Tuesday, September 27, 2016

உயர்வு

எனக்கென்று  சில  கொள்கைகள்  இருக்கிறது.  அதை  எந்த சுய லாபத்திற்காகவும்  விட்டுக்  கொடுக்க  மாட்டேன்.  புகை,  புகையிலை இவற்றிற்கு  எதிரானவள்  நான்.   புகைக்கு  எதிராக  பல  விழிப்புணர்வு பதிவுகள்  கட்டுரைகள்  எழுதியிருக்கிறேன். இது  என்னுடைய  மற்றொரு அனுபவம்.

2009  ஆம்  ஆண்டு    என்  அலுவலகம் எனக்கு  கண்காணிப்பாளராக  பதவி  உயர்வு  அளித்தது.  சந்தோஷமான  விஷயம்தான்.  சில  பல நிர்வாக  குளறுபடிக;ளால்  இந்த  பதவி  உயர்வு   எனக்கு  கால  தாமதமாகவே  வழங்கப்  பட்டது.  என்னைவிட  ஜூனியர்களுக்கு  எனக்கு  முன்பே  வழங்கப்  பட்டிருந்தது.  நான்  பலமுறை  சுட்டிக்  காட்டியும்  ஏதேதோ  காரணம்  சொல்லி  தட்டிக்  கழித்தார்கள்.    2007  ல்   வர  வேண்டிய  பதவி  உயர்வு   ஒரு  வழியாக  2009  ல்  வந்தும்  சந்தோஷப்  பட முடியவில்லை.  கிருஷ்ணகிரிக்கு  அருகே  சூளகிரி  என்ற  ஊரில்  எனக்கு  போஸ்டிங்  போட்டு  இருந்தார்கள்.  கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த  கவிதாவை  தன்னந்தனியே  சென்னையில்  விட்டு  விட்டு  என்னால்  செல்ல  முடியாத  சூழல்.  அதைக்  குறிப்பிட்டு  சென்னையிலேயே  பணியிடம்  வழங்கக்  கேட்டேன்.  மறுத்து  விட்டார்கள்.


பலரும்  என்னிடம்,  எந்தக்  காரணம்  கொண்டும்  பதவி  உயர்வை  துறக்காதே. இப்போது  விட்டால்  மீண்டும்  மூன்றாண்டுகள்  கழித்து  அதுவும்  வேகன்ஸி இருந்தால்தான்  மீண்டும்  பதவி  உயர்வு  தருவார்கள்.  அது  மேலும் இரண்டாண்டு   தள்ளிப்  போனால்  அதற்குள்  நீ  ரிடையர்  ஆகி  விடக்  கூடும்.   கிட்டத்தட்ட  இந்த  பதவி  உயர்வால்  உனக்கு  நல்ல  பெனிஃபிட்  கிடைக்கும், அதை  முட்டாள்தனமாக     இழந்து  விடாதே  என்றார்கள்.   சிலர்  சூலகிரியிலேயே  சென்று  பணியில்  சேர்ந்து விட்டு  பின்னர்  விடுப்பில் வா.  வந்து  பார்க்க  வேண்டியவர்களைப்   பார்த்து  சம்திங்  கொடுத்து  எப்படியாவது  சென்னைக்கு  மாறுதல்  பெற்று விடலாம்.  இதனால்  உன்  ரிடயர்மென்ட்  பெனிஃபிட் சில  லட்சங்கள்  அதிகரிக்கும்.  வாய்ப்பை  விட்டு  விடாதே  என்றார்கள்.  யாருக்கும்  லஞ்சம்  கொடுத்து  காரியம்  சாதிக்க  மாட்டேன்  என்று   உறுதியாகக்  கூறி    விட்டேன்.


 என்  முன்னால்   மூன்று  வழிகள்   இருந்தன.  ஒன்று  சூலகிரி   போய்  பணியில்  சேர  வேண்டும்.  இரண்டாவது  சென்னையிலேயே   வேறு  ஏதேனும்   துறையில்  டெபுடேஷன்  கிடைக்க  முயற்சிக்கலாம். மூன்றாவது    மூன்றாண்டுகளுக்கு  பதவி   உயர்வை  தற்காலிகமாகத்  துறந்து  (relinquish)    விடலாம்.   முதலாவது  நிச்சயம்  முடியாது.  மூன்றாவதை  சுலபமாக  ஒரு  வெள்ளை  தாள்  எடுத்து  எழுதினால்   இரண்டே  நிமிடத்தில் முடிந்து  விடும்.   ஆனால்  அப்படி  செய்வதற்கு  முன்  ஏன்  இரண்டாவதை  முயற்சித்து  பார்க்கக்  கூடாது  என்று  தோன்றியது.  முயற்சித்து  செய்து  பார்ப்போம்.   வெற்றி  கிடைக்கவில்லை  எனில்  மூன்றாவதைச்  செய்யலாம்  என்று  முடிவெடுத்தேன்.


 பல  துறைகளுக்கு   நானே  நேரிலும்,  நண்பர்கள்  மூலமாகவும்  முயற்சித்தேன்.  எங்கும்  கண்காணிப்பாளர்  பதவி  காலியில்லை  என்றே  கூறப்  பட்டது.   இதனிடையில்  எனக்குத்  தெரிந்த  ஒரு  ஐ.ஏ.எஸ்  ஆபிசரை  நேரில்  பார்த்து  அவரால்  எனக்கு  ஏதாவது  விதத்தில் உதவ  முடியுமா  எனக்  கேட்கலாம்  என  நினைத்து  அவரைத்  தேடி  தலைமைச்  செயலகம்  சென்றேன்.  எந்த  பந்தாவுமில்லாது  என்னிடம்  பேசினார்.  அவரிடம்  விஷயத்தைக்  கூறினேன்.  அவர்  அதற்கு,  மற்ற  துறைகள்  பற்றி  தனக்கு  ஏதும்  தெரியாது என்றும்,   தன்  கட்டுப்  பாட்டில்  இருக்கும்  டாஸ்மாக்  நிறுவனத்தில்  வேண்டுமானால்  டெபுடேஷன்  வாங்கித்  தரமுடியும்  அது  கூட  நிர்வாக (Head office)  அலுவலகத்தில்  இல்லை,  விற்பனை  அலுவலகம்  (Branch office ) ஒன்றில்தான்  தற்போது  காலியாக  உள்ளது  உங்களுக்கு  விருப்பம்  என்றால்  சொல்லுங்கள்  உடனே  ஏற்பாடு  செய்கிறேன் என்றார்.

நான்  ஒரு   நிமிடம்  கூடத்  தயங்கவில்லை.  இல்லை  சார்  என்னால்  அது முடியாது  என்றேன்.  ஏன்  இதிலென்ன  கஷ்டம்  என்றார்.   இல்லை  சார்  நான் புகை, மதுவுக்கு  எதிரானவள்.  ஒருபோதும்  அதை  ஆதரிக்க  மாட்டேன்.  என் லாபத்திற்காக  என்  கொள்கையை   ஒருபோதும்  விட   மாட்டேன். மன்னித்து விடுங்கள்   சார்.  உங்களை  தொந்தரவு  செய்து  விட்டேன்  நான்  வருகிறேன். என்றேன்.

உங்களைப்  பாராட்டுகிறேன்  என்று  அனுப்பி  வைத்தார்  என்னை.

அடுத்த  நாள்  எனது  பதவி  உயர்வை  மூன்றாண்டுகளுக்கு  துறப்பதாக  கடிதம்  எழுதிக்   கொடுத்து  விட்டேன்.


