Monday, November 24, 2014

மூக்குத்தி பூ மேலே



நேற்று கோயிலுக்கருகில்  ஒரு வயதான பெண்மணியைப் பார்த்தேன்.  வட இந்தியர் போல் தெரிந்தது.  அவர் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்திதான் இந்தப் பதிவுக்குக்  காரணம்.   ஒரு குட்டி தோசைக்கல் மாதிரி வட்டமாக தட்டையாக  அவரது இடது மூக்கு துவாரத்தையே மறைப்பது மாதிரி இருந்தது. .   அவர் அப்படி அணிந்திருந்தது  எனக்கு சிரமமாயிருப்பது போல் தோன்றியது.  அவரைப் பார்த்த பிறகு எனக்கு மூக்குத்தி பற்றி நிறைய நினைவுகள்  ஏற்பட்டன.

கல்யாணத்திற்கு முன்புதான்  நான் மூக்கு குத்திக் கொண்டேன். ஒற்றையாய் ஒரு வெள்ளைக் கல்.     எதிர் வீட்டிலேயே  வெகு நாள் பழக்கமான ஆசாரி இருந்தார்.   முதல் நாள் போய் சொல்லி விட்டு வந்தேன்.  கூடவே வலிக்குமா என்றேன்.  

"எறும்பு கடிக்கறா  மாதிரி இருக்கும் அவ்ளோதாம்மா".

ஓ  அப்போ வலிக்கும்.  எனக்கு எறும்புக் கடியே தாங்காதே.  என நினைத்தபடி அடுத்த கேள்வியைக் கேட்டேன்.  "பேசாம மயக்க மருந்து குடுத்து குத்திடறீங்களா?" 
ஆசாரி   விழுந்து விழுந்து சிரித்தார்.

உனக்கு காதே நான்தான் குத்தினேன்.  அதே மாதிரி வலிக்காம  மூக்கும் குத்திடறேன் சரியா?

மூக்கு குத்துவதற்கு முன்னாடியே எனக்கு வலிப்பது போலிருந்தது.  ராத்திரியெல்லாம் பயம்.


மறுநாள்  என் பெரியம்மாவோடு  சென்று ஆசாரியின் முன்னால்  மூக்கு குத்துவதற்காக உட்கார்ந்திருந்த போது  தொடை நடுங்கியது.

கண்ணை மூடிக் கொண்டேன். அவர் குங்குமத்தில் பொட்டு வைத்து   கை கூப்பி சாமிக்கு பிரார்த்தித்து விட்டு கையை என் முகத்தருகே கொண்டு வரும் போது நான் பின்னால் சற்றே சாய்ந்தேன் பயத்தில்.  அவர் சிரித்தார். மீண்டும் முயற்சிக்க நான் மீண்டும் பின் வாங்க,  மூன்றாவது முறை என் பெரியம்மா என் தலையைப் பிடித்துக் கொள்ள  மூக்குத்தி கம்பி சர்ரென்று என் மூக்கில் இறங்க என் கண்களில் காவேரி பொங்கி வழிந்தது.  

 "நன்னார்க்கு  கேட்டயா?   லட்சணமார்க்கு"  என் பெரியம்மாவின்  முதல் விமர்சனம்.  ஆசாரி கண்ணாடி காட்ட  நல்ல காலம்  ஒரு வழியா முடிஞ்சுதே என்ற ஆஸ்வாசம்தான்  எனக்கு ஏற்பட்டது.

மறு நாள் கண்ணாடியை பார்த்த  போது பரவால்ல நன்னாத்தான் இருக்கு என்று தோன்றியது.

"ஏய் உஷா நன்னார்க்குடி"   என்றாள்  சினேகிதி ஒருத்தி

அழகா இருக்கேனா?

"நா மூக்குத்தியச் சொன்னேன்".  கலாய்க்கறாளாம் .  

கல்யாணத்திற்கு முதல் நாள் என் அப்பா ஒரு எட்டுக் கல் பேசரியைக் கொடுத்து போடச்சொன்னார்.   என் அழகே போய் விட்டாற்  போல் இருந்தது.  எட்டுக் கல் பேசரி போடும் அளவுக்கு எனக்கு அழகான எள்ளுப் பூ மூக்கா கொடுத்திருக்கிறான் கடவுள்?    வேறு வழி?  எதிர்த்துப் பேச பயம். கல்யாணமான பின்னும் ஒரு இரண்டு வருஷம் அந்த  எட்டுக் கல் பேசரியோடுதான் அலைந்தேன்.  

