்தான்  நாகரிகங்கள்.  நீரின்றி  எதுவுமில்லை.  எது  ஒன்று குறைகிறதோ  அது  இன்னும்   விலைமதிப்பற்றதாகி விடுகிறது.  மனிதன்  அதைத்  தேடி  ஓடுகிறான்.  சேமித்து  வைத்துக்  கொள்ளத்  துடிக்கிறான்.  வியாபாரியோ பதுக்க  முனைகிறான்.  பெரும்  லாபம்  காண  நினைக்கிறான்.  இயற்கையை  உற்று  நோக்கினால், அது  எவ்வளவோ  போதனைகளை  மௌனமாய்க்  கூறும்.  ஆயினும்  மனிதன்  கற்க  விரும்புவதில்லை.  சுயநலம்  அவன்  கண்ணை  மறைத்துவிடுகிறது.

சம்பா  வானத்தைப்  பார்த்தாள்.   இந்த  நீல  வானத்தில் மழை  மேகம்  பார்த்து  எத்தனை  நாளாகிறது!  கடவுளுக்கு  இந்தப்  பிரதேசத்தின்  மீது  என்ன  கோபம்? அந்தக்  கோபம்  நீக்கி  அவரைக்  குளிரச்  செய்ய  என்ன  செய்ய  வேண்டும்?  சம்பா  யோசித்தவாறு  நடந்தாள்.

விவசாயத்திற்கு  மழையில்லை.  குடிக்க  நீரில்லை  என்ற  நிலையில்  தண்ணீர் தேடுவதே  அனைவருக்கும்  வாழ்க்கையாகி விட்டது.  வீட்டு  வேலைகளையும்  கவனித்துக்  கொண்டு    அம்மாவால்  தண்ணீர்  தேடி  அலையமுடியவில்லை.  "பிழைத்துக்  கிடந்தால்  அடுத்த  ஆண்டு  படித்துக்  கொள்ளலாம்  இப்போதைக்கு  தண்ணீர்  கொண்டு  வருவது  உன்  வேலை  என்று  பதினாறு   வயது  சம்பாவின்  படிப்பை  நிறுத்தி  விட்டாள்.  தலையில்  ஒன்றின்  மேல்  ஒன்றாக  மூன்று  பானைகள்,  தோளில்  நான்கு  தோல்  பைகள் என்று  சுமந்து,  சிந்தாமல்  சிதறாமல்  ஆறு  கிலோமீட்டர்  நடப்பது  என  வித்தைக்காரன்  பிழைப்பாகி  விட்டது  வாழ்க்கை.

 காலங்காலையில்  கஞ்சித்தண்ணி  குடித்து  விட்டு  தண்ணீருக்காகக்  கிளம்பினால்  வீடு  திரும்ப  மதியமாகி விடும்.  கொண்டுவரும்  நீரை அன்று  முழுவதும்  மருந்து  மாதிரி  உபயோகிக்க  வேண்டும். வரும்  வழியில்  ஒரு  சொட்டு  தண்ணீர்  வீணாக்கினாலோ  குறைந்தாலோ  காட்டுக்  கத்தல்  கத்துவாள்  அம்மா. கையில்  கிடைத்த  பொருட்களை  எடுத்து  அடிப்பாள்.  தண்ணீர்க்  கஷ்டம்  அந்த  அளவுக்கு  அவளை  ராட்சசியாக்கியிருந்தது  அவளது  கோபத்திற்கு  பயந்தே  கூட  தண்ணீர்  சிந்தாது  நடக்கப்  பழகியிருந்தாள்  எனலாம்.   எத்தனை  நாளைக்கு  இப்படி  நீர்  சுமக்கும்  கஷ்டம்  எனத்  தெரியவில்லை.   ஏற்கனவே  பாதி  ஜீவன்  போய்  விட்டாற் போலிருக்கிறது.  முழுசும்  போய்  விட்டால்  நன்றாக  இருக்கும்  என்று  கூடத்  தோன்றியிருக்கிறது.   எல்லா  அவதிகளும்  தேவைகளும்  உடலுக்குதான்.  ஆத்மாவுக்கு  தாகமில்லை.  குளிரில்லை,  வெப்பமில்லை.  பசியில்லை,  வாழ்தலைக்  காட்டிலும்  மரணம்  இனிதோ  என்று  கூடத்  தோன்றியது  அவளுக்கு.