மூன்றாண்டுகள்  கழிந்து  விட்டது.  இதோ வந்து  விடும்  பதவி  உயர்வு  என்ற நிலையில் எங்கள் அலுவலகம்  ஜனவரி  2012 ல்   திடீரென  தீ  விபத்தில் எரிந்து முழுவதும்  சாம்பலாக, எங்கள்  பணிப்  பதிவேடுகள்  உட்பட  அத்தனை பொருட்களும்  சாம்பல். எதுவும்  மிஞ்சவில்லை.  வெறும் கையோடு   கூவம்  நதியோரம்,  சிந்தாதிரிபேட்டையில்  ஒரு  பள்ளியில்   லட்சக்  கணக்காய்  பறந்த  கொசுக்களுக்கு  ரத்ததானம்  செய்யும்  கூடுதல்  வேலையோடு  குடியேறினோம்.  கோப்புகளைப்  புதிதாக  தயாரிக்கும்  பணியில்  அத்தனை  பேரும்   பிசாசு  மாதிரி  உழைத்தோம்.  நான்  எனக்கு   பதவி  உயர்வு  கிடைக்கும்  என்ற  நம்பிக்கையை  இழந்து  விட்டேன்.  அதை  மறந்தும்  விட்டேன்.  ஆனால்  அப்போது  இருந்தது  துடிப்பான  ஒரு  பெண்  ஐ.ஏ.எஸ். அதிகாரி.  அவரது  வழிகாட்டுதலில்தான்  அலுவலகம்  மீண்டும்  தலையெடுத்தது  என்பேன்.  ஊழியர்களை  உற்சாகப்   படுத்தி  வேலை  செய்ய வைப்பார்.

அவரது  முயற்சியால்,  தலைமைச்   செயலகத்திலிருந்து  பெற்ற  சீனியாரிட்டி  பட்டியலை  வைத்து  ஆகஸ்ட் 2012 ல்  பலருக்கு  பதவி  உயர்வு  கிடைத்தது.  எனக்கு  சென்னையில், அதுவும்  head  office லேயே,  அதுவும்  நான் உதவியாளராகப்  பணியாற்றிக்  கொண்டிருந்த    மான்யப்  பிரிவிலேயே, எவ்வித  மேலிடத்து  சிபாரிசும்  இல்லாமல்  இயக்குனரின்  விருப்பப்படி   கண்காணிப்பாளராக  பதவி  உயர்வு  கிடைத்தது.     பதவி   உயர்வு  ஆணை வெளி வருவதற்கு  முன்பே  இயக்குனர்  போகிற  போக்கில்  என்னைப்  பார்த்து வாழ்த்துக்கள்  உஷா  என்று  சொல்லி விட்டு  போன பிறகுதான்   எனக்கே பதவு  உயர்வு  விஷயம்  தெரிய  வந்தது.   உஷாவை  மான்யப்   பிரிவிலேயே  போடுங்கள்.  excellent  worker  என்று  என்  பெயரை  மானிய  பிரிவுக்கு  டிக்  செய்திருக்கிறார்.

 அந்த  நிமிடத்தில்  கிடைத்த சந்தோஷத்தின்  முன்  என்  சில  லட்ச  நஷ்டங்கள்  அனைத்தும்   தூசியாகயிருந்தது.   என்  மதிப்பு   ஆபீசிலும்  வீட்டிலும்  அதிகரித்திருந்தது.   முகம்  கழுவுவது  போல்  என்  ஆனந்தக்  கண்ணீரை  யாரும்  பார்க்காமல் கழுவிக்  கொண்டேன்.  கண்டிப்பாக  என்  அப்பா  மகிழ்ந்திருப்பார்.  ஆசீர்வதித்திருப்பார்.

பிரசவம்

பிரசவம்:
(சற்றே பெரிய பதிவுதான். மன்னிக்க. வேறுவழியில்லை)
(இப்பதிவு ஆண்களுக்கும்தான். உங்களுக்கும் மனைவி, பெண்கள், சகோதரிகள் இருப்பார்கள். எனவே தெரிந்து கொள்வது தவறல்ல)

சந்தேகமே இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது, அது நார்மல் டெலிவரியோ, சீசெக்ஷனோ மறுபிறப்புதான். ஒரு காலத்தில் தொண்ணூறு சதவிகிதம் நார்மல் டெலிவரிதான் நிகழும். அபூர்வமாகத்தான் சிசேரியன் நடக்கும். எங்கள் குடும்பம் பெரியது. அத்தை மகள்கள், மாமா மகள்கள் அக்காக்கள் மன்னிகள் என்று நிறைய பேர். அத்தனை பேருக்குமே நார்மல் டெலிவரி மூலம்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் மருத்துவ மனைகள் எப்போது கார்பொரேட் மயமாகியதோ அப்போதிலிருந்து நார்மலாகப் பிறக்கவேண்டிய குழந்தைகள் எல்லாம் சிசேரியனில் பிறக்கத் தொடங்கின. மருத்துவமனைகளின் லாபத்திற்காக வயிறுகள் கிழிக்கப் பட்டன. இப்போதும் அரசு மருத்துவ மனைகளில் நார்மல் டெலிவரிதான் அதிகம். ஏனெனில் அது லாபத்திற்காக இயங்குவதில்லை. ஆனால் சுத்தம், சுகாதாரக் குறைவு, ஊழியர்களின் அலட்சியம், சிடுமூஞ்சித்தனம், இவைதான் அங்கு செல்ல விடாது தடுக்கிறது.

சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்ததற்கு மருத்துவமனைகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இந்தக்காலப் பெண்களுக்கும் பிரசவ வலியை எதிர் கொள்ளும் துணிச்சலோ பொறுமையோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலபேர் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களிடம் தனக்கு சிசேரியனே பண்ணி விடுங்கள் என்று சொல்வதாக அறிந்த போது ஒரு பக்கம் வியப்பும் கூடவே பரிதாபமும்தான் ஏற்பட்டது. பிரசவ வலி என்ற உன்னதமான அனுபவத்தை அவர்கள் இழக்கிறார்களே என்ற பரிதாபம்தான். எனக்கு தெரிந்த சில பெண்கள் கூட, தாங்களாகவே ஒரு பயத்தில் தங்களுக்கு சிசேரியன் செய்து விடுங்கள் என்று கேட்டு அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றுக் கொண்டிருப்பது தெரியும்.

கவிதா கன்சீவ் ஆனதுமே அவளை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டலாம் என்று நிறைய விசாரித்து, இணையத்திலும் நிறைய தேடினோம். நாங்கள் அறிந்த வரையில் சீதாபதி கிளினிக்கில் அதிகம் நார்மல் டெலிவரியில் குழந்தைகள் பிறந்திருந்தன. பலரும் நல்ல அபிப்பிராயங்களைக் கூறினார்கள். எனவே சீதாபதிக்குதான் அவளை அழைத்துச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தோம்.

சீதாபதி மருத்துவமனைக்குள் முதன் முதலில் நுழைந்த போது அங்கிருந்த ஹோம்லி அட்மாஸ்பியர் என்னைக் கவர்ந்தது. யார் முகத்திலும் பதட்டமில்லை. மருத்துவர்கள் கனிவாகப் பேசினார்கள். ஒவ்வொரு கர்ப்பிணியையும் அக்கறையாக பரிசோதித்தார்கள். அவர்களுடைய தலையாய நோக்கமே நார்மல் டெலிவரியை ஊக்குவிப்பதே என்பது நன்கு புரிந்தது. கர்ப்பிணிகளை மனதளவில் நார்மல் டெலிவரிக்குத் தயார் செய்கிறார்கள். அங்கேயும் சிசேரியன் நடக்காமல் இல்லை. ஆனால் அது குறைவு. சிக்கல் ஏதேனும் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை.