அதற்குப் பிறகு வேலைக்கு போய் முதல்  சம்பளம் வாங்கின பிறகு  நான் செய்த முதல் செலவு  மூக்குத்தி வாங்கினதுதான்.   அதுவும் அப்போது பிரபலமாக இருந்த ஸ்ரீதேவி மூக்குத்தி.  ஸ்ரீதேவியின் இடுப்பெல்லாம் நமக்கு  அமையா விட்டாலும் மூக்குத்தியாவது வங்கி விடுவது என்று வாங்கி விட்டேன்.   அதற்கும் ஒரு மூக்கழகு வேண்டாமா. என் மூஞ்சிக்கு அது சகிக்கவில்லை.    ஒரு வருஷம் கழித்து அதையும் மாற்றி வெறும் ஒற்றைக்கல்  வாங்கி அணிந்தேன். தேவலை என்றிருந்தது.

ஒரு நாள் ஆபீஸ் நண்பர் ஒருவர் என்னை உற்று உற்று பார்க்க என்ன என்றேன்.

உஷா உங்க மூக்குத்தி எங்க  காணும் என்றார்.  நான் அவசரமாய் மூக்கைத் தடவ அதன் கடுகு போன்ற மேற்புறம் உடைந்து எங்கேயோ விழுந்திருக்க,  உள்ளே தாண்டும் திருகும் பத்திரமாயிருந்தது. எப்போது எப்படி அது உடைந்தது என்று புரியவில்லை.   அன்று முழுக்க எல்லாரும் என்னையே பார்ப்பது போல் தோன்றியது.

இப்போது மிகச்சிறிய ஒற்றைக்  கல்  வைர மூக்குத்திதான் பத்து வருடமாய்
மூக்கோடு கிடக்கிறது.   போன வருஷம் எனக்கு உடல் நலம் குன்றி ஒரு பயாப்சி அறுவை சிகிச்சைக்கு அட்மிட் ஆனா போது டாக்டர் மூக்குத்தியைக் கழட்டச் சொல்லி விட்டார். அதோடு அனஸ்தீசியா  கொடுத்தால் அது கரிந்து போவதோடு உனக்கும்  ஆபத்து என்றார்.    அன்று முழுக்க நானும் வித்யாவும் பிரம்ம பிரயத்தனப் பட்டும்  அது அசைவேனா என்றது.  மூக்கு வலித்ததைத்தவிர வேறு பலனில்லை.    என்னைப் பிரிய அதற்கு இஷ்டமில்லை என்பது போல்  கல்லு மாதிரி இருந்தது.  எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  உடம்பில் இரத்தமில்லாததால் ரெண்டு பாட்டில் ரத்தம் வேறு எனக்கு  ஏற்ற ஆரம்பித்தார்கள்.  மூக்குத்தி கழட்ட என்ன வழி என்று புரியவில்லை எனக்கு.

மயக்க மருந்து அளிக்கும் மருத்துவர்  பரிசோதிப்பதற்காக   வந்த போது   நிலைமையைச் சொன்னோம்.   ஒரு நர்சும் வந்து முயன்று பார்க்க அது அவளுக்கும் பெப்பே என்றது. சரி நான் பார்த்த்துக்கறேன் என்றார்.   எனக்கோ கற்பனை கொடி கட்டி பறந்தது. மயக்க மருந்தில் மூக்குத்தியோடு மூக்கும் பற்றிக் கொள்வது போல்  நினைத்து பயந்து கொண்டிருந்தேன்.  நல்ல காலம் டாக்டர் மிக சாமர்த்தியமாய்   எனக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டார். என் மூக்கும் மூக்குத்தியும் பிழைத்தது.

மூக்குத்தி பற்றி நினைக்கும் போது   எனக்கு இன்னும் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.  என் ஆறேழு  வயதில் சாந்தி தியேட்டரில் நடந்தது அது. இப்போது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிப்பேன்.   அடுத்த பதிவில் அதை எழுதுகிறேன்.

11 comments:

'பரிவை' சே.குமார் said...

மூக்கு குத்திய கதையும்... மூக்குத்தி கதையும் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள் அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமமான விசயத்தை நகைச்சுவையுடன் சொல்லி உள்ளீர்கள்...

கே. பி. ஜனா... said...

மூக்கு குலுங்க சிரித்தேன்...

கே. பி. ஜனா... said...

மூக்கு குலுங்க சிரித்தேன்...

கே. பி. ஜனா... said...

மூக்கு குலுங்க சிரித்தேன்...

கே. பி. ஜனா... said...

மூக்கு குலுங்க சிரித்தேன்...

கே. பி. ஜனா... said...

மூக்கு குலுங்க சிரித்தேன்...

கே. பி. ஜனா... said...

மூக்கு குலுங்க சிரித்தேன்...

கே. பி. ஜனா... said...

மூக்கு குலுங்க சிரித்தேன்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி குமார், தனபாலன், கே.பி.ஜனா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சொல்லிய விதம் யாவரையும் கவரும் படி இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-