வெயிலில்  நடந்ததில்  தொண்டை  வறண்டு  போயிருந்தது.  தூரத்தில் இரண்டொருவர்  தண்ணீர்  சுமந்தபடி  திரும்பிக்  கொண்டிருந்தார்கள். கொஞ்சம்  தண்ணீர்  கேட்க  நினைத்தாலும்  கேட்கவில்லை.  நிச்சயம்  தர மாட்டார்கள்.  இவ்வளவு  பாடுபட்டு  இத்தனை  தூரம்  நடந்து வந்து  உயிர்  ஊசலாட  கிணற்றுக்குள்  கயிறு  பிடித்து  பலமுறை இறங்கிச்  சென்று   ஊறிய  நீரை  தோல்  பையில்  சேகரித்து  மேலே  வந்து  பானைகளை  நிரப்பி சுமந்து  வரும் நீரை  எப்படி  கொடுப்பார்கள் ?  ஒரு  கோப்பை  நீருக்கு  எவ்வளவு  உடல்வலி?  அவர்களிடம்  நீர்  கேட்கக்  கூட  மனம்  வராதே.  இன்னும்  சற்று  தூரம்தான்.  கிணறை  நெருங்கி  விடலாம்.  தாகம்  தணித்துக்  கொள்ளலாம்.  உமிழ்நீரால்  தொண்டை  நனைத்துக்  கொண்டு  நடையை  வேகப்  படுத்தினாள்.


எதிரில்  வந்து  கொண்டிருந்த  பெண்கள்  சட்டென  நின்று கீழே  எதையோ  பார்த்தார்கள்.    யாரோ  ஒரு  ஆள்  கீழே  விழுந்து  கிடந்தான்.  அவர்களிடம்  சைகையால்  குடிக்க  கொஞ்சம்  நீர்  கேட்டான்.    அவர்கள்  ஒருவரை  ஒருவர்  பார்த்துக்  கொண்டார்கள்.  தண்ணீருக்காக   கிணற்றுக்குள்  கயிறு  பிடித்து  தொங்கி   இறங்கி  நீர்  சேகரித்ததால்  தங்கள்  கைகளிலும் உடலிலும்  ஏற்பட்டிருந்த  சிறாய்ப்புகளையும்   பார்த்துக்  கொண்டார்கள்.  அவர்களுக்கு  அந்த  மனிதன்  மீது  ஏற்பட்ட  இரக்கத்தை  விட  தங்கள்  மீது  ஏற்பட்ட  சுய இரக்கம்  அதிகமாக  இருந்தது.   ஒரு  துளி  நீருக்கு  எத்தனை  பாடு! அதை  வாரி  வழங்குவதாவது.   அவர்கள்   மௌனமாக அவனைக்  கடந்து  நடந்தார்கள்.  அவர்களைச்  சொல்லிக்  குற்றமில்லை.  கண்முன்னே  நிறைய  மரணத்தைக்  கண்டு  விட்டவர்கள்.

சம்பா  அவனைப்   பரிதாபமாகப்  பார்த்தாள்.  ஊருக்குப்  புதியவன்  போலும்.  பார்த்தால்   படித்தவன்  போலிருந்தான்.   எதற்கு  இந்த  வறண்ட  பிரதேசத்திற்கு  வந்தான்?  ஒரு  வேளை  வழிதவறி  வந்து  விட்டானா?

"சகோதரி  கொஞ்சம்  நீர்  கொடுங்கள்.   தாகத்தில்  செத்து  விடுவேன்  போலிருக்கிறது"  உடைத்த  இந்தியில்  அவன்  அவளைப்  பார்த்து  கெஞ்சினான்.   சம்பா  காலிப்  பானையைக்   கவிழ்த்துக்  காட்ட  அவன்  முகம்  வாடியது.

அவள்  அவனைத்  திரும்பித்  திரும்பிப்  பார்த்தபடி  நடந்தாள்.  திரும்பி  வரும்  போது  உயிருடன்  இருப்பானா?    பாவம்  யாரோ?  எங்கே  பிறந்தவனோ?  மரிப்பதற்கு  இங்கே  வந்திருக்கிறான்.  எத்தனை  ஜீவன்கள்  இவனை  நம்பியிருக்கின்றனவோ?  எதற்கு  வந்தான்  நீரற்ற  இந்த  பாலைக்கு? யோசித்தவாறு  நடந்தாள்.