இங்கு பிரசவ வலியை எதிர்கொள்வது பற்றி வகுப்புகள் எடுக்கிறார்கள். அந்த வகுப்புகளுக்கு கணவரும் உடன் வரவேண்டும். கணவர் வெளியூரில் இருந்தால் அம்மா செல்லலாம். கவிதாவோடு நான்தான் சென்றேன். லேபர் பற்றி, தாய்ப்பால் கொடுப்பது பற்றி என்று அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு வகுப்புகளும் அற்புதம். டாக்டர் ரேகா சுதர்சன் வெகு சுவாரசியமாக பல அறிய தகவல்களைக் கூறுகிறார். லேபரை எதிர்கொள்ளும் ஆர்வத்தை எழுப்புகிறார். இந்த வகுப்புகளில் தாங்கள் கையாண்ட வித விதமான பிரசவங்களைப் பற்றி அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரசவ பயத்தைப் போக்குவதற்காக எடுக்கப் படும் இந்த வகுப்புகள் நிஜமாகவே பயத்தைக் களைய வைக்கிறது எனலாம்.

பிரசவ வலி...! தாளமுடியாததுதான். ஆனால் தாய் படும் சிரமத்தை விட அதிகமாய் உள்ளே இருக்கும் சேய் படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். லேபர் பெய்ன் பற்றிய வகுப்பில் டாக்டர் கூறும் அறிவுரையில் மிக முக்கியமானது தயவுசெய்து யாரும் கத்தி கூப்பாடு போடாதீர்கள் என்பதுதான் கத்திக் கூப்பாடு போடும்போது அதிலேயே முக்கால்வாசி எனர்ஜி செலவழிந்து விடுவதால் குழந்தையை வெளித் தள்ளுவதற்கு சக்தியில்லாது போய் விடுகிறது. இதனால் ஒரு மணி நேரத்தில் முடியவேண்டிய பிரசவ நேரம் மூன்று நான்கு மணிநேரம் நீண்டு போகிறது. இதனால் உள்ளிருக்கும் சிசுவின் சிரமமும் கூடுகிறது.


பல வெளிநாடுகளில் பிரசவ நேரத்தில் கத்தக் கூடாது, மீறி கத்தினால் அபராதம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பலர் என்ன கொடுமை இது கூறலாம். ஆனால் அதற்கு உண்மையான காரணம், கத்தி கத்தி எனர்ஜி வீணாகி பிரசவ நேரம் அதிகரித்துவிடும், உள்ளிருக்கும் சிசுவை புஷ் பண்ணும் சக்தியை அவர்கள் இழந்து விடக் கூடும் என்பதால் அந்தக் கட்டுப்பாடு என்பது டாக்டர் ரேகா சுதர்சனின் அறிவுரைக்குப் பின்னர்தான் புரிந்தது.

அந்தக் காலங்களில் உடலுழைப்பு அதிகமிருந்தது. சுகப் பிரசவத்திற்கு அது ஒரு பெரிய காரணமாக இருந்தது. இப்போது எல்லாமே இயந்திர மயம் என்ற நிலையில் உடலுழைப்பிற்கு அதிக வாய்ப்பில்லை. ஆனால் அதற்கு பதில் Prenatal excercise என்று யோகா உட்பட பல பயிற்சிகளை சொல்லித் தருகிறார்கள் அதில் ஒன்று காற்றடிக்கப்பட்ட பெரிய பந்து ஒன்றின் மீது செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியைத் தவறாது செய்து வரும் போது அற்புதமான பலனை அது தருகிறது என்றும் அறிந்தேன். தவிர குறைந்த எடையுள்ள டம்பிள்ஸ் பயிற்சியும் செய்வதும் சிறந்தது.

என் காலத்தில் இப்படி எல்லாம் வகுப்புகள் கிடையாது. இப்போதும் எத்தனை மருத்துவமனைகளில் இது போல் வகுப்புகள் எடுக்கப் படுகின்றன என்று தெரியாது. என் இரண்டு பெண்களும் நார்மல் டெலிவரியில்தான் பிறந்தார்கள் என்றாலும் நான் வலி தாளாது கத்தியிருக்கிறேன். குழந்தையை வெளித் தள்ளத் தெரியாது திணறி இருக்கிறேன். நல்ல மருத்துவர்கள் வரம். கனிவாக பேசும் நர்சுகள் கூடுதல் பலம்.
பிரசவலி என்பது தொடர்ச்சியாக வருவது அல்ல. விட்டு விட்டு வருவது. ஒரு வலிக்கும் அடுத்த வலிக்கும் இடையே முதலில் அதிக நேரம் இருக்கும். வலி தோன்றியதும் அதை உற்று கவனிக்க வேண்டுமே தவிர பதட்டப்படத் தேவையில்லை. வலியின் ஃப்ரீக்வென்ஸி குறைய ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு கிளம்பலாம். தாய்க்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் தேவையான பொருட்களை பத்து நாள் முன்பே ஒரு பையில் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

கவிதா வெகு சின்சியராக அத்தனை பயிற்சியையும் செய்தாள். மாடிப் படிகளை பல முறை ஏறி இறங்கினாள். அவளுக்கு லேபர் ஆரம்பித்தவுடன் அவள் என்னிடம் உடனே சொல்லவில்லை. தானே அதை உற்று கவனித்து விட்டு டாக்டர் சொன்னபடி அடுத்தடுத்த வலியின் இடைவெளி குறைந்து ஒரு துளி ரெட் ஸ்பாட் தெரிந்ததும்தான் என்னிடம் கூறினாள். அப்போது விடியற்காலம் மணி இரண்டே முக்கால். நான் உடனே அவளது மாமனாருக்கு போன் செய்தேன். அவர் உடனே காரை எடுத்துக் கொண்டு வந்து எங்கள் தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவில் வாசலருகில் காத்திருந்தார். (எங்கள் தெருவில் கார் நுழையாது இருசக்கர வாகனங்கள் கன்னாபின்னாவென்று நிறுத்தப் பட்டிருக்கும்) எனவே தெருமுனைவரை எவ்வித பதட்டமும் இன்றி நடந்தே வந்து காரில் எறிக் கொண்டாள் அவள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம். டியூட்டி டாக்டர் செக்கப் பண்ணும் பொது கூட எனக்கு லேசாக சந்தேகம்தான். ஏனெனில் குறித்த நாளிற்கு பத்து நாள் முன்பு இந்த வலி வந்திருந்ததால் அது பொய்யா நிஜவலியா என்ற சந்தேகம்தான். ஆனால் டாக்டர் வெளியில் வந்து இன்னும் இரண்டு மணி நேரத்தில் டெலிவரியாகி விடும் என்ற போது என்னால் கவிதாவை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பிரசவ நேரத்தில் அங்கு கணவரோ தாயோ உடனிருக்கலாம். பயந்து பதறுகிறவர்கள் உள்ளே செல்லாமல் இருப்பதே நல்லது. நான் முதல் அரைமணி நேரம் லேபர் அறையில் கவிதாவோடு இருந்தேன். டாக்டர் ரேகா சுதர்சனின் வகுப்புகளில் கூறியபடி நூறு சதவிகித ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கவிதா. பிராணன் போகும் வலியிலும் அவளிடமிருந்து சின்ன சப்தம் கூட வரவில்லை. குழந்தையை வெளித்தள்ளுவதற்கு சில வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனைப் பின்பற்றி முயன்றால் சிரமம் குறையும். கடைசி வரை கவிதா வலியில் கத்தவே இல்லை. அவளது வலி முழுவதும் கண்களில் கண்ணீராக வெளியேறியதே தவிர அம்மா என்கிற சின்ன முனகல் கூட அவள் வாயிலிருந்து எழவில்லை. அவள் மீது என் மரியாதை மேலும் கூடியது. ஒரு தாயாக என்னால்தான் அந்த வலி மிகுந்த சூழலில் தொடர்ந்து நிற்க முடியவில்லை. அவள் மாமியாரை அங்கு விட்டு விட்டு வெளியில் வந்தேன். அடுத்த அரைமணியில் அவளது மாமியார் வெளியில் வந்தார். பெண்குழந்தை என்றபடி என்னை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

லேபர் அறையில் டியூட்டியில் இருந்த அத்தனை பேரும் கவிதாவைப் புகழ்ந்தார்கள். இந்த அளவுக்கு எந்த பெண்ணும் இதுவரை இப்படி ஒத்துழைப்பு அளித்ததில்லை என்று வியந்தார்கள். கவிதாவை மறக்கவே முடியாது என்று ஒரு நர்ஸ் பாராட்டினார். ஆனால் கவிதா மனமார நன்றி சொன்னது டாக்டர் ரேகா சுதர்சனுக்கு. அவர் கொடுத்த தைரியம்தான் தன் ஒத்துழைப்புக்குக் காரணம் என்றாள். நல்ல மருத்துவரும், சரியான வழிகாட்டுதலும் இருப்பின் பிரசவம் என்பது நல்லபடி நிகழக்கூடிய ஒன்றுதான். இப்போது மருத்துவ உலகம் டெக்னிகலாக எவ்வளவோ முன்னேறி விட்டது.

