Wednesday, April 14, 2010

கதை வாசனை

வாசிக்க கற்ற வயதில் என் அப்பா எனக்காக மாதா மாதம் வாங்கி கொடுத்த புத்தகம் 'அம்புலிமாமா'. அதை எனக்குமுன் யாராவது தொட்டுவிட்டால் எனக்கு கோபம் வரும். அந்த புத்தகத்தின் புது வாசனை போகும் முன்பு படித்து விட வேண்டும். எத்தனை ஊடகங்கள் வந்தாலும் ஒரு வாசகனுக்கும் புத்தகத்திற்கும் இடையில் உள்ள புரிதலும் சுகமும் உன்னதமானது. அம்புலிமாமாவிற்கு பிறகு நான் படித்த புத்தகங்கள் மூலமாகவே என் வளர்ச்சி தொடங்கியது.

அந்த காலத்தில் என் வீட்டில் விகடன், கலைமகள், அமுதசுரபி இவற்றிக்கு மட்டும்தான் அனுமதி. அம்புலிமாமாவைத் தாண்டி பதிமூன்று வயதில் நான் படித்த முதல் தொடர் விகடனில் உமா சந்திரனின் 'முழு நிலா'. அம்புலிமாமாவிற்க்கும் அதற்க்கும் இடையில்தான் எவ்வளவு இடைவெளி? பெரியவர்கள் வாசித்துக்கொன்ட்டிருந்த அந்த முழு நிலா எனக்குள் இன்று வரை தேயவேயில்லை. உப்பிலியின் ஆக்ருதியும், மலைப்பாம்பும், முருங்கைக்காய் சாம்பாரும், கீரைக்கடைசலும், அப்பள உருண்டைகளும், ஜகடை  தாத்தாவின் ஜகடை சத்தமும், அந்த மலை வாழ் மக்களின் தேனும், தினைமாவும், வாழ்வும் இன்னமும் எனக்குள் பிரம்மிப்பாய் பதிந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு முழு நிலாவை மீண்டும் படிக்க ஆசைப்பட்டப்போது எனக்கு அது எட்டாத நிலவாக இருந்தது. நான் ஏறி இறங்கிய எந்த நூலகத்திலும் கிடைக்கவில்லை.

நாம் ஒன்றை தீவிரமாக நினைத்தோம் என்றால் அது நமக்கு எப்படியாவது யார் மூலமாவது கிடைக்கும். எனக்கும் முழு நிலா கிடைத்தது. எப்படி? என் மருமகன் மூலமாக. என் மருமகன் திரு சஞ்சய் பின்டோ மிக பிரபலமான ஆங்கில செய்தியாளர். அன்றைய காவல்த்துறை ஆணையர் திரு ஆர் நடராஜ் என் மருமகனுக்கு கொடுத்த பேட்டியை தொலைக்காட்சியில் கண்டதும் என் மருமகனிடம் நான் வைத்த கோரிக்கை முழு நிலாவை எப்படியாவது அவரிடமிருந்து ஒரு பிரதி வாங்கி தர வேண்டும் என்பததுதான். திரு நடராஜ் வேறு யாருமல்ல திரு உமா சந்திரனின் மகன்தான். என் கோரிக்கை உடனடியாக் நிறைவேற்றப்பட்டது.. முழு நிலா மீண்டும் என் கைகளில் தவழ்ந்தப்பொழுது நான் என் பதிமூன்றாம் பிராயத்திற்குச் சென்றுவிட்டேன். அந்த கதை வாசனைக்கு ஈடில்லை.

5 comments:

Unknown said...

first blog first class!

உப்பிலியின் ஆக்ருதியும், மலைப்பாம்பும், முருங்கைக்காய் சாம்பாரும், கீரைக்கடைசலும், அப்பள உருண்டைகளும், ஜகடை தாத்தாவின் ஜகடை சத்தமும், அந்த மலை வாழ் மக்களின் தேனும், தினைமாவும், வாழ்வும் இன்னமும் எனக்குள் பிரம்மிப்பாய் பதிந்திருக்கிறது....

the way u put it.. makes me want to read "முழு நிலா".!
cheers..! :D

kalamegham said...

குறுஞ்சி மலர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்ககூடிய மலர்.உங்கள் தோழியின் மகளும் பல இன்னல்களை கடந்து இவ்வளவு சாதித்திருக்கிறார்.அவருக்கேற்ற வாழ்க்கைதுணை கிடைக்க என் நல் வாழ்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எனக்கும் புது புத்தக வாசனை மீது ஒரு மயக்கம் உண்டு...நான் படித்த பின் தான் மற்றவர் படிக்க அனுமதிப்பேன்... பள்ளி நாளில் நான் தலையணை அடியில் ஒளித்து வைத்து இருக்கும் விகடனை வேண்டுமென்றே எடுத்து கசக்கி வைக்கும் என் பெரியம்மா மகனின் நினைவு தான் வருகிறது இப்போது

"முழு நிலா" நான் படித்ததில்லை மேடம்... அடுத்த முறை ஊர் செல்லும் பொது தேடி பார்க்கிறேன்...நன்றி

Dr முரளி said...

நான் முதலில் முழு நிலா கதையைப் படித்தபோது நான் பத்தாம் வகுப்பு கூட இல்லை என்று நினைக்கிறேன். அதுவும் என்னுடைய அம்மா, மற்றும் அக்கா சேர்த்துவைத்த கதைகளின் தொகுப்பிலிருந்து எடுத்துப் படித்தேன்.அந்தப் புத்தகம் இப்போது என்னிடம் இல்லை,வீடுகள் பல மாறும்போது கடையில் போட்டு விட்டோம். அந்தக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். குச்சாமு, உப்பிலி போன்ற கேரக்டர்கள் இன்னமும் மனதில் நிற்கிறது. தேடிக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் படிக்க...இதே போல 'சைக்கோ சாரநாதன்' என்ற ஒரு கதை. அதைத் தேடி பெற்று விட்டேன். மறக்க முடியாத காலங்கள்.

Anonymous said...

எனக்கு முழு நிலா கதைப் புத்தகம் கிடைக்குமா ?