கிணற்றில்  கூட்டம்  அதிகமிருந்தது.  பல பேர்  கயிறு  கட்டி  இறங்கிக் கொண்டிருக்க  அவர்களுக்கு  சிலர்  உதவிக்  கொண்டிருந்தார்கள்.   ஏதேனும் ஒரு  கயிறு  கிடைத்தால்  இறங்கி  விடலாம். எப்படியும் ஒருமணி நேரமாவது  காத்திருக்க  வேண்டும்.  அவள்  ஒரு  சிறிய  பாறைக்கல்   மீது  அமர்ந்து,  நடந்த  களைப்பில்  கெஞ்சிய  பாதங்களுக்கு  ஓய்வு  கொடுத்தாள். அரைமணி கழித்து  சம்பா  என்று  யாரோ  அழைப்பது  கேட்க  நிமிர்ந்து  பார்த்தாள்.  தோழி  ஒருத்தி  இவளைப்  பார்த்து  கையசைத்து  அழைப்பது  தெரிய,  விரைந்து  அருகில்  சென்றாள்.

சம்பா  இந்தா  கயிறைப்  புடி.  எனக்கு  வயிறு  வலிக்குது.  ஒதுங்கிட்டு  வரேன்.  வேற  யார்கிட்டயும்  கயிறைக்  குடுத்தா  திரும்பக்  கிடைக்காது.  நா  வர  வரைக்கும்  நீ  தண்ணி  எடுத்துக்க.  என்றபடி  கயிறைக்  கொடுத்து  விட்டு  ஒரு  சிறிய  பானை  நீருடன்  ஒதுங்கிப்  போனாள்.  இது  எதிர்பாராத  அதிர்ஷ்டம்.  அவள்  பானைகளை  வைத்து  விட்டு  கயிறு  பிடித்தபடி  கிணற்றுக்குள்  தொங்கியவாறு  இறங்கினாள்.   வழக்கத்தை  விட  இன்று  கிணற்றில்  அதிகம்  சுரப்பிருந்தது. முதலில்  தாகம்  தீர்த்துக்  கொண்டாள்.  தொண்டை  வழியே  சில்லென்ற  நீர்  இறங்கிய  போது  அந்த  மனிதனின்  நினைவு  வந்தது.   கயிறு  பிடித்து  இறங்கியதில்  உள்ளங்கை  எரிந்தது.  ஒவ்வொரு  குவளையாய்   நீர்  எடுத்து தோல்பைகளில்  நிரப்பினாள்   நாலு தோற்பை  நிரப்ப  முக்கால்  மணியாயிற்று. மேலே  வந்து  பானைகள்  நிரப்பியபோது  தோழிவர,  கயிறை   நீட்டினாள்.  "பரவால்ல  நீ  இறங்கி  தோல்  பை  நிரப்பிக்க.  எனக்கும்  கொஞ்சம்  களைப்பார்க்கு.  அப்டி  உக்காந்துக்கறேன்"  என்றாள் தோழி.  சம்பா  மறுபடியும்  இறங்கி  தோற்பைகளிலும்   நீர்  நிரப்பிக்  கொண்டு  மேலே வந்தாள்.


"நன்றி  சாந்தினி.  நீ இறங்கு  நான்  உதவுகிறேன்"  என்றாள்.

"தேவையில்லை.  நீ  களைப்பாக  இருக்கிறாய்.  இன்னும்  ஒன்றிரண்டு  பானைகள்தான்.  நான்  பார்த்துக்  கொள்கிறேன்  கிளம்பு"

தோழி  சொல்ல  மீண்டும்  ஒரு  முறை  நன்றி  சொல்லி  விட்டு  சம்பா  கிளம்பினாள்.  உண்மையிலேயே  களைப்பாகத்தான்   இருந்தது.  உடம்பெல்லாம்  வலித்தது.  ஆனாலும்  ஓய்வெடுக்க  முடியாது.  அம்மா  காத்திருப்பாள்.  நடுவழியில்  பசித்தால்  சாப்பிடுவதற்கு, அம்மா  கட்டிக்  கொடுத்திருக்கும்  பழைய  சோறை  சாப்பிட்டு  விட்டு  தெம்பாகக்  கிளம்பலாம்  என  எண்ணி  ஒரு பக்கமாக அமர்ந்து  சோற்றுப்  பொட்டலத்தைப  பிரித்து  இரண்டு  வாய்  உருட்டி உண்ட  போது,  அந்த  மனிதனின்  நினைவு   வர  அதற்கு  மேல்  சோறு  இறங்கவில்லை.  பிரித்த  பொட்டலத்தைக்  கட்டி  பத்திரப்  படுத்தி  கை  கழுவிக்  கொண்டு  தண்ணீர்ப்  பானைகளைத்  தலையில்   ஒன்றன்  மேல்  ஒன்று  வைத்து  தோற்பைகளைத்  தோளில் மாட்டிக்  கொண்டு  நடக்கத் தொடங்கினாள்.