பிரசவம் குறித்து மட்டுமல்ல. தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் இங்கு வகுப்பு எடுக்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகளை விரிவாக கூறுகிறார்கள். ஏற்கனவே நமக்கெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும் அவர்களது விவரிப்பு சுவாரசியமாக இருக்கிறது. பல அனுபவஸ்தர்களை அழைத்து சிறப்பு லெக்சர் கொடுக்கச் செய்கிறார்கள். ஏற்கனவே அங்கு நார்மல் டெலிவரியாகி நல்ல முறையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து வருபவர்களையும் அழைத்து தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறார்கள். அங்கு பணி புரியும் ஒரு டாக்டரே தன் குழந்தைக்கு தினமும் தேவையான தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்து வீட்டில் வைத்து விட்டு வருவதாகக் கூறினார். சில நேரம் தன் பணிக்கு இடையிலும் கூட குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்து அனுப்புகிறார் என அறிந்த போது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்து மயிலைக்கு அருகில் உள்ள பிரபல மருத்துவமனையின் லேபர் வார்டில் குத்துப் பாட்டுகளை அலறவிட்டு பிரசவ வலியில் பரிதவிக்கும் பெண்களுக்கு கூடுதலாக தலைவலியையும் கொடுத்திருப்பதை அறிவேன். சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் முறையிட்டும் எந்த பயனுமில்லை. பல டாக்டர்கள் (நான் எல்லோரையும் சொல்லவில்லை) மருத்துவமனைக்கும் தனக்கும் லாபம் வேண்டி, கடைசி நேரத்தில் ஏதோ சிக்கல் இருப்பதாக பொய் சொல்லி, நார்மலாக நிகழ வேண்டிய பிரசவத்தை சீசெக்ஷனாக்கி இருக்கிறார்கள். இதை எழுதுவதற்கு முன் எனக்குத் தெரிந்தவர்கள் பலரிடம் அவர்களது பிரசவம் பற்றி கேட்டேன். நான் பேசிய பத்து பேரில் எட்டு பேர் கசப்பான அனுபவங்களையே கூறினார்கள்.

உங்கள் மகளோ, மருமகளோ, சகோதரியோ, மனைவியோ, கருவுற்றதும், முதலில் நல்ல மருத்துவர்களைக் கொண்ட நம்பகமான மருத்துவமனையைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவர் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறாரா அல்லது மருத்துவமனையின் லாபத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது நல்லது. எனக்குத் தெரிந்து ஒரு பெண்ணிடம் அவளது மருத்துவர் கடைசி நேரம் ஏதோ சிக்கல் என்று சிசேரியன் செய்ய வேண்டும் என்று கூற, அவளது அம்மா துளியும் பயப்படாமல் அதெல்லாம் தேவையில்லை என் பெண்ணுக்கு சுகப் பிரசவமாகும். அதுவரை காத்திருப்போம் என்று உறுதியாக கூற, உடனே மருத்துவர், "அப்பறம் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா எங்களைக் குறை சொல்லக் கூடாது" என்று பயமுறுத்த, அப்போதும் அந்த அம்மா உறுதியாக இருந்திருக்கிறாள். இறுதியில் அந்தப் பெண்ணுக்கு நார்மலாக டெலிவரியாகியிருக்கிறது. அதே இடத்தில் பிரசவத்திற்காக சென்றிருந்த என் உறவினரிடமும் டாக்டர் இப்படி கூற இவர்கள் பயந்து சிசேரியனுக்கு சம்மதித்திருக்கிறார்கள். பிற்பாடு என் உறவினர் நாமும் அந்த அம்மா மாதிரி பயப்படாம இருந்திருந்தா நார்மலாவே குழந்தை பிறந்திருக்குமோ என்று யோசித்து வருந்தினார்.

முன்பெல்லாம் சீதாபதி மருத்துவமனையில் கேண்டீன் கிடையாதாம். இப்போது இரண்டாவது மாடியில் தரமான கேண்டீனும் இயங்குகிறது. அனைத்து ஐட்டங்களும் தரமாக சுவையாக இருக்கிறது. விலையும் சகாயமாக இருக்கிறது. கொடுக்கிற காசுக்கு வயிறு நிறைகிறது. குறை என்று சொல்ல வேண்டுமானால் இந்த கேண்டீன் பணியிலும் தமிழ் தெரியாத வடகிழக்கு ஆட்கள் இருக்கிறார்கள். சில நேரம் சொதப்புகிறார்கள். தவிர அறைகளில் கொசுத் தொல்லையும் இருக்கிறது. வேண்டிலேட்டர்களில் கொசு வலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டு வந்தோம்.

இறுதியாக ஒரு விஷயம். நீங்கள் எந்த மருத்துவரிடம் சென்றாலும் கருவுற்ற காலத்தில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்களை, அதாவது உடற் பயிற்சிகள், யோகா, தினசரி நடை பயிற்சி, சரிவிகித சத்துணவு, சர்க்கரை அளவு, இரத்தக்கொதிப்பு இவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற விஷயங்களை மன உறுதியோடு சரியான முறையில் கடைபிடித்தால், நீங்கள் எந்த மருத்துவரிடம் சென்றாலும், நார்மல் டெலிவரி என்பது உங்கள் கையில்தான். லேபர் பெயின் பற்றி நிறைய விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது. வீண் பதட்டமும் தேவையில்லை.

நமக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை மற்றவருக்குச் சொல்வதில்லையா. அது போல்தான், யாம் பெற்ற நல் அனுபவங்கள் என இவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மறுபடியும் நார்மல் பிரசவங்கள் அதிகரிக்கவேண்டும் என்ற ஆசையும் கூடத்தான். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே.





Monday, September 26, 2016

நியாயத்தின் சுவை.

நியாயத்தின் சுவை:
முதியோர் உதவித்தொகையில் ஊடுருவிய லஞ்சம் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதனை தட்டி கேட்டதால் நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையும் எழுதியிருந்தேன். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல. நேர்மையாயிருக்கும் சாதாரண அடிமட்ட ஊழியர்களும் கூடத் தங்கள் பணிக் காலத்தில் பல சோதனைகளையும் வேதனைகளையும், இழப்புகளையும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. அந்த வகையில் எனக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டன. இதோ இன்னொரு சம்பவம்.


அப்போது ஊனமுற்றோர் நலத்துறை சமூக நலத்துறையில்தான் இருந்தது. அதன் ஒரு பிரிவில் நான் புதிதாக பணியேற்றிருந்தேன். அன்று ஒரு தபால் புதிதாக வந்திருந்தது. அதற்குரிய கோப்பினைத் தேடி எடுத்து முழு கோப்பையும் படித்துப் பார்த்தேன். மதுரையில் ஊனமுற்றோருக்கான அரசு மருத்துவ மனையில் "பிளாஸ்டர் டெக்னிஷியன்" என்று ஒரு பதவி அதற்கு தகுதியான ஆள் இல்லை என்பதால் நீண்ட காலமாக நிரப்பப் படாமல் இருந்தது. ஒரு நபர் அப்பதவியை "லெதர் டெக்னிஷியன்" என பெயர் மாற்றி தன்னை அப்பணிக்கு தகுதியான நபராகக் கருதி பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று ஒரு விண்ணப்பம் அளித்திருந்தார். லெதர் டெக்னிஷியன் பதவிக்கு தன்னிடம் அனைத்து தகுதிகளும் இருப்பதற்கான சான்றிதழ்களையும் அளித்திருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. அவருக்கு சிபாரிசு செய்திருந்தார். அந்த கோப்பு இரண்டு மூன்றாண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றி சுற்றிக் கொண்டிருந்து விட்டு அப்படியே தொடர் நடவடிக்கையின்றி ஆகியிருந்தது. அந்த மனுதாரர் மீண்டும் ஒரு நினைவூட்டு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் பெயரை ரவி என்று வைத்துக் கொள்வோம். (கற்பனைப் பெயர்தான்)


நான் ரவியின் கோரிக்கையை அரசு ஒப்புதலைப் பெற அரசுக்கு அனுப்பலாம், அரசு ஒப்புதல் அளித்தால் அந்த நபருக்கு பணி நியமன ஆணை வழங்கலாம் என்று நோட் எழுதி இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பினேன். இயக்குனர் என்னை அழைத்து சில சந்தேகங்களைக் கேட்டு விட்டு அரசுக்கு கருத்துரு அனுப்ப ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டார்.  அடுத்த நாளே இது தொடர்பான கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைத்தேன்.


ஒன்றரை வருடம் அரசு மீண்டும் மீண்டும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது. அதற்கு நாங்களும் பதில் அனுப்பிக் கொண்டிருந்தோம். ரவி, மாதாமாதம் "என்ன ஆச்சு மேடம் என் ஃ பைல் என்று கேட்டு நாயாக பேயாக மதுரைக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருந்தார் . கிட்டத்தட்ட பதினெட்டு மாதத்திற்குப் பின்னர் அரசு ஒரு ஆணையிட்டது, நான் மிகுந்த மகிழிச்சியோடு அதைப் படித்துப் பார்த்தால்...........என் முகம் சற்றே ஒளியிழந்து போனது.


ரவியின் கோரிக்கையின் பேரில்தான் பிளாஸ்டர் டெக்னிஷியன் என்ற அந்தப் பதவியை லெதர் டெக்னிஷியன் என்று பெயர் மாற்ற அரசு ஒப்புதல் அளித்திருந்தது என்றாலும் அதில் ஒரு ஆப்பு வைத்திருந்தது. ரவியை நேரிடையாக அப்பணியில் நியமனம் செய்ய இயலாது என்றும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக மட்டுமே அப்பதவிக்கு ஆள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. நான் என்ன செய்ய முடியும்? உடனே வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு இந்த அரசாணையின் நகலினை இணைத்து தகுந்த ஆட்களின் விவரத்தை அனுப்பக் கோரி கடிதம் அனுப்பினேன். ரவி நேரில் வந்து கேட்ட போது விஷயத்தை அவரிடம் கூறினேன். அவர் முகம் பாவம் சோர்ந்து போயிற்று. இந்த ஆணைக்காக அவர் ஐந்து ஆண்டுகளாக நாயாக அலைந்தும் கூட அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்தான் ஆளெடுக்க வேண்டும் என்று சொல்லியதில் அவருக்கு நிறைய ஏமாற்றம். இருந்தாலும் மனம் தளராமல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அவரும் விண்ணப்பிப்பதாகக் கூறிச் சென்றார்.


வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதி உள்ளதாக இருபது நபர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டது. அதில் ரவியின் பெயரும் இருந்தது. எல்லோருக்கும் சென்னையில் ஒரு மருத்துவ மனையில் வைத்து ஒரு பிராக்டிகல் தேர்வு நடத்த நாள் குறிப்பிட்டு அனைவருக்கும் தபால் அனுப்பினோம்.


தேர்வு நாளன்று என் உயரதிகாரியுடன் நானும், என் கண்காணிப்பாளரும் தேர்வு நடந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். போலியோ பாதித்த நபர்கள் அணியும் வகையில் ஒரு லெதர் ஷூவை உருவாக்க வேண்டும் என்பதுதான் தேர்வு. அதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் வந்திருந்த போட்டியாளர்களுக்கு வழங்கப் பட்டது. அதற்குரிய கால அவகாசமும் வழங்கப் பட்டது.


தேர்வு நடக்கும் போதே அரசியல்வாதிகளிடமிருந்து சிபாரிசுக் கடிதங்கள் சில வந்தன. நானும் எங்கள் உதவி இயக்குனரும் அந்த கடிதங்களை சட்டையே செய்யவில்லை. வாங்கி கோப்பில் வைத்துக் கொண்டோம் அவ்வளவே.


ஒரு வழியாய் தேர்வு நேரம் முடிந்தது. ஒவ்வொரு டேபிள் அருகிலும் நாங்கள் சென்றோம். நம்புங்கள் இருபது பேரில் ஒருவர் மட்டுமே முழு வடிவத்தில் மிக அழகாக ஷூ செய்து முடித்திருந்தார், அந்த ஒருவர் வேறு யாருமல்ல ரவிதான். பலருக்கு கத்திரிக்கோலை வைத்து லெதரை கட் பண்ணக் கூடத் தெரியவில்லை. ஒரு சிலர் ஷூ என்ற பெயரில் ஒரு கிண்ணத்தை செய்திருந்தார்கள். நானும் என் உதவி இயக்குனரும் மிகவும் மகிழ்ச்சியோடு ரவி மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றதாக குறிப்பு எழுதி அனைவரது மதிப்பெண்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். எங்கள் இயக்குனரிடம் ரவிக்கு நியமன ஆணை வழங்கலாம் என்று நோட் எழுதி கோப்பினை சமர்ப்பித்தேன் நான்.


மறுநாள் காலை இயக்குனர் என்னை அழைத்தார். ஏதோ ஒரு பெயரை என்னிடம் துண்டுச் சீட்டில் கொடுத்து இந்த ஆளுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் எழுதி கொண்டு வாங்க என்றார். நான் அதிர்ந்தேன். சார் ரவிக்குதானே....என்று தயங்கியபடி கேட்டேன்.

"நான் சொன்னதைச் செய்ங்க இது சபாநாயகர் சிபாரிசு. நம்மால ஒண்ணும் செய்ய முடியாது" அவர் கடுமையாகக் கூறினார். நான் கோபத்தை அடக்கிக் கொண்டு கீழே வந்தேன். என் உதவி இயக்குனரிடம் பொருமித் தள்ளினேன்.

"இது நியாயமே இல்ல சார். அஞ்சு வருஷமா இதுக்காக ஒருவர் அலையோ அலைன்னு அலைந்திருக்கார். தேர்வுலயும் தன்னை தகுதியனவன்தான்னு அந்த ரவி நிரூபிச்சிருக்கார். அப்டியிருக்க கத்திரிக்கோல் கூடப் பிடிக்கத் தெரியாத ஒருத்தருக்கு இந்த போஸ்ட்டைக் கொடுக்கச் சொல்றது நியாயமே இல்ல சார். பாவம் அந்தப் பையன்"

"நாம என்ன செய்ய முடியும் உஷா மேடம். மேல இருக்கறவங்க சொன்னதை செய்ய வேண்டியதுதான் நம்ம வேலை. போங்க போய் proceeding ரெடி பண்ணுங்க" என்றார் அவர்.