அவன்  அங்கேயே  அரை  மயக்கத்தில்  கிடந்தான்.  லேசாய்  எழுந்து  அடங்கிய  மார்பு,  மூச்சிருப்பதைக்  காட்டியது.  கண்கள்  மூடியிருக்க  உதடுகள்  காய்ந்து  கிடந்தன.  இப்படியே  கிடந்தான்  என்றால்  எத்தனை  மணி  நேரம்  ஜீவன்  தாக்குப்  பிடிக்குமோ?  அவனைக்  கடந்து  செல்ல  சம்பாவுக்கு  மனம்  வரவில்லை. இவன்  செத்தால்  அது  கொலைக்குச் சமானம்  என்று  தோன்றியது.  ஈவிரக்கமற்றிருப்பது  கூட  கொலைதான்.  சம்பா  தலையிலிருந்த  பானைகளை  ஒவ்வொன்றாக  இறக்கி  வைத்தாள்.  தோற்பைகளை  இறக்கி  விட்டு  அதில்  ஒன்றைப்  பிரித்து  அவனருகில்  அமர்ந்து  நீரை  சிறிது  சிறிதாக  அவன்  வாயில்  ஊற்றினாள்.  கங்கையைக்  கண்ட  பகீரதன்  மாதிரி  அவன்  முகத்தில்  பிரகாசம்.  காய்ந்த  நிலம்  உறிஞ்சுவது  மாதிரி  நீரை  உறிஞ்சினான்.  அவளைநோக்கி  கங்காமாயி   என்று  முணுமுணுத்தபடி  கை  கூப்பினான்.  பிறகு  மெல்ல எழுந்து  அமர்ந்தான்.  மிகவும்  சோர்ந்திருந்தான்.

"ஊருக்குப்  புதியவரா?

"ஆம்.  தென்னிந்தியாவிலிருந்து  வருகிறேன்"

"என்ன  வேலையாக  இந்த  பஞ்சபூமிக்கு  வந்தீர்கள்?"

"எழுதுவதற்கு.   உங்கள்  ஊர்  வறட்சி  பற்றி  நேரடியாகப்  பார்த்து  எழுத.  என்னோடு  இன்னும்  இருவரும்  வந்தார்கள்.  நான்  வழிதவறி  விட்டேன்.  எப்படிச்  செல்வதென ஒன்றும்  புரியவில்லை.  தண்ணீர்  பாட்டில்கள்  அவர்களிடம்  இருக்கின்றன.   பசி  தாகம்  எல்லாம்  சேர்ந்து  என்னை  மயங்கச்  செய்து  விட்டது. மிகவும்  நன்றி  சகோதரி.  நான்  நகரத்தை  அடைய  வழி காட்டினால்  நன்றியோடிருப்பேன்.  அவன்  சட்டைப்  பையிலிருந்த  கைபேசியை  எடுத்து  பரிதாபமாகப்  பார்த்தான்.  அதுவும்  சார்ஜ்  இன்றி  தற்காலிகமாக  தன் மூச்சை   நிறுத்தியிருந்தது.

"ஒரு  நிமிடம்"  அவள்  சோற்றுப்  பொட்டலத்தை  எடுத்து  நீட்டினாள்

"சாப்பிடுங்கள்"

அவன் கண்கள்  பளிச்சிட்டன. தயங்காது  அதை  வாங்கி, அவசர  அவசரமாய்  பொட்டலத்தைப்  பிரித்து  அள்ளி  விழுங்கினான்.  சாப்பிட்டதும்,  மீண்டும்  நீர்  வாங்கி  மளக்  மளக்கென   குடித்தான்.  கை  கழுவி  முகத்திலும்  சிறிது  நீர்  தெளித்துக்  கொண்டு  தோற்பையை  அவளிடம்  நீட்டினான்.  அது  காலியாகியிருந்தது.  மீண்டும்  அவளை  நோக்கி  கண்ணீர்  மல்க  கை  கூப்பினான்.