"என்னால முடியாது சார். என் மனசாட்சி குத்தறது. என் கையால இந்த பாவத்தை செய்ய மாட்டேன். எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. அவங்க நல்லார்க்கணும்னு நினைக்கறேன். நா இப்பவே, இன்னி தேதிலேர்ந்தே மெடிகல் லீவுல போறேன். என் கையால தவறான ஒரு நபருக்கு பணி நியமன ஆணை எழுதி வைக்க மாட்டேன். நீங்க யாரை வேணா வெச்சு ஆர்டர் எழுதிக்கோங்க அல்லது நீங்களே கூட எழுதிக்கோங்க" நான் கோப்பினை அவர் டேபிளில் வைத்து விட்டு என் கண்காணிப்பாளரிடமும் விஷயத்தை சொல்லி விட்டுக் கிளம்பினேன். என் கண்காணிப்பாளருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். அவருமே இயக்குனரின் இந்த வாய்மொழி உத்தரவில் நொந்து போயிருந்தார். என்னைத் தடுக்கவில்லை. ரவியைப் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தபடி அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த நேரம் எந்த தேவதை ததாஸ்து சொல்லியதோ, என் எதிரில் ரவி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் என் முகம் மலர்ந்தது. ஆர்டர் ரெடியாய்டுமா மேடம்? அதை வாங்கிட்டே போயடலாம்னுதான் இன்னும் ஊருக்குப் போகாம காத்திருக்கேன் என்றார்.


நான் அவரை பரிதாபமாகப் பார்த்து விட்டு டீக்கடை பக்கமாய் அழைத்துச் சென்றேன். சாரி ரவி இங்க என்னென்னமோ நடக்குது. மேலிட சிபாரிசு விளையாடுது. வேற யாருக்கோ போஸ்டிங் போட்டு ஆர்டர் ரெடி பண்ணச் சொல்றாங்க. நீங்க உடனே போய் யார் மூலமாவது ஆர்டரை வாங்கப் பாருங்க. உங்க எம்.எல்.ஏக்கு தகவல் சொல்லுங்க. அவர் ஏதாவது உதவி செய்வாரான்னு கேளுங்க. நீங்க பண்ணின மாடல் ஷூவைக் கூட டெஸ்ட்ராய் பண்ணிடுவாங்க போலருக்கு. அது ஒண்ணுதான் உங்க திறமைக்குச் சான்று. அதை அழிக்க விடாம பாத்துக்கோங்க. முடிஞ்சா ஏதாவது பத்திரிகைக்கு கூடப் போங்க. நா சொல்றதை சொல்லிட்டேன். இனி உங்க சாமர்த்தியம். நியாயம் பெறப் போராடுங்க. உங்களுக்காகத்தான் நா விடுப்புல போறேன். நா உங்ககிட்ட பேசினது யாருக்கும் தெரிய வேண்டாம்." நான் ரவியின் காதில் விஷயத்தைப் போட்டு விட்டுக் கிளம்பி வீடு வந்தேன். அன்றிரவு முழுக்க தெய்வத்திடம் ரவிக்கு நியமன ஆணை கிடைக்க பிரார்த்தித்தேன்.


மறுநாளே பத்து நாள் மருத்துவ விடுப்பு கோரி தபாலில் கடிதம் அனுப்பினேன். சரியாக ஏழாவது நாள் காலை என் கண்காணிப்பாளரிடமிருந்து போன். உடனே ஆபீஸ்க்கு வாங்க உஷா என்றார்.

என்ன விஷயம்?

நீங்க வாங்க. ரொம்ப அர்ஜென்ட் ஏ.டி கூப்பிடச் சொன்னார் என்று சொல்லி கட் பண்ணி விட்டார்.

என்னவென்று புரியாமல் அரைமணியில் கிளம்பி அலுவலகம் வந்தேன். எங்கள் துணை இயக்குனர் என்னைப் பார்த்து சிரித்தார். "எதுக்கு சார் வரச் சொன்னீங்க. என் லீவு இன்னும் முடியலையே".

"வாங்க வாங்க போய் உங்க கையால புரொஸீடிங்ஸ் எழுதுங்க என்று அந்த கோப்பை நீட்டினார்.

நான்தான் முடியாதுன்னு சொன்னேன் இல்ல சார்?

அட நீங்க ஜெயிச்சுட்டீங்க மேடம். நாம எல்லாரும் விரும்பியபடி ரவிக்குதான் நியமன ஆணை வழங்கப் போறோம். அதான் உங்க கையாலேயே ஆணையை எழுத உங்களை வரச்சொன்னேன் என்று அவர் சிரிக்க, அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியமும் சந்தோஷமும் அளவிடமுடியாதது. நான் அன்றே விடுப்பை முடித்துக் கொண்டேன். முதலில் ரவிக்கு பணி நியமன உத்தரவு தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பினேன்.

சரியாக ஒரு மாதம் கழித்து ரவி மதுரையிலிருந்து எங்கள் ஆபீசுக்கு வந்தார். . மேடம் நீங்க மட்டும் அன்னிக்கு சொல்லாம இருந்திருந்தா என்னால எதுவும் செய்திருக்க முடியாது. உங்களுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னு தெரியல என்றபடி என்னிடம் ஒரு அட்டைப்பெட்டியை நீட்டினார்.

என்னப்பா இது?

இனிப்புதான் மேடம். என்று சொல்லி சிரித்தார்.

அப்டியா ஒண்ணு செய்ங்க. நீங்களே உங்க கையால இங்க எல்லார்க்கும் குடித்துடுங்க என்றேன். அவர் அட்டை பெட்டி பிரித்து என்னிடம் நீட்ட அதிலிருந்து ஒரே ஒரு இனிப்பை மட்டும் எடுத்துக் கொண்டேன். உண்மையிலேயே அந்த இனிப்பு அமிர்தமாய் உள்ளே இறங்கியது. நியாயம் வென்றதன் சுவை அது.

பிணந்தின்னி கழுகுகள்

பிணந்தின்னி கழுகுகள்
வித்யா வீட்டில் வேலை செய்யும் முனியம்மா நேற்று மிகவும் காலதாமதமாக வந்தார். என்ன ஆச்சு என்று கேட்க, மத்திய அரசு வழங்கும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தை பெற வங்கிக்குப் போயிருந்ததாகக் கூறினார். இத்தனை ஆண்டு அது போஸ்ட்மேன் மூலம் வழங்கப்பட்டதாகவும் இப்போது வங்கி மூலம் வழங்குமாறு ஆணையிடப் பட்டுள்ளதால் வங்கிக்கு சென்று வரிசையில் நின்றதில், காலதாமதம் ஆகி விட்டதாகவும் கூறினார்.

போஸ்ட்மேன் மூலம் என்றால் கண்டிப்பாக ஏதாவது பணம் வாங்கியிருப்பாரே என்றேன். "ஆமாம் மாசா மாசம் நாப்பது ரூவா குடுத்துடணும்" என்றார். ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் ஒரு இருநூறு பேருக்கு ஒரு போஸ்ட்மேன் பட்டுவாடா செய்வார் என்றால், 200 x 40 = 8000. ஓய்வூதியமாக ஒருவருக்குக் கிடைப்பது வெறும் 960/- ஆனால் ஒரு போஸ்ட்மேனுக்கு தான் வாங்கும் ஊதியத்திற்கு மேல் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை லஞ்சமாகக் கிடைக்கிறது. நல்ல காலம் இப்போது இந்த உதவித் தொகைகள் வங்கி மூலம் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளன என்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் நான் அரசுப் பணியில் சேர்ந்த புதிதில் நிகழ்ந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

சர்வீஸ் கமிஷன் பாஸ் பண்ணின சந்தோஷத்தை ஜீரணிப்பதற்குள் தேர்வாணையம் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது. என்னை தென்னாற்காடு மாவட்டத்தில் தூக்கிப் போட்டிருந்தார்கள். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடனே பதவி ஏற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதன்படி கடலூரில் வேலை செய்த ஒரு மாதத்தில் திண்டிவனம் தாலுகாவுக்கு என்னை மாற்றினார்கள். அங்கே என் பணி முதியோர் உதவித்தொகை, , ஆதரவற்ற பெண்கள், விதவைகள் உதவித் தொகை , ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்குவது. அப்போது எல்லா உதவித்தொகையுமே மாதம் ரூ. 30/- மட்டுமே.


கிட்டத்தட்ட திண்டிவனம் தாலுகாவில் மட்டும் எல்லா உதவித் தொகைகளுக்கும் சேர்த்து நான்காயிரம் பயனாளிகள் இருந்தார்கள். மணியார்டர் எழுதி எழுதி கை ஒடிந்து விடும். பிறகு திரும்பி வரும் ரசீதுகளை பத்திரப்படுத்த வேண்டும். ஆளில்லை என்று திரும்பி வரும் உதவித் தொகைகளுக்கு செலான் போட்டு கருவூலத்தில் திருப்பிக் கட்ட வேண்டும். இவை தவிர புதிதாய் விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். மூச்சு விட நேரமிருக்காது. தலை நிமிராது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.


முதியோர்கள் பல ஊர்களிலிருந்தும் என் உதவித் தொகை என்ன ஆச்சும்மா என்று கேட்டு வருவார்கள். போஸ்ட்மேன் வர நேரம் நா ஊட்ல இல்லாம போயிட்டேன்னு உதவித்தொகையை திருப்பி அனுப்பிட்டாரும்மா. என்ற கோரிக்கையோடு சிலர் வருவார்கள். அவர்களது விவரங்களைக் கேட்டுக் கொண்டு திரும்பி வந்த மணியார்டர்களில் அவர்களுடையது இருக்கிறதா என்று பார்த்து அவர்களிடம் கொடுத்து கையொப்பம் பெற வேண்டும். அப்படி வரவில்லை என்றால் மீண்டும் போஸ்ட்மேன் வந்து தருவார்மா என்று சமாதானம் சொல்லி அனுப்ப வேண்டும்.


ஒரு ரெண்டு மாதம் இப்படியே எவ்வித பிரச்சனையும் ஏற்படாது ஓடியது. ஒருநாள் முகம் முழுக்க சுருக்கங்களோடு கூன் போட்டு கம்பு ஏந்தியபடி ஒரு வயதான பெண்மணி (எழுபது வயதிருக்கும்) வந்தார். என்னம்மா பணம் இன்னும் வரலையா? இல்ல புதுசா மனு போடப் போறீங்களா?


தாயி கலெக்டரம்மா (அவர்களுக்கு அங்கு பணியாற்றும் எல்லோரும் கலெக்டர்தான்) போனமாசம் போஸ்ட்மேன் வந்தாரும்மா. வூட்ல ஒரு சாவு. என் மருமவ காச்சல்ல செத்துட்டா. கைல காசு கூட இல்ல. நல்லகாலத்துக்கு உதவித் தொகை வந்துச்சேன்னு நினைச்சா அந்த போஸ்ட்மேன் ரெண்டு ரூவா காசைக் கீழ வெச்சாத்தான் பணம் தருவேன்னாரு. ரொம்ப கஷ்டம் சாமி. இந்த முறை காசு கேக்காதீங்க, பிணம் விழுந்த வூடுன்னேன். முடியாதுன்னார். நானும் என்னால பணம் தரமுடியாதுன்னு பிடிவாதமா சொன்னேன். அப்டியா சரின்னு போய்ட்டார். மறுபடியும் அந்த ஆளு பணம் கொண்டு வரவேல்ல. இந்த மாசமும் இதுவரை பணம் வரல. போஸ்ட்மேன் கிட்ட கேட்டா பதில் சொல்லாம போறார். ஊர்ல நாலு பேரை விசாரிச்சேன். தாலுகா ஆபீஸ் போய்ப் பாருன்னாங்க அதான் வந்தேன். பஸ்சுக்கு கூட காசில்லாம எட்டு கிலோமீட்டர் நடந்தே வரேன் தாயி. என்னாச்சுன்னு பாத்து சொல்லுங்கம்மா. (முப்பது ரூபாய்க்கு இரண்டு ரூபாய் லஞ்சம். பின்னர் உதவித்தொகை முப்பத்தி ஐந்தாக உயர்ந்த போது லஞ்சமும் இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக உயர்ந்தது)


எனக்கு பரிதாபமாக இருந்தது. உக்காருங்க என்று அவரை அருகிலிருந்த ஸ்டூலில் உட்கார வைத்தேன். அவரது பெயர், ஊர், விலாசம் கேட்டு முதியோர் உதவித்தொகை ரிஜிஸ்டரை எடுத்துப் பார்த்த நான் திடுக்கிட்டேன். அவரது பெயரை சிகப்பு மையால் சுழித்து நான்தான் அவர் இறந்து விட்டதாக குறிப்பு எழுதியிருந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. முந்தின மாதம் திரும்பி வந்த மணியார்டர் பட்டியலையும், கருவூலத்திற்கு திரும்ப செலுத்திய பயனாளிகளின் விவரப் பட்டியலையும் எடுத்துப் பார்த்த என் திகைப்பு அதிகமாகியது. அந்த கிழவிக்கு அனுப்பிய மணியார்டர் அவர் இறந்து விட்டார் என்ற போஸ்ட்மேனின் குறிப்போடு திரும்பியிருந்தது. அதை வைத்துதான் நானும் அவர் பெயரை சுழித்து விட்டு அதற்கடுத்த மாதம் பணமும் அனுப்பவில்லை. உயிரோடு இருப்பவரை ஏன் இறந்து விட்டார் என்று அந்த போஸ்ட்மேன் குறிப்பிட்டிருக்கிறார்? வேறு யாரோ இறந்து போனவரை இவர் என்று தவறுதலாக குறிப்பிட்டு கொடுத்து விட்டாரா? ஒன்றும் புரியவில்லை.


எனக்கு அந்தம்மாவிடம் என்ன சொல்வது எனப் புரியவில்லை. பரிதாபமாக இருந்தது. ஒரு மனுவை நானே எழுதி அதில் அவரது கட்டை விரல் அடையாளத்தை வாங்கி வைத்துக் கொண்டேன். வெளியில் இருந்த தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று டீயும் வடையும் வாங்கிக் கொடுத்தேன். என் பர்சிலிருந்து முப்பது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். நீங்க கிளம்புங்கம்மா. வீடு பூட்டியிருக்குன்னு உங்க பணம் திரும்பிடுச்சு. நா மறுபடியும் தாசில்தார்க்கு எழுதி வெச்சு உங்க பணத்தை அனுப்ப வழி பண்றேன் சரியா? என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன். தளர்ந்த நடையோடு அந்த கிழவி செல்வதைப் பார்த்தபடியே அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் அருகிலிருந்த ஒரு உதவியாளரிடம் இது பற்றி கேட்டேன்.


"இந்தக் கிழவி மாமூல் பணம் குடுத்திருக்காது. அதான் அந்த போஸ்ட்மேன் பயனாளி இறந்துட்டாங்கன்னு அதுங் கதைய முடிச்சுட்டான். இவனுங்களை எல்லாம் பகைச்சுக்கிட்டா இப்டித்தான் பண்ணுவாங்க. இதெல்லாம் இங்க சகஜம்" அந்த உதவியாளர் சொன்னதும் நான் திடுக்கிட்டேன். என் உடம்பு பதறியது. இப்படிக் கூட செய்வார்களா? மகா பாவமில்லையா இது? ஐந்து ரூபாய் லஞ்சம் தரவில்லை என்பதற்காக ஒருவர் உயிரோடிருக்கும் போது இறந்து விட்டதாக தகவல் தருவார்களா? எவ்வளவு ஈனத்தனம் இது? பாவப்பட்ட வயது முதிர்ந்த ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதில் அவ்வளவு ஆனந்தமா இந்த கழுகுகளுக்கு? என் இரத்தம் கொதித்தது. இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் புரொசீஜர் படி என்ன செய்ய வேண்டும் என்று கூட நான் யோசிக்கவில்லை. உடனே அந்தக் கிழவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன்.