"நன்றி  சகோதரி  நீங்கள்  எனக்கு  நீரும்  சோறும்  மட்டும்  கொடுக்கவில்லை.  உயிர்  கொடுத்தீர்கள்"  என்றவன்  தன்   பேண்ட்  பாக்கெட்டில்  கை விட்டு  ஐநூறு   ரூபாய்  நோட்டு  ஒன்றை  எடுத்து  நீட்டினான்.

"வாங்கிக்  கொள்ளுங்கள்  சகோதரி  நன்றியினால்  கொடுக்கிறேன்.  பெற்றுக்  கொள்ளுங்கள்."

"வேண்டாம்"  அவள்  மறுத்து  தலையசைத்தாள். "அந்தக்  கிணறு  இந்த  நீரை  எனக்கு  விற்கவில்லை.  வழங்கியது.   நன்றியினால்  நான்  ரூபாய்  கொடுத்தாலும்  அது  பெற்றுக்  கொள்ளாது.  இத்தனை  கடும்  வறட்சியிலும்,  இந்த  பூமியின்  அடி  ஆழத்தில்   ஈரம்  சுரந்து  கொண்டிருக்கிறதே   அதற்குச்  சொல்லுங்கள்  உங்கள்  நன்றியை.  நீங்கள்  பத்திரமாக  ஊர்  போய்ச்   சேர்ந்ததும்,  இந்த  வறண்ட  பூமியில்  மழை  பெய்யவும்,  நீர்  உயரவும்,  பிரார்த்தனை  செய்யுங்கள்  அது  போதும்"    அவள்  பானைகளை  எடுக்க,  அவன்  அவற்றை  அவள்  தலையில்   ஏற்றி  வைக்க  உதவினான்.  அவள்  அவனுக்கு  வழிகாட்டி  விட்டு  தன்   வழியில்  நடந்தாள்.   ஒரு  தோல் பை  காலியாக  இருப்பதற்காக  அம்மா  அடிப்பாளா?  கூச்சலிடுவாளா?  மீண்டும்  கிணறு  நோக்கி  நடப்பதும்  இயலாது.  மிகவும்  நேரமாகி  விடும்.  அம்மா  கேட்டால் என்ன  சொல்வது  அவளிடம்?  உண்மையா  அல்லது  ஏதேனும்  பொய்யா?

ச்சட்  எதற்கு  பொய்  சொல்ல  வேண்டும்.  குற்றமேதும்  செய்யவில்லையே.   நல்ல  காரியம்தானே  செய்திருக்கிறேன்.   நீரை  வீணாக்கினால்தானே  அவளுக்கு  கோபம்  வரும்.  தவித்துக்  கொண்டிருக்கும்  ஒரு  ஜீவனுக்கு  கொடுத்து  உயிர்  காத்தேன்  என்று  கூறினால்  புரிந்து  கொள்ள  மாட்டாளா  என்ன?   நிச்சயம்  புரிந்து  கொள்ளுவாள்.  அவள்  அடி  மனசிலும்  ஏதோ  ஒரு  அடி  ஆழத்தில்  ஈரம்  நிச்சயம்  இருக்கும்.

சம்பா  புன்னகையோடு  நடையின்  வேகத்தைக்  கூட்டினாள்.





















5 comments:

எல் கே said...

class Madam. it brings back memories of my childhood in salem where my mother will have to go from home to temple well which is situated 4 streets away and have to cross the busy bazar...

வை.கோபாலகிருஷ்ணன் said...

Excellent Writing Madam. :)

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.

படிக்கும்போது மனம் கலங்கிப்போனேன்.

கதையின் தலைப்பும், ஒவ்வொரு வரிகளும், படங்களும் தண்ணீரின் தேவையை உணர்த்துவதாக உள்ளன.

மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

கண்ணீரா தண்ணீரா. உஷா மா.
இந்த மனுஷத் தன்மை இருக்கும் போது
இருக்கும் வரை அந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கும்.

அருமை அருமை. மலைத்துப் போகிறேன். அம்மா.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி வைகோ, எல்.கே. வல்லிமா.

V. Chandra, B.COM,MBA., said...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது சிறுகதையை வாசிக்கிறேன்... உங்கள் நாவல் படித்த எனக்கு சிறுகதையாக இருப்பது பெரும் ஏமாற்றம். பெரும் தாகத்தோடு வந்த எனக்கு பருக நீர் கிடைத்த சந்தோஷம். கதை அருமை உணவில்லாமல் கூட சில நாட்கள் வாழலாம் நீர் இல்லாமல் ஒருநாள் கூட வாழ முடியாது என்பதை உணர்த்தியது.