அன்று மாலை அந்த  முதியவளை  இறந்து விட்டதாக போஸ்ட்மேன் எழுதிக் கொடுத்த மணியார்டரையும், அந்தக் கிழவியின் ஒரிஜினல் sanction file, மற்றும் கிழவி அன்று கொடுத்த மனுவையும் எடுத்துக் கொண்டு நேராக போஸ்ட் ஆபீஸுக்குச் சென்றேன். அது சரியா தவறா என்று கூட யோசிக்கவில்லை. போஸ்ட் மாஸ்டரிடம் இதைக் காட்டி நியாயம் கேட்டால் விஷயம் சுமுகமாக முடிந்து விடும் என்று நினைத்தேன். அதே போல் போஸ்ட் மாஸ்டரை சந்தித்து விஷயத்தைக் கூறி கையிலிருந்த ஆதாரங்களையும் காட்டினேன். அவர் எவ்வித பதட்டமும் இன்றி நிதானமாக என்னைப் பார்த்தார். நீங்க போங்கம்மா நா பாத்துக்கறேன் என்று அனுப்பி விட்டார்.


மறுநாள் காலை முதல் வேலையாக இந்த ஆதாரங்களை எல்லாம் வைத்து ஒரு கோப்பை உருவாக்கி  முதியவளுக்கு மீண்டும் உதவித்தொகையை அளிக்கலாம் என்றும் அதற்கு அனுமதியளிக்கக் கோரியும் கோப்பினை சமர்ப்பித்து கையேடு துணை தாசில்தாரிடம் உடனடியாக அதில் கையொப்பம் பெற்று நானே கோப்பினை தாசில்தார் அறையில் கொண்டு போய் வைத்து விட்டு வந்து (அப்போது அவர் அறையில் இல்லை) ஒரு பெரு மூச்சோடு உட்கார்ந்தேன்.


ஒருமணி நேரம் ஆகியிருக்கும் தாசில்தார் அழைப்பதாக அவரது காவலாளி என்னை வந்து அழைத்தார். நானும் சென்றேன். எரித்து விடுவது போல் என்னைப் பார்த்தவர் உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் நீ போஸ்ட் மாஸ்டரைப் போய் பார்த்திருப்பாய்? எனக்கு இல்ல தகவல் சொல்லி கோப்பை புட் அப் பண்ணியிருக்கணும்? என்று காட்டுக் கத்தல் கத்தினார். என் தவறு எனக்குப் புரிந்தது. உடனே அதற்கு மன்னிப்பு கேட்டேன். "தெரியாம செய்துட்டேன் சார். இனிமே இப்படி நடக்காது இந்த ஒருமுறை என்னை மன்னிச்சுடுங்க. அனா இப்போ நான் கோப்பை உங்களுக்கு புட் அப் பண்ணியிருக்கேன் என்று அவர் டேபிளில் இருந்த கோப்பை எடுத்து காட்டினேன். அதை வாங்கி அப்படியே கடாசி எறிந்தார். உனக்கு என்ன தெரியும்? பெரிய நியாயவாதியோ நீ? இங்கல்லாம் இப்டித்தான். என் கண்ணு முன்னால நிக்காம போய்டு " காட்டுக் கத்தல் கத்தினார்.


அன்று மதிய உணவுக்குப் பின் டெஸ்பாட்ச் பிரிவிலிருந்து என்னிடம் ஒரு கவரைக் கொடுத்து கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் வந்தது. அதில் ஒரு ஆபீஸ் ஆர்டர். என்னை திண்டிவனத்திலேயே தாசில்தாரின் கண்ட்ரோலின் கீழ் இருந்த மற்றொரு  அலுவலகத்திற்கு  பணி மாறுதல் செய்து தாசில்தார் ஆணையிட்டு கையொப்பமிட்டிருந்தார். என் ரத்தம் இன்னும் கொதித்தது. நேராக போஸ்ட் ஆபீஸ் சென்றது தவறுதான் ஆனால் நான் சென்றதில் ஒரு நியாயமான காரணம் இருப்பது அவருக்குத் தெரியாதா? நான் மீண்டும் தாசில்தார் அறைக்கு வந்தேன். அவர் என்னை நிமிர்ந்து பார்க்காமல் "ஆர்டரை வாங்கிட்டயா? உடனே போய் ஜாய்ன் பண்ணு" என்றார்.


"போறேன் சார். அதுக்கு முன்னாடி ஒரு விண்ணப்பம். அந்த கிழவிக்கு நியாயம் கிடைக்கணும். அந்த போஸ்ட்மேனுக்கு தண்டனை கிடைக்கணும்" என்றேன்.
"இல்லாட்டி என்ன செய்வ?"
"நா இந்த ஆபீஸ்க்கு வரும் போது எனக்கு எந்த உதவி வேணும்னாலும் செய்யச் சொல்லி தலைமைச் செயலகத்துல ஒரு டெபுடி செக்ரெட்டரி போன் பண்ணினார் நினைவிருக்கா? அவர்கிட்ட இந்த விஷயத்தைக் கொண்டு போவேன். அந்தம்மா கொடுத்த மனுவோட நகல், போஸ்ட்மேன் குடுத்த தவறான தகவலின் நகல் நா எழுதின நோட் ஃபைலின் நகல் எல்லாமே எங்கிட்ட இருக்கு. அந்தம்மாக்கு நியாயம் கிடைக்கணும்." எனக்கு எங்கிருந்து அந்த துணிச்சல் வந்ததென்று தெரியாமல் அவரிடம் பேசி விட்டு வெளியில் வந்தேன்.


அன்று மதியம்  மற்றொரு  அலுவலகத்திற்குச்  சென்ற எனக்கு அங்கு பணிபுரியப் பிடிக்காமல் மருத்துவ விடுப்பில் ஊருக்கு வந்து விட்டேன். பிறகு வானூருக்கு மாற்றல் கிடைத்தது. என் நேரம் வானூரிலும் இதே பணிதான் எனக்கு. அங்கு எனக்கு சம்பளப் பட்டியல் போட நான் கடைசியாக வாங்கிய ஊதிய விவரங்களை (Last Pay Certificate) அனுப்பக் கோரி திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஒரு நட்பிடம் போனில் பேசிய போது அவர் சொன்னார். "உஷா மேடம் அந்த கிழவிக்கு மறுபடியும் உதவித் தொகை sanction ஆய்டுச்சு" என்று. கண்டிப்பாக தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை அப்போது ஏற்பட்டது. அனால் தவறு செய்த தபால்காரருக்கு என்ன தண்டனை கிடைத்ததென்று தெரியவில்லை. அதை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சமாதானமானேன்.


இந்த சம்பவத்தை "பிணந்தின்னி கழுகுகள்" என்று பின்னர் சிறுகதையாக எழுதினேன். அது இதயம் பேசுகிறது இதழில் வெளியாயிற்று. ஆனால் இன்று வரை ஏழைகளின் வயிற்றில் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லகாலம் இனி வங்கி மூலம் பணப் பட்டுவாடா என ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இந்த பிணந்தின்னிக் கழுகுகளுக்கு தீனி குறையும் என நினைக்கிறேன். அல்லது வேறு வழியில் பணம் பெறக் கூடும்.
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன?